Wednesday 22 July 2020

ஜென் தேநீர் - ஓஷோவும் ஜென்னும் 31-35

ஜென் தேநீர் 31 ஓஷோவும் ஜென்னும் .... செந்தூரம் ஜெகதீஷ் OSHO -THE GOOSE IS OUT புத்தகத்தைப் பார்க்கலாம்.... தத்துவம் என்ன ஞானம் என்பது என்ன...இந்த இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்பதை ஓஷோ விளக்குகிறார். தத்துவம் லாஜிக்கானது. அறிவால் இயங்குவது. அறிவாளியும் ஞானியும் வெவ்வேறு தளத்தில் உள்ளவர்கள் .அறிவு தர்க்கமானது .ஆதாரம் கோருவது. ஞானம் உணர்வது அதனிடம் விளக்கம் இல்லை. " ஒரு ரோஜாப்பூவை ஆய்வு செய்யக் கொடுத்தால் அதனை இழை இழையாகப் பிய்த்துப் போட்டு ஒவ்வொரு இழையையும் ஒவ்வொரு சீசாவுக்குள் போட்டு வைத்து ரசாயனத்தை ஊற்றி அதன் தன்மையை ஆராய்ச்சி செய்யலாம். ஆனால் அந்த ரோஜாவின் நிறம் மணம், அதன் நடனம் ஆகியவற்றை ஆராய்ச்சியால் காண முடியாது. அதற்கு ஒரு கலைக்கண்ணோட்டம் வேண்டும் " என்கிறார் ஓஷோ. "ரசாயனங்களால் ரோஜாவை அறிய முயற்சித்தால் அங்கு ரசாயனம்தான் இருக்கும் ரோஜா இருக்காது என்பார். ரோஜாவை அழித்துவிட்டால் அதன் நறுமணம், நிறம் யாவும் கண்ணுக்குப் புலப்படாத எங்கேயோ போய் மறைந்துவிடும். " " ஒருநடனக் கலைஞரை உடற்கூறாய்வு செய்தால் அவரிடமிருந்து எலும்புகள் கிடைக்கும்.அவர் உடலில் இருந்து சதையும் ரத்தமும் நரம்புகளும் கிடைக்கும். ஆனால் அந்த நடனம் கிடைக்குமா? அவருடைய கழுத்தை அறுத்துப் பரிசோதனை செய்தால் அந்தப் பாடல் கிடைக்குமா? " அறிவு என்பது திரட்டப்பட்ட குப்பை. அதை பிறரிடமிருந்து நீ பெற்றாய். ஆனால் மேதைமை என்பது உன்னுள்ளே இருப்பது. உன்னில் இருந்து எழுவது. மேதைமை என்பது உன் அன்பின் நிழல்தான் என்றும் ஓஷோ கூறுகிறார். நீ அன்பானவனாக இருந்தால் தானாகவே உன்னுள் மேதைமை எழும். நீ மேதையாக இருந்தால் தானாகவே உன்னுள் அன்பு மேலெழும். அன்பும் மேதைமையும் இருக்குமிடத்தில் தான் நடனம் இருக்கும். பாடல் இருக்கும். ஒரு குழந்தையின் வியப்பும் ஆர்வமும் இருக்கும். அறிவும் லாஜிக்கும் ஒன்றாக வளரும். அதே போன்று அன்பும் மேதைமையும் ஒன்றாக வளரும் என்கிறார் ஓஷோ. அறிவு திரட்டப்பட்டது. அது பிச்சைக்காரனின் சாப்பாடு போன்றது. பலர் தூக்கிப் போட்டதை நீ வாங்கிக் கொண்டு வருகிறாய் என்கிறார் ஓஷோ. ஞானம் ஒரு கணப்பொழுதில் நிகழ்ந்துவிடுவது. பல ஆண்டுகளாக முயற்சித்தாலும் அடைய முடியாதது. முயற்சியே இல்லாத ஒரு கணத்தில் ஒரு நிகழ் கணத்தில் உன்னையறியாமல் அது நிகழ்ந்துவிடும் என்றும் ஓஷோ கூறுகிறார். புத்தருக்கு இரவின் கடைசி நட்சத்திரம் உதிர்ந்ததைக் கண்டு ஞானம் பிறந்தது. தாவோ அளித் த லாவோட்சுவுக்கு ஒரு மரத்தில் இருந்து இலையைப் பார்க்கும் போது