Thursday 28 June 2012

இலக்கியவாதியின் இலக்கிய அனுபவங்கள்

நான் முதன் முதலில் கவிதை எழுதிய போது அது ஒரு காதல் கவிதைதான். அப்போதே காதல் என்னை ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டது. யாராவது படித்தால் என்னைப் பத்தி தப்பாக நினைப்பாங்க என்ற கூச்சம் இருந்தது. அப்போது அரு.ராமநாதன் காதல் என்றொரு பத்திரிகை நடத்தி வந்தார். தி.ஜானகிராமன் மாதிரி ஜாம்பவான்கள் எல்லாம் எழுதினாங்க...ஆனால் கருப்பு வெள்ளையில் புடவை இல்லாத பெண்கள், பிரா தெரியும் மெல்லிய நைட்டி அணிந்த பெண்கள் என ஒன்றிரண்டு படங்கள் அட்டையிலும் உள்ளேயும் இருக்கும். கதைகள் பெரும்பாலும் காதல், செக்ஸ் சம்பந்தமாகவே இருக்கும். அதனால் அதை ஒரு செக்ஸ் புத்தகம் போல பயந்தபடியேதான் படிக்க முடிந்தது. அப்படிப்பட்ட நிலையில் நான் ஒரு காதல் கவிதை எழுதுவது கூச்சமான விஷயமாகவே இருந்தது. வேறு வழியில்லாமல் நோட்டுப் புத்தகத்தில் கண்ணதாசன், வாலி பாடல்களைப் போல கவிதைகளை எழுதி அவர்கள் பெயரைப் போட்டு வைப்பேன். என் உறவினர்கள் யாராவது கேட்டால் சினிமாப் பாட்டு என சமாளிக்கத்தான்
நண்பன் சேகர் இந்த கவிதையில் ஒன்றை அவன் வேலை பார்த்த அச்சகத்தில் கொடுத்து ஒரு சிறுபத்திரிகையில் வரவழைத்து விட்டான். அப்ப பிடிச்ச பிசாசுதான். அடுத்து தினமலர் வாரமலரில் - அப்ப பேப்பரிலேயே வாரமலர் வரும் - அரைப்பக்கம் எனது கவிதைகள் மட்டும் பிரசுரமாயின. விண்ணில் போன ராக்கெட்டே எங்க விலைவாசியைக் கண்டாயா என்ற கவிதை இப்போ அது கிளிஷேயாகி போன பழைய சங்கதி. ஆனால் முதலில் எழுதியது நான்தான். அப்புறம் இன்னொரு கவிதை விடியாத பொழுதுகள். அதுல திருமணத்திற்காக காத்திருக்கும் முதிர்கன்னியின் சோகம். விடியலுக்காக காத்திருக்கும் அவள் தலைமுடி வெளுத்துப் போய் விடிந்துவிட்டது என்பதாக கவிதை முடியும். அதெல்லாம் இப்ப கவிதை இல்லை என்று தூக்கி எறியமுடியும். ஆனால் அப்ப அது பெரிய உற்சாகம்.
அப்படியே எழுதப் பழகி, நண்பர் எஸ்.அறிவுமணி குறிஞ்சி இலக்கிய வட்டம் மேடையில் மு.மேத்தா தலைமையில் கவிதை வாசிக்க என்னை நிறுத்தி விட்டார். மு.மேத்தா கண்ணீர் பூக்களால் கொடிகட்டிப் பறந்த நேரம் அது. என்னுடன் கவிதை படித்தவர் பழனிபாரதி. புரட்சியாக எழுதக் கூடிய பழனிபாரதி அன்றைக்கு சோபிக்கவில்லை. நான் வாசித்தேன் செந்நிறக் கவிதையை. மேத்தா சொன்னார் பழனிபாரதி தீ்க்குச்சிதான் ஆனால் இப்ப எரியாத குச்சி. அந்தக் குறையை தீப்பந்தம் கொண்டு போக்கிவிட்டார் ஜெகதீஷ் என்றார்.

சிரிப்பாக இருக்கு இந்த கேலிக் கூத்துகளையெல்லாம் நினைச்சால். அப்புறம் கதை எழுத ஆரம்பிச்சேன். பாக்யா, புதிய பார்வை, ஆனந்த விகடன், கல்கி என்று பல பத்திரிகைகளில் எனது கதைகள் பிரசுரமாகின.

