Tuesday 23 June 2020

ஜென் தேநீர் 16-20 ஓஷோவும் ஜென்னும்

ஜென் தேநீர்  16

ஓஷோவும் ஜென்னும்.
செந்தூரம் ஜெகதீஷ்



ஜென் தேநீர்  16

ஓஷோவும் ஜென்னும்.
செந்தூரம் ஜெகதீஷ்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் பிறந்த போதிதருமர் தான் முதன் முதலாக சீனாவுக்கு ஜென்னை அறிமுகம் செய்தவராவார். அதே போல் நவீன உலகிற்கு இருபதாம் நூற்றாண்டு மனிதர்களுக்கு ஜென்னை அறிமுகம் செய்த மிகப்பெரிய மேதை ஓஷோதான். ஓஷோவின் பெயரே ஜப்பானிய மொழியில் இருப்பதுதான் .ஓஷோ என்றால்  புத்த பிட்சு என்று அர்த்தம் சொல்வார்கள்.
பகவான் ரஜ்னீஷ் என்ற பெயரில்தான் ஓஷோவை எல்லோரும் அறிந்திருந்தனர். ராணியில் அல்லி பதில்களில் பிரா பற்றி ஒரு கேள்வி கண்டிப்பாக இடம் பெறும் .அந்தக் காலத்தில் இணையம் நீலப்படங்கள் பரர்ப்பதற்கு எந்த வித வசதியும் இல்லை. முத்தக்காட்சிகள் பிகினிக்கள் இல்லாத கருப்பு வெள்ளை சினிமாக்கள் ஓடிக்கொண்டிருந்தன. அதிகபட்சமாக வில்லன் கதாநாயகின் சோளியை பின்புறம் கிழித்து வெள்ளை பிராவையும் முதுகையும் காட்டுவார்கள். அவ்வளவுதான். ஹீரோ பாய்ந்து வந்துவிடுவார். ஆகவே பிராவுக்கு ஒருவித ஈர்ப்பு இருந்தது. பிரா என்ற சொல் எத்தனை கற்பனையையும் கிளர்ச்சியையும் தந்ததோ அத்தனை கிளர்ச்சியைத் தந்த இன்னொரு சொல் செக்ஸ் சாமியார் ரஜ்னீஷ் .ஆகவே கண்டிப்பாக அது குறித்தும் வாசகர்கள் ( ? ? ) கேள்வி கேட்க அல்லி பதில்களில் பதில் இருக்கும்.
பத்திரிகை தர்மங்கள் இப்படியெல்லாம் இருக்க இல்லஸ்ட்ரேடட் வீக்லி பிளிட்ஸ் போன்ற சில  ஆங்கில பத்திரிகைகளில் மா ஷீலா என்ற சிஷ்யை டாப்லெஸாக மார்புகளைக் காட்ட அவர் தலையில்  பகவான் ரஜ்னீஷ் வைத்து ஆசி வழங்குவது போல் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மா ஷீலா ரஜ்னீஷ் மீது பரபரப்பான பாலியல் புகார்களை சுமத்தி ஆசிரமத்தை விட்டு வெளியேற்றினார். ரஜ்னீஷின் மிகப்பெரிய பக்தர்களாக இருந்த இயக்குனர் மகேஷ் பட், நடிகை ஷபனா ஆஸ்மி, நடிகர் வினோத் கன்னா போன்ற பிரபலங்களும் ரஜ்னீஷ் ஆசிரமத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டு அவருடைய பெயரை முற்றிலுமாக சேதம் செய்தனர். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ரோனால்ட் ரீகன், அப்போதைய பி்ரதமர்கள் இந்திரா காந்தி. மௌரார்ஜி தேசாய் போன்றவர்களை ரஜ்னீஷ் கடுமையாக விமர்சனம் செய்ததால் அவர் அமெரிக்காவில்  காடாக இருந்த ஓரேகான் பகுதியை பசுஞ்சோலையாக மாற்றி தனது ஆசிரமம் அமைத்ததைப் பொறுக்க முடியாக ரீகன் அவர் மீது போதைப் பொருள் கடத்தல் ,போன்ற பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தார். மௌரார்ஜி தேசாய் சிறுநீர் குடிக்கும் வழக்கத்தை விமர்சித்த ரஜ்னீஷ் குற்றங்களை ஒப்புக் கொண்டு, பெரும் தொகையை அபராதமாக கட்டி வழக்குகளில் இருந்து விடுபட்ட போதும் சிறையில் கொடுக்கப்பட்ட மெல்லக் கொல்லும் விஷம் கலந்த உணவால் உடல் நலிவடைந்தார். புனே திரும்பியதும் அவருக்கு பலவகையான துன்பங்களைத் தர மௌரார்ஜி தலைமையிலான மத்திய அரசு முயற்சித்தது.
கடைசியில் ரஜ்னீஷ் என்ற தனது பெயரின் களங்கத்தைப் போக்க தனது பெயரை ஓஷோ என்று மாற்றிக் கொள்வதாக அவர் அறிவித்தார்.
அதற்கு முன் இருந்த பகவான் ரஜ்னீஷ் என்ற பெயர் காலத்தால் மறைந்துவிட்டது .அல்லிக்கு வேறு சுவாரஸ்யமான சினிமா கிசுகிசுக்கள் கிடைத்தன. படி்பபடியாக செக்ஸ் சாமியார் ரஜ்னீஷ் மறைந்து ஓஷோ என்ற மகத்தான ஒரு ஞானியை அவர் புத்தகங்கள் மூலமாக இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அறியத் தொடங்கினர்.
பகவான் ரஜ்னீஷ் பெயரில் தமிழில் ஒரு புத்தகம் மட்டும் அப்போது வந்திருந்தது. சிவப்பு அட்டையுடன் இருந்த அந்த புத்தகம் பகவான் ரஜ்னீஷ் பதில்கள் என்ற பெயரில் இருந்ததாக ஞாபகம். நண்பர் பிரபஞ்சன் தான் அதை எங்கிருந்தோ வாங்கி வந்து படித்துக் கொண்டிருந்தார். அப்போது நான் மார்க்சீய சிந்தனைகளுடன் , நாத்திகனாகவும் இருந்ததால் பகவான் என்ற பட்டத்துடன் இருந்த ரஜ்னீஷ் புத்தகத்தை படிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் கவிஞர் மு.நந்தா, இயக்குனர் சூர்யராஜன் ஆகிய எனது இரண்டு இனிய நண்பர்களுக்கு ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் இருந்தது. அவர்கள் பிரபஞ்சனிடம் இருந்து அவர்கள் கைக்கு மாறியது. அதன் பிறகு ஒரு சுற்று சுற்றி விட்டு என் கைக்கு வந்தது. கட்டாயம் இதைப் படி என்று என் கையில் திணித்து விட்டு சென்றார் சூர்யராஜன்.
அரை மனதாக படிக்க ஆரம்பித்தேன். பகவான் ரஜ்னீஷ் என்ற அல்லி பதில்களின் செக்ஸ் சாமியார் பிம்பம் மறையத் தொடங்கி ஒரு பெரிய மேதைமையுடன் ரஜ்னீஷ் என் முன்வந்து விஸ்வரூபம் எடுத்த விண்ணுக்கும் மண்ணுக்கும் தன் காலை வைத்து அளந்த பெருமாளைப் போல் நின்றார்.
