Monday 18 June 2012

கிருஷ்ணன் நம்பி கதைகள்



                                     









அமரர் கிருஷ்ணன் நம்பி சராசரி மனிதர்களின் ஆசைகளையும் நிராசைகளையும்தான் பதிவு செய்திருக்கிறார். ஊசலாடும் மனித உறவுகளையும் இன்னும் மேலான வாழ்வுக்கு ஏங்கும் நடுத்தர மக்களின் கனவுகளையும் அவர் தனது கலை சிருஷ்டியாக செய்திருக்கிறார், மிகக் குறைவான கதைகள்தாம் எனினும் ஒரு தேர்ந்த படைப்பாளியின் முத்திரையை ஒவ்வொரு கதையும் பதிக்கிறது.
வாழ்க்கையின் இரண்டு மகத்தான சோகங்களில் ஒன்று, நாம் விரும்பியதை அடைய முடியாமல் போவது, இரண்டாவது நாம் விரும்பியதை அடைவது என்றார் பெர்ணாட் ஷா.கிருஷ்ணன் நம்பியின் கதைகள் இந்த முரண் நிலையை அடிப்படையாகக் கொண்டவை.மனிதன் ஒன்றை அடைய முடியாமல் போகின்ற நிலையையும் அடைந்தாலும் அதனால் ஏற்படக் கூடிய இழப்பையும் சரியாக கணித்த படைப்பாளிதான் கிருஷ்ணன் நம்பி.

எக்ஸன்ட்ரிக் - நடுத்தர ஆபீஸ் சிப்பந்தி ஒருவனின் கதை.எண்பது ஒரு ரூபாய் நோட்டுகள் சம்பளம் வாங்கிய கையோடு, ஆயிரம் பேருக்கு பதில் சொல்லக் கூடிய நிலையில் மனைவியும், ஒரு சிகரெட்டை இரண்டாக உடைத்துப் பயன்படுத்துகிற தனது பற்றாக்குறையையும் எண்ணிப் பார்க்கிறான் அவன். தெருவில் நிற்கும் ஒரு பணக்காரனின் கார் அவனது அடங்கிய ஆசைகளைக் கிளறிவிட, வாழ்க்கையை அனுபவித்து விடத் துடிக்கிறான் அவன்.
அந்த எண்பது ரூபாய் சம்பளப் பணம் அவன் ஆசைகளின் சிறகுகளானது. புதுமைப்பித்தனின் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ரயிலடி வரை திரும்பி வருவது போல் கிருஷ்ணன் நம்பியின் சிப்பந்தி திரும்பி வரவில்லை. அவன் ரயிலேறி ஓடிப் போகிறான்.ஓட்டலில் அவன் விரும்பிய ஸ்டிராங் காப்பி, சர்வருக்கு தாராளமான டிப்ஸ், ஏழைச் சிறுவனுக்கு எம்.ஜி.ஆர் படம் பார்க்க காசு, டாக்சியில் ஊர் சுற்றல், பாலக்காட்டு வேசியிடம் டாக்சி டிரைவருக்கும் ஓசியில் பெண் இன்பம், கடைசியில் மிச்சமான பத்துரூபாயை தொலைத்து விடுவதுமாக எண்பது ரூபாயை அவன் செலவழிக்கிறான். முறைக்காதீர்கள். அந்தக் காலத்தில் எண்பது ரூபாயில் இத்தனை காரியம் செய்யலாம்.
அவன் ஒரு நாளாவது தனது விருப்பப்படி வாழ்ந்து விட்டான். அடைய முடியாதவற்றை எண்ணி எண்ணி ஏங்கிக் கொண்டிருந்த நிராசைகள் நிறைவேறி விட்டன.என்றாலும் பிரச்சினைகள் தொடர்கதைதானே....பால்காரன், வாடகை,குழந்தைகளின் கல்வி, மளிகைக் கடை பாக்கி என்று நீண்ட பட்டியலுடனும் பற்றாக்குறையுடனும் காத்திருக்கும் அவன் மனைவிக்கு சம்பளம் நாளைக்கு என்ற பொய்யான பதில் தீர்வாகி விடாது. நாளை என்ற அந்தக் கொடூரமான பொழுது அவன் கழுத்தில் நுகத்தடியாக, முதுகில் சாட்டையாக விழப் போகிறது. அந்த ஒருநாள் இன்பத்திற்காக அவன் ஒருமாதம் துன்பத்தில் உழலப் போகின்றான்.

