ஓஷோ வாழ்வும் சேதியும்-
இருபது வயது ஆகும் முன்பே நான் காரல் மார்க்சின் சிவப்புநூல்களையும் லெனினின் தடித்த புத்தகங்களையும் படிக்க ஆர்வம் காட்டினேன். மாஸ்கோ பதிப்பகம் சார்பாக மலிவு விலையில் அந்தப் புத்தகங்கள் நியுசெஞ்சுரி புக் ஹவுஸில் கிடைத்தன. அதே போல கார்க்கி, ஷோலக்கோவ், மாயகவாஸ்கி, அந்தோன் செக்கவ், புஷ்கின் நூல்களும் கிடைத்தன. டால்ஸ்டாயும் தஸ்தேயவஸ்கியும் தமிழ்ச்சூழலுக்கு அதிகமாக தெரியாத காலம் அது. மணிக்கொடி எழுத்தாளர்களின் ஆர்வமும் சில தமிழாக்கங்களும் டால்ஸ்டாயை ஓரளவு அறிமுகம் செய்திருந்தது. கநாசுவும் எழுதியிருந்தார். ஆனால் புத்தக சைசை பார்த்து பயந்து அப்போது போரும் அமைதியும் படிக்க முடியவில்லை. எப்படியோ அன்னா கரீனினாவை ஆங்கிலத்தில் படித்திருந்தேன். அடல்ட்ரி எனப்படும் பாலியல் பிறழ்வு புத்தகமாகத்தான் அப்போது அது தோன்றியது. புத்துயிர்ப்பு பற்றி சில இலக்கிய நண்பர்கள் ஆர்வத்துடன் பேசுவார்கள். இது 80களின் தொடக்க கால நிலை.
ஒருநாள் நானும் நண்பர் சூர்யராஜனும் பிரபஞ்சன் அவர்களின் கே.கே.நகர் வீட்டுக்குப் போனோம். அவர் கையில் பகவான் ரஜ்னிஷ் பதில்கள் என சிவப்பு அட்டை போட்ட புத்தகம் இருந்தது. அதை சூர்யா ஆர்வத்துடன் வாங்கிப் படித்தார். நான் அதைப் படிக்க விரும்பவில்லை.
சாமியார்களை எனக்குப் பிடிக்காத காலம் அது. ஓஷோ என்ற பெயர் அப்போது ரஜ்னிஷ் என்றே தெரிந்திருந்தது. ராணி வார இதழில் அல்லி பதில்கள் பகுதியில் பிரா பற்றியும் நடிகைகளின் நீச்சல் உடை பற்றியும் கேள்வி வருவதைப் போல தவறாமல் செக்ஸ் சாமியார் ரஜ்னிஷ் பற்றியும் கேள்வி-பதில் வரும். சில நேரங்களில் தினத்தந்தியிலும் இப்படிப்பட்ட அதிர்ச்சி தரும் கட்டுரைகள் வரும்.அதைப் படித்து கெட்டுப் போய், ரஜ்னிஷை நிராகரித்தேன்.ஆனால் சூரியாவின் வற்புறுத்தலால் அதைப் படிக்கலானேன். எனக்கு புதிதாக ஏதோ புரிவது போல தோன்றியது. அந்த புத்தகத்தை வெளியிட்டவர்கள் விலாசம் திருச்சியில் இருந்தது. திருச்சி எனது பால்ய கால ஊர் என்பதால் அங்கு போகும் போது ரஜ்னிஷ் டைம்ஸ் என இதழ் தமிழில் வந்துக் கொண்டிருந்தது. சுவாமி மோகன்பாரதி என்பவர் அதனை நடத்திக் கொண்டிருந்தார். விலை 2 ரூபாய். டாப்லாய்ட் நியூஸ் பேப்பர் வடிவில் அது இருந்தது. அதை நிறைய வாங்கி வந்தேன். அப்போது எழுத்தாளர் பாலகுமாரனும் அங்கு வந்து ரஜ்னிஷ் புத்தகங்களை வாங்கிப் போயிருந்தார்.