அதன் பின்னர் திருச்சிக்குப் போய் அங்கு என் பெரிய மாமனார் வீட்டில் தங்கியிருந்த போது எதிரே இருந்த ஒரு சிறிய வீட்டின் முன் பகவான் ரஜ்ஷீஷ் புத்தகங்கள் இங்கு கிடைக்கும் என்று போட்டிருந்தது. என்னைத் தேடி ரஜ்னீஷ் வந்துவிட்டதை நான் உணரவில்லை. அந்த வீட்டில் நுழைந்த போது சுவாமி மோகன் பாரதி என்ற ஜெயின் சமூகத்தை சேர்ந்த ( ஓஷோவும் ஜெயின் தான் ) நபர் தமிழில் பகவான் ரஜ்னீஷ் டைம்ஸ் என்ற ஆங்கில இதழின் தமிழ்ப்பதிப்பாக ஒரு சிறு பத்திரிகையை பேப்பர் டாப்லாய்ட் சைசில் வெளியிட்டு வந்தார் என அறிந்தேன். அதன் விலை இரண்டு ரூபாய் .நிறைய இதழ்களை பணம் கொடுத்து அள்ளி வந்தேன். படிக்க படிக்க பரவசமானேன். அச்சுப்பிழைகள், மோசமான மொழிபெயர்ப்புகள் என எத்தனையோ இடர்களைக் கடந்தும் பகவான் ரஜ்னீஷ் மனம் கவர்ந்தார்.
அப்புறம் பகவான் ரஜ்னீஷின் சில ஆங்கிலப் புத்தகங்கள் மும்பை, புனே பயணங்களின் போது கிடைத்தன. ஆங்கில இதழ்களையும் படித்தேன். அதில் ஒருமுறை கேள்வி பதில் பகுதியில் தன்னை இனி யாரும் பகவான் ரஜ்னீஷ் என்று அழைக்க வேண்டாம் என்றும் ஓஷோ என்றுதான் அழைக்க வேண்டும் என்றும் தமது சீடர்களுக்கு கட்டளையிட்டார். அந்த வார்த்தை ஓஷோவை தமிழில் முதன் முதலாக எழுதி செந்தூரம் இதழில் ஓஷோ கட்டுரையை வெளியிட்ட முதல் நபராக நான் அடையாளம் காணப்பட்டேன்.
ஏராளமான ஓஷோவின் நூல்களை பல ஆண்டுகள் கழித்து மொழிபெயர்த்த கவிஞர் புவியரசு திருப்பூரில் ஒரு இலக்கிய நிகழ்வின் போது சந்தித்து ஓஷோவைப் பற்றி விசாரித்தார். செந்தூரம் மூலம்தான் தாம் ஓஷோவை அறிந்துக் கொண்டதாக அவர் கூறினார்.
தொடர்ந்து புவியரசுக்கு முன்பே நான் ஓஷோவின் முழு புத்தகத்தை மொழிபெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. MY WAY THE WAY OF WHITE CLOUDS  என்ற புத்தகத்தை நான் ஒரு வெண்மேகம் என்ற பெயரில் முழுமையாக மொழிபெயர்த்தேன். மனிதனின் தன்முனைப்பு ( EGO ) வைப் பற்றிய புத்தகம் அது. இந்த புத்தகத்தைப் படித்து மிகவும் வியந்ததாக நடிகர் ரஜினிகாந்த் அப்போது குமுதம் பேட்டியில் கூறியிருந்தார். நடிகர் சத்யராஜூம் டாப் டென் புத்தகங்கள்  பட்டியலில் நான் ஒரு வெண்மேகம் புத்தகத்தை குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து குழந்தை வளர்ப்பு பற்றிய புதிய குழந்தை என்ற புத்தகத்தையும் கம்யூனிச ரஷ்யாவின் வீழ்ச்சியைப் பற்றிய புத்தகத்தை நம்பிக்கை நட்சத்திரமாய் என்ற பெயரிலும் மொழிபெயர்த்தேன். அவை யாவும் தரமான மொழிபெயர்ப்புகள்.
அதன் பின்னர் ஜென் ஹைகூ குறித்த ஓஷோவின் புத்தகத்தை மொழிபெயர்த்த கதையையும் அந்த மொழிபெயர்ப்பு கந்தலான கதையையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.
ஓஷோ வின் புதிய குழந்தையைப் படித்து விட்டு மிகவும் அற்புதமான மொழிபெயர்ப்பு என பாராட்டிய நண்பர் ஜெயமோகன் தனது குழந்தைகளை வளர்ப்பதற்கு இந்த புத்தகம் ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும் என்று என்னிடம் கூறியுள்ளார். அப்போது அஜிதனும் சாகித்யாவும் சிறிய குழந்தைகளாக இருந்தனர்.
தொடர்ந்து ஓஷோவின் உரைகள் தொகுக்கப்பட்டு அவை ஓஷோ என்ற பெயரிலேயே 700-800 புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. ஆடியோ வீடியோ வடிவிலும் ஓஷோவின்  உரைகள் அவருடைய சொந்த குரலில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் கிடைத்தன.
ஓஷோவின் 500க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் அவருடைய தொகுக்கப்படாத ஏராளமான பத்திரிகை கட்டுரைகளையும் ஒலி ஒளி வடிவ உரைகளையும் ஆழ்ந்து கற்றேன். ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அனுபவத்தை அளித்தார் ஓஷோ. குறிப்பாக ஏராளமான புதிய படைப்பாளிகள், கலைஞர்களை அவர் அறிமுகம் செய்தார். தஸ்தயேவஸ்கி, கலீ்ல் கிப்ரான், ஜலாலுதீன் ரூமி ,கபீர், நீட்ஷே , பிகாசோ, பாஷோ   என நீளும் ஓஷோவின் அறிமுகங்கள் எனக்கு வாசிக்க வாசிக்க புதிய உலகை உருவாக்கிக் காட்டின. அனைத்தையும் தேடித் தேடிப் படித்தேன். புத்தகங்களை வாங்குவதற்காகவே சம்பாதித்தேன். புத்தகங்களை வாங்குவதற்காகவே இந்தியா முழுவதும் பழைய புத்தகக் கடைகளில் சுற்றித் திரிந்தேன்.
குறிப்பாக  ஜென், குறித்த ஓஷோவின் நூல்கள் ஒரு நூறு இருநூறு இருக்கும். அவற்றில் என் வசம் இருப்பவற்றை ஒவ்வொன்றாகவோ அல்லது ஒட்டு மொத்தமாகவோ அறிமுகம் செய்கிறேன்.
ஒரு பெரும் விருந்து காத்திருப்பது உறுதி.
-------------
பின் குறிப்பு -காப்புரிமை குறித்து
வெறுமனே ஆங்கில நூல்களை மொழிபெயர்க்காமல் மேற்கோள்களாக காட்டாமல் ஜென்னை ஓஷோ புரிந்துக் கொண்ட விதத்தையும் அவர் வழியாக நான் புரிந்துக் கொண்ட விதத்தையும் தான் எழுதப்போகிறேன். இதன் எழுத்தாக்கம் உரிமம் முழுவதும் எனக்கே சேர வேண்டும் என்றும் யாரும் இதனை களவாடவோ தங்கள் பெயரால் பிரசுரிக்கவோ முயல வேண்டாம் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நான் அமைதியாக சகித்துக் கொள்ள மாட்டேன்.
இதற்கு முன்பு எனது கிடங்குத் தெருவை திருடினார்கள். என் சினிமா பாடலை இளையராஜா இசையில்  என் பெயர் போடாமல் திரையில் படமாக்கினார்கள் . நான் மொழிபெயர்த்த பலநூறு பக்கம் கொண்ட ஓஷோவின் ஜென் பற்றிய நூலை என் பெயர் போடாமல் பதிப்பித்து பல ஆயிரம் புத்தகங்கள் விற்றார்கள். இந்த அறிவுக் களவை மன்னிக்க முடியவில்லை.அதனால் ஞானத்தை நாடும் ஜென் குரு போர்வாளை எடுப்பது போல் எடுடா  கொலை வாளை என பாவேந்தரின் பாட்டை பாட ஆரம்பித்துவிடுவேன்

