Monday 7 September 2015

துணிவே துணை – பால்ய கால நினைவுகளுடன் ஒரு திரைப்படம்







துணிவே துணை என்று கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் குறிப்பிடுவதுண்டு. அவருடைய சங்கர்லால் துப்பறியும் நாவல்களைப் படித்து வளராத மேதைகள் அரிது.எனது பள்ளிப்பருவத்திலும் தமிழ்வாணனின் கதைகளும் துப்பறியும் திரைப்படங்களும் மனதுக்கு நெருக்கமாக இருந்துள்ளன.
வணிகரீதியான திரைப்படங்களைப் பற்றி சினிமா ரசனை மிக்க யாரும் பேசுவதும் எழுதுவதும் இல்லை. அது கௌரவக் குறைவு அல்லது தங்கள் அறிவுக்கு இழுக்கு போலவும் எண்ணுகின்றனர். இத்தாலிய ஜெர்மனிய படங்களைப் பற்றி பேசுவது ஒரு பேஷன் ஆகி விட்டது. எனது நண்பர் இயக்குனர் சூர்யராஜன் சத்யஜித்ரே, ட்ரூபோட், பெலினி போன்ற பெயர்கள் எல்லாம் கெட்ட வார்த்தைகள் என்று எண்பதுகளில் கூறுவார். அப்போதைய திரைப்பட உலகம் அப்படி இருந்தது. ஆனால் இன்று எல்லா உதவி இயக்குனர்களும் உலகப்படங்களைப் பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். பிரபல இயக்குனர்களும் அத்தகைய உதவி இயக்குனர்களையே விரும்புகிறார்கள்.
தமிழ் சினிமாவின் நீண்ட நெடிய வரலாற்றிலிருந்து அற்புதமான வணிகப்படங்களில் பத்து படங்களைப் பற்றி கூட ரசனையுடன் பேசத்தெரியாத பல இயக்குனர்கள் தாம் இன்று வணிக ரீதியான ஒரு தமிழ்த்திரைப்படத்தை எடுத்துவிடத் துடிக்கிறார்கள்.
துணிவே துணை என்ற வணிக ரீதியான படத்தை பற்றி எழுதும் போது இந்த எண்ணங்களுடன் எழுதுகிறேன்.
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் இரட்டை வேடத்தில் நடித்த துப்பறியும் கதைதான் இது. தமிழ்வாணனின் தலைப்பை பெற்று தயாரானது. ஆனால் கதை தமிழ்வாணனுடையது அல்ல. பஞ்சு அருணாசலம் தான் கதை வசனம்,பாடல்கள் கண்ணதாசன், இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ் விஸ்வநாதன். ஜெய்சங்கர், தெலுங்கு நடிகை ஜெயப்பிரபா, அசோகன், விஜயகுமார், சுருளிராஜன், ராஜசுலோசனா, அபர்ணா ஆகியோர் நடித்தது. தயாரிப்பாளர் பி.வி.தொளசிராமன். இயக்குனர்.எஸ்.பி.முத்துராமன்
1976ல் இப்படம் வெளியானது. டிவிடியில் இப்போதும் பார்க்கலாம். இப்படம் வெளியான போது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.மாலையில் பள்ளி விட்டதும் நண்பன் சேகர் சினிமாவுக்கு அழைப்பான். அநேகமாக நாங்கள் பார்த்த படங்களையே மீண்டும் மீண்டும் ஆறு ஏழு தடவை பார்ப்போம். ரகசிய போலீஸ் 115, ஒரு தலைராகம், மன்மத லீலை, அன்னக்கிளி போன்ற அத்தகைய படங்களின் வரிசையில் துணிவே துணையும் இடம் பெற்றது. சென்னை புவனேசுவரி திரையரங்கில் ஒரு ரூபாய் அல்லது 2 ரூபாய் டிக்கட்டில் இந்தப் படத்தை நாங்கள் ஏழு தடவை பார்த்தோம். படத்தின் வசனங்கள் மனப்பாடமாகிவிட்டன. நான் ஒரு வசனம் பேச சேகர் ஒரு வசனம் பேச இருவரும் படத்தின் காட்சிகளுடன் ஒன்றி விடுவோம்.
கதை மாத நாவல் டிடெக்டிவ் கதைதான். படத்தின் ஆரம்ப காட்சியில் போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொன்வயல் கிராமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக ஒரு குற்றமும் நடக்கலே. அந்த ஊர்மக்கள் காளியம்மனுக்கு பயந்து ஒழுக்கமா இருக்காங்க,
இதுபோன்ற கதைகள் ஒவ்வொரு கிராமத்திலேயும் இருக்கு
ஆனால் பொன்வயல் கிராமத்திலே சற்று அதிகமா இருக்குது. ஒண்ணுமில்லை, ஒண்ணுமில்லைன்னு ரெண்டு தடவை சொன்னா அதுல ஏதோ இருக்குன்னுதான் அர்த்தம்…..
