Tuesday 10 May 2016

படித்தது- எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகள்

எஸ்.ராமகிருஷ்ணனை சில முறை கூட்டங்களில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். இணக்கமாக பழகக்கூடியவர். ஆனால் நடுவில் சில ஆண்டுகள் பெரிய எழுத்தாளர்களான ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா போன்றவர்கள் மீது கடுமையான கோபம் வந்தது. காரணம் என்னை யாரும் கண்டுகொள்வதில்லை. நானும் 30 வருஷமா எழுதுகிறேன், கிடங்குத்தெருவுக்கு பாஷா பாரதி எல்லாம் வாங்கிட்டேன். சென்னையில் 500 இலக்கியக்கூட்டங்கள் நடத்தியிருப்பேன். சிறுபத்திரிகை நடத்தியிருக்கிறேன்.தமிழ்நாடு முழுவதும் ஊர் ஊராப் போய் எழுத்தாளர்களை சந்தித்து நாள்கணக்கில் உரையாடியிருக்கிறேன்.
ஆனால் என் இருப்பையே கேள்விக்குறியாக்கும் வகையில் யாராலும் நான் கவனம் பெறமுடியாமல் போனது ஏன் என்று பலமுறை யோசி்த்த போது பறவை தனது சிறகு பறந்த சுவடுகளை காற்றில் பதிய விடுவதில்லை என்ற ஜென் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.
இதனால் யாமம் போன்ற ராமகிருஷ்ணனின் நாவல்களை புறக்கணிக்கத் தொடங்கினேன். கடந்த 5 ஆண்டுகளாக நிரந்தர வருமானம் இல்லாமல் புத்தகக் கண்காட்சிகளிலிருந்து வெறும்கையுடன் திரும்பி வந்த ரணங்கள் இந்த ஆண்டாவது தீருமா எனத் தெரியவில்லை.
ராமகிருஷ்ணன் அண்மைக்காலங்களில் நிறைய எழுதிய போதும் வாசிக்க இயலவில்லை. கோபமும் வறுமையும் தான் காரணம்.
பழைய புத்தகக் கடைகளில் தேடிக் கொண்டிருந்த போது எஸ்.ராமகிருஷ்ணனின் மலைகள் சத்தமிடுவதில்லை என்ற கட்டுரை தொகுப்பு கிடைத்தது. தலைப்பே எனது கோபத்திற்கான பதிலை கூறுவது போல் இருந்தது.
கட்டுரைகளில் ஒரு பகுதி எழுத்து ஆளுமைகள் பற்றியது. அதில் தஸ்தாயவஸ்கி, செக்காவ், கார்க்கி போன்ற பல வெளிநாட்டு ஆளுமைகள், பிலோ இருதயநாத் , ப.சிங்காரம் போன்ற தமிழக ஆளுமைகள் குறித்து தமது கட்டுரைகள் வாயிலாக ஒரு அற்புதமான மன உலகிற்கு கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். குறிப்பாக காமிக்ஸ் பற்றியும் இரும்புக்கை மாயாவி பற்றியும் அவர் எழுதிய சிறுவயது அனுபவங்கள் எனக்கு எனது பால்ய காலத்தை நினைவுபடுத்தியது. என்னைப்போலவே ராமகிருஷ்ணனும் காமிக்ஸ் ரசிகராக இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
 கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் 2008ம் ஆண்டில் முத்து காமிக்ஸ் பற்றிய எனது அரைமணி நேர செய்தித்தொகுப்பையும் சிவகாசி பதிப்பாளர் எஸ்.விஜயனின் பேட்டியையும் ராமகிருஷ்ணன் பார்த்தாரா இல்லையா என தெரியவில்லை, ஆனால் ராமகிருஷ்ணன் கட்டுரையில் குறிப்பிடுவது போல சில ஆண்டுகளாகத்தான் அவருக்கு காமிக்ஸ் பற்றி எழுதத்தோன்றுகிறது.
அதற்கு அந்த நிகழ்ச்சி உந்துதல் தந்ததா எனத்தெரியவில்லை.

பல முன்னணி எழுத்தாளர்கள் கூறுவது போல கிடங்குத்தெருவா நான் படிக்கலேயே என்றும் செந்தூரம் ஜெகதீஷா அவர் யார் என்று கூறுவது போலவும் ராமகிருஷ்ணனும் கூறலாம். அய்யா உங்கள் எழுத்துகளை தேடித்தேடி படித்து தனது சொற்ப வருமானம் முழுவதையும் உங்களைப் போன்ற படைப்பாளிகளுக்காகவே செலவு செய்த ஒருமனிதனை நீங்கள் புறக்கணித்ததைப் போல உங்களை நான் புறக்கணிக்க மாட்டேன். அதனால்தான் இந்த பகுதியை இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.


No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...