அதனால் தான் ஓஷோவிடமிருந்து திருடாமல் அவருடைய ஞானத்தை மட்டும் பகிர வருகிறேன். என் அனைத்து கட்டுரைகளிலும் எந்தெந்த புத்தகங்களை கையாண்டேன் என்ற  விவரத்தையும்தான் பதிவு செய்து வருகிறேன். யாரேனும் காப்புரிமை பிரச்சினை எழுப்பினால் ஆட்சேபத்துக்குரிய பகுதியை நீக்கவும் நான் தயார்.
இதுவும் ஓஷோவிடமிருந்து கற்றதுதான்.
இனி நாம் பார்க்க இருப்பது ஓஷோவின் வெண் தாமரை ( white lotus )என்ற போதி சத்துவரைப் பற்றிய புத்தகத்தை.
---------------------------------------------

ஜென் தேநீர்  17

ஓஷோவும் ஜென்னும்.
ஓஷோவின் வெண் தாமரை ( THE WHITE LOTUS )  நூலை முன்வைத்து....
செந்தூரம் ஜெகதீஷ்
போதி தருமர் என்ற  ஜென் ஞானியைப் பற்றி கூறும் போது இவரைப் போல் புளகாங்கிதம் அடையச் செய்பவர் யாரும் இல்லை என்கிறார் ஓஷோ. போதி தர்மர் என்ற பெயரே பரவசமூட்டுவதாக தமது புத்தகத்தில் குறிப்பிடுகிறார்  அவர் . நீண்ட வரலாற்றில் போதி தருமருக்கு நெருங்கி வரக்கூடிய ஒரேயொரு நபர் ஜார்ஜ் குருட்ஜிஃப் ( GEORGE GURUDJIEFF) மட்டும்தான் என்கிறார் .புத்தரால் கூட இந்த மனிதரை ஜீரணித்திருக்க முடியாது. அந்த அளவுக்கு இருந்ததாக போதிசத்துவரைப் பற்றி குறிப்பிடுகிறார் .புத்தருக்கும் போதி சத்துவருக்கும் இடையே ஆயிரம் ஆண்டு கால இடைவெளி இருந்தது. ஆனால்  கால இடைவெளியே தெரியாத அளவுக்கு புத்தரி்ன் ஞானத்தை பின்தொடர்பவராக போதி தர்மர் இருந்திருக்கிறார் என்பது தான் ஆச்சரியம்.
காஞ்சிபுரத்தில் இருந்து தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவில் இருந்து  தமது குருவான புத்தரின் ஞானத்தைப் பரப்ப சீனாவுக்கு சென்றவர் போதிதர்மர். சில போதுகளில் அவருக்கு ஈடாக புத்தர் கூட இல்லை என்று வியக்கிறார் ஓஷோ.
புத்தர், ஏசுநாதர், பித்தகோரஸ். லாவோட்சு என பல சமகாலத்து ஞானவான்கள் இருந்த போதும் போதி தர்மர் தனித்துவமானவர்.
போதி தர்மர் சீனாவின் எல்லையில் கால் பதித்த போது அவரை வரவேற்க சீன மன்னர் வூ எல்லையில் அவரை உபசரித்து வரவேற்றார். புத்தரைப் போன்ற ஒரு ஞானி சீனாவுக்கு வருவதை பெருமையாக நினைத்தார் மன்னர் வூ.
ஆனால் போதி தர்மரை முதன் முதலாக நேருக்கு நேராக கண்ட மன்னர் அதிர்ச்சியடைந்தார். ஏனென்றால் போதி தர்மர்  தனது  காலணியை கழற்றி  தலையில் வைத்திருந்தார்.ஒரு காலணி தலையிலும் இன்னொரு காலணி காலிலுமாக இருந்தது.
மன்னர் சங்கடத்துடன் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்.. எத்தகைய கிறுக்கனை நான் வரவேற்க வந்தேன் என்றெல்லாம் எண்ணினாா்.
ஏன் உங்கள் காலணியை தலையில் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று மன்னர் வூ போதிதர்மரிடம் கேட்டார்.
நான் ஒரு கிறுக்குத்தனமான நபர் என்பதை முதலிலேயே தெரிவித்துவிடத்தான் காலணியை தலையில் வைத்திருக்கிறேன் என்றார் போதி தர்மர்.. என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது நிராகரியுங்கள் .அது பற்றி இப்போதே முடிவு செய்துக் கொள்ளுங்கள். அப்புறம் எதுவம் பேசக்கூடாது .இதுதான் உங்கள் மனத்தை கலைப்பதற்கான எனது உத்தி என்று கூறினார்.
மன்னர் தமது  உரையாடலைத் தொடங்கினார்
நான் நிறைய நல்ல காரியங்கள் செய்வதால்.நல் ஒழுக்கம் நிறைந்தவன் என்றார் மன்னர்.
