Tuesday 3 January 2023
புத்தகக் காட்சிகளில் எனது அனுபவங்கள் செந்தூரம் ஜெகதீஷ்
ஒரு புத்தகத்தை வாங்கி அதைப் படிக்காமல் வைத்திருந்தால் அந்த எழுத்தாளரை கொல்வதற்கு
சமம் என்று எங்கோ படித்திருக்கிறேன். எனக்கு இப்படி கொலை செய்யும் சந்தர்ப்பங்கள்
அதிகமாக வாய்க்கின்றன. வாங்கும் புத்தகங்களின் எண்ணிக்கை வாசிக்கும் புத்தகங்களை விட
பல மடங்கு அதிகம் என்பதால் இப்படி நேர்கிறது. வருடம் தோறும் புத்தகக் காட்சிகளில் புதிய
புதிய புத்தகங்கள் வாங்கி வருவதும் அதில் கால்வசி படிக்கும் முன்பே ஓராண்டு ஓடி விடுவதும்
தான் நிகழ்கிறது. இன்னும் புத்தகங்கள் வாங்க வேண்டுமா என்ற கேள்வியும் பணத் தட்டுப்பாடும்
எழும் போது தான் சற்று வேகம் குறைகிறது.
ஆனாலும் புத்தகக் காட்சிகளுக்கு செல்வதை ஓராண்டும் தவறவிட்டதில்லை. புத்தகக் காட்சி
நடைபெறும் நாட்களில் கூடுதலான உற்சாகம் கவ்விக் கொள்கிறது.
இந்த ஆண்டு சர்வதேச புத்தகக் காட்சியாம்….என்ன சர்வதேசமோ தெரியவில்லை. வெளிநாட்டு
தமிழர்கள் எழுதிய நூல்கள் கிடைக்குமா…குறிப்பாக ஈழ எழுத்தாளர்கள்…
கழிவறை பார்க்கிங் உணவகங்கள் போன்றவற்றை மேம்படுத்தாமல் ஏசி செல்போன் சிக்னல்
வசதி ஏற்படுத்தாமல் அது எப்படி உலகத்தரமான புத்தகக் காட்சி ஆகும் என்றும் புரியவில்லை.
நானும் 30 ஆண்டுகளாக எழுதி வந்தாலும் எனது புத்தகங்களுக்கு புத்தகக் காட்சியில் இடம்
கிடையாது. எங்கு தேடினாலும் கிடைக்காது. விருட்சம் போன்ற நண்பர்கள் அரங்கில்
எப்போதாவது ஒன்றிரண்டு புத்தகங்களை கொடுத்து இருப்பேன். மற்ற அரங்குகளில் புத்தகங்கள்
கொடுத்தாலும அதை டிஸ்பிளேவில் கண்ணுக்குத் தெரியும் படி வைக்க மாட்டார்கள். விற்றால்
பணமும் தரமாட்டார்கள். கலக்கல் ட்ரீம்ஸ் தமிழ் வெளி வாசகசாலை போன்ற அரங்குகள்
இப்போது என்னைப் போன்ற நட்சத்திர அடையாளம் இல்லாத எழுத்தாளர்களுக்கு
ஆபத்பாந்தவனாக உள்ளன. கடந்த ஆண்டு புத்தகக் காட்சியில் எனது எட்டு நூல்கள் பல
அரங்குகளில் கிடைத்தன.
புத்தகக் காட்சியும் நண்பர்களும்.
கடந்த ஆண்டில் ஞாயிற்றுக்கிழமை. ஓய்வு நாள் எனக்கு ஓய்வற்ற நாளாக அமைந்தது.
சனிக்கிழமை இரவு ஷிப்ட் முடித்து கண் அசராத அயர்ச்சியுடன் குளித்து காலை 10.30 மணிக்கு
சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் சூர்யராஜனை பிடித்து விட்டேன். எப்படியோ
நிமோஷினியை தவற விட்டு விட்டோம். மெட்ரோ சுரங்க பகுதியில் செல்போன் சிக்னல்
கிடைக்காதது முக்கிய காரணம். எப்படியோ அவரும் வந்து சேர்ந்து விட்டார். வழியில் வண்ணை
வளவனும் இணைந்தார்.
புத்தகக் காட்சிக்கு வெளியே இருந்த பழைய புத்தகக் கடைகளில வேட்டையாடினோம்.
உரத்தநாடு சங்கரலிங்கம் என்று மறைந்த எனது பழைய நண்பரின் மரபுக் கவிதை தொகுப்பை
வளவன் எடுத்துக் கொடுத்தார்.