திடீரென ஞானம் உதித்தது. லாவோட்சு மரத்தில் இருந்து ஒரு இலை உதிர்வதைக் கண்டார், மெதுவாக மெதுவாக காற்றில் நடனமாடியபடியே அந்த இலை ஒரு பறவையின் சிறகு போல் மெல்ல மெல்ல பூமியை நோக்கி ஸ்லோ மோஷனில் விழுந்துக் கொண்டிருந்ததை ஒரு கணம் கூட தவற விடாமல் பார்த்தபடி தியானத்தில் ஆழ்ந்தார் லாவோட்சு. அந்த இலை தரையை எட்டியதும் மண்ணில் விழுந்ததும் யுரேகா என்று பெருங்குரலெடுத்துக் கத்தினார் லாவோட்சு .அவருக்கு அங்கேயே ஞானம் மலர்ந்தது.மகிழ்ச்சிப் பெருக்கால் அவர் நடனம் ஆடத் தொடங்கி விட்டார். அவருடைய சீசாவுக்குள் அடைபட்டிருந்த வாத்து வெளியே வந்துவிட்டது. ----------- ஒரு குட்டிக் கதை ஒரு மிருகக் காட்சி சாலையில் புதிதாக ஒரு சிங்கத்தை கொண்டு வந்தனர். அந்த சிங்கம் இளமையாக துடிப்பாக இருந்தது. அதே மிருகக் காட்சி சாலையில் இன்னொரு கிழட்டு சிங்கமும் இருந்தது. அந்த கிழட்டு சிங்கம் எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கும். அதனால் பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்து போய் விடுவார்கள். இதைக் கண்ட இளைய சிங்கம் தனது வித்தையை காட்டியது. ஓவென வாயைப் பிளந்து ஆக்ரோஷமாக கர்ஜித்தது. இதனைக் கண்டு பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்தனர் .கைதட்டி ரசித்தனர். நாளுக்கு நாள் பூங்காவுக்கு பார்வையாளர்கள் வருகை அதிகரித்தது. இளம் சிங்கத்தைப் பார்க்க பலர் குழந்தைகளுடன் திரண்டு வந்தனர். இந்த சிங்கமும் அவர்களுக்கு நல்லதொரு பொழுதுபோக்காக கர்ஜனை செய்து மகிழ்வூட்டியது. ஆனால் அந்த பூங்காவின் ஊழியர்கள் உணவு கொண்டு வரும் போது கிழட்டுச் சிங்கத்திற்கு குதிரை இறைச்சியை கொண்டு வந்தனர். அந்த கிழட்டுச் சிங்கமும் அதை சாப்பிட்டு தூங்கிவிடும். ஆனால் இந்த இளம் சிங்கத்துக்கு ஆரஞ்சுப் பழங்களும் வாழைப்பழங்களும் வேர்க்கடலையும் கொண்டு வந்தனர். தினமும் இது தொடரவே பொறுமை இழந்த இளம் சிங்கம் ஒரு ஊழியரை அழைத்தது. "நான் இத்தனை பார்வையாளர்களை வரவைத்திருக்கிறேன். ஆனால் எனக்கு இரைச்சியைத் தராமல் ஆரஞ்சு வாழைப்பழம் தருகிறீர்கள், அந்த கிழட்டுச் சிங்கம் எதவும் செய்யாமல் சதா படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு மட்டும் நல்ல நல்ல இறைச்சியைக் கொண்டு வருகிறீர்களே இது நியாயமா "என்று புலம்பியது. அப்போது அந்த ஊழியர் சொன்னார் .