Monday 28 May 2012

மகாகவி இக்பாலின் கவிதை

சினாயில் பூத்த லில்லி மலர்
- மகாகவி இக்பால் 


தமிழாக்கம்- செந்தூரம் ஜெகதீஷ்


அவன் கருணையாலும் பிரகாசத்தாலும்
உலகம் சுடர்கிறது.
கடந்த காலமும் நிகழும் அவன் புகழைப் பாடுகிறது.
ஒவ்வொரு விடியலின் வெள்ளி ரேகைகளுடன்
சூரியன் அவனுக்கு நன்றி செலுத்துகிறது.
என் உள்ளத்தின் சுடரால் நான் ஒளிர்கிறேன்.
ரத்தக் கண்ணீருடன் என் கண்களில் தாகம் பெருகுகிறது.


உலகம் அன்பினால் பிணைக்கப்பட்ட முடிவற்றதொரு சங்கிலித் தொடர்.
காதலின் கவிதையால் அதன் வழவழப்பு கூடுகிறது.
நிகழ், கடந்தகாலம், எதிர்காலம் என எதுவாயினும்
காதலின் கணம்தான் நிலைத்து விடுகிறது.


துலிப் மலர்களின் நிறத்தைப் பூசுகிறது காதல். 
உள்ளத்திலோ அதன் நெருப்பின் வெப்பமே ஆளுகின்றது.
பூமியின் இதயத்தை ஊசியால் குத்திப் பார்த்தால்
அன்பின் ரத்தம் அதன் நாளங்களில் ஓடுவதை உணரலாம்.


மனிதனின் உதடுகளில் இருந்து அன்பின் பாடல் ஒலிக்கிற போது.
தானே பூட்டிக் கொண்ட கதவுகளை அவன் திறக்கிறான்.
உலகம் கடவுளால் படைக்கப்பட்டிருந்தாலும் மனிதனால்தான் பராமரிக்கப்படுகிறது.
ஒருவேளை இந்த விளையாட்டில் இருவருமே பங்குதாரர்கள் போலும்.


எல்லா உள்ளங்களும் அன்பின் வளையத்தில் வரவில்லை.
எல்லா மனிதர்களும் அன்பின் அடையாளங்களை வெளிப்படுத்துவதில்லை.
லில்லி மலரின் இதயம் பல நேரங்களில் கிழிந்து அதில் ரத்தம் சிந்துகிறது.


காற்றில் இலக்கற்றுத் திரியும் எய்த ஒரு அம்பைப் போல
நான் நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் அலைபாய்கிறேன்.
எல்லாமே என் கண்ணுக்குப் புலப்படாமல் மறைக்கப்பட்டுள்ளது.


என் விருப்பத்தின் மாறும் மனநிலைகளுக்கேற்ப
யாரோ யாழ் மீட்டுகின்றனர்.


தோட்டத்தில் இருக்கும் வானம்பாடி கதறி அழுகின்றது.
அதன் மண்ணிலிருந்து துயரத்தைத் தவிர வேறு எதுவும் முளைக்கவில்லை.
தலைமுறைகளைக் கடந்தும் பாலைவன முட்கள் உதிரவில்லை.
ரோஜாக்கள் இளமை பூத்திருக்கும்போதே இறந்து விடுகின்றன.


எத்தனைக் காலம்தான் கூட்டுப் புழுவாய் உள்ளுக்குள் போராடுவாய் என் நெஞ்சமே.
ஒருமுறை உன் உள்மனத் தீயால் உன்னையே நீ எரித்து விடு.
உன் மணல் துகள்களால் ஒரு பலமான உடலை உருவாக்கு.
கனத்த பாறையாய் மாறி கடும் புயல்களைத் தாங்கு,
வலியின் தன்மை அறிந்த உன் இதயம் மலை போல உறுதி கொள்ளட்டும். ஆனால் அதன் இடையே ஒரு நதி பாடிச் செல்லட்டும்.




