Saturday 11 March 2017

பயணம் 8 -திருச்சி- கோவை

திருச்சிக்கு செல்வதென்றால் எப்போதும் சந்தோஷம்தான் எனக்கு. எனது பால்ய கால நினைவுகள் கொட்டிக் கிடக்கும் ஊர். மெயின்கார்டு கேட் மைக்கேல் ஐஸ்கிரீம், காவிரி ஆறு ( இப்ப காய்ந்து கிடக்கு ) ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவானைக்காவல், மலைக்கோட்டை, உறையூர், தென்னூர், வயலூர், ஜங்சன், சத்திரம்  பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், தில்லை நகர் ,காந்தி மார்க்கெட், பாலக்கரை என சுற்றி சுற்றி நடந்த நாட்கள் நினைவில் என்றும் தங்கியிருப்பவை. நான் படித்த காம்பியன் பள்ளியைப் பார்ப்பதும் , மலைக்கோட்டை அருகே பழைய புத்தகக் கடைகளில் பொக்கிஷங்களை கண்டெடுப்பதும் தனிசுகம், நன்னாரி சர்பத், கோனார் மோர்-வெண்ணெய், சரஸ்வதி கபேயில் அருமையான முழுச்சாப்பாடு,திருச்சி கபேயின் கேரட் சாம்பார் என வாய்க்கும் ருசியான உணவுகளை சுவைப்பதும் சுகமோ சுகம். டிவைன் என்பார்களே அதுதான்.

திருச்சியில் நான் பார்த்த பல திரையரங்குகளை காணவில்லை. ஜூபிடர்,  ராக்சி , கெயிட்டி, வெலிங்டன் போன்றவை இப்போது இல்லை என நினைக்கிறேன். எப்படியோ கோகினூர், மாரீஸ் போன்றவை பிழைத்திருக்கின்றன

திருச்சியில் நண்பர்கள் அதிகமாக இல்லை என்றாலும் இப்போது கவிஞர் எஸ்.அறிவுமணி அங்கு இருக்கிறார். கவிதைக்காரன் என்ற சிற்றிதழையும் வண்ண மயில் என்றொரு இதழையும் நடத்தியுள்ளார். நிறைய கவிதைகள் எழுதிக் குவிப்பார். பேராசிரியர் பெரியார்தாசன் அவருடைய அருமையான ஒரு வரியை மேடைதோறும் குறிப்பிடுவார் சோத்துக் கூடையை பசியோடு சுமப்பவர்கள் என்பது அந்த வரி
அறிவுமணி வைரமுத்துவின் நெருங்கிய நண்பராக இருந்தார். இருந்தார் என்பதற்கு அடையாளம் வைரமுத்து ஒன்றும் குசேலன் ரஜினியும் இல்லை அறிவுமணி ஒன்றும் அப்படத்தில் வரும் பசுபதியும் இல்லை. சினிமா வேறு வாழ்க்கை வேறுதான்
ஆனால் அறிவுமணி நிறைவாக வாழ்கிறார். தனதுகுடும்பம், வேலை, பழைய இருசக்கர வாகனம், கையளவுக்கு காசு, சி்க்கனம், கோவில் திருவிழாக்கள், ஒண்டிவீரன் கருப்பணசாமி தரிசனம், உறவுக்கார தோழமைகள், வாசகர்கள், முகநூல் நண்பர்கள் என தனது சின்னஞ்சிறிய உலகையும் வண்ணமயமாக்கிக் கொள்ளத் தெரிந்த இனிய நண்பர் அவர்

அறிவுமணியுடன் சில மணி நேரம் கழித்த பின்னர் நண்பர் ஆர்.கே.ரவியும் நானும்  கோவைக்குப் பயணப்பட்டோம்.
அங்கு மீண்டும் நண்பர் ஷாராஜூடன் சந்திப்பு

ஷாராஜ் தனது ஓவியக் கண்காட்சியின் கனவுகளுடன் இருந்தார். எழுத்து என்பது மனசுக்கு வலி தரும் அனுபவம். ஆனால் ஓவியம் தான் எனக்கு கொண்டாட்டம் என்று ஷாராஜ் கூறினார். எனது கோப்பைகளி்ல வண்ணம் நிரம்பியிருக்கும் போது எனக்கு மது தேவைப்படுவதில்லை என்றும் கவிதையாக கூறினார். நிறைய யோசிக்க வைத்தது.

எனக்கும் எழுத்து வலிதான் என்பதை கிடங்குத் தெரு வாசித்தவர்கள் உணர முடியும். ஆனாலும் நான் எழுத்தைத்தான் நாடிச் செல்கிறேன். கோவையிலும் வலி நிறைந்த அனுபவங்கள் உண்டு அதற்காக கோவை செல்லாமல் இருக்க முடியுமா.....

விஜயா பதிப்பகம் வேலாயுதம் அய்யாவை சந்தித்தது கூடுதலான மகிழ்ச்சியை அளித்தது. அன்பும் கனிவும் மிக்க ஒரு பெருந்தகை அவர்

எத்தனை வலிகள் இருப்பினும் இதுபோன்ற சில மகிழ்ச்சிகளும் மறக்க முடியாத நினைவுகளும் தானே வாழ்க்கை

மருதமலை முருகனையும் தரிசி்த்து வந்தோம். டூவிலரில் மலை ஏறிச் சென்றது இனிய அனுபவம். 

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...