Tuesday 3 January 2023

புத்தகக் காட்சி 2023 காகிதங்களின் காட்டில் தொலைவோம்...... செந்தூரம் ஜெகதீஷ்

தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் புத்தகக் காட்சிகள் நடைபெற்றாலும் சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் காட்சி ஒரு அறிவுத் திருவிழாதான். புத்தகங்களுடனான உறவு நமக்கு பள்ளிப்பருவத்திலேயே படிக்க கற்றுக் கொள்ளும்போதே ஏற்பட்டு விடுகிறது. புத்தக வாசனை இல்லாமல் யாரும் அறிவு பெற்று விட முடியாது. கல்வியைத் தாண்டியும் படிக்க வேண்டியவற்றின் மீதா ன நமது கவனமும் ரசனையும் தான் புத்தக வாசிப்பின் முதல் அஸ்திவாரம், புத்தகக் காட்சிகளுக்கு குழந்தைகளை அழைத்துப் போவது சாலச் சிறந்தது. சென்னை புத்தகக் காட்சியைப் பொறுத்தவரை மிகப்பெரியது .அதனால் அதற்கு பெரிய மைதானம் தேவைப்படுகிறது. மைதானம் என்றால் மண். மண் பகுதி என்பதால் அடிப்படை வசதிகள் சாலைகள் பார்க்கிங் இடங்களுக்கு எப்போதும் நெருக்கடிதான். தவிர வரும் கூட்டமும் அதிகம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு காயிதே மில்லத் கல்லூரி அமைந்தகரையில் உள்ள ஒரு கல்லூரி என கல்லூரிவளாகத்தில் புத்தகக் காட்சிகள் நடைபெறும் . அதிகமான ஸ்டால்களும் புத்தக அச்சாக்கமும் அப்போது இருக்காது. குறிப்பிட்ட சில பதிப்பகங்கள் மட்டுமே புதிய புத்தகங்களை அச்சிட்டுக் கொண்டு வரும் .சாரு நிவேதிதா, ம.வே.சிவகுமார் போன்ற எழுத்தாளர்கள் தங்கள் புத்தகக் கட்டுகளை சுமந்துக் கொண்டு புத்தகக் காட்சிகளுக்கு மூச்சிரைக்க ஓடி வரும் காட்சிகள் சகஜம். இப்போது அச்சுத்தொழிலில் அசுரப் பாய்ச்சல் ஏற்பட்டது காரணமாக குடிசைத் தொழில் போல பதிப்பகங்கள் பெருகிவிட்டன. எழுத்தாளர்களே பதிப்பாளர்களாக மாறி விட்டனர். இதனால் அதிகளவில் புத்தகங்கள் ஆண்டுதோறும் வெளியாகின்றன .அதற்கு ஏற்ப ஸ்டால்களும் அதிகரித்துள்ளன. இடத்துக்கான தேவையும் அதிகரித்து புத்தகக் காட்சிகள் கல்லூரி வளாகத்தில் இட நெருக்கடியால் வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. அரசு ஒரு முறையான வளாகத்தை அனைத்து வசதிகளுடனும் புத்தகக்காட்சிகள், சர்வதேச திரைப்பட விழாக்கள், நூல்வெளியீடுகள், பொருட்காட்சிகள் நடத்த அமைத்துத் தரலாம். எந்த அரசும் செய்யவில்லை. தீவுத்திடல் அரசியல் மற்றும் கேளிக்கைக் கூட்டங்களுக்கு மட்டும் பயன்படுகிறது. சென்னையின் இட நெருக்கடியால் புத்தகக் காட்சிகள் அவஸ்தையோடு தான் நடைபெறுகின்றன. பதிப்பாளர்கள் புத்தகக்கட்டுகளை சுமந்து ஆட்டோக்களிலும் கார்களிலும் குறுகிய பாதைகளில் செல்வதைக் காண முடியும். வாசகர்களும் பொதுமக்களும் நந்தனம் பகுதியில் நடைபெறும் புத்தகக்காட்சிக்கு பேருந்துகள், மெட்ரோ ரயில் , ஆட்டோக்களில் எளிதாக வந்து சேர்கின்றனர். ஆனால் அவர்கள் வாசலில் இருந்து உள்ளே சென்று வெளியில் வருவது என்பது ஒரு தனி தேசாந்திரப் பயணம். குடி நீர் கழிவறை வசதிகள் கட்டாயம் மேம்படுத்தப்பட வேண்டிய அவசியம். மலை உச்சியிலும் சிக்னல் கிடைப்பதாக விளம்பரப்படுத்தும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் புத்தகக் காட்சியில் புகுந்தவர்களுக்கு சிக்னலை