எங்கள் பட்ஜெட்டில் ஒரு சிங்கம் தான் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதற்குத்தான் இரைச்சி வாங்கிப் போடுகிறோம். உன்னை இன்னும் சிங்கம் கணக்கில் சேர்க்கவில்லை. ஒரு குரங்கு கணக்கில் சேர்த்து வைத்துள்ளோம். அதனால்தான் குரங்குக்கு தரும் உணவைத் தருகிறோம்" எப்படியிருக்கு கதை. நாமும் இப்படித்தான் சிங்கமாக இருந்தும் குரங்குபோல் உணவைப் பெறுகிறோம். ------------- இன்னொரு கதை ஒருமனிதன் வீட்டுக்கு ஒருவர் 24 ஆயிரம் லிட்டர் எண்ணெய் கொண்டு வந்து டெலிவரி செய்தார். எண்ணெய் வியாபாரம் செய்யும் வீட்டு உரிமையாளருக்கு வியப்பு இத்தனை எண்ணெய் எதற்கு நான் ஆர்டர் செய்யவே இல்லையே... வீட்டில் வளர்த்துவரும் கிளியின் வேலையாகத்தான் இருக்கும் என்று கேட்கிறார் . நீதான் எண்ணெய்யை ஆர்டர் செய்தாயா ? ஆமாம் நீ சொல்வதை திருப்பிச் சொல்லும் பழக்கம் என்னிடம் உள்ளது. நீ பன்னிரண்டு ஆயிரம் லிட்டர் ஆர்டர் செய்தாய். நானும் 12 ஆயிரம் லிட்டர் ஆர்டர் செய்து விட்டேன் என்றது கிளி. இதனால் கோபம் அடைந்த வீட்டுக்காரர் கிளியின் இரண்டு இறக்கைகளையும் விரித்து சுவருடன் சேர்த்து ஆணியடித்து தொங்கப் போட்டு விட்டார். கிளிக்கு தண்டனையளிக்கப்பட்டது. தனது இறகுகளை வலியுடன் விரித்தபடி தண்டனையை அனுபவித்தபடி இருந்த கிளியின் பார்வை வீட்டுக்கு எதிரே இருந்த தேவாலயம் பக்கம் திரும்பியது. அங்கே ஏசு சிலுவையில் இருகைகளையும் விரித்தபடி அறையப்பட்ட கோலத்தை பார்த்தது கிளி. ஏசு மீது அதற்கு பரிதாபம் ஏற்பட்டது. அடப்பாவமே நீயும் பன்னிரண்டாயிரம் லிட்டர் எண்ணெய்யை கூடுதலாக ஆர்டர் செய்துவிட்டாயா ஏசுவே என்று கேட்டது கிளி. -------------------- ஜென் தேநீர் 32 ஓஷோவும் ஜென்னும் .... செந்தூரம் ஜெகதீஷ் OSHO -THE GOOSE IS OUT மதம் என்பது அபினி என்றார் காரல் மார்க்ஸ். எல்லா மதங்களும் மனிதனுக்கு சொர்க்கத்தைப் பற்றியும் நரகத்தைப் பற்றியும் பொய்யான நம்பிக்கைகளைத் தருகின்றன. அவர்களின் நிகழ்காலத்தைச் சுரண்டுகின்றன. அவன் ஒரு சிந்தனையின் அடிமையாகிறான். வேறு மதங்கள் அவனுக்குப் பிடிப்பதில்லை. மற்ற மதவாதிகளை குண்டுவைத்தும் கொல்வான், வாளால் வெட்டியும் சாய்ப்பான், துப்பாக்கியால் சுட்டும் கொல்வான். மதம் மனிதனை பண்படு்ததுவதற்குப் பதிலாக அவனை ரத்த வெறிபிடித்த ஓநாயாகவும் தந்திரம் செய்யும் நரியாகவும் மாற்றுகிறது. உங்கள் மதபோதகர்கள் பலர் ஞானசூனியன்கள் ,தந்திர நரிகள். பணம் புகழ் பெற உங்களை பலியாடு ஆக்குகிறவர்கள் . ஒளிமிக்க ஞானவான்கள் குருநானக், சாயிபாபா, ஸ்ரீராகவேந்திரர், ராமகிருஷ்ணர், ரமணர், ஓஷோ, விவேகானந்தர், நாராயண குரு, நடராஜ குரு ,குரு நித்ய சைதன்ய யதி , குணங்குடி மஸ்தான் சாகிபு, போன்ற பலர் இம்மண்ணில் தங்கள் சுவடுகளை விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் மதவாதிகளாக இல்லை. அவர்கள் மதங்களை இணைப்பவர்களாகவும் மதநல்லிணக்கத்தை காப்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஆன்மீக வாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் பெரிய வேறுபாடு உண்டு. ஓஷோ, ஜே.