Thursday 5 January 2017

உலக சினிமா - கருவில் பிறந்த காதலன் -WOMB

குமுதம் தீராநதி ஜனவரி 2017 ல் வெளியான எனது உலக சினிமா கட்டுரை இது....









ஜெர்மானிய திரைப்படம்
     WOMB - கருவில் பிறந்த காதலன்
          செந்தூரம் ஜெகதீஷ்


தந்தைக்கு மகளை பிடிப்பதும் தாய்க்கு மகனைப் பிடிப்பதும் ஏன் என்றொரு கேள்விக்கு உளவியல் மேதை சிக்மண்ட் பிராய்ட்  விடை காண முயன்றார். இளம் வயது கணவரை மகன் பிரதிபலிப்பதும் இளமையில் மனைவியின் தோற்றத்தை மகள் பிரதிபலிப்பதும் ஓர் உளவியல் காரணமாக கருதப்பட்டது. இப்பிரச்சினையை மையமாக வைத்து உருவான படம் தான் வோம்ப்( கர்ப்பப் பை)
இப்படத்தின் ஆரம்பத்தில் கருவில் உள்ள தனது குழந்தையுடன் ஒரு தாய் பேசுகிறாள். " நீ என்னை விட்டு விலகிப் போய்விட்டாய் என்பதால் நீ இல்லவே இல்லை என்பதை என்னால் ஏற்க முடியாது" என்கிறாள் ரெபக்கா என்ற அந்த தாய்.
படம் பின்னோக்கி நகர்கிறது. இளம் சிறுமியான ரெபக்காவுக்கும்  டாமி என்ற தாமசுக்கும் பால்ய கால காதல் மலர்கிறது. கடற்கரையில் அலைகளையும் மேகங்களையும் பார்க்க பிரியமுடைய தாமஸ் புயல் காலத்தில் கடலைப் பார்க்க ரெபக்காவை அழைத்துச் சென்று கலங்கரை விளக்கம் அருகே அமரச் செய்கிறான். அற்புதமான காட்சிகளுடன் கேமரா அந்த இளம் காதல் உள்ளங்களின் அலைக்கழிப்பை நமக்கு உணர்த்துகிறது. கடல் அலைகளில் அவன் ஆடைகளின்றி நீந்துவதையும் சைக்கிளில் வேகமாக செல்வதையும் அவள் ரசித்து சிரி்க்கிறாள்.
ஒரு முறை அவளை அவன் மிக மிருதுவாக இதழுடன் இதழ் பட்டும் படாமலும் முத்தமிடுகிறான், பின்னர் அவள் படிப்புக்காக தூரத்திற்கு பிரிந்து சென்று விடுகிறாள் .கடற்கரையில் அவர்கள் பிடித்து வந்த நத்தை ஒன்று அவள் நினைவாக மேஜையில் ஊர்ந்து செல்கிறது.
12 ஆண்டுகள் கழித்து பட்டப்படிப்பு முடித்து இளம் பெண்ணாக திரும்பி வரும் ரெபக்கா தாமசை மறக்கவில்லை. இருவரும் மீண்டும் நட்புடன் கைகோர்க்கிறார்கள். டாமி தீப்பெட்டியில் அவள் விட்டுச் சென்ற நத்தையை காட்டுகிறான். அது ஒரிஜினல் நத்தையல்ல,குளோனிங் மூலம் உருவாக்கியது என்கிறான். பழைய நத்தை இறந்துவிட்டது.
டாமி இப்போது அறிவியலில் நிபுணனாகி குளோனிங் செய்ய முற்படுகிறான்.  வயல்களில் பயிரை பாதுகாக்கும் பூச்சிகளை குளோனிங் மூலம் அதிகரிக்க செய்வது அவன் திட்டம்.
அவனும் ரெபக்காவும் அவனுடைய எஸ்டேட்டை பார்க்க காரில் செல்கிறார்கள். ஆனால் அப்போது சாலையை கடக்கும் டாமி மீது வேகமாக வந்த வேன் ஒன்று மோத அங்கேயே அவன் பட்டென செத்துப் போகிறான்.
மரணம் ஒரு முடிவல்ல....இன்னொரு வாழ்க்கையின் புதிய ஆரம்பம்தான் என்ற டாமியின் சொற்கள் ரெபக்காவின் காதுகளில் எதிரொலிக்கின்றன.
இந்த அதிர்ச்சியைத் தாளாமல் அழுது கதறும் டாமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறும் ரெபக்கா மீண்டும் டாமியை வரவழைக்க முடியும் என்கிறாள். டாமியின் தந்தையின் உடலில் உள்ள மரபணுக்களை தமது கருவில் செலுத்தினால் மீண்டும் டாமி பிறந்து வருவான் என்பது அவளது நம்பிக்கை. குளோனிங் என்பது வயல்வெளி பூச்சிகளுக்கு தான் மனிதர்களுக்கு அல்ல என்று டாமியின் தந்தை ரபேல் புத்தி கூறுகிறார், இயற்கை தருவதைப் பெற்றுக் கொள்வதும் அது பறித்துக் கொள்வதை விட்டுக் கொடுப்பதும் தான் மனிதர்களுக்கு உகந்தது என்று கூறும் அறிவுரையை ரெபக்கா ஏற்கவில்லை. வாழ்க்கை தான் மீண்டும் ஒருமுறை டாமியை நம்மிடம் கொண்டு வர இந்த பரிசை அளித்திருக்கிறது என்று அவள் மருத்துவ வளர்ச்சியை புகழ்கிறாள். ஒருவழியாக டாமியின் பெற்றோர் ஒப்புக் கொள்கிறார்கள்.
