Thursday 12 January 2017

மீண்டும் புத்தகக் கண்காட்சிக்கு

புத்தகக் கண்காட்சிக்கு மீண்டும் இருமுறை சென்று வந்தேன். சினிமா, கவிதை புத்தகங்கள் மட்டுமே கவனம் ஈர்க்கின்றன. மு.முருகேஷின் ஹைகூ ஆய்வு போன்றவற்றையும் அதன் உழைப்பு கருதி வாங்கினேன்.
நற்றிணை பதிப்பகம் யுகனுடன் சிறிது நேரம் பேசியதி்ல் பதிப்புத்துறையிலும் தமிழ் இலக்கியத்திலும் அவருக்குள்ள ஈடுபாடும் பிரியமும் அளவற்றது எனத் தெரிந்துக் கொண்டேன். இப்படி ஒரு வாசகர் பதிப்பாளராக இருப்பது எழுத்தாளர்களுக்கு பெரும் பேறு. அவர் சினிமா பற்றி வெளியிட்ட ஒரு புத்தகம் விலை ரூ 300 தான் ஆனால் அதன் அச்சும் தரமும் இதுவரை தமிழ்ப் பதிப்புலகம் காணாதது.
பிரபஞ்சனின் சிறுகதைத் தொகுப்புகள், அசோகமித்திரனின் கதைகள் மற்றும் கட்டுரைகள் உள்ளிட்டவற்றையும் மிகவும் நேர்த்தியாக வெளியிட்டுள்ள யுகன் ஜெயமோகனின் மகாபாரதத் தொடரையும் அற்புதமாக வெளியிட்டுள்ளார். இப்படியெல்லாம் புத்தகங்கள் அச்சாக வேண்டும் என்ற கனவு எந்த எழுத்தாளனுக்குத்தான் இல்லை. என்னுடைய புத்தகங்கள் சிலவற்றையும் நற்றிணை மூலம் வெளியிட முயற்சிக்கிறேன்.
யுகனுடன் பேசும் போது சந்தித்த இன்னொரு முக்கிய நபர் பல்லடம் மாணிக்கம் அவர்கள். விருதாச்சலத்தில் மிகப்பெரிய நூலகம் வைத்துள்ளார். திருக்குறள் மீதும் தமிழ் இலக்கியங்கள் மீதும் தீராத காதல் கொண்டவர். கோவை ஞானியின் களம் கூட்டங்களின் போது தொண்ணூறுகளில் அவரை பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். நீண்ட இடைவெளியில் நோயாலும் வயதின் முதிர்வாலும் சிறிய தளர்ச்சி உடலில் இருந்தாலும் அவருடைய அதே ஆர்வத்தை காண முடிந்தது. தீராநதியில் வெளியாகும் எனது சினிமா கட்டுரைகளை படித்து வருவதாக கூறினார்.
அதே போல் எழுத்தாளர் தேவகாந்தனை சந்தித்ததும் மகிழ்ச்சியளித்தது. பழைய எழுத்தாளர்கள் நண்பர்கள் என புத்தக கண்காட்சியில் மகிழ்ச்சிக்கு குறைவே இல்லை. கௌதம சித்தார்த்தன், கால சுப்பிரமணியன், பாஸ்கர் சக்தி, என எத்தனையோ நண்பர்களை மீண்டும் பார்ப்பதில் மனம் மகிழ்ந்து வந்தேன்.
வரும் வழியி்ல் வழக்கம் போல் பழைய புத்தகங்களை வேட்டையாடினேன்.

-----------------------------------
மறுநாளும் புத்தகக் கண்காட்சிக்கு நண்பர் சூர்யராஜனுடன் சென்றிருந்தேன். முன்னாள் சினிமா இயக்குனரான அவர் பழைய பாசத்தில் பியூர் சினிமா அரங்கில் இயக்குனர் மகேந்திரனின் சினிமாவும் நானும் நூலை வாங்கினார். நான் காலச்சுவடு பதிப்பகத்தில் சுந்தர ராமசாமி நேர்காணல்கள், நானும் என் எழுத்தும் போன்ற நூல்களை வாங்கினேன். எஸ்.சண்முகத்துடன் சிறிது நேரம் பேசினேன். எல்லா நண்பர்களும் கிடங்குத்தெரு பற்றி விசாரிக்கிறார்கள். அந்த நாவலின் இடத்தை வேறு எந்த புத்தகமும் ஈடு செய்யவில்லை என்ற நண்பர்கள் சிலரின் கருத்து நீண்ட யோசனையை ஏற்படுத்தியது.
 இன்னொரு நாவல் விரைவில் வெளியிட வேண்டும். கிடங்குத் தெருவை விடவும் பெரிதாகவும் ஆழமாகவும்......எழுதிக் கொண்டிருக்கிறன்.




No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...