கிருஷ்ணமூர்த்தி, நித்ய சைதன்ய யதி போன்றவர்களிடமிருந்து நீங்கள் பெறும் ஒவ்வொரு சொல்லும் உங்களுக்கு புத்துயிர் அளிப்பவை. உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடியவை. பைபிள், குரான், பகவத் கீதை. தம்ம பதம், குருகிரந்தம், சூஃபியிசம் போன்றவைகளைப் படிக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கும் அதன் நம்பி்க்கைகளுக்கும் ஒருபோதும் விசுவாசமாக இருக்க வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள். மதத்தைப் பின்பற்றுங்கள் .நானும் இந்துவாகத்தான் வாழ்கின்றேன். ஆனால் எனக்கு ஏசுவைப் பிடிக்கும். அல்லாவைப் பிடிக்கும். புத்தரையும் பிடிக்கும். காரணம் ஓஷோ. THE GOOSE IS OUT புத்தகத்தில் ஓஷோ காரல் மார்க்சை மேற்கோள் காட்டுகிறார். பொதுவாக மார்க்ஸ்,லெனின், ஸ்டாலின், மாவோ, கம்யூனிசம் மீது கடுமையான விமர்சனங்களை வைப்பவான ஓஷோ இந்த புத்தகத்தில் மதம் ஒரு அபின் என்று கூறிய மார்க்சை பாராட்டுகிறார். " காரல் மார்க்ஸ் மதத்தை போதை வஸ்து என்கிறார்.அது உண்மைதான். 99 புள்ளி 9 சதவீதம் உண்மைதான். ஆனால் புள்ளி ஒரு சதவீதம் அது உண்மையில்லை. ஒரு புத்தர், ஒரு ஏசு, ஒரு ஜரதுஷ்ட்டிரர், இவர்களைப் போன்ற ஒரு சிலர் விதிவிலக்குகளாக இந்த புள்ளி ஒரு சதவீதத்தில் அடங்குவர். போதைப் பொருள் என்பது சரியானதுதான். மக்களை போதையில் ஆழ்த்தி அவர்களை தூக்கத்தில் வைத்திருக்க உங்கள் மதவாதிகள் முயற்சிக்கிறார்கள். சகிக்க முடியாத ஒரு உலக வாழ்க்கையை உங்களை சகித்துக் கொள்ள பழக்கப்படுத்துகிறார்கள். எல்லா விதமான அடிமைத்தனங்களையும் பசி பட்டினியையும் நாளைய ஒளிமயமான எதிர்காலத்துக்காக சகித்துக் கொள்ள போதனை செய்கிறார்கள். நாளை அடுத்த பிறவியில் அல்லது சொர்க்கத்தில்தான் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும் " ஜென் இன்று இப்பொழுது இக்கணம் என்கிறது. அது உங்கள் ஆனந்த நிலையை தள்ளிப்போடுவதில்லை. இப்போதே அதனை நீங்கள் கண்டடையலாம். அதை தேடவேண்டியதும் இல்லை. அது உங்கள் உள்ளுக்குள் உறங்கிக் கொண்டிருக்கிறது. அகவிழிகளைத் திறந்தால் போதும். உலகம் ஏற்கனவே பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. அதனை மேலும் பைத்தியமாக மாற்றாதீர்கள் என்கிறார் ஓஷோ. இறுதி இலக்கு எதுவும் இல்லை. வாழ்க்கை எந்த இலக்கை நோக்கியும் செல்வதில்லை. அது இன்று இப்பொழுது நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. "இறுதி இலக்கு என்று எதுவும் இல்லை என்பதை தொடக்கம் முதலே தெள்ளத் தெளிவாக உணர்ந்துக் கொள்ளுங்கள்.