போதிதர்மர் மன்னரின் கண்களை ஆழமாகப் பருகினார். மன்னரின் முதுகெலும்புக்குள் ஒரு நடுக்கம் தோன்றியது. மடத்தனம் என்றார் போதி தர்மர். நல் ஒழுக்கம் என்பது விழிப்புணர்வுடன் சேர்ந்து வருவதாகும் .நீ ஒரு முட்டாள். என்ன நல்லொழுக்கத்தை நீ அடைந்து விட்டாய்? நல்லொழுக்கம் என்பது ஞானத்தின் நிழல்.என்னுடன் என் நிழல் போல் வருவதே நல்லொழுக்கம் என்று போதிதர்மர்  கூறினார்.
புத்த பிக்குகளுக்காக ஆசிரமங்கள் அமைத்ததாகவும் ,ஆயிரமாயிரம் அறிஞர்களை பணியமர்த்தி புத்தரின் போதனைகளை மொழிபெயர்க்கும் பணியை கொடுத்ததாகவும் பல லட்சங்களை செலவு செய்து புத்தருக்கான சேவைகளை தமது ஆட்சியில் செய்து வருவதாகவும் மன்னர் பட்டியலிட்டார். தினமும் பல லட்சம் பேருக்கு அன்னதானம் செய்வதாகவும் மன்னர் தனது பெருமையை குறிப்பிட்டார்.
போதி தர்மர்  சிரித்தார். வயிறு வலிக்க சிரித்தார். இத்தனை பேரிடியான சிரிப்பை மன்னர் கேட்டதே இல்லை.
நீ ஒரு மிகப் பெரிய முட்டாள். உன் அத்தனை செலவுகளும் வீண் செலவுகளாகிப் போயின என்றார் போதிதர்மர் . இதனால் ஒரு பலனும் இல்லை. நீ ஏழாவது சொர்க்கத்திற்கு செல்ல முடியும் என்று எண்ணாதே. புத்த பிக்குகள் உன்னை நன்றாக பயன்படுத்திக் கொண்டனர். நன்றாக ஏமாற்றினர். உண்மையை அவர்கள் உன்னிடம் சொல்லவில்லை. உன்னிடம் பொய்யான வாக்குறுதிகளைத் தருகிறார்கள். அவர்கள் உன் ரத்தம் குடிக்கும் மூட்டைப் பூச்சிகள். சொர்க்கத்திற்கு போகும் ஆசையுடன் காரியங்களை தானதருமங்களை புண்ணியங்களை செய்பவன், நல் லொழுக்கத்தை பேணுபவன் நிச்சயம் நரகத்திற்குதான் செல்வான் என்றார் போதி தர்மர்.
மன்னர் கோபத்துடன் நீ எனக்கான ஆள் இல்லை என்று கூறி போய் விடுகிறார். போதி தர்மர் கூறினார். என்னை உணரக்கூடிய சரியான நபர் வரும் வரை நான் காத்திருப்பேன்.
பல காலம் கழித்துதான் ஒருவர் வருகிறார். அவர் போதிதருமரின் முதுகுக்குப் பின்னால் எதுவம் பேசாமல் 24 மணி நேரம் சும்மாவே நின்றிருந்தார். போதிதர்மரே திரும்பிப் பார்த்து கேட்க வேண்டியாகி விட்டது. என் பின்னால் ஏன் நிற்கிறாய் உனக்கு என்ன வேண்டும் ?
நீங்கள் என் பக்கம் திரும்பியிருக்காவிட்டால் நான் தற்கொலை செய்திருப்பேன் என்கிறார் அந்த நபர். தான் வாய்ச்சொல் வீரர் இல்லை என்று நிரூபிக்க உடனடியாக வாளை எடுத்து தன் விரலை வெட்டி ரத்தம் சொட்ட சொட்ட அதனை குருவுக்கு காணிக்கை என அளிக்கிறார்.
போதி தர்மர்  புன்னகைத்தார். நீதான் என் சீடன் .இந்த மனிதனுக்காகத்தான் நான் இத்தனை காலமாக இங்கே காத்திருந்தேன்.
----------------
சீனாவில் முதல் முதலாக ஜென் பரவியது இப்படித்தான். இந்நூலில் ஓஷோ போதி தர்மரைப் பற்றி குறிப்பிடுகையில் அவர் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு வெளியே கொண்டு வரப்பட்ட ஒரு விலை மதிக்கமுடியாத வைரம் என்கிறார். ஆனால் பாலிஷ் செய்யப்படாத வைரம். கரடுமுரடானவர் என்றும் ஓஷோ கூறுகிறார். அதனால்தான் மன்னரையே முட்டாள் என்று விரட்டியடித்தார் போதிதர்மர். தன்னை திரும்பிப் பார்க்க செய்ய தன் விரலையே வெட்டத்துணிந்து நின்ற உயிரையே விடத் துணிந்த ஒருவன்தான் தனது சீடன் என்று ஏற்றுக் கொண்டார். அவர் தலையில் ஷூவை வைத்து சீனாவுக்குள் நுழைந்ததும் ஒரு குறியீடுதான்.
இப்போதும் கூட நாம் சீனாவுக்கு கையில் செருப்புடன் செல்ல வேண்டும் போலிருக்கிறது. அத்தனை முட்டாள் மன்னர்கள் நிரம்பிய நாடு அது.
-------------------------
ஜென் தேநீர்  18