இறைவா...இவ்வுலகம் எத்தனை கோடி இன்பம் கொண்டது.
ஒவ்வொரு அணுவும் இருப்பால் மெய்சிலிர்த்துக் கொண்டிருக்கிறது.
காம்பிலிருந்து முகிழ்த்த ரோஜா மொட்டு கூட
வாழ்க்கையைப் பெற்றுவிட்ட பரவசத்தால் புன்னகைக்கிறது.


நேற்றிரவு செத்துக் கொண்டிருந்த புழு ஒன்று என்னிடம் சொன்னது,
நாளை காலை நான் சாம்பலாகி விடுவேன் என்றாலும் இன்று
வாழ்வின் தீயில் என்னை ஒருகணமேனும் எரியவிடு.


இன்று காலை வானம்பாடி ஒன்று பரவசத்தால் பாடிக் கொண்டிருந்தது.
என் இதயத்தில் புதைத்து வைத்திருந்த ஒரு கண்ணீர்த் துளியை, ஒரு பெருமூச்சை, ஓர் அழுகையை, ஒரு சோகப் பாடலை அது கிளறிவிட்டது.


அதன் பாடல் -


எனது பாடலுக்குள் வாழ்க்கையின் துன்பத்தைத் தீர்க்கும் போதையைத் தேடாதீர்கள்.
ஒரு ரோஜாவைப் போல ரத்தம் சொட்டும் இதயமும் அதன் முட்களும் தவிர என்னிடம் 
வெளி்ப்படுத்தவோ விற்பனை செய்யவோ எதுவும் இல்லை.


என்னுடன் வாழும் பறவைகளை நான் அறியவில்லை.
என் கூடு தனிமை கொண்டுள்ளது என்றது.


------------------------------------------------------------------------


எல்லா செல்வங்களையும் நான் நிராகரித்தேன்.
எல்லா அதிகாரங்களையும் மறுக்கிறேன்.


ஒரு தரிசனம் நாடி நான் சினாய் மலைக்கு வந்தேன்.
கடவுள் மனிதனைத் தேடிக் கொண்டிருப்பதை அறிந்து 
அவனை நாடி நான் வந்தேன்.


நாம் எல்லா குற்றங்களையும் மூடி மறைத்துதானே ஞானம் தேடுகிறோம்.
சந்தேகங்களின் வலைகளில் சிக்கி நம்பிக்கையைத் தேடுகிறோம்.
ஒன்றை நம்பி வேறொன்றுக்காக வாழ்ந்து
மற்றொன்றை தேடி இன்னொன்றுக்காக இறக்கிறோம்.


--------------------------------------------------------------------------
ஒரு ரோஜாவிடம் கேட்டேன்.
எதற்காக இந்த சோகம் ரோஜா மொட்டே
சுத்தம் செய்யும துடைப்பம் முதல் சிரிக்கும் தோட்டம் வரை உன்னைச் சுற்றி எவ்வளவோ இருக்கிறது. ஏன் அழுகிறாய் என்றேன்.
பனித்துளியும், வீசும் மாருதமும் வானம்பாடியின் பாடலும் காதலும் உன்னை நாடுகின்றன. உன் உள்ளம் எதற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது என்று கேட்டேன்.


உதிர்ந்துக் கொண்டிருந்த அந்த ரோஜா ஏமாற்றத்துடன் சொன்னது
நமது வாழ்க்கை காற்றில் கரையும் சுகந்தம் 


என் இதயம் வலியால் உடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கிறது
வானம்பாடியுடன் பலமணி நேரம் பேசுகிறேன்.
மலர்கள் மௌனமாயிருந்தாலும் அவற்றின் மொழியை அறிகிறேன்.


அவனது கருணைக் கடலின் ஒரு நீர்க்குமிழ் நம் வாழ்க்கை.
அவனது ஈரம் தான் நமது வேர்களை நனைக்கிறது.


ஒ என் இதயமே நீயே என் கடல், என் படகு, என் பயணம்.
தூசியிலிருந்து பூத்த மலரா நீ அல்லது வானிலிருந்து விழுந்த பனித்துளியா
எது நன்மை எது தீமை என எப்படி உரைப்பேன் உனக்கு
சிக்கலான் உண்மையல்லவா அது
வெளியே தான் ரோஜாவும் முள்ளும் தெரிகின்றன.
தண்டின் உள்ளே ரோஜாவும் இல்லை, முள்ளும் இல்லை.