இருப்பது எல்லாமே உடனடி நிகழ்வு தான் ( immeadiate ) ultimate என்று எதுவும் இல்லை.யாத்திரையே இலக்குதான். பயணத்தின் ஒவ்வொரு அடியும் இலக்குதான். ஒவ்வொரு நொடியும் இலக்குதான். இதை அறிய அறிவு தேவையில்லை.அறிவு இலக்குகளுக்கான வழிகாட்டிதான். எதையாவது அடைவதற்காகத்தான் அறிவு பயன்படுகிறது.இலக்கற்ற உடனடி வாழ்க்கையை அடைய அறிவு தேவையில்லை. குழந்தையின் வெகுளித்தனம் தேவை.டியோனிசிஸ் குறிப்பிடுவது போன்ற அறியாமையின் ஞான நிலை அது. ஞானி மீண்டும் குழந்தையாகிறான். அவன் கூழாங்கற்களை சேகரிப்பவனாகிறான். கடற்கரையில் கிளிஞ்சல்களைத் தேடி எடுக்கிறான். காட்டு மலர்களைப் பறித்து வருகிறான். அதையெல்லாம் வைத்து அவன் எதுவும் செய்யப் போவதில்லை. அதனை சேகரிப்பது ஒரு ஆனந்தம் .அந்த ஆனந்தத்திற்காகவே அவ்வாறு செய்கின்றான். ------------- ஓஷோவின் குட்டிக் கதை ஒன்று ஒரு சூதாட்ட விடுதிக்கு அழகான இளம் பெண் ஒருத்தி மினி ஸ்கர்ட் அணிந்து வருகிறாள். இரண்டு இளைஞர்கள் அமர்ந்திருக்கும் ஒரு சூதாட்ட மேஜையில் வந்து அமர்கிறாள். தான் நிறைய பணத்தை சூதாட்டத்தில் தோற்றுவிட்டதாக புலம்புகிறாள். இளைஞர்கள் இருவருக்கும் அவள் தொடைகளில் கவனம் பாய்கிறது. இத்தனை அழகான வாளிப்பான தொடைகளை இவ்வளவு அருகில் இருந்து அவர்கள் பார்க்கவில்லை. இதை அந்தப் பெண் கவனிக்கிறாள். ஒருபுழுக்கமாக இருக்கிறது என்று தனது பான்டீசை கழற்றுகிறாள். கால் மீது கால் போட்டு தனது உடல் உறுப்பு தெரிவது குறித் த கவலையில்லாமல் சூதாடுகிறாள். அவளுக்கு அதிர்ஷ்ட்டம் வீசுகிறது. ஒவ்வொரு முறையும் ஆட்டத்தில் வென்று பணத்தை அள்ளிக் கொள்கிறாள். பிறகு தனது உள்ளாடையை எடுத்து அணிந்துக் கொண்டு சென்று விடுகிறாள். இளைஞர்களில் ஒருவன் கேட்கிறான் " அவள் உண்மையில் வென்றுதான் பணத்தை அள்ளிச் சென்றாளா...நீ கவனித்தாயா என்னால் கவனிக்க முடியவில்லை, அவள் கால்கள் அதன் இடுக்குகளில் இருந்து என் பார்வை அகலவே இல்லை " இன்னொரு இளைஞன் கூறுகிறான் " அடப்பாவி ஆட்டத்தை நீ பார்த்துக் கொள்வாய் என்றுதானே நானும் அவளை ரசித்துக் கொண்டிருந்தேன்." --------------- ஜென் தேநீர் 33 ஓஷோவும் ஜென்னும் .... செந்தூரம் ஜெகதீஷ் OSHO -THE GOOSE IS OUT புத்தர் தனக்கு பெண் சீடர்களை அனுமதிக்கவில்லை. புத்தர் பெண்கள் பற்றி கொண்டிருந்த அபிப்ராயம் குறித்தும் சர்ச்சைகள் எழுகின்றன. பெண்களுக்கு மெய்ஞானம் வாய்க்காது என்று புத்தர் கருதியதாக சிலர் கூறுகின்றனர். சாமியார்களிடம் சேரும் சிஷ்யைகள் பற்றி சமூகத்தில் நல்ல அபிப்ராயம் இல்லை. நித்யானந்தா -ரஞ்சிதா