Saturday 11 March 2017

சென்னை சர்வதேச திரைப்பட விழா 2017


குமுதம் தீராநதி பிப்ரவரி ,மார்ச் இதழ்களில் வெளியான கட்டுரைத் தொடர்


சென்னை சர்வதேச திரைப்பட விழா படங்கள்
செந்தூரம் ஜெகதீஷ்






இருளில் பூத்த கனவு மலர் ( பிரான்ஸ்)
சென்னை சர்வதேசத் திரைப்பட விழா 2017ல் திரையிடப்பட்ட படம்....
செந்தூரம் ஜெகதீஷ்
மனித மனம் இருமை நிறைந்தது. இருட்டுக்குள் இருந்துதான் ஒவ்வொரு கலையும் வெளிப்பட்டு உன்னதம் பெறுகிறது. கலைஞனின் மன உழல்வுகளும் கண்ணீரும் வெளியே தெரிவதில்லை. ஆனால் கலை போற்றப்படுகிறது.
டான்சர் ( நடன மங்கை ) என்ற இந்தப் படம் ஒரு கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு நடன மங்கையின் உண்மைக் கதையைத் தழுவியது. பிரான்சின் புகழ் பெற்ற நடனக்காரி லூயி புல்லர் மற்றும் அவருடைய போட்டியாளர் இசடோரா டங்கன் ஆகிய முக்கிய கதாபாத்திரங்களை சுற்றி பின்னப்பட்டுள்ளது. இதன் திரைக்கதையை தாமஸ் பிடேகன் மற்றும் சாரா தெய்போட் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்தின் இயக்குனர்  ஸ்டபெனி டி குயிஸ்ட்டோ (Stéphanie Di Giusto. )
கடந்த டிசம்பர்  இறுதியில் இப்படம் திரையிடப்பட்டது. புத்தாண்டு பிறந்த 5வது நாளிலேயே இது சென்னை ரசிகர்களுக்கு சர்வதேசத் திரைப்பட விழாவில் காணக் கிடைத்தது. ஆனால் இப்படம் திரையிட்ட ஐநாக்ஸ் திரையரங்கில் குறைந்த அளவே இருக்கைகள் நிரம்பியிருந்தன. காலை 9.30 மணிக் காட்சி என்பதாலோ என்னவோ இப்படத்தை நிறைய ரசிகர்கள் தவற விட்டனர். ஆனால் அடுத்த காட்சி ஒரு வேசியைப் பற்றிய படம் என்பதால் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். உண்மையில் மக்கள் நல்ல படங்களைக் காண வருகிறார்களா அல்லது சென்சார் செய்யப்படாத படுக்கையறைக் காட்சிகளுக்காக வருகிறார்களா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
லூயி பில்லர் என்ற நடன மங்கையை இப்போது யாருக்கும்நினைவில்லை. ஆனால் நவீன நடக்கலையை வடிவமைத்ததில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு.லா லூயி என பிரான்ஸ் மக்கள் அவரை அழைத்திருந்தனர். அவர் ஒரு நடனப் புயலாக இருந்தார். நடனத்தை சந்தைப்படுத்தியவர்களுக்கு வசூலை வாரிக் குவித்தார். புல்லரின் சுழன்றாடும் நடனமில்லையென்றால் இன்றைய நடனக்கலை இத்தனை உயரங்களை எட்டியிருக்க முடியாது. புல்லரின் சுழல் நடனச் சித்திரங்கள், கோட்டோவியங்கள், சிற்பங்கள், படங்கள் யாவும் இப்போதும் காணக்கிடக்கின்றன.
புல்லரின் பாத்திரத்தில் நடித்தவர் நடன மங்கையும் நடிகையுமான சோகோ. சோகோவின் தனிப்பட்ட நடனக்கழுவினர் இந்த படத்திற்கான நடனங்களை வடிவமைத்தனர்.
 தந்தையுடன் லூயி புல்லர் அமெரிக்காவின் ஒரு மலை கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். அவர் ஒரு முறை தனது பாத் டப்பில் குளிக்கும் போது எதிரிகளால் சுட்டுக் கொல்லப்படுகிறார். பாத் டப்பில் ஓட்டை விழுந்து ரத்தம் கலந்த செந்நீர் கொட்டுவதில் இருந்து அவள் தந்தையின் மரணத்தைப் புரிந்துக் கொள்கிறோம். பின்னர் லூயி நியுயார்க்கில் உள்ள தமது தாயாரிடம் செல்கிறார். தாயார் ஒரு தேவாலயத்தில் தம்மை அர்ப்பணித்து விட்டவர். தந்தையை பற்றி குறை கூறும் போது நீ அவரை புரிந்துக் கொள்ளவில்லை அம்மா என்று பிரெஞ்ச் மொழியில் மகள் கூறுகிறாள். தாயிடம் நேரில் பேச பயம். லூயிக்கோ மேடை நாடக நடிகையாக வேண்டும் என்பது விருப்பம். ஆனால் தாய்க்கு தன்னைப் போல் கிறிஸ்துவ சமயத்திற்கு தமது மகளையும் தாரை வார்க்க வேண்டும் என்று ஆசை. மகளின் கூந்தலை வெட்டி கருப்பு கவுன் அணியச் செய்து அவளை தன்னைப் போல் மாற்ற முயற்சிக்கிறாள். ஆனால் நடிகையாகும் ஆசையில் புல்லர் ஒரு விளம்பரத்தைப் பார்த்து ஒரு நாடக கம்பெனிக்கு வாய்ப்பு கேட்டுச் செல்கிறாள். அங்கு மேலாடை இல்லாத நடிகை கேட்  அருகில் போர் வீராங்கனை போல் கவசமும் ஆடைகளும் அணிந்த புல்லர் அமர வைக்கப்படுகிறாள். அவள் ஸ்கர்ட்டை தூக்கி நிர்வாணமாக்க இயக்குனர் முயற்சிக்க, அதற்கு இணங்க மறுக்கிறாள் புல்லர்.
ஆனால் அந்த நிர்வாண நடிகை அருகில் அமர்ந்து எடுத்த படம் தாய்க்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. மகளின் புகைப்படத்தை தீயிட்டுப் பொசுக்குகிறாள். இந்நிலையில் நாடகத்தில் வாய்ப்பு கிடைத்து மேடையில் ஒரு காட்சியில் நடிக்கிறாள் புல்லர். அப்போது ஒரு விபரீதம் நிகழ்கிறது.