எங்கிருந்து நான் வந்தேன். என் எதிர்காலம் என்ன
நான் யார்
நதியின் ஒரு அலை போன்றவன் நான்.
உள்நோக்கித் திரும்பாவிட்டால் நான் நானாக இல்லை.


அன்பு ஒவ்வொரு இதயத்தையும் நாடி வருகிறது.
ஒரு இதயத்தைக் காயப்படுத்தி இன்னொன்றை காயம் ஆற்றுகிறது.


நான் முத்தாக இருப்பவனா அல்லது அதன் சிப்பியா
நான் மதுவா அல்லது அதன் கோப்பையா எனக்குத் தெரியாது.
இதயத்திலிருந்து ஆசைகள் எழுவது எதனால்
விளக்கில் எங்கிருந்து ஒளி வருகிறது.


யார் நமது காலடியை முன்வைக்கிறார்.
நமது கண்களின் வழியாக பார்த்துக் கொண்டிருப்பது யார்.
எதனை அவர் பார்க்கிறார்.


என் மூலத்தைப் பற்றிய அறிவு எனக்கு இல்லை.
என் கல்லறைக்குப் பிறகு என் இலக்கையும் நான் அறியவில்லை.


மொட்டுக்குள் சிக்கியிருக்கும் ரோஜாவின் முனகலை நான் கேட்டேன்.
படைப்பின் சங்கிலியில் பிணைக்கப்பட்ட கைதி நான் என்றது.


விதி எழுதும் கதையை நம்மால் திருத்த முடியாது.
வாழ்க்கை மூன்றாக தரப்பட்டிருக்கிறது. ஒன்றை பெறுகிறோம். ஒன்றை போற்றுகிறோம் ஆனால் மூன்றாவது ஒன்றை கொன்று விடுகிறோம்.


நமது சொந்த மாடல்களை வைத்து இறைவனின் அடையாளத்தைத் தேடுகிறோம். 
நமது சட்டகங்களில் அவனது உருவத்தை வைத்து வணங்குகிறோம்.
நமது அழகால் அவன் கருணையை உருவாக்குகிறோம்.
நம் சொந்த பிம்பங்களிலிருந்து நம்மால் தப்பவே முடிவதில்லை.
எங்கே திரும்பினாலும் அவன் முகத்தில் நாம் வணங்குவது
நம்முடைய சொந்த முகத்தைத்தான்.


முன்பு அன்பு நிறைகொண்டிருந்த உலகில் இப்போது
மரணத்தின் மௌனம் ஆட்சி செய்கிறது.
என் இதயம் எப்போதோ எரிந்து விட்டது.
அதன் சாம்பல் மட்டுமே எஞ்சியிருக்கிறது.
என் ஆசைகளின் செல்வம் எங்கே களவு போனது
என் வலிகளின் புதையல்களைக் கூட யாரோ திருடிப் போய் விட்டார்.


நம் அறிவு தகரத்தையும் தங்கமாக மாற்றும்
கல்லையும் கண்ணாடியாக்கும் நமது கலை.
கவியின் ரசாயனம் விஷத்தைக் கூட அமுதமாக மாற்றுகிறது.
எனவே என் அலையும் எண்ணங்களை கவிதையிடம் திருப்பினேன்.
என் இதயத்தில் ஒளிரும் சில உண்மைகளை அறிந்தேன்.
அன்பையும் வாழ்க்கையையும் பாட எனது உதடுகளைத் திறந்தேன்.
என் வெளிப்பாடு அதன் ரகசியத்தை மேலும் மூடிமறைத்தது.


கடைசியாக காரணத்தின் துரத்தல்களிலிருந்து தப்பினேன்.
காதலின் வீதியில் ஒரு ராப்பிச்சைக்காரனாகப் பாடுகிறேன்.
எத்தனை சோகத்துடன் என் பாடல் ஒலிக்கிறது.


இக்பால் வானத்தை வளைப்பவனாக இல்லை.
அந்த தத்துவ ஞானி, கவிஞன் இப்போது பித்தனாகி விட்டான்.








No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...