ஆகட்டும் ஓஷோ மா ஷீலா ஆகட்டும் காம களியாட்ட சங்கதிகளே அதிகமாகப் பேசப்படுகின்றன. விஸ்வாமித்திரனின் தவத்தை கலைத்ததும் ஒரு மேனகைதான். பெண் காமத்தைத் தூண்டுபவளாக பார்க்கப்படுகிறாள். பிரம்மாச்சாரியம் பழகும் துறவிக்கு அவள் இச்சைகளைத் தூண்டுகிறாள். தன் உடலின் அழகைக் காட்டி மயக்கும் மோகினியாக இருக்கிறாள். மகாத்மா காந்திக்கும் தனது அகத்தூய்மையை பரிசோதிக்க இரண்டு பெண்கள் நடுவில் படுக்க வேண்டிய நிலைமை தேவைப்பட்டது. ஆனால் பெண்கள் என்பவர்கள் வெறும் உடல்கள் மட்டும்தானா...அவர்களுக்கும் உள்ளம், அறிவு,ஞானம் என எதுவும் இல்லையா....என்ற கேள்விக்கு பெண்ணியவாதிகளின் கோபங்களைத் தவிர வேறு பதில்கள் இல்லை. பெண் அழகாக உடை உடுத்தினால் அவள் ஆண்களை ஈர்ப்பவளாகிறாள். அழகாக சிரித்து பேசினால் ஓடிப்போய் விடுவாள். தொட்டுப் பழகினால் கற்பை இழந்துவிடுவாள். முத்தம் கொடுப்பது தவறு .உடல் ஒரு புனிதப்பொருள் அல்ல என்று கூறுவது தப்பு. உடலை மீறி அவளால் செயல்பட முடியாது. அவள் உடல்தான் முன்வந்து நிற்கிறது. ஆண் துறவியாக இருந்தாலும் அரசனாக இருந்தாலும் அதில் வீழ்கின்றான். ஓஷோவின் ஆசிரமத்தில் பெண்கள் பல முக்கியப் பொறுப்புகளை வகித்தனர். பெண்களுக்குப் பொறுப்புகள் கொடுக்கலாமா.... இதைப் பற்றி ஓஷோவின் கருத்துகள் என்ன என்பதை பார்க்கலாம். " நான் நிறைய நிறைய பெண்களுக்குத்தான் பொறுப்புகளைக் கொடுக்க விரும்புகிறேன். நான் இறந்த பின்னரும் எனது இருப்பிடத்தில் பெண்களைத் தான் அதிகளவில் பார்ப்பீர்கள். ஆண்களைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும் . பெண்கள் ஆடுவார்கள். அனைத்து விதமான முட்டாள்தனங்களையும் செய்வார்கள். இந்த இடத்தை கலகலப்பாக வைத்திருப்பார்கள் .நான் இருக்கிறேனா போய்விட்டேனா என்று கூட உங்களுக்குத் தெரியாது ஆண் வானத்தை நோக்கி நகர்பவன். பெண் பூமிக்குள் ஆழமாக வேரூன்றுபவள். உலகின்பல பதவிகளுக்கு பெண்கள் பொறுப்பெடுத்துக் கொண்டால் போர்கள் குறைந்துவிடும். அழகான ஆடைகள் அணிகலன்கள் அதிகரிக்கும். பேஷன் ஷோக்கள் அதிகமாகும். மாடலிங் அதிகமாகும் ஆனால் ஆயுதங்கள் இருக்காது .அணுகுண்டுகள் இருக்காது. ஹைட்ரஜன் குண்டுகள் இருக்காது. எந்தப் பெண்ணுக்கும் இதில் எல்லாம் ஆர்வமே இல்லை. ஆண்தான் இவற்றையெல்லாம் விரும்புகிறான். மத சண்டைகள் குறைந்துவிடும் .