காணாமல் போன அந்தோணி கதையும் அதுபோலத்தான்.அந்தோணி ஒரு ஆடு. கொழு கொழுவென்று வளர்ந்த ஆடு. அதன் சொந்தக்கார கிழவி கிறிஸ்துமஸ் தினத்தன்று காலையில் சர்ச்சுக்குப் போகும் போது அவள் புருஷன்- கிழவன் முதல் ஆட்டம் சினிமா பார்த்து நள்ளிரவில் வீடு வந்து தூங்கிக் கொண்டிருக்கிறான். அவன் 40 வருடமாக ஒரே நிறுவனத்தில் குறைந்த ஊதியத்தில் வறுமை நிலையில்தான் கிழவியுடன் குடித்தனம் நடத்தி வருகிறான்.ஆனால் சம்பளம் முழுவதையும் அப்படியே கொண்டு வந்து கிழவியிடம் கொடுத்துவிடுவான். கிறிஸ்துமஸ் பண்டிகையை விமரிசையாக கொண்டாட கிழவிக்கு சில திட்டங்கள் இருந்தன.சர்ச்சிலிருந்து திரும்பும் போது அந்தோணியை காணவில்லை.ஆட்டைத் தேடி கசாப்புக் கடை முதல் வயல் வாய்க்கால் வரை தேடிப் பார்த்து சலித்துப் போகிறாள். கிறிஸ்துமஸ் என்ற சுபதினம் அவளுக்கு சோகதினமாக மாறுகிறது. ஆனால் மாலையில் கொத்து வேலையாள் ஜார்ஜ் மூலம் அந்தோணி திரும்பக் கிடைத்து விடுகிறது. ஆட்டை விலைக்கு கொடுத்ததும் கிழவியின் திட்டங்கள் நிறைவேறுகின்றன.ஆம் காணாமல் போன அந்தோணி நிரந்தரமாக தொலைந்துப் போய்விட்டது.
கிருஷ்ணன் நம்பி உயர்ந்த இலட்சியங்களையும் கற்பனை இலக்குகளையும் கொண்ட கதாபாத்திரங்களைப் படைக்கவில்லை. மிகவும் யதார்த்தமான சகல பலவீனங்களும் கொண்ட பாத்திரங்களே அவை.
சிங்கப்பூர் பணம் கதை இரு நண்பர்கள் பற்றியது. ஒருவன் ஏழை குமாஸ்தாவின் மகன். இன்னொருவன் சிங்கப்பூர் சீமானின் புதல்வன். இருவருக்கும் நட்பு முளைக்க பணக்காரப் பையன் நிறைய செலவு செய்கிறான். 120 ரூபாய் மதிப்புள்ள பைனாகுலரை பரிசாகவும் தருகிறான்.பதிலுக்கு இவனும் ஒரு தேர்ப்பொம்மையைப் பரிசளிக்க எண்ணி, கிடைத்த ஒற்றை ரூபாயுடன் வரும் போது அந்த ஒரு ரூபாயும் செல்லாத காசாகிப் போகிறது.
அந்த செல்லாக் காசாக இருப்பவர்களின் கதையைத் தான் கிருஷ்ணன் நம்பி மீண்டும் மீண்டும் எழுதுகிறார்.
நாணயம் என்ற கதையில் வரும் பிச்சாண்டி என்ற சங்கர நாராயணனுக்கு சினிமாவும் ஓட்டலும் பிடித்த விஷயங்கள். அதற்கான காசு அவனுக்கு அவன் மாமாவின் உண்டியலில் இருந்தே கிடைக்கிறது. நாணயமான குடும்பத்தைச் சேர்ந்த அவன் இந்த திருட்டைச் செய்கிறான். பின்னர் தன் களவுக்குப் பிராயச்சித்தமாக முதல் மாத சம்பளத்தை மாமாவின் உண்டியலில் போட முயலும் போது மாமியிடம் அகப்பட்டு திருடனாக பட்டம் பெறுகிறான்.