படிக்க படிக்க புதிய பரவசமும் சந்தோஷமும் அளித்தது ஓஷோவின் எழுத்து. படிப்படியாக காரல் மார்க்சும் லெனினும் என்னை விட்டு விலகிப் போனார்கள். கம்யூனிசப் பேயை ஓட்டி விட்ட பூசாரி ஓஷோதான். தன்னை ரஜ்னிஷ் என்று அழைக்க வேண்டாம் என்றும் ஓஷோ என்றழைக்க வேண்டும் என்றும் அவர் கூறியதால் ஓஷோ என்ற பெயரில் நான் நடத்தி வந்த செந்தூரம் சிற்றிதழில் அட்டையில் ஓஷோவைப் போட்டு அவரது எழுத்துகளை பதிப்பித்தேன். சிற்றிதழ் மற்றும் இலக்கிய வாசகர்களிடம் அதுதான் ஓஷோவைப் பற்றிய முதல் பதிவு. மோகன்பாரதியின் இதழ் சுழன்ற வட்டம் வேறு. ஒரு இலக்கியவாதியான நான் அதை நானறிந்த இலக்கிய வட்டங்களில் பரவலாக்கினேன். கவிஞர் புவியரசு செந்தூரத்தில் படித்தபின்தான் ஓஷோவை மொழிபெயர்க்க ஆர்வம் காட்டினார்.
புனே போக வேண்டும் என்றும் ரஜ்னிஷை பார்க்க வேண்டும் என்றும் ஆங்கிலத்தில் உள்ள அவர் நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும் என்றும் என்னுள் தீராத தாகம் எழுந்தது.பல வருடங்கள் கழித்து நான் புனே போய் சேர்ந்த போது ஓஷோ மறைந்துவிட்டார்.
ஓஷோவிடம் நேருக்குநேராக பழகித்தான் அவரைப் பற்றி அறிய வேண்டிய அவசியமே இல்லாதபடி தமது நூல்களின் வாயிலாக அவர் தமது வாழ்வைப் பற்றியும் சேதியைப் பற்றியும் விரிவாகவே விளக்கியிருக்கிறார்.
ஓஷோவின் உலகினுள் நுழைவதற்கு முன்பு நாம் என்னவாக இருந்தோம் என்பதை முற்றிலுமாக மறந்துவிட வேண்டும். நமது தன்முனைப்பு, சாதி, மதம், ஒழுக்கம், ஆசை, பேராசை, எதிர்பார்ப்பு ஆகியவற்றுடன் ஓஷோவை அணுகினால் ஏமாற்றமே மிஞ்சும்.
உலகில் குழந்தை பிறக்கும் போது வங்கிக் கணக்குடன், அரசாங்க வேலையுடன், கார்களுடன் , நீண்ட ஆயுளுக்கான இன்சூரன்ஸ் பாதுகாப்புடன் பிறப்பதில்லை. தாய்ப்பாலை நம்பியும் தன்னை பெற்றவர்களை நம்பியும்தான் பிறக்கிறது.
புதிதாகப் பிறந்த குழந்தை பார்ப்பதற்கு பலவீனமாக தெரியும். ஆனால் யார் தம்மை ஆதரிப்பார், வளர்ப்பார் , உணவளிப்பார் எனத் தெரியாமல் அது பிறக்கையில் எத்தனை நம்பிக்கையும் பலமும் அதனிடம் வழங்கப்பட்டிருக்கிறது என்று உணரலாம்.
குருவிடம் செல்லும் போது நம்பிக்கையுடன் செல்வது அவசியம். பணம், கற்பு என எதையோ இழந்ததாக கூறுவோர் அதனை முன்பே வேறு பல குறுக்கு வழிகளில் இழந்துவிட்டவர்கள்தான். மா ஷீலா போன்றவர்கள் ஓஷோவை களங்கப்படுத்திய கதைகள் ...அதற்கு ஓஷோ அளித்த பதில்கள்.....காமத்தைப் பற்றிய ஓஷோவின் எண்ணங்கள், அவரது அறிவாற்றல், கருணை என எத்தனையோ விஷயங்கள் உள்ளன பேசுவதற்கு.
ஓஷோவிடம் என்ன கிடைக்கும் ?
ஓஷோவை அவரது நூல்களின் வழியாக சந்திக்கும் போது, பலவிதமான அடைமொழிகள் அவருக்குத் தரலாம் என்ற எண்ணம் வருகிறது. குறும்புக்கார பெருசு என்று பல முறை நினைத்திருக்கிறேன். ஆனந்தவிகடன் கார்ட்டூனுக்காக அதன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியம் அவர்களை எம்.ஜி.ஆர் அரசு சிறையில் அடைத்த போது, இத்தகைய அசடுகள்தான் உங்கள் முதலமைச்சர்களாக இருக்கிறார்கள் என்று கூறியவர் ஓஷோ.
மொரார்ஜி தேசாய் மூத்திரம் குடித்ததை அத்தனை நக்கலடித்திருக்கிறார்.