உரத்தநாடு சங்கரலிங்கம் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவிடம் பல ஆண்டுகளாக
உதவியாளராக பணியாற்றிய ஓய்வு பெற்ற தமிழாசிரியராவார். சங்கரலிங்கம் மறைந்த பின்னர்
அவருடைய மகன் திரு. பூங்குன்றனும் பின்னர் அம்மையாருக்கு உதவியாளராக பணியாற்றியவர்.
யார் யாருடன் எல்லாம் பழகி இருக்கிறேன் என்று எண்ணினால் பெரும் வியப்பு . புத்தகக்
காட்சியில் எழுத்தாளர்கள் அனைவருக்கும் என் பெயர் தெரிகிறது.
எஸ்.ராமகிருஷ்ணன் தேசாந்திரி பதிப்பகத்தில் தனது வாசகர்களுக்கு கையெழுத்திட்டு செல்பி
எடுப்பதில் பிஸியாக இருந்தாலும் இருக்கையை விட்டு எழுந்து மிகுந்த பிரியமான ஒரு
புன்னகையுடன் என்னிடம் சில சொற்களை பேசினார்.
கடும் உழைப்பு, அபாரமான எழுத்தாற்றல், அரியதான படைப்பாற்றலால் உச்சம் தொட்ட
எஸ்.ராமகிருஷ்ணன் தமிழின் முதன்மையான படைப்பாளி. தற்போதைய படைப்பாளிகளில் நான்
அவருக்குத்தான் முதலிடம் தருவேன். அவர் படைப்புகள் குறித்து ஒரு நான்கு மணி நேரம்
கருத்தரங்கம் நடத்த ஆசை
இதே போன்று புத்தகக் காட்சியில் இன்னொரு முக்கிய எழுத்தாளரை சந்தித்தேன். அவர்தான்
ஷோபா சக்தி. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் புத்தகங்கள் யாவையும் வாசித்து
அவரை ஒரு வாசகராக பின்தொடர்ந்திருக்கிறேன். முதன் முறையாக கருப்புப் பிரதிகள் அரங்கில்
அவரை சந்தித்தது எதேச்சையானது என்றாலும் என் வாழ்வில் ஒரு முக்கியமான தருணம். நான்
வாங்கிய அவருடைய இச்சா நாவலில் கையெழுத்திட்டு தந்தார்..சென்னையில் ஒரு நாள்
அவருடன் உரையாட ஆசை. நேரம் வாய்க்குமா பார்க்கலாம்.
அடுத்து சந்தித்த முக்கியமான நண்பர் தருமபுரி மாவட்டம் மொரப்பூரை சேர்ந்த என் முக்கிய
நண்பர்களில் ஒருவரான தங்கமணியால் அறிமுகம் செய்யப்பட்ட அருமையானநண்பர்
ஜெயவேல்.
கிடங்குத் தெருவைப் பற்றி அத்தனை பெரிய ஈடுபாட்டை ஜெயவேலை போல் வேறு யாரிடமும்
நான் பார்க்கவில்லை. எத்தனை பெரிய மொழி ஆற்றலுடன் கிடங்குத் தெருவை எழுதி சினிமா
கினிமா என எழுதிட்டிருக்கீங்க ,கிடங்குத் தெருவை மீண்டும் வெளியிடுங்கள். புதிய நாவலை
எழுதித்தாருங்கள் என்று அன்புடன் கடிந்துக் கொண்டார் ஜெயவேல், அடுத்த புத்தகக் காட்சியில்
உங்கள் 2 நாவல்களும் வராவிட்டால் வந்து அடிப்பேன் என்று கூட உரிமையுடன் திட்டினார்.
அவருடைய அன்புக்கும் வாசிப்புக்கும் தலைவணங்குகிறேன். ஒரு எழுத்தாளனுக்கு இப்படி
ஒரேயொரு வாசகன் கிடைப்பதும் பூர்வ ஜென்ம புண்ணியம்தான்.
நண்பர் சூர்யராஜன் பெரும் நோயிலிருந்து மீண்ட சோர்வால் நடக்கமுடியாமல் அமிர்தா பதிப்பக
அரங்கில் நண்பர்களுடன் உட்கார்ந்துவிட்டார். புத்தகமும் வாங்கவில்லை. மனது
கவலைப்பட்டது. சூர்யராஜன்மிகச்சிறந்த எழுத்தாளர். பிரபஞ்சன் அவருடைய சிறுகதைகளின்
ரசிகர். பல முக்கிய படைப்பாளிகளை ஒரு கணத்தில் கடந்துசெல்லக் கூடிய படைப்பாற்றல்,
திரைப்பட அறிவு, தேனீயைப் போன்ற சுறுசுறுப்பு கொண்ட ஒரு நண்பர் இப்படி நோய்
நிதிப்பற்றாக்குறை, முதுமையால் தளர்வதை என்னால் காண முடியவில்லை. நலமாக வாழ்க
சூர்யராஜன்
வாசக சாலையில் கவிஞர் மனுஷியையும் அவர் நகமும் சதையுமான அகிலா ஸ்ரீதரையும்
சந்தித்தேன். பிரபஞ்சன் இறுதி ஊர்வலம் பாண்டிச்சேரியில் நடைபெற்ற போது பேண்ட்டும்
டிசர்ட்டும் போட்டு சின்னஞ்சிறு பெண் போல மழைக்கு ஒதுங்கியிருந்த மனுஷியை சற்று
தூரத்தில் பார்த்தேன். பேசவில்லை. பிரபஞ்சன் அடிக்கடி குறி்பபிடும் பெண் படைப்பாளிகள்
பெயரில் மனுஷிக்கும் தமயந்திக்கும் முக்கிய இடமுண்டு.