டாமியின் மரபணுக்கள் ரெபக்காவின் உடலில் செலுத்தப்படுகிறது. அவள் கன்னி கழியாமலே கருவுறுகிறாள். அழகான ஆண் குழந்தை ஒன்று பிறக்கிறது. அதற்கு டாமி என்றே பெயர் வைக்கிறாள் ரெபக்கா.
அவள் மார்பகத்தில் சுரக்கும் தாய்ப்பாலை பசியுடன் கைக்குழந்தையான டாமி கேட்கும் போது, குழந்தையின் வாயில் முலையை ஊட்டி சாப்பிடு என்கிறாள் ரெபக்கா. அப்போது அவள் கூறும் வசனம் ஒரு தாய் மகனுக்கு கூறுவதாக இல்லை. ஒரு காதலியின் முலையைப் பருகும் காதலனுக்கு கூறுவதாக இருக்கிறது. அன்பே , யாரும் இல்லை இங்கே உன்னையும் என்னையும் தவிர .எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடு என்கிறாள் ரெபக்கா.
மனித நடமாட்டம் யாருமற்ற ஒரு அத்துவான கடல் பண்ணை வீட்டில் தாயுடன் வளர்கிறான் டாமி. தாயுடன் தண்ணீர்த் தொட்டியி்ல் நிர்வாணமாக குளிக்கிறான். தாய்தான் உடலும் உள்ளமுமாக அவனுடன் நெருங்கிப் பழகும் ஒரே மனிதப்பிறவி. அவன் பிறந்தநாளுக்குக் கூட குழந்தைகளை அனுப்ப தாய்மார்கள் விரும்பவில்லை. அவன் ஒரு "காப்பி "குழந்தை என்பதால்.
ஆனால் டாமி வளர்ந்து வாலிபனானதும் அவனுக்கு மோனிகா என்றொரு காதலி கிடைக்கிறாள். மோனிகாவும் டாமியும் முத்தமிடுவதை போர்வையில் முகத்தை மூடிக்கிடக்கும் ரெபக்கா பொறாமையுடன் ஒரு கண்ணால் பார்க்கிறாள்.
டாமிக்கு தன் தந்தையின் குணங்கள் அப்படியே இருக்கின்றன. அதில் ரெபக்கா மீதான அளவு கடந்த அன்பும் அந்த அன்புக்கு என்ன பெயரிடுவது என்று தெரியாத குழப்பமும் உள்ளது.
ஆனால் கடற்கரையில் தாயிடம் நெருக்கமாக இருக்கும் டாமியைப் பார்த்து மோனிகா அதிர்ச்சியடைகிறாள். இதைப் பற்றி அவள் ரெபக்காவிடமும் டாமியிடமும் பேசிப் பார்க்கிறாள். ஆனால் இருவரும் குற்ற உணர்ச்சியால் பேச மறுக்கி்றார்கள். மோனிகா பிரிந்து செல்கிறாள்.
தாயுடன் சண்டை போடுகிறான் மகன். நீ என்னை என்னவென்று நினைத்திருக்கிறாய் என்று அவன் கேட்டாலும் அவன் தனக்குள்ளும் அந்தக் கேள்வியை கேட்கத் தவறவில்லை. பாலியல் ரீதியான பதற்ற நிலைகளுடன் டாமி ரெபக்காவை உலுக்கி எடுக்கிறான். நீ யார் நான் யார் என்ற அவனது கேள்வி்க்கு அவள் அவன் தந்தையைப் பற்றியும் அவன் பிறப்பை பற்றியும் அவனை தான் பெற்றெடுத்த நோக்கம் குறித்தும் கூறுகிறாள். டாமி அழுகிறான் . தாயிடம் கோபம் வெடிக்கிறது. ஆனால் அந்தக் கோபத்தை அவன் காமம் மிஞ்சுகிறது. நடுத்தர வயதில் இளமை மாறாமல் உள்ள தாயை காதலியைப் போல்  முத்தமிடுகிறான். அவளும் அதை விரும்புகிறாள். இருவரும் உடலுறவு கொள்கிறார்கள்.  அந்தக் காட்சியில் ரெபக்கா கன்னி கழிவதை இயக்குனர் நமக்கு அவள் கையில் இருக்கும் ரத்தம் மூலம் உணர்த்துகிறார். படத்தின் இயக்குனர் பெண்டக் ஃபிளைகாப்(Bendek fliegauf)
அதன் பிறகு குற்ற உணர்ச்சியால் டாமி ரெபக்காவை நிரந்தரமாக பிரிந்து சென்று விடுகிறான். போகும் போது அவன் முதன்முறையாக அவளை அம்மா என்றழைக்காமல் ரெபக்கா எனப் பெயர் கூறி அழைக்கிறான்.