புல்லருக்கு நீண்ட வெள்ளை அங்கி ஆடையாக வழங்கப்பட்டுள்ளது. அதில் கைகளை மூடும் நீண்ட ஸ்லீவ்களும் உண்டு. அந்த ஸ்லீவ் களுக்குள் நீண்ட மூங்கில்களை மறைத்து வைத்திருக்க வேண்டும். ஆவியைப் போல் அவள் கைகளை நீட்டிக் கொண்டே கண்களை மூடியவாறு கல்லறையில் நடந்து வர வேண்டும் என்பதே காட்சி .ஆனால் அவள் அணிந்திருந்த தொள தொள பாவாடை இடுப்பில் நிற்காமல் நழுவுகிறது. தனது மானத்தைக் காப்பாற்ற புல்லர் முயன்று தடுக்கி விழுகிறாள். பார்வையாளர்கள் எள்ளி நகையாடுகின்றனர். ஆனால் தன்னை சுதாரித்துக் கொண்ட அவள், எழுகிறாள். பாவாடையை ஒரு கையாலும் தமது அங்கியை ஒருகையாலும் பிடித்து சுழன்று சுழன்று அந்த இயலாமையான தருணத்தை ஒரு நடனமாக மாற்றுகிறாள். அவள் சுழன்றாட சுழன்றாட நவீன நடனத்தை அவள் கண்டுபிடித்துவிடுகிறாள். மக்கள் மெய் மறந்து கைத்தட்டுகிறார்கள். அவள் ஒரு நடனமங்கையாக அவதரித்துவிட்டாள்.
ஆனால் வியாபாரிகள் அவள் நடன டிசைன்களையும் நடன ஸ்டைலையும் காப்பியடிக்கிறார்கள். நிர்வாண நடிகை கேட் அவளைப் போலவே நீண்ட அங்கியை அணிந்து மூங்கில்களை வைத்து சுழன்று ஆடுகிறாள். இது என் நடனம் நீ எப்படி ஆடலாம் என கத்துகிறாள் புல்லர்.
கலையைத் திருடுபவர்களுக்கும் வணிகமாக்குபவர்களுக்கும் கலையை உருவாக்கியவரின் வலி தெரியுமா...?
அவள் நடனத்தால் கவரப்பட்ட ஒரு அரசர் குல வாலிபர் அவளை அடைய முயற்சிக்கிறார். கவுன்ட் லூயிஸ் என்பவர் அவளை தமது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். ஆனால் அவள் இணங்கவில்லை. இந்நிலையில் அவருடைய பணம் கட்டுக்கட்டாக இருப்பதைப் பார்த்து அதைத் திருடி அவள் அங்கிருந்து தப்பிச் செல்கிறாள். தன் கனவைத் தேடி அவள் நியுயார்க்கை விட்டு பாரீசுக்கு குடிபெயர்கிறாள். ராயல் பாலே நடன மேடைகளில் ஆட வேண்டும் என்பதே அவளுக்கு இலக்காக இருக்கிறது. அங்கு அவள் ஒரு பிரபல கம்பெனிக்கு சென்று வாய்ப்பு கேட்கிறாள் முதலில் நிராகரிக்கும் மார்ச்சந்த் என்ற நடன கம்பெனி மேலாளர் பின்னர் அவள் திறைமை உணர்ந்து வாய்ப்பு அளிக்கிறார். தமது நடனங்களுக்காக தாம் செலவு செய்யத் தயார் என்கிறாள் புல்லர். அவள் வண்ண விளக்குகளை கேட்கிறாள். கண்ணாடியைக் கேட்கிறாள். நீண்ட அங்கிகளைக் கேட்கிறாள். நடன நிகழ்ச்சியின் செலவுகள் கூடுகின்றன. ஆனால் அவள் வணிக ரீதியாக தோற்கவில்லை. ரசிகர்கள் ஆர்ப்பரித்து அவள் நடனத்தை அங்கீகரிக்கின்றனர். பத்திரிகைகள் அவளை புகழ்ந்து தள்ளுகின்றன. மார்ச்சந்தின் உதவியாளரான பெண் கேப்ரியல் புல்லரின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கிறாள். பணமும் புகழும் புல்லருக்கு கொட்டுகிறது. அவளைத் தேடி வரும் கவுண்ட் லூயிசுக்கு திருடிய பணத்தைத் திருப்பித் தருவதாக அவள் கூறுகிறாள். ஆனால் அவரோ அவள் உடலைக் கேட்கிறார்.
இந்நிலையில் லூயி புல்லரின் நடனக்குழுவுக்கு மற்றொரு நடனக்காரி வருகிறாள். இசாடோரா என்ற அந்தப் பெண் சிலகாலம் புல்லரின் குழுவில் பணியாற்றுகிறாள். அவள் ஜப்பானிய கெய்ஷா போன்ற நடனமாடுவதில்  வல்லமை பெற்றவள். அவளதுநடன பாவங்கள் புல்லரைக் கவர்கின்றன. அவளை தம்முடன் மேடையில் ஆட ஒப்பந்தம் செய்கிறார். இந்நிலையில் இசாடோராவின் மீதான அதிக அன்பினால் ஓரினச் சேர்க்கைக்கும் புல்லர் துடிக்கிறாள். ஆனால் அவளை ஒதுக்கிவிட்டுச் செல்லும் இசாடோரா மற்றொரு கம்பெனியால் விலை பேசப்பட்டு புல்லருக்கு துரோகம் இழைத்து தப்பிச் சென்றுவிடுகிறாள்.
மிகுந்த மன உளைச்சலுடன் தவிக்கும் புல்லர் நட்பின் துரோகத்தாலும் தமது கலையின் இருண்ட காலத்தாலும் மீள முடியாமல் பரிதவிக்கிறாள். அவளால் நடக்கவே முடியவில்லை, போதையில் தள்ளாடி விழுகிறாள் .மனம் உடைந்து நொறுங்கி அழுகிறாள். அவளால் எப்படி ஆட முடியும். ஆனால் செட்டுகளுக்காக நிறைய செலவாகிவிட்டது. பணம் வாரியிறைக்கப்பட்டு விட்டது. இனி என்ன செய்வாள் புல்லர் ?இருட்டிலிருந்து ஒரு கனவு மலராக அவள் மறுபடியும் மலர்ச்சிக் கொள்வதும் தமது கலையின் மூலமாகத்தான். மேடையில் துயரம் ததும்ப அவள் ஆடும் கிளைமேக்ஸ் நடனத்தின் இறுதியில் புல்லர் மேடையில் விழுந்துக் கிடக்கிறாள். தமது நடனம் தோல்வியில் முடிந்ததாக அவள் நினைக்கும் போது ரசிகர்கள் கைத்தட்டி ஆரவாரிக்கிறார்கள். நல்ல கலையை ரசிக்க எப்போதும் தரமான ரசிகர்கள் இருப்பார்கள் எனப் புரிந்துக் கொண்டு அவர்களுக்குத் தலை வணங்குகிறாள் புல்லர்.
கண்கவரும் நடனக்காட்சிகளுடன் இனிய பின்னணி இசை பல நேரங்களில் இளையராஜாவின் பழைய பாடல்களை நினைவூட்டுகிறது. இப்படம் சற்றே மெதுவாக நகர்வது போல் தெரிந்தாலும் அதன் நடனக்காட்சிகள் நம்மை நிமிரச் செய்கின்றன.
ஒரு கனவு மலர் பூத்திருப்பது போல் தமது நடனத்தால் வசீகரித்த அந்த நடனக்காரி புல்லர், துரோகத்தாலும் மன உழல்வினாலும் இருளில் தள்ளப்பட்ட போதும் அதிலிருந்து அவளை கலைதான் மீட்டது. கலை கனவு மலரைப் போல் அவளை இருளில் இருந்து ஒளி மிக்க மலராக மலரச் செய்து விட்டது.