ஓஷோவும் ஜென்னும்.
செந்தூரம் ஜெகதீஷ்
போதி தர்மரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும் அவர் பதில்களும் ......
கே - புத்தரின் மனம் என்பது என்ன?
உன் மனம்தான் அது. உன் இயல்பான சாராம்சத்தை நீ காணும்போது அதனை நீ அதுவாக அழைக்கலாம். அதுதான் SUCHNESS.இயற்கையின் மாறாத தன்மையை உனக்குள்ளே நீ கண்டால் அதனை தர்ம கயா என்று அழைக்கலாம்.அது சுதந்திரமாகவும் எளிமையாகவும் செயல்படக் கூடிய மனநிலை.மற்றவர்களால் எந்த இடையூறும் அதற்கு இல்லை.எனவே இதனை மெய்மையின் பாதை என்று அழைக்கலாம். அது பிறந்து வரவுமில்லை எனவே அது இறக்கப் போவதுமில்லை. எனவே அதனை நிர்வாணா என்றும் அழைக்கலாம் என்று போதி சத்துவர் அதற்கு விளக்கம் அளிக்கிறார்.

இந்த கேள்வி பதில் பகுதிக்கு தனது வெண் தாமரை நூலில் ஓஷோ பக்கம் பக்கமாக விளக்க உரை அளித்துள்ளார். ஓஷோவின் சொற்களில் படிக்க விரும்புகிறவர்கள் அவரது நூல்களை வாங்கிப் படிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். அதனை முழுமையாக மொழிபெயர்ப்பதில் பல்வேறு உரிமை பிரச்சினைகள் உள்ளன. எனவே அதற்கு நான் போகவில்லை. போதி தர்மரை ஓஷோ  அறிமுகம் செய்யும் விதத்தை தமிழ் வாசகர்களுக்கு கொண்டு வருவதையே இந்த கட்டுரையின் நோக்கம்.
இயல்பாக இருப்பதுதான் புத்தரின் மனம் என்கிறார் போதிதர்மர். நம் வாழ்க்கை நம்மை இயல்பாக இருக்க விடுவதில்லை. எப்போதும் மற்றவர்களின் அபிப்ராயங்களுடனே உழல்கிறோம். எல்லோரும் வாழ்க்கையில் நமக்கு லைக் போடுவதில்லை .சிலர் மோசமான கமெண்ட்டும் அடிப்பார்கள். எதையாவது சொல்லி மனத்தை துன்புறுத்துவார்கள்.
மெய்மை மனநிலை பிறக்கவும் இல்லை அது இறக்கவும் முடியாது என்கிறார் போதி தர்மர் . இதனை ஓஷோ முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளார். அவருடைய கல்லறையில் அவர் விரும்பிய படியே எழுதப்பட்ட வாசகமும் இதுதான்.
ஓஷோ பிறக்கவும் இல்லை. இறக்கவும் இல்லை.... பூமியில் அவர் தோன்றி கடந்து சென்றார் எனும் வகையில் ஓஷோவின் கல்லறை வாசகம் அமைந்துள்ளது.
ஆன்மா அழிவற்றது என்ற கோட்பாட்டை ஒட்டிய கருத்தியல் இது.
கடவுள் என்ன என்று தேடும் அத்தனை மனங்களும் கேட்டுக் கொள்ள வேண்டிய முதல் கேள்வியே இதுதான். இதுதான் ஆன்மீகத் தேடலின் தொடக்கம் என்கிறார் ஓஷோ.
"புத்தர் மனம் என்பது தூய்மையான விழிப்புணர்வு. அது ஒரு கண்ணாடி மாதிரி. பிரதிபலிப்பது மட்டுமே அதன் வேலை. அது ஒரு போதும் உருவத்தைத் திருத்துவதில்லை. எதையும் திணிப்பதுமில்லை. அதற்கென கருத்து ஏதுமில்லை. அதற்கென உள்ளடக்கம் ஏதுமில்லை. எந்த சிந்தனையும் இல்லை. எந்த ஆசைகளும் இல்லை. எந்த நினைவுகளையும் அது தேக்கி வைத்துக் கொள்வதில்லை. என்றென்றைக்குமான நிகழ் யதார்த்தத்தில் ஒரு நிகழாக அது இருக்கிறது. அது நிகழ்காலத்தில் இருக்கிறது. இதே போன்று முழு விழிப்புணர்வுடன் நீ இருக்கும் போது மனம் மறைந்துவிடுகிறது .அதன் எல்லைகள் யாவும் மறைந்துவிடுகின்றன. ஒரு மகத்தான வெறுமை உனக்குள் தோன்றுகிறது.ஆனால் அந்த வெறுமை என்பதும் வெறுமை அல்ல. அது ஒரு பூரணமும் கூட. அது உன்னுள் நிரம்புகிறது.நிரம்பி வழிகிறது. வெறுமை என்பது உன் துன்பங்களை அது தூக்கியெறிந்து விட்டது. பூரணம் என்பது ஆனந்தத்தால் அது நிரம்பி வழிகிறது "என்கிறார் ஓஷோ .
புத்தரின் மனம் என்பது எது என்ற கேள்விக்கு உன் மனம் தான் அது என்கிறார் போதிசத்துவர். ஒவ்வொரு மனிதனும் புத்தர் மனநிலையுடன் தான் சிறு குழந்தைப் பருவத்தில் பிறக்கிறான். அறிவு அனுபவம் அவன் மனத்துக்குள் குப்பைகளை குவித்து விடுகிறது. மனக் கண்ணாடியில் தூசு படிகிறது. அதிகமான தூசு படிந்து கண்ணாடி உன்னை பிரதிபலிக்காமல் மங்கலாகிறது. உன் உண்மையான உருவம் தெரியாமல் நீ தடுமாறுகிறாய் என்று இந்த கேள்விக்கு ஜென் விளக்கம் தருகிறது. இதையே ஓஷோவும் கூறுகிறார்.
" கடவுளைத் தேட விரும்புகிறவர் முதலில் இந்தக் கேள்வியைத் தான் கேட்டுக் கொள்ள வேண்டும் .இக்கேள்விக்கான பதிலை நீ புரிந்துக் கொண்டால் நீயும் புத்தர் மனநிலையில் இருப்பவன் தான். "
விழிப்புணர்வு இல்லாத புத்தர் மனம் இருப்பினும் கூட மனிதன் இயல்பிலேயே புத்தன் தான். விழிப்புணர்வு அல்லாத போதும் அவன் புத்தன்தான் என்கிறார் ஓஷோ.
ஓஷோவின் குட்டிக் கதை ஒன்று எனது சொற்களில்....
ஒரு யானை காட்டுவழியாக சென்றுக் கொண்டிருந்த போது ஒரு எலி கையை நீட்டி என்னை முதுகில் ஏற்றிச் செல்ல முடியுமா என்று கேட்டது. யானையும் நட்புடன் வா என்று அழைக்க எலி தாவிகுதித்து யானையின் முதுகின் மீது ஏறிக் கொண்டது. சிறிது தூரம் சென்றதும் யானையின் முதுகில் இருந்த எலி கெக்கெ பெக்கே என சிரி்த்தது. யானைக்கு ஒன்றும் புரியவில்லை. மீண்டும் சிறிது தூரம் சென்றதும் யானையின் முதுகில் இருந்த எலி மீண்டும் கெக்களித்து சிரித்தது. யானைக்கு கோபம். எதற்காக சிரிக்கிறாய் சொல். நீ சொல்லாவிட்டால் என் முதுகிலிருந்து உன்னை இறக்கி விட்டு விடுவேன்.
எலி சொன்னது உன் முதுகில் அமர்ந்து இரண்டு முறை நான் உன்னுடன் உடலுறவு கொண்டேன். I RAPED YOU TWICE ஆனால் நீ கவனிக்கவே இல்லை. இதனால் தான் சிரித்தேன்
நம்மையும் எத்தனையோ பேர் இப்படி ரேப் செய்கிறார்கள் ,விழிப்புணர்வே இல்லாமல் அவர்களை நம் முதுகுகளில் சுமந்தபடியே நாமும் போய்க்கொண்டே இருக்கிறோம்.
-----------
ஜென் தேநீர்  19