பல முறை அவருடன் பேச முயற்சி. பெண்களைக் கண்டால் விலகிவிடும் என்புத்தியை செருப்பால்
அடிக்க வேண்டும்.
எங்கே பெரிய பையுடன் வருவீங்கன்னு பார்த்தா மூனே மூணு புத்தகங்களுடன் வருகிறீர்கள் என
கேட்டார் மனுஷி. எனக்கொரு இமேஜ் அப்படி இருக்கு எனத் தெரியும். பெரிய பையுடன்தான்
வந்தேன். சுமக்க முடியாமல் நண்பரின் புத்தகக் கடையில் வைத்திருக்கிறேன் என்று தெரிவித்துக்
கொண்டேன்.
.
நிறைய புத்தகங்களை வாங்கினேன் ,நாஞ்சில் நாடன்,சோ.தருமன், நெய்வேலி ராமலிங்கம்,
மந்திர மூர்த்தி அழகு, உதயகண்ணன் ,அழகிய சிங்கர், கிருபாகரன், ஆசு என நிறைய
நட்புகளுடன் சில மணித்துளிகள். நான்கரை மணிக்கு கண்ணில் தூக்கம் சொக்க விடைபெற்றேன்.
ஆறு மணிக்கு வீட்டுககு வந்துவிட்டேன். பசி தூக்கம் தனிமை...வாழ்க்கையின் சூட்டுக்கு
எத்தனை பெரிய இளைப்பாறுதல் இந்த நட்புகளும் புத்தகக் காட்சியும்....
தொடர்ந்து நான்கு நாட்களாக புத்தகக் காட்சி விஜயம். முதலில் சந்தித்தது கவிஞர்
ஈழவாணியை. அவர் பெயரை அறிந்திருக்கிறேன். பார்ப்பதற்கு சற்று குண்டாக
இருந்தாலும் அத்தனை இனிமையானவராக இருக்கிறார். அவர் நடத்தும் பூவரசி
கலைவிழாக்களுக்கு ஸ்பான்சர்கள் தேடிக் கொண்டிருப்பதாக கூறினார். எனக்கு பத்து
ரூபாய் கடன் தரக்கூட ஆளில்லை. நான் யாரை சொல்வேன். ஆனாலும் கேட்டுக்
கொண்டேன். அவரை விட்டு நகர மனம் வரவில்லை. இத்தனை நல்ல மனிதத்துவம் ஒரு மனிதர்
பெண் உடலில் இருப்பதால் அதை விட்டு எத்தனை காலம் தூரமாக இருந்துவிட்டேன் என
நினைத்துக் கொண்டேன். கொஞ்சமாக வயதாகி விட்டதல்லவா...இனி பெண்களுடன் தயக்கமின்றி பேச வேண்டும்.
அவருடைய புதிய நாவலை விலை கொடுத்து வாங்கினேன்.
கவிதைத் தொகுப்பை பரிசாக தந்தார். நானும் என் சினிமா நூல்களை அவருக்குப்
பரிசளித்தேன். இத்தகைய புதிய நட்புகளுக்கு புத்தகக் காட்சி வழிவகுக்கிறது. அவருடைய
புத்தகங்களைப் படித்து விட்டு எழுதுகிறேன்.
அப்புறம் நண்பர் உதயா கண்ணனை பார்த்தேன். புத்தகக் காட்சியில் பொங்கல் நாளில்
கூட கூட்டமில்லை. ஏன் என்று கேட்டால் அவரும் அதே கேள்வியை வேதனையுடன்
திருப்பிக் கேட்டார். என் பங்குக்கு அவர் புத்தகக் கடையில் 125 ரூபாய் வியாபாரம் செய்து
வந்தேன்.
புத்தகக் காட்சி பற்றி நிறைய விமர்சனங்கள், கண்டனங்கள் எழுகின்றன. இருக்கட்டும்.