-------------------------------------------------------------------------------------



THE CUT - தி கட் - ஜெர்மனி 2014
இயக்குனர் -ஃபதி அகின் ( Fatih Akin)
கடந்த 2016 திரைப்பட விழாவில் திரையிட முயற்சித்து முடியாமல் போன இத்திரைப்படம் இந்த 2017ம் ஆண்டு சென்னை சர்வதேச திரைப்பட விழாவில்  ஜெர்மன் தூதரக மாக்ஸ் முல்லர் பவன் இயக்குனரின் உதவியால் திரையிடப்பட்டது. இத்திரைப்பட விழாவின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக  இந்த படம் தனித்து நிற்கிறது.
மார்டின் நகரில் கதை தொடங்குகிறது.நாசரேத் என்ற பொற்கொல்லர் தமது குடும்பத்துடன் அங்கு வசித்துவருகிறார். கத்திரிக்கோல் கூர் தீட்டுவது போன்ற வேலைகளையும் அவர் செய்து வருகிறார். அவருக்கு ஒரு உதவியாளர். முதலாம் உலகப் போர் மூண்ட நேரம் அது. ஓட்டோமான் சாம்ராஜ்யத்தில் முஸ்லீம் அல்லாத கிறித்துவ சிறுபான்மையர் கட்டாயமாக போருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். துப்பாக்கி முனையில் அவர்கள் மதம்மாறி முஸ்லீம்களாக மறுக்கப்படுகிறார்கள். மறுப்பவர்களை துப்பாக்கித் தோட்டாவை வீணடிக்காமல் வாளால் கழுத்தை அறுத்து கொலை செய்கிறார்கள். அதுதான் கட். நாசரேத்தும் அவர் தோழர்களும் இந்த பிரச்சினையை சந்திக்க நேரிடுகிறது. அவர்கள் சாலை செப்பனிடும் பணிக்கு ஒரு பாலைவன குன்றுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்ரே அவர்கள் செப்பனிட்ட பாதையில் ஆர்மேனிய அகதிகள் நடந்து செல்வதைப் பார்க்கின்றனர். அதில் ஒரு பெண்ணை முஸ்லீம் வீரர்கள் பலவந்தமாக புணர்ந்து கொன்றுவிடுகின்றனர். அதன் குழந்தை கதறி அழுகிறது. போருக்கு அழைத்து வரப்பட்ட அவர்களை மதம் மாற்ற சுல்தான் கட்டளையிட மறுப்பவர்கள் கழுத்து அறுபட்டு சாகிறார்கள். கழுத்தை அறுக்கும் வேலைக்கு சிறைக்கைதிகள் அழைத்து வரப்பட்டனர். அதில் ஒரு மனிதாபிமான கைதி நாசரேத்தி்ன் கழுத்தை முழுதாக அறுத்துவிடாமல் சிறிய காயம் மட்டுமே ஏற்படுத்துகிறான். நாசரேத் மயங்கி விழுகின்றான்.( தற்காலங்களில் தீவிரவாதிகள் வீடியோவில் பத்திரிகையாளர்களையும் அப்பாவி பிணைக்கைதிகளையும் கழுத்தை அறுத்துக் கொல்லும் குருரம் நினைவுக்கு வருகிறது )
கழுத்தில் காயம் அடைந்த நாசரேத் பேச்சுத் திறனை இழக்கிறான். அவன் மனம் முழுக்க அவன் மனைவியுடன் சந்தோஷமாக இருந்த போது பாடிய ஜானோ ஜானோ என்ற இனிய பாடல் அவன் மனதுக்குள் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. இரட்டைக் குழந்தைகளான தனது பதின்பருவ மகள்களையும் எண்ணி ஏங்குகிறான். அப்போது அவனை காப்பாற்றிய கைதியே அங்கு வந்து அவன் காயத்துக்கு மருந்தளித்து உணவும் நீரும் தந்து அழைத்துச் செல்கிறான், அப்போது துருக்கியின் பாலைவனக் கொள்ளையர்கள் அவர்களை வழிமறிக்கின்றனர். அவர்கள் நிலையை அறிந்து அவர்களையும் தங்களுடன் சேர்த்துக் கொள்கி்ன்றனர். ஒருமுறை ஒருவரை கொள்ளையடிக்க முயன்ற போது அவர் தனது ஊர்க்காரர் என்பதை அறிகிறான் நாசரேத். ஆனால் அவர் ஒரு முஸ்லீம். தனது மனைவிகள், குழந்தைகளுடன் தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு குதிரை வண்டியில் செல்லும் போது சிக்கி விடுகிறார். முஸ்லீம்களுடன் நேற்றுவரை சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வந்த ஆர்மேனிய கிறித்துவரான நாசரேத்துக்கு இனம் புரியாத வெறுப்பும் கோபமும் ஏற்படுகிறது. குழந்தைகளுக்காக சிறிது உணவை மட்டும் விட்டு விட்டு இதரப் பொருட்களைக் கொள்ளையடிக்குமாறு தனது சகாக்களிடம் செய்கையால் கூறுகிறான் பேச முடியாத நாசரேத். அப்போது அந்த முஸ்லீம் நபர் பெண்களும் குழந்தைகளும்  ரா-ச-லன் எனும் பாலைவன கிராமத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறுகிறார். இதனையடுத்து தமது குடும்பத்தைத் தேடி ரா-ச-லன் செல்ல புறப்படுகிறான் நாசரேத் ,அவனுக்கு தனது காலணிகளையும் கம்பளிப் போர்வையையும் தந்து உதவுகிறான் அவனைக் காப்பாற்ற கைதி. துருக்கி கொள்ளையர்கள் அவனுக்கு செலவுக்கு பணமும் குடிநீரும் தருகிறார்கள். .