ஆனால் டாமி கொடுத்த கரு அவள் கர்ப்பப் பையில் வளர்கிறது. இது இயற்கையான கருத்தரிப்பு, ஆனால் ஒரு முறையற்ற உறவில்.
அந்த கருவில் உள்ள குழந்தையுடன் தான் ரெபக்கா படத்தின் ஆரம்பக் காட்சியி்ல் பேசிக் கொண்டிருக்கிறாள். இந்தக் குழந்தையை அவள் ஒரு தாயாக மட்டுமே பார்க்கப் போகிறாள் என்று நாம் ஊகிக்கிறோம்
வாழ்க்கை புதிரானது. மனிதர்களின் உணர்ச்சிகளுடனும் உறவுகளுடனும் விளையாடி சி்க்கல்களை உருவாக்கி விடுகிறது. அண்ணன்-தங்கை, தாய்-மகன் போன்ற புனிதங்களைப் போட்டு உடைத்துவிடுகிறது. ஆதி மனிதன் விலங்குகளைப் போல் தாயையும் தங்கையையும் புணர்ந்துதான் மனித சமூகம் வளர்ச்சியடைந்துள்ளது. பாலியல் உணர்வுகள் தாயிடமும் தங்கையிடமும் வளராதவாறு மதரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒழுக்கத்தைப் போதித்து குழந்தைகளை வளர்க்கிறோம். ஆனால் சிக்மண்ட் பிராய்டையும் நாம் மறந்து விடமுடியாது .
ஜெயகாந்தனின் ரிஷிமூலம், தி.ஜானகிராமனின் நாவல்கள் போன்றவை இத்தகைய பிரச்சினைகளை நுட்பமாக கையாண்டுள்ளன. இந்தப்படமும் மேலோட்டமாக பாலியல் பிறழ்வு, ஒழுக்கக்கேடு ஆகியவற்றை சித்தரிப்பதாக தோன்றினாலும் நமது கலாச்சாரத்திற்கு முற்றிலும் அந்நியத்தன்மையுடன் திகழ்ந்தாலும் நாம் பேச மறுக்கும் பார்க்க மறுக்கும் ஒரு உண்மையை அப்பட்டமாக நம் கண் முன் நிறுத்தி நம்மை அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறது. ரெபக்காவாக இவா கிரீனும் டாமியாக மேட் ஸ்மித்தும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். படத்தில் அனாவசியமான நிர்வாணக் காட்சிகளோ உடலுறவுக்காட்சிகளோ இல்லை. ஒரு சில காட்சிகளே கதைக்கு தேவையாக இருந்தபோதும் இயக்குனர் அதனை மிகவும் ஆபாசமாக சித்தரிக்கவில்லை. இதுவே இப்படத்தின் தரத்திற்கு உயர்வை அளிக்கிறது.
ஆண்களைப் பொருத்தவரை பெண் உடல் இச்சைக்கான ஒரு போக வஸ்துதான். இது நமது பண்பாட்டில் ஒரு அம்சமாகவே மாறிப் போயிருக்கிறது. இணக்கமாக இருக்கும் எந்த ஒரு பெண்ணையும் படுக்கையில் சாய்க்க ஆண்களுக்கு குற்ற உணர்ச்சியோ தயக்கமோ இல்லை. மகளிடம் அத்துமீறும் தந்தை, மாணவிகளிடம் அத்துமீறும் ஆசிரியர், நண்பரின் மனைவியுடன் கள்ளக்காதல்  என ஏராளமான செய்திகளை தினமும் செய்தித் தாள்களில் வாசிக்கிறோம், மூன்று வயது நான்கு வயது பெண் குழந்தைகளைக் கூட பாலியல் ரீதியாக வன்புணர்ச்சி செய்யும் வக்கிரங்களையும் நமக்கு இச்சமூகம் தினமும் கண்முன்னே நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறது. மனிதனுக்குள் இருக்கும் ஆதி மனிதனின் மிருக உணர்ச்சி இலக்கியத்தாலும் இசையாலும் கலையாலும் மதத்தாலும் மாறிவிடவில்லை. மாறாக அடக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிவாளத்தை கட்டவிழ்த்து விட்டால் எந்த ஒரு குதிரையும் தறிகெட்டு ஓடும். எந்த ஒரு யானையும் மதம் பிடித்து ஆடும். எந்த ஒரு புலியும் வேட்டையாடிக் கொல்லும். டெல்லியில் நிர்பயாவுக்கு நிகழ்ந்தது இதுதான்.
ஒரு பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு அது குறித்த புரிந்துணர்வும் விழி்ப்புணர்வும் அவசியம் என்பார் ஜே.கிருஷ்ணமூர்த்தி .அத்தகைய ஒரு புரிந்துணர்வை இப்படம் அளிக்கத் தவறவில்லை.







No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...