ரகசிய போலீஸ் அதிகாரியான விஜயகுமார் அந்த கிராமத்தில் நடைபெறும் மர்மங்களை கண்டறிய செல்கிறார். ரயிலில் ஒருமொட்டை வில்லன் ஏறுகிறான். நாங்கள் மனப்பாடம் செய்த வசனங்கள் இதோ
என்னடா ஓடுற ரயிலில் ஏறுறான்னு பார்க்கறீயா....அது எனக்கு பொழுது போக்கு…..ஆமா நீங்க எங்கே போறீங்க
பொன்வயல் கிராமத்திற்கு போய் வரலாம்னு இருக்கேன்
நல்ல ஜோக். அங்கே போனவங்க யாரும் திரும்பி வந்ததாக சரித்திரமே இல்லை. அதனால்தான் சொல்றேன் அங்கே போகாதீங்க.
இரண்டு பேரும் சண்டை போடுவார்கள் .மொட்டை தப்பி, ரயிலில் இருந்து குதித்து விடுவான். இரவுநேரம், விஜயகுமார் அந்த ஊரில் இறங்குவார். ஸ்டேசன் மாஸ்டர் அறைக்கு வருவார்.தலை நரைத்த ஒரு வயதான ஸ்டேஷன் மாஸ்டர் இருப்பார். பழைய பேன் ஒன்று கிரீச்சிட்டு ஓடிக் கொண்டிருக்கும். காகிதங்கள் படபடக்கும். அவரிடம் ஊருக்கு போக வழி கேட்பார் விஜயகுமார். அப்போது படத்தில் மொட்டை படத்துக்கு மாலை போட்டிருப்பதை பார்த்து விஜயகுமார் அதிர்ச்சியடைவார். பெயர் வைத்தி, தோற்றம் மறைவு என எழுதப்பட்டிருக்கும். சார்….இவன்…..
இவன் என் மகன் .ஓடும் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டான். அவனை ரயிலில் பார்த்ததாக பலர் சொல்வாங்க என்பார். அதிர்ச்சியுடன் விஜயகுமார் வெளியே வருவார்.இன்னொரு இளமையான ஸ்டேஷன் மாஸ்டர் வருவார். அப்போ அவரு....?
இல்லையே நான்தானே ஸ்டேஷன் மாஸ்டர் வாங்க பார்க்கலாம்….
மொட்டை வைத்தியின் படம் இல்லை. பேன் ஓடவில்லை, காகிதங்கள் படபடக்கவில்லை,
அவரா...?மகன் இறந்த சோகம் தாளாமல் இந்த பேன்லேதான் தூக்கு மாட்டி செத்துப் போனார். அவர் ஆவி நடமாடுவதா சொல்றாங்க என்பார் புதிய ஸ்டேஷன் மாஸ்டர்.
குழப்பத்துடன் வெளியே வந்து ஊருக்குள் போக மாட்டு வண்டியில் ஏறுவார். வழியில் அழகான இளம் பெண்( அபர்ணா ) ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை இங்கே வந்தாள் என பாடிக் கொண்டே வெள்ளைப்புடவையில் வண்டிக்கு முன்னே போவார். வாணி ஜெயராம் குரலில் அற்புதமான பாடல் இது....
அபர்ணாவை துரத்திக் கொண்டு விஜயகுமார் ஓடுவார். ஓடி ஓடி பிடிக்க முயன்றாலும் பிடிக்க முடியாது. மெல்லிசைமன்னரின் அதிர வைக்கும் பிஜிஎம், பாபுவின் பயமூட்டும் ஒளிப்பதிவு , ஆர் விட்டலின் திறமையான படத்தொகுப்பு என பாடலை கலக்கியிருப்பார் எஸ்.பி.முத்துராமன்.
திரும்பி வந்து பார்த்தால் வண்டிக்காரன் ரத்தம் கக்கி செத்துக் கிடப்பான். மாட்டு வண்டி அச்சு முறிந்து கவிழ்ந்து கிடக்கும். அதிர்ச்சியில் விஜயகுமாருக்கு மாரடைப்பு ஏற்படும் , அங்கேயே விழுந்து உயிரைவிட்டு விடுவார்.
அடுத்து விஜயகுமாரின் தம்பியான ஜெய்சங்கர், தனது அண்ணனின் மர்ம சாவுக்கு காரணம் அறிய அவரே கேட்டு வாங்கி அந்த கிராமத்துக்கு வருவார். அவரும் போலீஸ் இன்ஸ்பெக்டர்தான். இம்முறையும் ஓடும் ரயிலில் மொட்டை ஏறுவான்.