ரா-ச-லன் கிராமத்தில் பட்டினி, நோயால் மக்கள் செத்துக் கிடக்கிறார்கள். பல குழந்தைகள் உயிரிழந்த பெற்றோரை புதைக்கக்கூட முடியாமல் சுருண்டுக் கிடக்கிறார்கள். போரால் அதிக அளவில் பாதிக்கப்படுவது குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்தான் என்ற கோரக்காட்சியை அங்கு நாம் காண்கிறோம். என்ன செய்வது எங்கே செல்வது என்று தெரியாமல்  பாலையின் நடுவே பரிதவிக்கும் நாசரேத்தின் நிலை பரிதாபகரமானது. அப்போது ஒரு சோப்பு வியாபாரி வழியில் அவனைக் காண்கிறார் .அவனை தனது சோப்புக் குவியலில் வைத்து மறைத்து எல்லை தாண்டி தனது ஊருக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு அவருடைய சோப்பு பாக்டரியில் பல ஆர்மேனிய அகதிகளுக்கு அவர் அடைக்கலம் தந்தது தெரிய வருகிறது. அவரும் ஒரு முஸ்லீம்தான். துருக்கிகளுக்கும் அவனை காப்பாற்றிய சிறைக்கைதியும் கூட முஸ்லீம்கள் தான். சாதாரண மக்களுக்கும் ஆர்மேனியர்களுக்கும் எந்த வித பகையுணர்வும் இல்லை. போரால் நிகழும் வன்முறைகளுக்கும் அப்பாவி முஸ்லீம் மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது முழுவதும் அரசியல் காரணங்களால் நிகழ்வது என்பதை நாம் உணர்கிறோம். இப்போதும் தீவிரவாதிகளால் அப்பாவி முஸ்லீம் மக்களின் நல்வாழ்வும் நற்பெயரும் களங்கப்படுகிறது . தமது மனைவி இறந்துவிட்டதையும் தமது மகள்கள் லெபனானில் உயிருடன் இருப்பதாகவும் ஒரு தகவலை அங்கு அவன் சந்திக்கும் தனது முன்னாள் உதவியாளன் மூலம் தெரிந்துக் கொண்டு லெபனான் பயணிக்கிறான் நாசரேத்.  தமது மகள்கள் படித்த பள்ளிக்கு சென்று தேடிப்பார்க்கையில் அவர்களுக்கு மணமுடிக்கப்பட்டு  அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் கிடைக்கிறது. மகள்களின வளர்ந்த தோற்றத்திலான புகைப்படமும் அவனுக்கு பள்ளியில் இருந்து கிடைக்கிறது.
அப்போதுதான் தனதுமகள்களுக்கு திருமணம் நின்று போன தகவல் கிடைக்கிறது. இரட்டைப் பிறவிகளான அந்த பெண்களில் லூசினே என்ற பெண் போர் வன்முறையில் கால் ஒன்றை இழந்து விட்டதால் அவள் திருமணம் நின்று விட்டதை அறிகிறான். தனது தங்கையை விட்டு தாமும் மணமுடிக்க விரும்பாத ஆர்சினேவும் தங்கையை அழைத்து கியூபா சென்று விட்டாள்.
கியூபா முகவரிக்கு அவர்கள் ஒரு தந்தியை அனுப்புகிறார்கள். தமதுமகள்கள் பணியாற்றும் தையல் நிறுவனம் அது. ஆனால் அதன் முதலாளியோ பதில் தந்தி அனுப்பி அந்தப் பெண்கள் தற்போது அங்கு இல்லை என்றும் எங்கே எனத் தெரியவில்லை என்றும் தந்தி மூலம் பதில் கூறுகிறார். வேறு வழியில்லாமல் கியூபாவுக்கு சென்று தனது மகளை தேட கப்பலில் கியூபா தலைநகரான ஹவானாவுக்குச் செல்கிறான் நாசரேத் லெபனான் மகாகவி கலீல் கிப்ரான் பிறந்த மண். கியூபாவோ புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் பூமி இந்த ஊர்களின் காட்சிகள் நமக்கு மகிழ்ச்சியையும் பரவசத்தையும் ஏற்படுத்துகின்றன.
 அவனுக்கு கியூபாவில் அடைக்கலம் தரும் நண்பரான கிறித்துவர் ஒருவர் கடவுள் நம்பிக்கையை இழந்துவிட்டாயா எனக் கேட்கிறார். ஆம் என சைகையால் கூறுகிறான் நாசரேத் .நம்பிக்கையை இழக்காதே எனக்காக சர்ச்சுக்கு வா என அழைக்கிறார் அவர். அவனும் செல்கிறான். சர்ச்சில் தமது ஊனமான மகள் லூசியாவை மணமுடிக்க மறுத்துவிட்ட செல்வந்தனை சந்திக்க நேரிடுகிறது. ஆத்திரத்தில் அவனை ஒரு ஆளில்லாத இடத்தில் மடக்கி அடித்து உதைக்கிறான் நாசரேத், இரண்டு பெண்களும் அமெரிக்கா சென்று விட்டதையும் அறிகிறான்.
அவனிடமிருந்த பணத்தைப் பறித்துக் கொண்டு தமது குடும்பத்தைத் தேடி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு மதுவைக் கடத்தும் கப்பலில் பயணிக்கிறான் நாசரேத்
புளோரிடாவில் அவன் ஒரு கிராமத்தில் புகுந்து அங்கு வேட்டைக்காரர்களால் விரட்டப்பட்டு ஒரு புகை ரயிலில் ஏறி தப்பும் பரபரப்பான காட்சிகளுக்குப் பிறகு ஒரு சிறிய கிராமத்தில் ஊனமான ஒரு பெண்ணை சந்திக்கிறான் .அவள்தான் தன் மகள் லூசியானா என அறிந்து கண்ணீர் சிந்துகிறான். அவள் முன்னே நடந்து செல்ல பின்தொடர்ந்து அவளை லூசியானா என அழைக் க வாயெடுக்கிறான். அதுவரை தடைபட்டிருந்த அவன் பேச்சு மீண்டும் அவனுக்கு கிடைக்கிறது. அவன் குரல் கேட்டு அவள் திரும்புகிறாள். உணர்ச்சிகரமான இந்த காட்சியில் கைத்தட்டல்கள் அரங்கை அதிர வைக்கின்றன. பாபா ( அப்பா) நீ என்னை தேடி வந்திட்டியா பாபா என அந்த மகள் உருகும் காட்சி பிள்ளைப் பாசம் எத்தகைய பேறு என்று நம்மை துடிதுடிக்க வைக்கிறது. ஊனமுற்ற தனக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்துவிட்ட சகோதரி ஆர்சினி நோயால் இறந்து விட்டதாக கூறுகிறாள் லூசினி . இருவரும் ஆர்சினியின் கல்லறைக்கு சென்று மலரஞ்சலி செலுத்துகின்றனர்.
மிகச்சிறந்த மனித நேயம் தெறிக்கும் இப்படத்தில் தாஹிர் ரஹிம் ஆர்மேனிய அகதி நாசரேத்தாக அற்புதமாக நடித்துள்ளார். தமது மகள்களைத் தேடி விபச்சார விடுதிகளிலும்  உயிரற்ற சடலக்குவியல்களிலும் அவர் தேடிப் பரிதவிக்கும் காட்சிகள் நம்மை படம் என்பதையும் மறந்து கண்ணீரி்ல் மிதக்க வைக்கின்றன. ஜானோ ஜானோ என்ற தனது மனைவியின் காதல் குரலால் உந்தப்பட்டு பல பயணங்களுக்குப் பிறகு தனதுமகளை நாசரேத் இறுதிக் காட்சியில் சந்திப்பது ஒரு காவியப் பயணமாக மாறுகிறது.
என்னதான் போரும் மதவெறியும் இனவெறியும் மனிதர்களைப் பிரித்து ஒருவருக்கு ஒருவர் யுத்தம் செய்பவர்களாகவும் வன்முறை இழைப்பவர்களாகவும் அநீதி இழைப்பவர்களாகவும் மாற்றினாலும் மனித நேயமும் அன்பும் பாசமும் தான்  அவனுடைய சொர்க்கமயமான வாழ்க்கையை மீட்க முடியும் என்று அற்புதமான செய்தியுடன் இப்படம் முடிகிறது.