ஜனநாயகத்தில் எதிர்ப்புக் குரல்களுக்கும் மதி்ப்பளிக்கத்தான் வேண்டும். எனக்கும் சில
முரண்பட்ட கருத்துகள் உள்ளன. வெளியே ஒரு பெரிய மேடை இருக்கிறது. நூல்
வெளியீடு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள். முதலமைச்சர் முதல் இந்த ஆண்டு தலைதூக்கிய
கடைக்குட்டி எழுத்தாளன் வரை எவர் எவரோ அதில் பேசிமுழக்குகிறார்கள். வெளியே
பாப்கார்னும் சிக்கன் சூப்பும் சாப்பிடும் கூட்டம் கேட்கிறதா தெரிவியவில்லை. நடந்து
களைத்து இளைப்பாற நாற்காலிகளில் உட்காருபவர்கள் கேட்கக் கூடும்.
நானும் தான் 35 ஆண்டுகளாக நாவல் ,சிறுகதை ,கவிதை, திரைப்படம் ,சிற்றிதழ் சார்ந்து
இயங்கி வருகிறேன் .என் பெயரை பபாசி அறியுமா... ஒருமுறையாவது மேடையில்
என்னை அழைத்தார்களா என்றால் இல்லை. அத்துடன் 20 ஆண்டுகளாக
ஊடகத்துறையில முன்னணி செய்தி சேனல்களில் பணியாற்றியும் நான்
அடையாளமற்றவனாக தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். இதுதான் உண்மையான
படைப்புச் சூழல் தமிழ்ச்சூழல் .தமிழுக்காக கத்தி கத்தி தொண்டை வெந்தவர்கள் இதற்காக
பேச மாட்டார்கள். முரசொலியும் துக்ளக்கும் தான் அவர்களுக்குப் பிரச்சினை.
தமிழில் தீவிரமாக இயங்கக் கூடிய ஒரு படைப்பாளி தனது புத்தகங்களை வெளியிடவே
பல ஆண்டுகளாகி விடுகின்றன. அவை விற்பனையாகி தீர்வதற்கு பல ஆண்டுகள். 2004ம்
ஆண்டு வெளியான எனது கிடங்குத் தெரு நாவல் 2006ம் ஆண்டில் பாஷா பாரதிய
சம்மான், தஞ்சை பர்காஷ் இலக்கிய விருது பெற்றது. எத்தனை பேர் அதை படித்தார்கள் ....
மிகுந்த வலியுடன் எழுதப்பட்ட ஒருதமிழ் கிளாசிக் அந்தஸ்து மிக்க நாவலுக்கு கிடைக்கக்
கூடிய எதிர்வினைகளே இதுதான். கிடங்குத் தெரு தமிழின நூறு சிறந்தநாவல்களில் ஒன்று
என நிறைய பேர் பேசுவதை கேட்கிறேன்.
ஒரு தமிழ்ப் படைப்பாளி வேறு ஒரு வேலை அல்லது தொழிலை நம்பி இயங்க
வேண்டியிருக்கிறது. அத்தொழில் அவனை கழுத்தை நெறித்து கொன்றுவிடும் வரை
அவன் முடிந்தவரை தனது படைப்புகளை தருகிறான். பிரபஞ்சன் வேறு வேலை
இல்லாததால் முழு நேர எழுத்தாளரானார். அவர் உயிரைப் பறிக்க அதுவும் ஒரு
காரணமாகி விட்டது.மிகுந்த ஆனந்தமாகவும் மன உளைச்சலுடனும் பிரபஞ்சனை
பல்வேறு தருணங்களில் சந்தித்து இருக்கிறேன்.
புத்தகங்கள் யாருக்காக எழுதப்படுகின்றன. யார் வாசிக்கிறார்கள் முகநூலில் வேறு யார்
பிறர் புத்தகங்களை பற்றிய பதிவுகளை போடுகிறார்கள் ..அதனை எத்தனை பேர் படித்து
எழுத்தாளனுக்கும் வாசகனுக்குமான உறவை மேம்படுத்துவது பற்றி நாம் யோசிக்கலாம்.
இதுான் இன்றைய சிந்தனை.
--------------------
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்
குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...
-
ஜென் தேநீர் செந்தூரம் ஜெகதீஷ் கோப்பை 11 பாஷோவின் ஹைகூ கவிதைகள்.... 1 விரிந்த கிளையில் காக்கை கூடு கட்டும் இலையுதிர் காலத்தில் 2...
-
மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள் என் இளம் பருவத்தின் போது வாசித்த புத்தகங்களில் மு.மேத்தாவின் கண்ணீர் பூக்கள், மீராவின் கனவுகள் கற்பனைகள்...
-
தியாகம் படத்தில் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு என்ற பாடல எனக்கு எப்போதும் பிடித்த மிக அழகான பாடல் . இளையராஜா இசையில் கவியரசு கண்ணதாச...
No comments:
Post a Comment