அதன் பிறகுதான் தீவிர இலக்கியத்தின் பக்கம் திரும்பினேன்.அன்றுமுதல் பல நூறு கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள் , ஒரு நாவல் எல்லாம் எழுதியபின்னரும் பலருக்குத் தெரியாத பெயரில் வாழ நேரும் அவலம் எனக்கு. இரண்டு படத்தில் நடித்த லூசுகள் கூட பாப்புலராகும் போது 25 வருசமாக எழுதும் என் போன்ற பலர் பாப்புலர் பிகர் இல்லை,

எழுத்து என்பது விதியின் பின்னால் புறப்பட்ட 300 பேரின் சுழற்சி என்பார் நண்பர் தஞ்சை பிரகாஷ். அப்படி ஏதோ ஒருவிதியை துரத்தித்தான் நானும் பயணித்து வந்திருக்கிறேன்.

எனது பயணத்தில் நான் சந்தித்த படைப்பாளிகள் பட்டியல் மிகப் பெரியது. பலரை வலிய வீடு தேடிப் போய் பார்த்திருக்கிறேன். சிலருடன் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பழகியிருக்கிறேன். ஆனால் இன்றைக்குத் திரும்பிப் பார்த்தால் ஒருவருடனும் எனக்கு ஒரு உறவும் இல்லை என்பதுபோலத்தான் தோன்றுகிறது.

சுஜாதா எனது கவிதை ஒன்றை ரசித்து கணையாழியில் பிரசுரித்தார். பெயர்களும் நினைவுகளும் என்பது அந்தக் கவிதை....பல நண்பர்களின் பெயரைப் பட்டியலிட்டிருப்பேன். கடைசியில் கவிதை இப்படி முடியும். எப்போதும் புதிதாக ஒரு பெயர் கிடைத்துவிடுகிறது. பழைய பெயர்களை காலம் அழித்துவிடுகிறது.

 உடுமலைப் பேட்டை ஜே.மஞ்சுளாதேவி எனக்கு முன்பு எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிட்டார் . காபி டம்ளரின் அடிப்பாகம் போல நட்பு முடியும் இடத்தில் கசப்பு உருவாகும் என்று. அந்த கசப்பை இன்று வரை உணர்கிறேன்.

என்னிடம் உள்ள பிழைகள் என்ன....நான் நண்பனாகும் தகுதியற்றவனா, என்னுடன் ஏன் யாரும் நட்பாக நீடிக்கவி்ல்லை. பல வருடம் பழகியபின்னும் பிரிய பலருக்கு சுலபமாக முடிவது எப்படி.....

சுந்தர ராமசாமி, சுஜாதா, ஜெயகாந்தன், பிரபஞ்சன், அசோகமித்திரன், எம்.வி,வெங்கட்ராமன், கோவை ஞானி, ஜெயமோகன், பெரியார்தாசன், வல்லிக்கண்ணன், திகசி, வண்ணதாசன், வண்ணநிலவன், சிற்பி ,மு,மேத்தா, வைரமுத்து, புவியரசு, நாஞ்சில் நாடன், சுப்ரபாரதி மணியன், தனுஷ்கோடி ராமசாமி, பொன்னீலன். தஞ்சை ப்ரகாஷ், சுந்தர சுகன், ஷாராஜ், வா.மு.கோமு, சிட்டி, திலீ்ப்குமார், சாருநிவேதிதா, மனுஷ்யபுத்திரன், இன்குலாப், ஞானக்கூத்தன், சி.சு.செல்லப்பா , புலவர் சங்கரலிங்கம் என எத்தனைப் படைப்பாளிகளை தேடித் தேடிப் போய் பார்த்துப் பேசியிருப்பேன்.இதில் சிலர் இறந்துவிட்டனர். மீதம் இருப்பவர்களில் திலீப்குமார் போன்ற சிலருடன் உறவு  இன்றும் நீடிக்கிறது. ஆனால் என்னுடன் அக்கறையுடன் பேசுகிற சிநேகம் ஏதும் மிச்சமிருக்கிறதா என்று தெரியவில்லை.

என்னுடன் பழகிய எந்த நட்பையும் தக்கவைத்துக் கொள்ள எனக்குத் தெரியவில்லை. பெண்களிடத்தில் பாலியலை கலக்காமல் தள்ளிப்போகும் கலையையும் நான் கற்கவில்லை. அல்லது காமத்தை கலந்த நட்பை அடையவும் தெரியவில்லை. தோழிகளின் நட்பு மலர்ந்த போதே மறைந்தும் போகிறது.


No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...