Fragements of love - பியூரிட்டோ ரிகோ-2016
இயக்குனர் - பெர்ணாண்டோ வலேஜோ (fernando vallego)
கொலம்பிய நாவலாசிரியர் ஹெக்டர் அபாத் பாசியோலின்சியின் நாவலை மையமாக வைத்த காதல் கதை. ஆயிரத்தி ஒரு இரவுக் கதைகளைப் போல் தினமும் இரவில் காதலனுக்கு தனது முன்னாள் காதலர்கள் பற்றி கூறும் ஒரு காதலியின் கதை இது.
சூசனும் ரோட்ரிக்கும் காதலர்களாக மாறுகிறார்கள். சூசன் ரோட்ரிக்கின் நண்பனின் நிச்சயம் செய்யப்பட்ட பெண். அவனுக்கு துரோகமிழைத்து இவனுடன் சரஸமாடுகிறாள். அவன் ஒரு பியானோ கலைஞன். ஆனால் அண்மைக் காலமாக ஒரு காதல் தோல்வியின் காரணமாக மனமுடைந்து தனது இசையை கோர்க்கும் வேலையை அவன் மறந்துவிட்டான். சூசனுடனான முறைதவறிய காதல் அவனுக்கு புதிய ஆசைகளையும் கனவுகளையும் மகிழ்ச்சியையும் தருகிறது .தனது இருண்ட கடந்த காலத்தை அவன் கடந்து வர முயற்சிக்கிறான். ஆனால் சூசன் எத்தகைய பெண்?  5
சூசனுக்கு ஏகப்பட்ட காதலர்கள். அவள் ஒவ்வொரு நாளும் ஒரு காதல் கதையை அவனுக்குக் கூறுகிறாள்.முதலில் அதை கேட்க தாம் விரும்பவில்லை என்று கூறும் ரோட்ரிக் படிப்படியாக அவள் வசியத்திற்கு ஆட்பட்டு அவள் தனது காதல் களியாட்டங்களைக் கூறுவதை கேட்பதில் ஆர்வம் கொள்கிறான். ஊருக்குள் குண்டு வெடிப்புகளும் வன்முறைகளும் நிகழும் போது படுக்கையறையில் இத்தகைய காதல் கதைகளின் இடையே கிடைக்கும் உடலுறவு சுகம் அவனுக்கொரு இளைப்பாறுதல் தருகிறது. ஆனால் யதார்த்தத்திற்கும் கனவுக்கும் இடையிலான இடைவெளிகள் குறையக் குறைய, சூசன் மீதான தனது அன்பும் காதலும் அதிகரி்த்து அவள் இல்லாமல் ஒருகணம் கூட வாழ முடியாத இயலாமை அவனை உறுத்துகிறது. தமக்கும் சூசன் துரோகம் செய்து தன்னையும் ஒரு முன்னாள் காதலனாக்கி அந்தக் கதையையும் யாரிடமாவது அவள் கூறுவாள் என்று அவன் கலங்குகிறான். அவளை சோதிக்க புதிய காதலன் போல் ஒரு மொட்டைக் கடிதம் எழுதி அவளை உணவு விடுதிக்கு வர அழைப்பு விடுக்கிறான். சூசனும் புதிய காதலனை சந்திக்க உணவு விடுதிக்கு செல்வதால் தனது எண்ணம் சரிதான் என்று அவன் கணிக்கிறான்.
பிறகு அவளது குடியிருப்பில் மாற்று சாவி மூலம் சென்று ஒளிந்துக் கொள்கிறான் . சூசன் புதிய காதலனுடன் அங்கு வருகிறாள். இருவரும் ஆடைகளைக் களைந்து மதுவருந்தி உடலுறவுக் கொள்வதை ஒளிந்திருந்து பார்க்கிறான். கோபத்தில் வந்தவனின் காலணி ஒன்றை மட்டும் எடுத்துச் சென்றுவிடுகிறான்.
மறுநாள் காலையில் சூசனை சந்தித்து சண்டை போடுகிறான். பாவம் அவர் ஒரு காலணியுடன் வீட்டுக்குப் போனார் என புதிய காதலன் பற்றி சூசன் பேச ஆத்திரமும் ஆசையும் கொண்டு அவளை சோபாவில் சாய்த்து ஆத்திரம் தீர உடலுறவுக் கொள்கிறான். அப்போது அவளும் கண்ணீர் விடுகிறாள். எத்தனையோ பேரிடம் நான் படுத்திருந்தாலும் உன்னைத்தான் காதலிக்கிறேன். உன்னுடன்தான் அதிகமான நேரம் இருக்கிறேன் என்று அவள் உள்ளம் திறந்து கூறுகிறாள். அவன் அதனை நம்ப மறுத்து இனி ஒருபோதும் உன்முகத்தில் முழிக்க மாட்டேன் என்று கூறி பிரிந்து செல்கிறான். இசை உலகில் தனது எதிர்காலம் நாடி அவன் விமானத்தில் பயணிக்கும் போது அந்த விமானம் விபத்துக்குள்ளாகி அவன் இறந்துவிட்டதை சூசன் கேட்கிறாள்.
சூசனாக நடித்த கொலம்பியா நாட்டின் ஆஞ்சலிக்கா பிளாண்டன் அழகான நடிகை. அதிக அளவிலான நிர்வாண காட்சிகளும் உடலுறவுக் காட்சிகளும் இல்லாத போதும் அவள் சிரிப்பும் ஒருசில காட்சிகளில் அவள் காட்டும் தொடைகளும் மார்பகங்களும் நம்மை கிறங்கடிக்கின்றன.