ஓஷோவும் ஜென்னும்.
செந்தூரம் ஜெகதீஷ்

போதி தர்மரிடம் கேட்கப்பட்ட கேள்விகள், அதற்கு அவர் அளித்த பதில்கள் நான்கு சீடர்களால் தொகுக்கப்பட்டுள்ளன. அந்த குறிப்புகளைப் பற்றிய ஓஷோவின் புத்தகம் தான் வெண் தாமரை ( THE WHITE LOTUS )
இந்த புத்தகத்தின் சிறப்புகளை பார்ப்போம்....
போதி தர்மரிடம் கேட்கப்பட்ட இரண்டாவது கேள்வி
தத்தகத்தர் என்பவர் யார்
போதி சத்துவர் கூறுகிறார் தத்தகத்தர்  தான் எங்கிருந்தும் வரவில்லை எங்கும் போகவில்லை என்பதை அறிந்தவரே தத்தகத்தர்.
தத்தகத்தர் என்பது புத்தரின் இன்னொரு  பெயர். இச்சொல்லின் பொருள் எங்கிருந்தோ வந்து எங்கேயோ போகும் காற்றைப் போன்றவர் என்பதாகும். வந்ததும் தெரியாது போவதும் தெரியாது. அது பாட்டுக்கு வரும் அதுபாட்டுக்கு போகும். புத்தருக்கு இன்னொரு பெயர் உண்டு .அமிதாப். அமிதாப் என்றால் அவர் நிரந்தரமான ஒளி. எல்லைகளற்ற ஒளி. மனம் மறைந்துவிடும் போது அத்தனை இருளும் மறைந்து எங்கும் ஒளியாக காட்சியளிக்கிறது. இன்மை மறைந்து ஒளி நிரம்புகிறது என்பார் ஓஷோ.
புத்தரையும் அப்படித்தான் உணர முடியும். கடவுளையும் அப்படித்தான் உணர முடியும்.
 ஓஷோ இதனை குட்டிக் கதை மூலம் உணர்த்துகிறார். ஒரு சின்னக்குழந்தையிடம் அவர் தந்தை பாடம் நடத்திய போது தனது நாத்திக கருத்தை திணிக்க முயன்றார். ஆங்கிலத்தில் கடவுள் எங்கும் இல்லை என்று பொருள்படியாக GOD IN NOWHERE ஒருவரியை எழுதி குழந்தையை திருப்பி எழுதச் சொன்னார்.
குழந்தை வார்த்தையைப் பிரித்து எழுதியது GOD IS NOW HERE.
ஓஷோ மேலும் ஒரு சம்பவத்தால் விளக்கம் தருகிறார்
ரமண மகிரிஷியிடம் மரணப் படுக்கையில் ஒருவர் கேட்கிறார் நீங்கள் இறந்த பின்னர் எங்கே போவீர்கள் என்று . ரமணருக்கு புற்று நோய் இருந்தது .அவர் வலியால் துடித்துக் கொண்டிருந்தார். ஆனாலும் இந்த கேள்வியை கேட்டு சிரித்தார். நான் எங்கேயும் போக மாட்டேன். இங்கேதான் இருப்பேன். என் உடல் மண்ணோடு மண்ணாக சாம்பலாகிப் போகும். ஆனால் நான் எங்கும் போக மாட்டேன்.
எல்லோருக்கும் மரண பயம் உண்டு. செத்த பின் மாந்தர் நிலை என்றுமறைமலையடிகள் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். திபெத்தில் மரணம் குறித்த பிரபலமான புத்தகம் ஒன்று உண்டு . தற்கொலை செய்துக் கொண்ட பெண் கவிஞர் சில்வியா பிளாத் மரணம் ஒரு கலை வாழ்க்கையைப் போல அதையும் பழகிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
நமது அரசாங்கங்கள் நம்மை கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள் என்று கூறுவது இதைத்தானோ?
இறந்த பின்னர் உடல் என்ன ஆகும். ஆவிகளுடன் பேச முடியும் என்று தமிழ்நாட்டில் பலர் நம்புகின்றனர். ரவிச்சந்திரன் என்பவர் மகாபாரதத்திலும் பைபிளிலும் கூட ஆவிகள் இருப்பதை சுட்டிக் காட்டுகிறார். ஆன்மா அழியாதது என்ற இந்து மதக் கோட்பாடு பகவத் கீதையிலும் உரைக்கப்படுகிறது.
பாம்பு சட்டையைக் கழற்றுவது போல் மனிதப் பிறவி உடலை கழற்றிப் போகிறது என்பது பலரும்நம்புகிற விஷயம். ஆனால் இதற்கு சான்றுகள் இல்லை. புத்தர் முன்காலத்தில் ஒரு புத்தர் இருந்தாரே என்று கேட்பதும் அர்த்தப்பூர்வமானது.
ஜென் எப்போதும் முரண்பட்ட புதிர்கள் மூலமே உரையாடுகிறது.
ஓஷோ அதை  ஒரு ஜென் கோன் ( koan )  மூலமாக அழகாக விளக்குகிறார்.
பெரிய தொப்பை வயிறு வலிக்க சிரிக்கும் போது உலகில் ஆயிரம் வெண் தாமரைகள் மழை பொழிவதைப் போல் மலர்கின்றன.
ஞானியின் தொப்பை குலுங்க சிரிக்கும் போது வெண் தாமரைகள் மலர்வதை ஒரு கதை மூலமும் ஓஷோ விளக்குகிறார்.
ஒரு முறை புத்தரிடம் அவர் சீடர் சுபுத்தி பேசிக் கொண்டிருந்த போது கடந்த காலத்திலும் ஒரு புத்தர் இருந்தார் அவர் எதையாவது அடைந்தாரா என்று கேட்கிறார் புத்தர்
அவர் வேறொரு காலத்தைச் சேர்ந்த புத்தர் அவர் எதையும் அடையவில்லை. இங்கு அடைவதற்கு ஒன்றுமில்லை என்று பதிலளிக்கிறார் சுபுத்தி
புத்தர் சிரித்தார். சுபுத்தி நீ  என்னிடமிருந்து எதையாவது பெற்றுக் கொண்டாயா..எதையாவது அடைந்தாயா...?
சுபுத்தி கூறுகிறார் மரியாதைக்குரியவரே நான் தங்களிடமிருந்து எதையும் அடையவில்லை. எனவே தான் உங்களை தலைவணங்கி வணங்குகிறேன்.
ஜென் இத்தகைய முரண் மிக்க வாசகங்கள் நிரம்பியது. இவற்றின் அர்த்தகம் நேரடியானது அல்ல. அனுபூதியானது.
----------------
ஜென் பற்றியும் ஜென்னை ஓஷோ விளங்கிக் கொண்ட விதமும் அவர் விளக்கம் சொன்ன விதமும் குறித்த இப்பகுதி மிகவும் முக்கியமானது. ஜென்னை ஆழ்ந்து உணர்ந்தவர் ஓஷோ. அவர் கூறாத ஜென் கதை இல்லை. அவர் சொல்லாத ஜென் விளக்கம் இல்லை. நூற்றுக்கணக்கான புத்தகங்களில் அவர் ஜென் பற்றியும் ஜென் குருமார்கள் பற்றியும் தனது வசீகரமான சொல்லாற்றல் பேச்சாற்றலால் விளக்குகிறார். அத்தனை புத்தகங்களையும் தேடிப் பிடித்து வாங்கிப் படித்து குறிப்புகள் எடுத்து வைத்திருக்கிறேன். அதை இத்தொடரில் கூடுமானவரை தர முயற்சிக்கிறேன். பல அற்புத தருணங்களை அதில் நீங்கள் கடந்து செல்வீர்கள். முடிந்தால் இதன் ஞானத்தையும் ஞான ஒளியையும் கைப்பற்றுங்கள். உங்கள் வாழ்க்கையின் இருள் விலகும். கேள்விகள் மறையும், புத்தரையும் ஓஷோவையும் வணங்கி நன்றி கூற வைக்கும்.
ஓஷோவின் ஞானம் கடல் போன்றது.அதில் ஒரு கைப்பிடியைத்தான் நான் அள்ளி வருகின்றேன்.
---------
ஜென் தேநீர்  20

ஓஷோவும் ஜென்னும்.
செந்தூரம் ஜெகதீஷ்
ஓஷோ சொன்ன குட்டிக் கதை ஒன்று...
நான்கு சீடர்கள் மௌன விரதம் இருக்க முடிவு செய்தனர். ஒரு குகைக்குள் உட்காந்து ஏழு நாட்கள் யாரும் யாருடனும் பேசாமல் அமைதியாக இருக்க முடிவு செய்தனர். ஆனால் ஒருமணி நேரம் கூட அவர்களால் சும்மா இருக்க முடியவில்லை. வெளியே வந்தனர். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு திருதிருவென முழித்தனர்.
உள்ளே விளக்கை அணைத்து வந்தோமா என்று கேட்டான் ஒருவன்
முட்டாள்...ஏழு நாட்களுக்கு எதுவும் பேசக்கூடாது என்பது நிபந்தனை...மறந்துவிட்டாயா என்றான் இரண்டாவது சீடன்
முட்டாள் நீயும்தானே பேசிவிட்டாய் என்றான் மூன்றாமவன்
நல்லவேளை நான் எதுவும் பேசவில்லை என்றான் நான்காவது சீடன்.