அவன் பேசும் முன்பு ஜெய் பேசுவார்…அடடா வாங்க சார்….ரொம்ப நேரமா பேச்சுத்துணைக்கு ஆள் கிடைக்காமல் தனியா தவிச்சுட்டிருந்தேன்.
எங்கே போறீங்க…
பொன்வயல் கிராமத்துக்கு
அங்கே…
அங்கே போகாதீங்க உயிருக்கு ஆபத்து அது இதுன்னு சொல்லப்போறீங்க இதை சொல்லுறதுக்காகவா ஓடுற ரயிலில் ரிஸ்க் எடுத்து ஏறி வந்தீங்க ,கீழே விழுந்தா மொட்டை மண்டை எகிறிடுமோன்னு பார்க்கிறேன்.அதை விடுங்க நீங்க எங்கே போறீங்க…
நான் எங்கேயும் போவேன் எங்கேயும் வருவேன்
ஓகோ வித்தவுட் டிக்கட்…டிடி வந்தா போவீங்க போனா வருவீங்க
விளையாடாதீங்க போனவாரம் என் பேச்சை கேட்காமல் ஒரு போலீஸ் ஆபிசர் போனார்…..என்ன ஆனார்…..
ஓ அப்ப அவர் சாவுல உங்களுக்கும் பங்கு இருக்கு,,,,,உண்மையை சொல்லு நீ யார்….
இதே போல் சண்டை, மொட்டை தப்பி ஓட்டம்
ஸ்டேசனிலும் அதே போன்ற காட்சிகள். ஆனால் ஜெய் அதிர்ச்சியடைய மாட்டார் அவர் பேச்சை கேட்டு ஸ்டேசன் மாஸ்டர்களும் வண்டிக்காரன் கறுப்பனும்தான் அதிர்ச்சியடைவார்கள்.
அதே அபர்ணா. அதே பாட்டு ஆனால் ஜெய்சங்கர் பயப்பட மாட்டார். துணிவே துணை.
ஊருக்குள் வரும் அவருக்கு யாரும் தண்ணீர் கூட தரமாட்டா்கள். அசோகன் அவரது உடலை அளவெடுப்பார் மாப்ளே உனக்கு ஒரு சவப்பெட்டி செய்யனும் இல்ல.....
சுருளிராஜனுக்கு மண்ணைப் பொன்னாக்கும் வித்தையை கற்றுத்தருவதாக கூறி சில உதவிகளைப் பெற்று விடுவார் ஜெய்சங்கர். கிராமத்தில் உள்ள அழகான இளம் பெண் ஜெயப்பிரபா ஜெய்சங்கரை காதலிப்பார். ஆனாலும் வில்லன் கோஷ்டிகள் ஜெய்சங்கரை இறந்துவிட்டதாக கருதி உயிருடன் புதைக்க சுருளிராஜன் காப்பாற்றுவார்.
மற்றொரு ஜெய் சவப்பெட்டியுடன் ஊருக்குள் வருவார். சற்றே வயதான தோற்றம் முரட்டுத்தனம். தனது ஜென்ம விரோதியான அந்த ஜெய்சங்கரை தேடி சவப்பெட்டியுடன் வந்ததாக கூறுவார். புதைத்த இடத்தில் பிணம் இல்லை என்பதால் ஜெய் உயிருடன் இருப்பதாக நம்புவார்கள் வில்லன் கோஷ்டியினர்
இரண்டு ஜெய்சங்கர்களும் நேருக்கு நேர் மோதும் காட்சி வரும்.
அந்த ரவுடி ஜெய்சங்கரும் ஹீரோ ஜெய்சங்கரும் பாட்டு பாடுவார்கள்
அச்சம் என்னை நெருங்காது, யாரைக்கண்டும் மயங்காது
 I WILL MEET YOUR CHALLENGE
இந்தப்பாடலை டி.எம்.எஸ் உடன் எஸ்.பி.பியும் பாடியிருப்பார். நாளை நமதே போன்ற சில படங்களில் டி.எம்.எஸ். உடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய அழகான பாடல்களில் இந்தப்பாடலும் ஒன்று, கண்ணதாசன் வரிகளும் பாடலை ரசிக்க வைக்கின்றன.
ஒருவழியாக ஹீரோ ஜெய் சுட்டுக் கொல்லப்பட்டு புதைக்கப்படுவார். புதைத்தால் மாயாஜாலம் தெரிந்த ஜெய் உயிருடன் வந்துவிடுவார் என சவப்பெட்டியுடன் எரித்துவிடுவார்கள். அதற்கு முன்பு வில்லன் ஜெய் சாமர்த்தியமாக சவப்பெட்டியை மாற்றிவிடுவார். பார்த்தால் வில்லன் ஜெய் ஒரு போலீஸ் அதிகாரி. ஜெய் போல் முக கவசம் அணிந்து வந்திருப்பார். அவர் விடைபெற அவர் வேடத்தில் எதிரிகளின் கோட்டையில் அடியெடுத்து வைப்பார் ஹீரோ ஜெய்
வில்லி ராஜசுலோசனா. கொள்ளைக் கூட்டத்தின் தலைவி.படையப்பா நீலாம்பரிக்கு அவர் தான் அக்கா. ஜெய்சங்கர் மீது ஆசைப்பட்டு மயங்குவார். ஜெய் அவரின் கள்ளக்கடத்தல்களையும் அதை மறைக்க பேய் பிசாசு, காளியம்மன் கோபம் என நாடகம் நடத்தப்படுவதையும் கண்டுபிடிப்பார்.