நிறுத்தி விடுகின்றன. இந்த ஆண்டு சர்வதேச புத்தகக் காட்சி என்று அரசு அறிவித்துள்ளது. அதற்காகவாவது உலகத்தரத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். பொதுவாக வசதிகள் ஒருபுறமிருக்க புத்தகக்காட்சிகளின் அவசியம் அதன் சமூகப்பங்களிப்பு பண்பாட்டு தாக்கம் போன்றவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். புத்தகக்காட்சி சென்னையில் மிகப்பெரியதாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆயிரக்கணக்கில் அரங்குகள், லட்சக்கணக்கில் புத்தகங்கள், கோடி்ககணக்கான ரூபாய்க்கு விற்பனை. ஆனால் ஒருமுறை மட்டும் அங்கு போய் முழுதாக சுற்றிப்பார்த்து விட முடியாது. பகுதி பகுதியாக பலமுறைதான் முழு புத்தகக்காட்சியைக் காண வேண்டும். புத்தகக் காட்சியை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம், கல்வி சார்ந்த பிரிவு ஒன்று .இது மாணவர்கள் பேராசிரியர்கள் போன்றோருக்கான இடமாக இருக்கும். அங்கு கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் , கூட்டங்கள், கலந்துரையாடல்கள் ஆலோசனைகள் நடத்தப்படலாம் .முக்கியமாக நீட் போன்ற அசுரனிடமிருந்து அச்சப்படும் உயிர்களை பாதுகாக்கலாம், இன்னொரு பிரிவு இலக்கியத்துக்கு என்று முழுமையாக ஒதுக்கலாம். அதிகளவில் விற்பனையாகும் நவீன இலக்கியங்களுடன் நாளிதழ்கள் வார இதழ்களின் அரங்குகள் இடம் பெறலாம். இலக்கிய ஆர்வலர்கள் வாசகர்கள் அந்தப்பகுதியை மட்டும் சுற்றிப் பார்த்து வெளியே வர அது உதவியாக இருக்கும். தேவையில்லாமல் பல முறை பல தேவையில்லாத இதர பகுதிகளைக் கடந்து செல்ல வேண்டிய அவசியம் இருக்காது . புதிய புத்தக வெளியீடுகள், கவியரங்குகள், உரையாடல் எழுத்தாளருடன் சந்திப்பு புத்தக விமர்சனம் என்று சிறிய அரங்குகள் அமைத்து புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தலாம். மூன்றாவது பகுதியை கேளிக்கை பகுதியாக வைக்கலாம் .உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், கீழடி அரங்கு, தொல்லியல் ஆய்வுகள், கோவில் சிற்ப வரலாறுகள், ஓவியக்காட்சிகள், குறும்படங்கள் திரையிடல் போன்றவை பலரை உற்சாகப்படுத்தும். இவற்றை சில நாட்கள் இடைவெளியில் தனித்தனியாகவும் நடத்தலாம். எல்லாவற்றையும் கலந்து ஒரே அரங்கில் வைக்கும் போது புத்தகக் காட்சியின் இட நெருக்கடி அதிகரிக்கிறது. ஆனால் என்னதான் நெருக்கடி வசதி குறைபாடு இருந்த போதும் தஞ்சைப் பரகாஷ் கூறியது போல விதியின் பின்னால் புறப்பட்டுச் சென்றுவிட்ட 300 பேர் எப்போதும் சிற்றிதழ் இலக்கியம் நாடி புத்தகக்காட்சிகளுக்கு வந்துக் கொண்டே இருப்பார்கள். வெளிநாட்டில் இருந்து வரும் எழுத்தாளர்கள் வாசகர்கள் இளம் வாசகர்கள் என்று இந்த எண்ணிக்கை இப்போது இருமடங்காக இருக்கலாம். இவர்கள் தான் புத்தகக் காட்சிகளின் அடிப்பை சுவாசக்காற்றாக உலா வருகிறார்கள் . ஒருவர் டிராலியில் ஜெயமோகனின் அத்தனை நூல்களையும் வாங்கிக் கொண்டு சென்ற காட்சியைக் கண்டு அதிர்ச்சியும் நமக்கு ஏற்படலாம். மலிவுப்பதிப்பில் புதுமைப்பித்தன், குபரா படைப்புகள், ப.