ஒரு கலைஞனுக்கு ஏற்படும் கிரியேட்டிவ் பிளாக் எனப்படும் மனத்தடையை காதல் மீட்பதையும் அதுவே அவனுக்கு வேறொரு மனத்தடையை ஏற்படுத்துவதையும் இப்படம் சித்தரிக்கிறது. நவீன காலத்தில் பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட காதலர்களுடன் இருப்பதையும் அந்த காதலர்களுக்கு எந்த மனசாட்சி குறுகுறுப்பும் இல்லாமல் துரோகம் செய்வதையும்  சூசனின் பாத்திரப்படைப்பு மூலம் அறிகிறோம். அழகான பெண்கள் ஒருவனுடன் மட்டும் இருக்க வேண்டும் என்ற நியதிகள் பொய்த்துப் போயின. அழகில்லாத பெண்கள் மட்டும் கற்புக்கரசிகளாக இருக்கலாம் போலும். அழகிகளை சுற்றி வட்டமிடுபவர்கள் ஏராளம். அவர்களில் வேண்டியவர்களைத் தேர்வு செய்து படுக்கை வரை அழைத்துச் சென்று உடனடியாக மறப்பதும் பெண்களுக்கு எளிதாகிக் கொண்டிருக்கிறது. ஆயிரத்து ஒரு இரவுகள் என்ற அரேபிய பாலியல் கதைகள் சமகால வாழ்வுடன் பொருந்திப் போகின்றன



தனிமை - Lonely - ஈரான் 2016
இயக்குனர் -பஹாரா சதேகி ஜாம் ( Bahareh sadeghi jam)
திருமணமாகி மகிழ்ச்சியாக இல்லாத தம்பதியர் அமீர் அலி மற்றும் ஷார்சத்தின் இடைவெளி பெரிதாகிக் கொண்டே போகிறது .தங்கள் மகிழ்ச்சிக்காக ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க விரும்புகிறாள் ஷார்சத். ஆனால் உடலுறவு மூலம் அதை சாத்தியமாக்க கணவனால் இயலவில்லை. அதனால் செயற்கை முறை கருத்தரிப்புக்கு அவள் மருத்துவர் ஒருவரின் ஆலோசனையை நாடுகிறாள். கணவரின் விந்தணுக்களை கர்ப்பப்பையில் செலுத்தி கருத்தரிக்க செய்யமுடியும் என மருத்துவர் விளக்குகிறார். கணவரை விந்து வங்கிக்கு அழைத்துச் செல்கிறாள் .ஆனாலும் அவள் கனவு நிறைவேறாமல் போகிறது. கணவருடைய மனநிலைப் பிறழ்வும் இடைவெளியும் அதிகரித்து விட துயரமான ஒரு முடிவை நோக்கி படம் நகர்கிறது. சற்றே சலி்ப்பையும் பொறுமையின்மையையும் ஏற்படுத்திய படம் இது. அழகான நடிகை யின் முகத்திற்காக சகித்து உட்கார வேண்டியிருந்தது.




Load - மெக்சிகோ 2016
இயக்குனர் ஆலன் ஜான்சர் காவிகா ( Allen jonnssor gavica )
பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் நிகழும் கதைக்களத்துடன் அற்புதமாக எடுக்கப்பட்டிருக்கிறது இப்படம். சென்னை பளாசோ திரையரங்கில் சாய்ஸ் என்ற மற்றொரு திரைப்படம் காணப்போன போது அந்தப் படத்தை ரத்து செய்து இதனை போட்டனர் விழாக்குழுவினர்.
அரை மனத்துடன் படத்தில் போய் உட்கார்ந்தால் படம் நிமிர வைத்துவிட்டது. தாமேமி செவ்விந்தியர் இனத்தைச் சேர்ந்த கதாநாயகன் ஸ்பானிய உயர்குல பெண் ஒருத்தியை லோடாக பாதுகாப்புடன் அரசவைக்கு கொண்டு செல்ல பாதிரியார் ஒருவரால் பணிக்கப்படுகிறான். அந்தப் பெண் தனது கணவரைக் கொன்ற சிற்றரசரான தனது தந்தைக்கு எதிராகவும் சிறையில் அடைபட்டிருக்கும் செவ்விந்தியர்களின் புரட்சியாளனை விடுவிக்கவும் முக்கிய சாட்சியம் கூறப்போகிறாள். ஆனால் தனது அழகு ததும்பும் சுமையுடன் காடுகளில் திரியும் நாயகனின் எதிரி அவனது அண்ணன்தான். அந்த அழகியை நேசிக்கும் தளபதி அவன் அண்ணனை கைக்குள் போட்டுக் கொண்டு அவர்களை காடுகளிலும் மலைகளிலும் அருவிகளிலும் வேட்டையாடுகிறான். என் மகள் சாட்சியம் கூற விடாமல் சிறைப்பிடித்து அழைத்து வந்தால் பாதி ராஜ்ஜியமும் மகளையும் தருகிறேன் என்கிறான் அவள் தந்தை.
அண்ணனுக்கு தம்பி மேல் என்ன பகை? அவன் மணமுடிக்க பார்த்து வைத்த பெண் தம்பியைத் தேர்வு செய்து மணமுடித்துவிட்டதால் ஆத்திரம். ஒரு ஆண் குழந்தையைப் பெற்று அந்தப் பெண் இறந்துவிட்டதையும் அந்த சிறுவனுக்குஅம்மை நோய் போட்டிருப்பதையும் வேறு சில காட்சிகளின் மூலம் நாம் அறிகிறோம்.
தன் பொறுப்பில் உள்ள ஒருசுமை என்ற அளவில்தான் அந்த அழகியை லோடு டெலிவரி பாயாக ஏற்று பயணிக்கிறான் நாயகன். வழியில் இயற்கையின் ஆபத்துகளுடன் எதிரிகளையும் அவன் சமாளிக்கும் போதுதான் அவள் மீது காதல் வயப்படுகிறான் .அவன் நேர்மை , அன்பு , திடாத்கரமான உடல்வாகு என அவளும் அவன் மீது ரகசியமாக காதல் கொள்கிறாள். இருவரிடைய கனிந்த காதலுடன் அவர்கள் பயணம் நிறைவு பெறுகிறது. அவள் இலக்கை அவள் அடைகிறாள். அவளை துரத்தி வந்த தளபதி தன் உயிரை மாய்த்து தியாகம் செய்கிறான். இந்த படத்தில் நாயகியாக நடித்த மாரியா வல்வார்டே மிக அழகான நடிகை. ஒருகாட்சியில் அருவியி்ல் உடலைக் கழுவும் போது தனது கால் அழகை மட்டும் காட்டுகிறார். படம் முழுக்க உடல் மறைக்கும் அங்கியுடன் மூடிய அழகாகவே மேகம் மறைத்த நிலவாக காட்சியளிக்கிறார் மாரியா.
தனது நோயுற்ற மகனை அருவியில் வீசியெறிந்த அண்ணனைக் கொல்லும் வெறியுடன் பாய்கிறான் நாயகன். ஆனால் எதிரிகளின் கட்டாயத்தால் அதை செய்ய நேரிட்டதை கூறும் அண்ணன் உயிரற்ற சடலத்தையே  அருவியில் எறிந்ததாக கூறுவது நல்லதொரு திருப்பம். அவனுக்கும் அம்மை நோய் பரவியிருப்பதை பார்த்து கொல்லாமல் செல்கிறான் தம்பி
அண்ணனாக நடித்தவரும் அற்புதமான நடிகராக இருக்கிறார். அவர் குதிரைகளுடன் ஓடிவரும் ஓட்டம் அபாரம். செவ்விந்தியர்களின் வீரம், உடல் பலம் திடம் ஆகியவற்றை இப்படம் உணர்த்துகிறது.





Twa-tiu-tiann -தைவான் 2014
இயக்குனர் டியன் லுன் யே ( Tian -lun-yeh)
இது தைவானியர்கள் ஜப்பானியரின் ஆதிக்கத்திற்கு எகிராக போராடிய கதை. ஆனால் நூறு வருடங்கள் பின்னோக்கி காலவெளியில் பயணிக்கும் ஒரு இளைஞன் மூலம் கூறப்படுகிறது. இதில் மெலிதான காதல் துயரம், தாய்ப்பாசம், விடுதலையுணர்ச்சி போன்ற உணர்வுகளும் சித்தரிக்கப்படுகின்றன, அழகும் திறமையும் மிக்க நடிகர்கள் பாத்திரங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளனர். காமிக்ஸ் கற்பனையும் கலந்த கதை. உலகம் எவ்வளவு பெரியது என்று தைவான் மக்களுக்கு ஜப்பானியர்கள் தாம் காட்டினார்கள் என்றொரு வசனம் வருகிறது. ஆனால் தைவானியர்களை மிகவும் சிறியவர்களாகவும் அதுதான் மாற்றிவிட்டது என்று வசனத்தின் அடுத்த வரி கூறுகிறது.