---இன்னும் சில ஜென் கதைகள்....
ஒரு ஜென் குருவிடம் ஒருவன் கேட்டான்...ஞானம் அடைவதற்கு முன்பு நீங்கள் என்ன செய்துக் கொண்டிருந்தீர்கள்..?
குரு சொன்னார் " நான் காட்டுக்குப் போய் விறகு வெட்டி வருவேன். கிணற்றில் போய் நீர் இறைத்து வருவேன் "
ஞானம் அடைந்த பிறகு என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று மேலும் கேட்டான் அந்த மனிதன்.
குரு சொன்னார் நான் காட்டுக்குப் போய் விறகு வெட்டி வருகிறேன். கிணற்றுக்குப் போய் நீர் இறைத்து வருகிறேன்.
அப்படியானால் ஞானத்துக்கு முன் ஞானத்துக்குப் பின் என்பதில் என்ன வித்தியாசம்?
குரு சொன்னார். அப்போதும் விறகு வெட்டினேன். இப்போதும் விறகுவெட்டுகிறேன். அப்போதும் கிணற்றில் நீரிறைத்தேன். இப்போதும் நீர் இறைக்கிறேன். ஆனால் முன்பு விழிப்புடன் அதை செய்யவில்லை. இப்போது அதனை விழிப்புடன் செய்கிறேன்.
----------
இன்னொரு ஜென் குருவிடம் ஒருவன் கேட்டான் தர்மம் என்பது என்ன?
குரு சொன்னார் எனக்குப் பசிக்கும் போது சாப்பிடுகிறேன் .தூக்கம் வரும் போது தூங்குகிறேன்.
------
கேப்டன் தான் சிறைப்பிடித்த கைதியை விடுதலை செய்ய சில நிபந்தனைகள் விதித்தான்.
முதல் நிபந்தனை முதல் கூடாரத்திற்கு போ அங்கு ஒரு பேரல் நிறைய மது இருக்கிறது. அனைத்தையும் மூச்சிவிடாமல் குடித்து விட வேண்டும்.
அடுத்த கூடாரத்தில் ஒரு அழகா ன பெண் இருக்கிறாள். காமத்தால் தாளமுடியாமல் தவி்க்கிறாள். அவளை யாரும் திருப்தி படுத்த முடிந்ததே இல்லை. அவள் கூடாரத்திற்குப் போய் ஆசை தீர உடலுறவு கொண்டு திருப்தி செய்தால்தான் அவள் உன்னை உயிருடன் விடுவாள். இ்லலையென்றால் கொன்று விடுவாள்.
மூன்றாவது கூடாரத்தில் ஒரு பசித்த சிங்கம் இருக்கிறது. அருகில் போனாலே கடித்து குதறி எடுத்துவிடும். அந்த சிங்கத்துக்கு பல நாட்களாக பல்வலி. பசியோடு இருப்பதால் அதன் அருகில் செல்ல யாருக்கும் துணிவில்லை. நீ போய் அந்த சிங்கத்தின் பல்லை பிடுங்கி எடுத்து வா. உயிருடன் திரும்பி வந்தால் உனக்கு விடுதலை
கைதி பாய்ந்தான். முதல் கூடாரத்தில் நுழைந்து மதுவை குடித்துமுடித்தான். அடுத்த கூடாரத்தில் நுழைந்தான் .பெரும் ஓசைகள், ஆ ஊ என்ற அலறல்கள் கேட்டன. ரத்த காயங்களுடன் வெளியே வந்த கைதி பல்வலியால் துடிக்கும் பெண் எங்கே இருக்கிறாள் என்று கேட்டான்.
-----------
புத்தரிடம் ஒருவன் வந்து கடவுள் இருப்பது உண்மையா என்று கேட்டான்.
இல்லை. கடவுள் இல்லவே இல்லை என்றார் புத்தர்
ஆனந்தா என்ற சீடர் புத்தரை கவனித்துக் கொண்டே இருந்தான். மாலையில் இன்னொருவன் வந்தான் கடவுள் இருப்பது உண்மையா என்று அதே கேள்வியை கேட்டான்.
ஆம் .கடவுள் இருப்பது உண்மைதான் என்றார் புத்தர். கடவுள் எப்போதும் இருக்கிறார். அவரைத் தேடினால் கண்டு அடையலாம் என்றார் புத்தர்
ஆனந்தா குழப்பம் அடைந்தார். காலையில் இல்லை என்கிறார் மாலையில் கடவுள் உண்டு என்கிறார் புத்தருக்கு என்ன ஆச்சு என்று ஆனந்தா யோசிக்கிறார்.
மூன்றாவதாகா ஒரு நபர் இரவில் வருகிறார் .அவரும் கடவுள் இருக்கிறாரா என்று கேட்கிறார். புத்தர் பதில் ஏதும் கூறாமல் கண்களை மூடி தியானம் செய்கிறார். நீண்ட நேரமாக பதிலை எதிர்பார்த்து புத்தரின் காலடியில் காத்திருந்த அந்த நபர் நன்றி எனக்கு பதில் கிடைத்துவிட்டது என்று கூறி வணங்கி சென்று விட்டான்.
ஆனந்தாவால் தாங்க முடியவில்லை. புத்தர் தியானத்தில் இருந்து மீண்டதும் கேட்டே விட்டார்.
காலையில் இல்லை என்கிறீர்கள் மாலையில் உண்டு என்கிறீர்கள். இரவில் ஒன்றும் கூறாமல் மௌனமாக இருக்கிறீர்கள். வந்தவனும் பதில் கிடைத்து விட்டது என்று கூறிச் சென்று விட்டான் .என்னதான் நடக்கிறது இங்கே?
புத்தர் விளக்கினார்.
காலையில் வந்தவன் கடவுள் நம்பி்க்கையுடன் வந்தான் .என் வாயால் கடவுள் உண்டு என்பதை சொல்ல வைக்க அவன் விரும்பினான் ,பின்னர் தனது நம்பிக்கையை வலுப்படுத்திக் கொண்டு ஊரெல்லாம் போய் புத்தரே கடவுள் இருப்பதாக ஒப்புக் கொண்டு விட்டார் என்று பிரச்சாரம் செய்வான், அவன் நம்பிக்கைக்கு என் பெயரைப் பயன்படுத்துவான். அதனால்தான் கடவுள் இல்லை என்று அவனிடம் கூறினேன்.
இரண்டாவதாக வந்தவன் கடவுளை நம்பாத நாத்திகன் .அவனும் தனது கருத்தை உறுதிப் படுத்திக் கொள்ள வந்தான், அதனால்தான் கடவுள் எப்போதும் இருக்கிறார், தேடினால் அடையலாம் என்று பதில் அளித்தேன்.