இருக்கிற வாழ்க்கையில் திருப்தியின்மையும் இன்னும் மேலான, சுகமான, சௌகரியமான, ஆசைகள் ஈடேற்றும் வாய்ப்புள்ள வாழ்நிலைக்கான துடிப்பும் கிருஷ்ணன் நம்பியின் ஒவ்வொரு பாத்திரப் படைப்பிலும் காணக் கிடைக்கிறது. அந்த மேலான நிலை பணத்தால் மட்டும் கிடைக்குமா.?
காலில் கட்டப்பட்ட சங்கிலி அறுபடுவதும் ஆனந்தமல்லவா....கால் சங்கிலியால் கட்டப்பட்ட மனநலம் சிதறிய பெண் ஒருத்தி ஊமைப் பையன் ஒருவனால் விடுதலை பெறுகிறாள்.ஆனால் அவன் அன்புச் சங்கிலியில் அவள் மீண்டும் விலங்கிடப்படுகிறாள். கதையின் பெயர் சங்கிலி.
உணர்ச்சிதான் அஸ்திவாரம். மேதைமை எனப்படுவது கூரைக்கு வெள்ளையடிக்கும் முயற்சி தான் என்பார் சீன அறிஞர் லீ-யு-டாங். கிருஷ்ணன் நம்பிக்கு இதை யாரோ சொல்லியிருக்கக் கூடும். அதனால்தான் மிகவும் அரிதான உணர்ச்சி இழைகளை பின்னலிட்டு தனது கதைகளை மேதைமையால் அலங்கரித்திருக்கிறார். மனித உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட மேதைமை வறட்டு வேதாந்தமாகவே முடியும் என்ற தெளிவு அவர் கதைகள் முழுவதும் விரவிக் கிடக்கிறது.

எல்லா இதயங்களிலும் ஆசைகள் இருக்கின்றன. எல்லா இதயங்களிலும் அந்தரங்கமாகப் போற்றும் கனவுகள் இருக்கின்றன. ஆனால் பொருளாதார வசதியற்ற பெரும்பான்மை சாமான்ய மக்களின் ஆசைகளும் கனவுகளும் ஆசைகளாகவும் கனவுகளாகவுமே தேங்கி விடுகின்றன. அவை ஒருபோதும் நிறைவேறுவதே இல்லை. நிறைவேறினால் அதற்கான விலையாக அவர்கள் தங்கள் வாழ்வையே தரவேண்டியிருக்கும்.
காலில் சங்கிலியுடன் விடுதலை வேட்கையில் உழலும் பைத்தியத்தின் கதைதான் மனித குலத்தின் கதை. நம்மைப் பற்றிய ஒரு புரிதலையும் நம் வாழ்வைப் பற்றிய ஒரு கேள்வியையும் கிருஷ்ணன் நம்பி தனது கதைகளின் மூலம் எழுப்புகிறார்.ஒரு நாள் சுகத்திற்காக மாதம் முழுவதும் துன்பப்படும் எஸன்ட்ரிக் போல நாமும் தற்காலிகமான லௌகீக சுகங்களுக்காக ஒரு நீண்ட கால வரலாற்றையே பறிகொடுத்து நிற்கிறோம். இன்றைய உலகைப் பற்றி, மதம், அரசியல், கலை , பண்பாடுகள் குறித்த நமது அலட்சியம் மாதச் சம்பளத்தை ஒரு நாளுக்காக இழக்கிற நிலையை விட எந்த வகையிலும் மேம்பட்டது அல்ல. இதுவும் அதைப் போல ஆபத்தானதும் கூட.

(கிருஷ்ணன் நம்பியின் கதைகளும் அவரைப் பற்றிய சுந்தர ராமசாமியின் நினைவோடையும் காலச்சுவடு பதிப்பகத்தில் கிடைக்கின்றன.)

1 comment:

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...