கிளைமாக்ஸ் காட்சியில் ஹெலிகாப்டர் சண்டை எல்லாம் உண்டு. இறுதிக்காட்சிகளில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பின்னணி இசையில் ஒரு காவியமே படைத்திருப்பார்.
சாதாரண வணிக ரீதியான படம்தான். ஆனால் பதின் பருவங்களில் இந்தப் படம் ஒரு அற்புதம். தமிழ்த்திரையுலகம் பார்த்தறியாத அழகான நாயகியர் ஜெயப்பிரபாவும் அபர்ணாவும்
ஜெயப்பிரபா ஜெகன்மோகினி படத்தில் ஜெயமாலினியால் ஆட்டிப்படைக்கப்படும் நரசிம்ம ராஜூவின் மனைவியாக நடித்தவர்.
தமிழில் பெண் ஜென்மம் போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார். முகத்தின் கீழ் ஒரு மச்சம் அழகோ அழகு.
முதலிரவு காட்சியில் முந்தானையை நழுவ விட்டு ஜெயப்பிரபா ஜெய்சங்கருடன் சரசம் ஆடும் காட்சி எங்கள் இரவுகளை அலைக்கழித்திருக்கிறது.
அதே போல் அபர்ணாவும் அபாரமான அழகி. எஸ்.பி.முத்துராமனின் ஆடு புலி ஆட்டம் போன்ற படங்களில் அபர்ணாவை ரசிகர்கள் பார்த்து மெய் மறந்திருக்கலாம். நான் வாழ வைப்பேன் படத்தில் ரஜினியுடன் ஆகாயம் மேலே பாதாளம் கீழே பாட்டுக்கு அரைகுறை ஆடைகளில் ஆட்டம் போட்டிருப்பார்.
அபர்ணாவுக்காகவும் இந்தப்படத்தை நாங்கள் விரும்பி பார்த்தோம்.ராஜசுலோசனா மாளிகையில் ஜெய்சங்கருக்கும் ஜெயபிரபாவுக்கும் கல்யாணம் நடக்கும்போது அபர்ணா ஒரு கேபரே ஆடுவார்.எல்,ஆர்.ஈஸ்வரி குரலில் கிக்கான பாட்டு
சினிமா பார்க்கும் அனுபம் என்பது இத்தகையது. ஒரு ரூபாய் டிக்கட், இரு அழகான நாயகியர். விரும்பி பார்க்க கூடிய நடிகர்கள், இசை நடனம் சண்டை பாடல்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் மனதை அலைக்கழிக்காத கதையமைப்பு என வணிக ரீதியான படங்களின் வெற்றிகளுக்கு காரணமாக உள்ள அம்சங்கள் இன்றைய திரைப்படங்களில் குறைந்து விட்டன.
எனவேதான் இந்தப் படமும் 39 ஆண்டுகளுக்கு முன்பு வணிகரீதியான படமாக இருந்து இன்று என்னைப் போன்ற, சேகரைப் போன்ற நடுத்தர வயதினருக்கு ஒரு பால்ய கால சகியைப் போல மறக்கமுடியாத பதிவாகி விட்டிருக்கிறது.
துணிவே துணையை கட்டாயம் ஒருமுறை பார்க்க பரிந்துரை செய்யலாம். இப்போதும் அதன் அழகான அம்சங்கள் அப்படியே இருக்கின்றன.
இந்தப் படத்திற்கு தீவிர சினிமா காதலர்களும் இலக்கியவாதிகளும் மட்டமான விமர்சனம் எழுதுவார்கள் அல்லது புறக்கணிப்பார்கள்.
தமிழ்வாணன், சுஜாதா, சாண்டில்யன், போன்ற எழுத்தாளர்கள் , துணிவே துணை போன்ற திரைப்படங்கள் எனக்கு உரமிட்டு அஸ்திவாரமிட்டு எனது வாசக அனுபவத்தையும் திரைப்பட அனுபவத்தையும் தொட்டிலிட்டு தாலாட்டியதை மறந்துவிட முடியாது.
நேற்று போல் இன்று இல்லை….அதற்காக நேற்று இல்லாமலும் இன்று இல்லைதானே

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...