ஜிகாத் மறைந்துவிடும். ஆணின் ஈடுபாடுகள் ஆபத்தானவை. அரசியல் மதம் பொருளாதாரம் யாவுமே ஆபத்தானவை." " புத்தர் பெண்களுக்கு எதிராக இருந்தார். அவர் தன்னுடன் பெண்களை சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை. தனது சமயம் 5 ஆயிரம் ஆண்டுகள் நீடிக்கும் என்றால் பெண் சீடர்களை சேர்த்துக் கொள்ளும் போது அது 500 ஆண்டுகளில் மறைந்துவிடும் என்று புத்தர் கருதினார். ஆனால் இறுதியில் பெண்களை சேர்த்துக் கொள்ள ஒப்புக் கொண்டார். என்னுடைய கருத்து என்னவென்றால் பெண்கள் இல்லாவிட்டால் பௌத்தம் 100 ஆண்டுகளுக்குள் காணாமல் போயிருக்கும். புத்தர் இறந்ததும் அவர் சீடர்கள் தத்துவ சண்டைகளில் ஈடுபட்டுவிட்டனர். முப்பத்து இரண்டு பிரிவுகள் உடனடியாக தோன்றின. புத்தரின் உடல் எரியூட்டப்படுவதற்கு முன்பாக அவருடை பௌத்தம் 32 துண்டுகளாக சிதறிவிட்டது. 32 தத்துவ பள்ளிகள் பிறந்துவிட்டன. முப்பத்தி இரண்டு இடைச்செருகல்கள் நிகழ்ந்துவிட்டன. யுத்தம் தொடங்கிவிட்டது. ஏசு சிலுவையில் அறையப்பட்ட போது அவருடை 12 முட்டாள் சீடர்களும் மறைந்துவிட்டனர் .காணாமல் போய் விட்டனர். அவர் உடலை மூன்று பெண்கள்தான் சிலுவையில் இருந்து இறக்கி வைத்தனர். ஒரு ஆண் கூட அப்போது அங்கில்லை. மேரி மகதலீன் அங்கிருந்தார். அவர் சகோதரி மார்த்தா அங்கிருந்தார். மார்த்தா ஒரு பாலியல் தொழிலாளி என்பார்கள். ஏசுவின் தாயார் மேரி அங்கிருந்தார். எங்கே போனார்கள் அந்த 12 மூடர்கள்?அவர்கள் வாட்டிகனை நோக்கி போயிருக்கலாம் .எதிர்காலத்தில் கிறித்துவத்தை பரப்புவதற்கு போயிருக்கலாம். ஏசு கதை முடிந்துவிட்டது. இனி இதை வைத்து பிழைப்பு நடத்தலாம் என்று போயிருக்கலாம். பெண்களுக்கு ஏசுவின் கொள்கைகள் பற்றி கவலையில்லை. அவர்கள் அவர் உடலை எடுத்து அடக்கம் செய்தனர். அவர்கள் உண்மையான பணிவிடை செய்தனர். உண்மையான தொண்டு செய்தனர். அவர்கள் ஏசு என்ற அந்த மனிதரை உண்மையாகவே நேசித்தனர். ஏசுவின் மிகவும் விஷயம் தெரிந்த நம்பகமான சீடன் யூதாஸ் தான் ஏழு வெள்ளிக்காசுகளுக்காக ஏசுவை காட்டிக் கொடுத்தான். ஆண் அறிவால் கணக்குப் போட்டு வாழ்கின்றான் .பெண் தன் இதயத்தால் வாழ்கிறாள். பெண்தான் வாழ்க்கையின் வேர். ஆண் அதிகபட்சமாக ஒரு கிளையாக முடியும். பூக்கள் பூக்கும் கிளையாக இருக்க முடியும். அழகான கிளையாக இருக்க முடியும். வானத்து நட்சத்திரங்களைத் தொட்டு விட கைகளை நீளும் கிளையாக இருக்க முடியும். ஆனால் பெண்தான் வேராக இருப்பாள்" என்கிறார் ஓஷோ. பெண்களால் தான் விடுதலை கிடைக்கும் என்றும் ஓஷோ கூறுகிறார். சீசாவுக்குள் அடைபட்ட வாத்து வெளியே வர பெண்ணின் உதவி தேவை என்கிறார் அவர் .ஞானத்தைப்பெற பல்கலைக்கழகங்களில் படிப்பது பயன்தராது. அதற்கு முற்றிலும் வேறுவகையான அணுகுமுறை தேவை. அறிவு என்பது மனத்துக்குரியது. மனம் தான் பாட்டிலை உருவாக்கி அதற்குள் வாத்தை அடைத்து வைக்கிறது. மெய்ஞானம் மனமற்றுப் போகும் நிலை. அது வாத்தை வெளியேற்றி விடும். அறிவு பாட்டிலுக்குள் வாத்தை வரைந்து அதன் அழகை ரசிக்கும். ஆனால் அது வெறும் பாட்டில்தான் .