காந்தியின் ஒழுக்கத்தையும் நேருவின் சோசலிசத்தையும் இந்திரா காந்தியின் ஆணவத்தையும் காரல் மார்க்சின் கம்யூனிச கோட்பாட்டையும் ஓஷோ பலமுறை விமர்சித்திருக்கிறார். எந்த ஒரு அரசியல் கோட்பாட்டிலும் குப்பைத்தொட்டியிலும் அவருக்குப் பெரிதாக அக்கறை இருந்ததில்லை. மக்களின் மனங்களில் இத்தகைய அரசியல் தலைவர்களைப் பற்றியிருக்கும் பிம்பங்களை உடைப்பதிலும் கலைப்பதிலும் மட்டும்தான் ஓஷோவுக்கு கவனம் இருந்தது. அரசியல்வாதிகள் தான் நாட்டை சூறையாடியவர்கள் என்று பலமுறை பேசியிருக்கிறார். ஏழ்மையை வெறுத்தவர் அல்ல ஓஷோ. ஏழைகளால் விலைக்கு வாங்க முடியாத உன்னதங்கள் உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்கும் சமூக அமைப்புகளையும் அதன் காவலர்களையும் துச்சமாக தூக்கியெறிந்திருக்கிறார்.
முதலில் வாழ்க்கைக்கான வசதிகளை செய்துக் கொண்டு ஞானத்தையும் அறிவையும் தேடுங்கள் என்பார் ஓஷோ. கிழிந்த ஆடையும் வயிற்றில் பசியும் தோளில் குடும்ப சுமையும் இருக்கும் மனிதனுக்கு ஞானம் மட்டுமல்ல இயல்பான வாழ்க்கைக் கூட சித்திக்காது என்பதை தெளிவாக விளக்கியிருக்கிறார்.
ஓஷோவிடம் கிடைக்கும் முதல் அம்சம் மனிதாபிமானம்.
அவரது பல்வேறு உரைகளில் பல்வேறு விதங்களில் சகமனிதனுக்கான அக்கறையும் நேசமும் சுடர்விடுவதை உணராதவர்கள் கண்ணிருந்தும் குருடர்தான்.
மனிதன் மகிழ்ச்சியாக வாழப் பிறந்தவன். ஆனால் அவனை அப்படி வாழ விடாத சக்திகளை அவர் இருவகையாகப் பார்க்கிறார். ஒன்று புற ரீதியானது. அரசியல், மதம், வறுமை இப்படி. மற்றொன்று அகரீதியானது. பொறாமை, தன்முனைப்பு, காமம், அறியாமை, பேராசை என மனிதனை கேவலமானவனாக மாற்றும் உணர்வுகள். புத்தர், ஏசு, நபிகள் நாயகம், கிருஷ்ணா என எந்த தெய்வத்தை நீங்கள் வணங்கினாலும் அத்தனை தெய்வப் பிறவிகளும் ஞானிகளும் படைப்பாளர்களும் இந்த அகம் புறம் சார்ந்த இருவேறு எதிரிகளை எப்படி வென்றனர் என்பதை கூறுவதில்தான் ஓஷோவுக்கு கவனம் இருக்கும். அப்படியே அவர்களை கண்மூடி பின்பற்றுவதில் அவருக்கு உடன்பாடு இல்லை.
ஓஷோவிடம் கிடைக்கும் இரண்டாம் அம்சம் தத்துவார்த்த கலை உணர்வு.
தஸ்தயேவஸ்கி, டால்ஸ்டாய், சித்தர்கள், பாஷோ, பூக்கோ, நீட்சே, சிக்மண்ட் பிராய்டு, குருட்ஜிப், எட்கர் காய்ஸ், கலீல் கிப்ரான், மைக்கேல் நேமி, மிலன் குந்தேரா, தாகூர், ஜலாலுதீன் ரூமி, உமர்கய்யாம், ஜென்குருக்கள், ஆல்பர்ட் காம்யு, சார்த்தர் என ஆங்கிலம் வழி கிடைத்த அத்தனை படைப்பிலக்கியங்களையும் தத்துவங்களையும் கற்றுத் தேர்ந்தவர் ஓஷோ. திருக்குறளும் பாரதியும் ஆழ்வார்களும் அவருக்கு ஆங்கிலம் வழியாக கிடைக்காமல் போனதற்கு மலையாளம், கன்னடம், பிரெஞ்ச், ருஷ்ய மற்றும் ஜெர்மனிலிருந்து கண்ட கண்ட குப்பைகளை கூட தராதரம் தெரியாமல் சகட்டுமேனிக்குத் தமிழில் மொழிபெயர்க்கும் தமிழர்களாகிய நாம்தான் வெட்கப்பட வேண்டும்.
Really Nice post...Keep posting....
ReplyDeletethanks
ReplyDeletei agree with you, i read Osho few years back, and now i am fully hearing his discourses mainly Patanjali yoga sutra and dhammapadha. god what a man he was, no words
ReplyDeletesuper sir .. thank you .
ReplyDelete