ஜப்பான் ஆதிக்கத்திலிருந்து தைவான் மீளும் உலகிலேயே அதிகமான உயரமுடைய வர்த்தக கோபுரத்தை தைவான் மக்கள் கட்டுவார்கள் என்ற தைவானி்ன் பிதாமகரான அரசியல் தலைவர் சூளூரை செய்வதை எதிர்காலத்தில் இருந்து கடந்த காலத்திற்கு வந்த பேராசிரியரும் அவர் மாணவனான கதாநாயகனும் உறுதி செய்கின்றனர்.
கடைசியில் தனது கடந்த கால காதலியை அவள் காலத்திற்கு திருப்பி அனுப்பும் நாயகன் அது உனது பொற்காலம். அதில் நீ வாழ்ந்து முடிந்துவிட்டாய். இது எனது பொற்காலம். இதை நான் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று கூறி அவளை முத்தமிட்டு விடை கொடுத்து அனுப்பிவைக்கும் காட்சி ஒரு அழகான ஹைகூ கவிதை.படத்தில் இடம்பெறும் தைவான் பாடல் ஒன்றும் அதன் நடன அமைப்பும் அற்புதம்.




The violin player - இந்தியா 2016
இயக்குனர்-  பவுதாயின் முகர்ஜி ( Bauddayeen mukherji)
சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்ட இந்திப்படம் இது.
திரையில் பின்னணி இசைக்காக வயலின் வாசிக்கும் கதாநாயகனின் வறுமையுடன் படம் தொடங்குகிறது.அவன் மனைவி ஒரு துணை நடிகை. ஒருநாள் மும்பை மின்ரயில் நிலையத்தில் சந்திக்கும் ஒரு இயக்குனர் தமது படத்திற்கு சோலோவாக வயலின் வாசிக்க இருபதாயிரம் ரூபாய் சம்பளம் பேசி அவனை அழைத்துச் செல்கிறார். சர்ச் கேட் அருகில் ஒரு பாழடைந்த மாடி வீ்ட்டில் அவர் எடுத்த நீலப்படத்திற்கு பின்னணி இசைக்கோர்ப்புக்காக அவன் வயலின் வாசிக்கிறான். அந்த நீலப்படத்தில் நடித்திருப்பது அவன் மனைவிதான்.
கனத்த இதயத்துடன் வீடு திரும்பும் அவன் தனது மனைவியை அடித்துக் கொல்கிறான். தன் வயலினை அடித்து நொறுக்குகிறான். அவள் உயிரற்ற உடல் மீது காறித்துப்புகிறான். ஆனால் அது கற்பனை, கனவுதான். கதவைத் திறந்து என்ன என்று கேட்கும்மனைவியிடம் தனக்கு வேலை கிடைத்து பணம் சம்பாதித்து வந்ததை கூறுகிறான். அவள் மகிழ்ச்சியாக கதவை சாத்துவதுடன் படம் முடிகிறது.
ART CLEANSES THE DUST GATHERED FROM EVERYDAY LIFE -கலை தினசரி வாழ்க்கையில் நாம் சேகரித்த அழுக்குகளைக் கழுவி விடுகிறது என்ற பிகாசோவின் பொன்மொழியுடன் படம் முடிகிறது.
------------------------------------------
Revelations ஆங்கிலம்-தமிழ்
இயக்குனர் விஜய் ஜெய்பால்
தமிழும் ஆங்கிலமும் கலந்த ரிவீலேசன்ஸ் படம் மந்தமான மதிய நேரத்து வெயிலைப் போல் ஆரம்பித்து சிலுசிலுவென வீசும் மாலைத் தென்றலாய் தவழ்ந்து அடர்த்தியான இருளை நோக்கி முடிகிறது. படத்தில் இளம் மனைவியாக நடித்துள்ள லட்சுமிபிரியா தனது மாடிவீட்டில் குடியிருக்கும் வயதான சேத்தன் மீது ஆசைப்படுவதுதான் கதை. சென்னையை விட்டு கொல்கத்தா வந்து குடியேறிய சேத்தன் யார், அவர் பின்னணி என்ன  , லட்சுமி பிரியாவுக்கு கணவரை விட்டு வேறொரு வயதான நபர் மேல் ஆசை ஏன், லட்சுமியின் கணவரும் ஆபீசில் தீபா என்ற பெண்ணுடன் ஆழமான முத்தங்களைப் பரிமாறி பின்னர் உடலுறவுக் கொள்ளாமல் ஓடி வந்தது ஏன் என்பது போன்ற கேள்விகளுக்கு இறுதியில் விடை கிடைக்கிறது. மிகவும் எதிர்பார்த்த முடிவாகி விட்டதால் படத்தின் திரைக்கதையில் தொய்வு. அதிலும் சேத்தனின் நடிப்பு மட்டமான தொலைக்காட்சித் தொடரை நினைவுபடுத்துகிறது.அவருக்கு அழகான லட்சுமியுடன் ஒருமுத்தக் காட்சி வேறு. நம் காதிலும் மூக்கிலும் புகை வரத்தான் செய்கிறது. லட்சுமிபிரியாவின் நடிப்பு மனதில் நிற்கிறது. காட்டன் புடவைகளிலும் கையில்லாத கொல்கத்தா பாணி ரவிக்கைகளிலும் சுடிதார்களிலும் நல்ல வளர்த்தியான உடல்வாகுடன் மனதை கவர்கிறார் லட்சுமி பிரியா சந்திரமவுலி.







தமிழிலும் மாயா, கலப்படம் ,கௌரவம் . சுட்டகதை போன்ற சில  படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் இயக்குனர்கள் இவரை தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆழமான உணர்வுகளை மிகவும் அழகாக வெளியிடுகிறார். நான்கு கதாபாத்திரங்களை மட்டுமே சுற்றிச் சுழலும் இப்படத்தில் 70 சதவீத வசனங்கள் தமிழில்தான் இருக்கின்றன.
இப்படம் பூசன் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்கிய விஜய் ஜெய்பாலுக்கு இது முதல் முழு நீளப் படம் . சில குறும்படங்களையும் அவர் இயக்கியுள்ளார். வித்தியாசமான கதைக் கருவை தேர்வுசெய்த அவர் அதில் ஆபாசத்தை கலக்காமல் ( சில முத்தக்காட்சிகள் விதிவிலக்கு) ஆண்களின் பிரச்சினையையும் ஆண்களின் பலவீனத்தைப் பயன்படுத்த நினைக்கும் பெண்களின் உணர்வுகளையும் அழகாக கூறியுள்ளார். குறிப்பாக அலுவகத் தோழியாக வரும் இளம் பெண் அர்பிதாவின் சாகச நடிப்பு, பணத்தைப் பிடுங்க பழகும் எத்தனையோ பெண்களை குறித்த எச்சரிக்கையை உருவாக்கிவிடுகிறது.
