Thursday 7 June 2012

படித்தது கீரனூர் ஜாகிர்ராஜாவின் தேய்பிறை இரவுகளின் கதை


தேய்பிறை இரவுகளின் கதை-கீரனூர் ஜாகிர் ராஜா

கீரனூர் ஜாகிர் ராஜா மீன்காரத் தெரு என்ற நாவலின் மூலம் தமிழ் இலக்கியப் பரப்பில் அகலக் கால் பதித்தார். அவரது சில படைப்புகளை சிறுபத்திரிகைகளில் படித்திருக்கிறேன். ஓரிருமுறை சந்தித்தும் இருக்கிறேன். அவரைப் பற்றி மற்ற நண்பர்கள் கூறிய கருத்துகள் அவரைப் பற்றிய இருண்மையான சித்திரத்தை வடித்திருந்தன. குடிப்பார் என்றார்கள். சதா போதையில் மிதப்பார் என்பார்கள். இப்படி சில நல்ல படைப்பாளிகள் போதையின் பிடியில் சிக்கியதை நான் பல முறை அனுபவப் பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

திரு. பிரபஞ்சன் அவர்கள்  ஆனந்த விகடன் இதழில் எழுதிய சிறுகதை நீரதன் புதல்வர். இதிலும் குடிப்பதை பற்றிய சில பகுதிகள் வருகின்றன. கோடைக்காலத்தில் ஏன் டாஸ்மார்க்கில் அதிகமான கூட்டம் கூடுகிறது என்றும், குடிப்பது எல்லாவற்றையும் மறப்பதற்கு அல்ல மாறாக நினைப்பதற்கு என்று பிரபஞ்சன் எழுதியிருக்கிறார்.

சர்வ சாதாரணமாக 500 ரூபாய் நோட்டுகளை வாரியிறைத்து குடிக்கும் நண்பர்களைப் பார்த்திருக்கிறேன்.  ஏராளமான படைப்பாளர்கள் மீது இத்தகைய இருண்ட நிழல்கள் படிந்திருந்தன. பணம் கேட்பார்களோ என நண்பர்கள் இவர்களை விட்டு ஒதுங்குவதைப் பார்த்திருக்கிறேன். நானும் சில சமயம் தவிர்த்து விட்டிருக்கிறேன்.

இது வரை ஒருமுறை கூட ஹோட்டலில் போய் 500 ரூபாய் பில் கொடுத்து நல்ல உயர்தர உணவை நான் சாப்பிட்டதில்லை. அதிகபட்சம் சரவண பவன்தான். அதுவே 200 ரூபாய் பட்ஜெட்டை பில் தாண்டி விட்டால், அதை ஈடு செய்ய ஒரு வாரத்திற்கு கையேந்தி பவன்களில் சாப்பிடும் பிழைப்பு எனக்கு. எப்படி குடிப்பதற்காகவே இந்த நண்பர்கள் இத்தனை செலவு செய்கிறார்கள் என்ற ஆற்றாமைகள் தீருவதே இல்லை. பண்பான போதையில்லை குடியிலே, ஒரு நாய் கூட மதிப்பதில்லை தெருவிலே என என்னதான் புத்தி சொன்னாலும் ஒருவர் மண்டையிலும் அது ஏறியதே இல்லை. மாறாக என்னை குடிக்க வைக்க கட்டாயப்படுத்துகிறார்கள். நட்பை இழந்தாலும் பரவாயில்லை குடிப்பதில்லை என்று தீர்மானமாக இருப்பதால் தப்பிப் பிழைத்திருக்கிறேன்.

கீரனூர் ஜாகிர் ராஜாவும் அப்படித்தான் இருப்பார் என்ற சிந்தனையில் அவர் புத்தகங்களுடன் அந்நியத்தன்மை ஏற்பட்டு விட்டதை அறிந்தேன். அது ஒரு படைப்பாளிக்கு செய்யும் நியாயமாக இருக்காது என்பதால் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் அவரது தேய்பிறை இரவுகளின் கதை எனும் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வாங்கி வந்தேன். பலமுறை படிக்க எடுத்த போதும் அதில் இருந்த முஸ்லீம் தமிழ் நடையால் மேலும் சோர்வடைந்து ஒத்திப் போட்டேன். தோப்பில் முகமது மீரான் போன்ற இஸ்லாமிய பின்புலம் உள்ள படைப்பாளிகளின் வட்டார மொழியுடன் இஸ்லாமிய சொற்களும் சர்வசாதாரணமாக கலந்து வருகின்றன. உதாரணமாக காஃபிர் .

சமஸ்கிருதம் அல்லது ஆங்கிலம் கலப்பதை கொடுங் குற்றமாக ஏசும் தமிழ் அறிஞர்கள் யாரும் தோப்பில் முகமது மீரானையோ கீரனூர் ஜாகிர் ராஜாவையோ இஸ்லாம் கலப்புக்காக விமர்சிப்பதே இல்லை. அதே போன்று ஜோஸ் டி குரூஸ், பிரான்சிஸ் கிருபா போன்றவர்கள் கிறித்துவர்கள் என்ற பிரக்ஞையுடன் விவிலியத்தின் சாயலில் புனைவு மொழியை ஏற்படுத்தினாலும் யாருக்கும் பிரச்சினையில்லை. அவாளும் இவாளும்தான் தமிழ்த்துரோகிகள்.பெரியாராலும் அம்பேத்காராலும் அடையாளம் காட்டப்பட்ட தேச துரோகிகள். பாவம் அசோகமித்திரன். பாவம் லாசரா. பாவம் ஆதவன், பாவம் தி.ஜானகிராமன்.
அது கிடக்கட்டும். ஜாகிர் ராஜா அசலான படைப்பாளிதான். அதில் சந்தேகம் இல்லை. அவரது கதைகள் மனதை வருடுகின்றன. திகைக்கவும் சிலசமயம் தடுமாறவும் வைக்கின்றன. அவர் கதை ஒன்றில் கிணற்றுக்குள் இருந்து நீளும் வளைக்கரம் போன்று ஏதோ ஒன்று நம்மை ஆழத்திற்கு இழுத்துச் சென்றுக் கொண்டேயிருக்கிறது.
கீரனூர் ஜாகிர் ராஜா என்ற அன்புத் தோழரே குடிப்பதை நிறுத்தி விட்டேன் என்ற நல்ல செய்தியோடு நீங்கள் என்னை சந்திக்க வேண்டும். நிறைய எழுத வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...