சிங்காரம் நாவல்கள், என்று புத்தகங்கள் புதிய வாசகர்களுக்கு புதையல்களாகக் கிடைக்கின்றன. இந்த ஆண்டு திரைப்படத்தின் வருகையால் பொன்னியின் செல்வன் அதிகளவில் விற்பனையாகும். எப்போதும் போல எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, சுஜாதா ,ஷோபா சக்தி, பா.ராகவன் போன்ற தனி வாசகர்கள் கொண்ட எழுத்தாளர்களின் புதிய நூல்களும் அவற்றை வாங்குவதற்காக வரும் வாசகர்களும் இந்தப் புத்தகக் காட்சியைக் கொணடாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அனைவரிடமும் இந்நேரம் வாங்க வேண்டியநூல்களின் ஒரு பட்டியல் கையில் தயாராக இருக்கும். இந்த முறை புத்தகக் காட்சியில் வாங்கக்கூடிய புத்தகங்கள் அலமாரிகளில் தூங்கிக் கொண்டு அடுத்தப் புத்தகக் காட்சியில் தான் தூசு தட்டும் நிலைமை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது வாசகர்கள் பொறுப்பு. நல்ல புத்தகங்களை அடையாளம் காணுதல் .அவற்றை பதிப்பித்த பதிப்பாளர்களிடமே நேரடியாக சென்று வாங்குதல், வாங்கிய ஒரு மாதத்திற்குள் வாசித்து விடுவது. அதைப்பற்றி பேஸ்புக் அல்லது இணைய இதழ்களில் ஒரு சிறு மதிப்பீடாவது செய்வதுதான் புத்தகக் காட்சி என்ற செயல்பாட்டுக்கு நாம் செய்யக்கூடிய அணில் பங்காகும். சேகரிப்புக்கு என்றும் தனியாக நூல்களை வாங்கி வைக்கலாம், நூலகங்களுக்கு நல்ல நூல்களை வாங்கிப் பரிசளிக்கலாம். புத்தகம் வாங்க முடியாத நண்பர்களை அழைத்துச் சென்று அவர்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாங்கித் தரலாம். புத்தகங்களைத் தவிர ஏராளமான மனிதர்களை சந்திப்பதற்கும் தயக்கங்களை உடைத்து நேரடியாக உரையாடவும் புத்தகக்காட்சி தரும் வாய்ப்பு மகிழ்ச்சிக்குரியது. நல்ல நட்புகளையும் இந்த புத்தகக் காட்சி ஏற்படுத்தித் தருகிறது. ஒரு புத்தகத்தைப் படிப்பது என்பது ஒரு கருத்தியலை சிந்தனையை அனுபவத்தை வாழ்க்கையை உள்வாங்கிக் கொள்வதுதான். அதனுடன் நமது கருத்தியலும் சிந்தனையம் அனுபவமும் வாழ்க்கையும் புத்துணர்வு பெறுகிறது. புத்தகங்களுடனான வாழ்க்கை என்பது தனிமையின் மிகப்பெரிய வரமாக இருக்கும். எப்போதும் எந்த மனநிலையிலும் ஒரு புத்தகத்தின் வாசிப்பு நம்மை இலகுப்படுத்தும் ஒரு செயல்பாடு என்பது என் அனுபவம். புத்தகக் காட்சிகளை ஊக்கப்படுத்துவோம். குறைகள் இருக்கும் .இருந்த போதும் இது ஒரு திருவிழா. அறிவுத்திருவிழா. புத்தகங்கள் இல்லாத வீடுகள் ஜன்னல் இல்லாத வீடுகளை விடவும் இறுக்கமானவை. புத்தகங்கள் காடுகளில் இருந்து வரும் காகிதங்களில் தான் அச்சிடப்படுகின்றன. ஒரு நல்ல புத்தகம் ஒரு நிறைவான கானக அனுபவம்தான். இசையைப் போல மனிதனின் வன்மங்களைத் தணித்து மனத்தை சமன்படுத்த புத்தகங்களால் தான் முடியும். புத்தக விழாக்களைக் கொண்டாடுவோம். ஆறாம் அறிவை வீணடிக்க வேண்டாம். இந்த ஆண்டு புத்தகக் காட்சி நிறைய எதிர்பார்ப்புகளைத் தந்துள்ளது. எத்தனையோ அச்சகங்கள் இரவு பகலாக இயங்கி வருகின்றன. ஆயிரக்கணக்கான புதிய படைப்புகள் எழுதப்படுகின்றன. எப்போதும் கையில் ஒரு புத்தகத்துடன் வாழப்பழகுவோம். அதைப் பழக்கப்படுத்த குடும்பத்துடன் வாருங்கள் புத்தகக்காட்சிகளுக்கு. ஒரு அறிவின் சுடர் உங்களுக்கு அருளக் காத்திருக்கும்.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...