மூன்றாவதாக வந்தவன் கடவுள் உண்டா இல்லையா என்ற குழப்பத்தில் வந்தவன். அவனுக்கு எந்த பதிலையும் நான் கூற முடியாது. என் மௌனத்தால் அவன் மனம் சொன்ன பதிலை அவன் ஏற்றுக் கொண்டு பதில் கிடைத்துவிட்டதாக சென்றுவிட்டான்.
எல்லா பதில்களிலும் சிறந்த பதில் மௌனம்தான். மௌனத்தில் தான் அனைவருக்குமான பதில்கள் கிடைக்கின்றன. அதனால்தான் அவன் நன்றியுடன் என்னை வணங்கிச் சென்றான் என்கிறார் புத்தர்.
---------------------
ஒரு ஜென் கதை
ஒருவன் தன் மனைவிக்கு நடுங்குபவனாக இருந்தான். மனைவி அவனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தாள். எந்த ஒரு செயலிலும் சொல்லிலும் மனைவிக்கு அஞ்சிக்கொண்டிருந்தான். அவன் மனைவி நோயுற்றாள். அவள் சாகப்போவதை அவன் உணர்ந்தான். ஒரு விடுதலை உணர்வு தோன்றுவதற்கு பதிலாக அவனுக்கு அச்சம் மேலும் அதிகமானது. அவன் மனைவி ஒரு பேயாக பிசாசாக மாறி வந்து அவனை இன்னும் அதிகமாக ஆட்டிப்படைப்பாள் என்று அச்சம் கொண்டான்.
ஒரு ஜென் குருவிடம் போனான் .தன் அச்சத்தை கூறினான். குரு அவன் கூறுவதை முழுமையாக கூர்ந்து கவனித்தார் .பின்னர் ஒரு சிறிய மூட்டையை அவன் கையில் கொடுத்தார் .இது என்ன என்று கேட்டான் அவன்.
இவை கூழாங்கற்கள். இவற்றை மூட்டையாக கட்டியிருக்கிறேன். ஆனால் இதில் எத்தனை கற்கள் இருக்கின்றன என்று உன் மனைவி பேயாக வந்தால் கேள். அவள் பதில் சொல்லாமல் மறைந்துவிடுவாள். அதுவரை நீயும் இதனை திறந்து கற்களை எண்ணக்கூடாது என்றார் ஜென்குரு.
அந்த நபர் வீட்டுக்குப் போனான். வீட்டு வாசலில் மனைவி பேய் வடிவில் காத்திருந்தாள். அவன் நடுநடுங்கி்ப் போனான்.
என்ன அந்த ஜென் குருவிடம் தானே போய்வந்தாய் ..என்னைவிரட்ட முயற்சிக்காதே நான் உன்னைவிட்டு போக மாட்டேன் என்று அவள் ஆவி கூற அவன் மேலும் நடுக்கம் கொண்டான் .நான் ஜென் குருவிடம் போனது இவளுக்குத் தெரிந்துவிட்டதே என்று. ஆயினும் தன் கையில் இருந்த மூட்டையை எடுத்து அவளிடம் காட்டினான் .இதுதான் ஜென் குரு கொடுத்தது. இதில் எத்தனை கூழாங் கற்களை இருக்கின்றன என்று உன்னிடம் கேட்கச் சொன்னார் .பதில் தெரியாவிட்டால் நீ மறைந்து ஒழிந்துவிடுவாய்
மனைவியின் ஆவி திணறியது. அதற்கு பதல் தெரியவில்லை .காற்றோடு காற்றாக கரைந்து மறைந்து போனது. அதன் பிறகு அவன் வாழ்க்கையில் அது வரவே இல்லை. அவன் மிகவும் மகிழ்ச்சியுடன் குருவிடம் ஓடினான்.  குருவே என்ன மாயம் என்ன மந்திரம் என் மனைவியின் ஆவியை விரட்டிய ரகசியம் என்ன எனக்கு சொல்லுங்களேன் என்று கேட்டான். குரு சிரித்தார். உன் மூட்டையை அவிழ்த்து அதில் எத்தனை கூழாங்கற்கள் இருக்கின்றன என்று எண்ணி்ப் பார் என்றார் குரு.
எண்ணினான் 11 கற்கள் இருந்தன
இதுதான் அந்த ரகசியம் என்று கூறினார் குரு. நீ மனைவியால் துன்புறுத்தப்பட்டதால் அதுகுறித்த பிரமையும் அச்சமும் உன் மனதுக்குள் இருந்தது. அவள் பேயாகவும் ஆவியாகவும் உன்னை மிரட்டிக் கொ ண்டிருந்தாள் .அது வெறும்  பிம்பம். மாயை என்று நான் கூறினால் நீ நம்ப மாட்டாய் .அதனால்தான் கூழாங்கற்களை மூட்டைக்கட்டி கொடுத்தேன். அதில் உள்ள கற்கள் எத்தனை என்று எனக்கே தெரியாது .உனக்கும் நான் கூறவில்லை. அதனால்தான் உன் மனைவிக்கும் தெரியவில்லை. அவள் ஜென்குருவிடம் போய் வந்ததை சொன்னாள் ஏன் என்றால் நீ ஜென் குருவைத் தேடி வந்தது உனக்கே தெரியும். உனக்குத் தெரிந்தது மட்டும்தான் உன் மனைவிக்கும் தெரியும். உனக்குத் தெரியாத கூழாங்கற்களின் எண்ணிக்கை அவளுக்கும் தெரியாது .அதனால் அவள் மறைந்துவிட்டாள் என்று குரு விளக்கம் தந்தார்.
-----------
முல்லா நசுருதீன் லாரி சத்தம் கேட்டால் உடல் நடுங்குவதை அவர் நண்பர் கவனித்தார். இதுபற்றி அவர் விசாரித்தார் ஏன் எப்போதும் லாரி வரும் ஓசை கேட்டால் உன் உடல் நடுங்குகிறது என்று...
முல்லா கூறினார். என் மனைவி ஒரு லாரி டிரைவருடன் ஓடிப்போனாள்
அடடா என்றார் நண்பர் அதனால்தான் நடுங்குகிறாயா
இல்லை. லாரி சத்தம் கேட்கும் போது என் மனைவியைத் திருப்பி்க் கொடுக்க  வந்துவிட்டாரோ என்று நடுங்குகிறேன் என்றார் முல்லா.
--
ஓஷோவின் வெண் தாமரை ( THE WHITE LOTUS ) புத்தகத்தில் இருந்து தொகுத்தவை. என்னுடைய சொந்த சொற்களில்,
--------------------------

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...