Love and other casatropies -denmark 2016
இந்தப் படத்தை யாராவது தேர்வு செய்து பார்த்தார்கள் என்றால் அவர்களைப் பாராட்ட வேண்டும். கதை சுருக்கத்தைப் படித்து படத்தைப் பார்க்கப் போனது அற்புதமான அனுபவமாக இருந்தது. படத்தின் நாயகி ரோசா ஒரு வெற்றிகரமான தெராபிஸ்ட், மனநல நிபுணி. அவள் கணவன் பிரெட்ரிக்கிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படுகிறது. மெக்கானிக்கான அவன் அந்த பெண்ணுடன் வாழ்வதை அறியாமல் அந்தப் பெண்ணுக்கே மன நல சிகிச்சையளிக்கிறாள் ரோசா. ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணுடன் உறவு கொண்டிருப்பது தனது கணவன்தான் என்று அறிகிறாள் ரோசா. இப்போது அந்தப் பெண் கர்ப்பிணியாக இருக்கிறாள். கணவரின் துரோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமலும் டீன் ஏஜ் மகள் மற்றும் சிறுவயது மகனின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமலும் தடுமாறும் அந்த நடுத்தர வயதின் தடுமாற்றங்களை, பெண்ணிய உணர்வுகளை மிகவும் அற்புதமாக வெளியிடும் கதாபாத்திரமாக ரோசா பரிணமிக்கிறது.ஒரு கட்டத்தில் ஒரே ஆணால் வஞ்சிக்கப்பட்ட இரண்டு பெண்களும் நேருக்கு நேர் சந்திப்பதும் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ளுவதும் இருவருக்கும் இடையே இணக்கம் ஏற்படுவதும் படத்தில் அற்புதமான நிகழ்வு என்றால் மறுபுறம் கணவரைப் பழிவாங்க ரோசாவும் வேறு ஒருவனுடன் முதல் பார்வையிலேயே காமம் கொண்டு அவனுடன் உடலுறவு கொள்வதும் கணவனின் நண்பன் முத்தமிடும் போது பரவாயில்லை என்று இயல்பாக இருப்பதும் படத்தின் தன்மையை மிகவும் வேறொரு மன நிலைக்குக் கொண்டு சென்று விடுகிறது. நண்பனுடன் மனைவி தொடர்பு கொண்டிருப்பதாக மாடியில் சுவர் ஏறி வந்து சத்தம் போடும் கணவன் தொபுகடீரென கீழே விழுந்து விழுந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவது துயரமான சிரிப்பை வரவழைக்கிறது. அதே மருத்துவமனையின் இன்னொரு வார்டில் தான் அந்தப் பெண்ணுக்கும் பிரசவம் நடக்கிறது. தனது கணவனின் காதலிக்குப் பிறந்த குழந்தையை எடுத்து கணவரிடம் காட்டுவதற்காக ரோசாசெல்வதுடன் படம் முடிந்துவிடுகிறது. மிகவும் கவித்துவமான ஒரு முடிவுக்கு முன்னோட்டமாக ரோசாவின் இரண்டு குழந்தைகளும் பிறக்கப் போகும் தங்கள் தம்பி பாப்பாவுக்காக பொம்மை செய்து அனுப்பி வைப்பதைச் சொல்லலாம்.
ரோசாவாக நடித்துள்ள கிறிஸ்டினா அல்பெக் தமது நடிப்பால் நம்மை படத்தின் இறுதிவரை கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார். ஒரு காட்சியில் அவர் முழு உடலையும் நாம் பார்க்கிறோம். கணவராக நடித்தவரும் முதிர் காதலியாக நடித்த மற்றொரு நடிகையும் தங்கள் பாத்திரங்களை நன்றாக உணர்ந்து நடித்திருந்தாலும் ஒரு காட்சியில் தாயுடன் வாக்குவாதம் செய்து தனது மேல் சட்டையை அத்தனை பேர் மத்தியிலும் அவிழ்த்து வீசும் இளம் பெண்ணாக நடித்தவர் பாத்திரம் இன்றைய இளம் தலைமுறையின் அப்பட்டமான வெளிப்பாடு.
Personal shopper - France 
மவுரீன் என்ற இளம் பெண் கடை கடையாக சென்று விதம் விதமான கவுன்களை வாங்குகிறார். பர்ஸ்கள், காலணிகள், லிப்ஸ்டிக் போன்ற அலங்கார சாதனங்களை பை பையாக வாங்கிக் கொண்டு வருகிறார். இதுதான் அவர் தொழில். பெண்களுக்கு ஷாப்பிங் என்றால் மிகவும் பிடிக்கும் .அதுவும் விலையுயர்ந்த நகைகள், ஆடம்பர ஆடைகளை வாங்கிக் குவிப்பதென்றால் சொல்லவும்வேண்டுமா.. .அதையே தொழிலாகக் கொண்ட ஒரு இளம் பெண்ணின் மனநிலை எப்படிஇருக்கும்? அவள் வாங்கும் அந்த ஆடைகளும் ஆபரணங்களும் அவளுக்கானது அல்ல. அவளது எஜமானியான கைரா என்ற நடிகைக்கானது. மவுரீனுக்கு ஆவிகளுடன் தொடர்பு ஏற்படுகிறது. அறியப்படாத ஆவிகளிடம் இருந்து அவள் செல்போனுக்கு குறுஞ்செய்திகள் வருகின்றன. ஆவியுடன் உரையாடுகிறாள். காதல் வயப்படுகிறாள், பேய்க்கதையாகவும் மர்மக்கதையாகவும் செல்லும் திரைப்படம் கிளைமேக்சில் உளவியல் ரீதியான படமாக மாறிவிடுகிறது. இப்படத்தின் இயக்குனர் ஆலிவர் அசாயஸ்.
படவிழாவில் திரையிடப்பட்ட பல படங்கள் சுமார் ரகம் என்று பொதுவான கருத்து இருந்தாலும் சன் ஆப் சால், சேல்ஸ் மேன் போன்ற பிரசித்தி பெற்ற ஆஸ்கர் போன்ற விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களும் இருந்தன. ஆனால் அதிகமான படங்களைப் பார்க்க முடியாமல் அங்கும் இங்கும் திரையரங்குகளை நோக்கி அலைய வேண்டியதைத் தவிர்த்திருக்கலாம்.
திரைப்பட விழாவில் பார்க்கும் படங்களைப் போல் வேறு எங்கும் இத்தகைய படங்களைப் பார்க்க முடியாது என்பதுதான் இதன் தனிச்சிறப்பு. குறைகள் இருப்பினும் சினிமாவை ஆழமாய் நேசிக்கும் ஒரு ரசிக மனத்தால் இதை புறக்கணித்துவிட முடியாது


No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...