அதில் வாத்துகிடையாது. உண்மையான வாத்து பாட்டிலுக்குள் வாழ முடியாது. அதில் நீ வாத்தைப் போட்டு திணிக்கிறாய். உங்கள் கல்வியாளர்கள் அதைத்தான் செய்கிறார்கள். பாட்டிலுக்குள் வாத்தை ஒரு உருளைக்கிழங்கு போல திணிக்கிறார்கள், அல்லது வாத்து ஓவியத்தை வரைகிறார்கள், அது பார்ப்பதற்கு அழகாக தெரியலாம், ஆனால் நீ வெறும் பாட்டிலைத்தான் எடுத்துச் செல்கிறாய். அதன் பின் அந்த பாட்டில் கனமாகி விடுகிறது. அறிவு தன்னை வளர்த்துக் கொண்டே செல்லும் இயல்புடையது. அது வளர வளர வாத்து பெரிதாகி பாட்டிலை விட்டுவெளியே வரமுடியாமல் சிக்கிக் கொள்கிறது. " என்றும் ஓஷோ விளக்குகிறார். "எதற்காக பல்கலைக்கழகங்கள் கொடுத்த இத்தனைப் பட்டங்களை நான் சுமந்து திரிகிறேன் என்று டாக்டர் பிரீத்தம் சிங் என்னிடம் கேட்கிறார். அதை தூக்கியெறிந்து வெளியே வாருங்கள். நீங்கள் சேகரித்து வைத்துள்ள அறிவு முழுவதும் குப்பை என்ற உண்மையை ஒப்புக் கொள்ளுங்கள் . வெளியேறுங்கள். மனத்தை விட்டு வெளியே வந்துவிட்டால் அக்கணமே உங்கள் வாத்தும் பாட்டிலை விட்டு வெளியேறி விடும் .அது தான் சுதந்திரம். அதற்கு வானமே எல்லை. " என்றும் ஓஷோ கூறுகிறார். ---------- ஓஷோவின் குட்டிக் கதை ஒன்று ஒரு விபச்சார விடுதியில் பல அழகான பெண்கள் இருந்தனர். வாடிக்கையாளர்களுக்காக மூன்று மாடிகள் ஒதுக்கப்பட்டன. முதல் தளத்தில் நடிகைகள், அழகிகள், இளம் பெண்கள் இருந்தனர். இரண்டாம் மாடியில் மாடல் அழகிகள் , நடன அழகிகள் மூன்றாம் மாடியில் புத்திசாலித்தனமான பெண்களை விரும்பும் ஆண்களுக்காக ஆசிரியைகள் பாலியல் தொழிலுக்கு அழைத்து வரப்பட்டனர். வாடிக்கையாளர்கள் அழகான பெண்களை விட்டு விட்டு பெரும்பாலும் மூன்றாம் மாடிக்கே போக விரும்பினர். இந்த விஷயம் விடுதியின் தலைவிக்குப் புரியவில்லை. கீழ்தளத்தில் இத்தனை அழகிகள் இருக்கும் போது மூன்றாவது மாடிக்கு ஆண்கள் செல்வது ஏன் என்று புரியாமல் ஒரு வாடிக்கையாளரிடம் கேட்டாள். அந்த வாடிக்கையாளர் காரணத்தைக் கூறினார். பள்ளி ஆசிரியைகள் பற்றி உங்களுக்குத் தெரியாதா ஒரு விஷயத்தை சரியாக செய்யாமல் விட்டால் மீண்டும் மீண்டும் செய்ய வைப்பார்கள் . அது கணக்காக இருந்தாலும் சரி கலவியாக இருந்தாலும் சரி " ----------- இன்னொரு குட்டிக் கதை ஒரு உணவகத்தில் பெண் பணியாளர் ஒருவர் சப்ளை செய்யும் போது வித்தியாசமாக நடந்துக் கொள்வதை வாடிக்கையாளர் கவனித்தார் முட்டை சூப் கொண்டு வரும் போது அந்தப் பெண்ணின் கட்டை விரல் சூப்புக்குள் இருந்தது. அதே போல் காபி கொண்டு வரும் போதும் அந்தப் பெண்ணின் கட்டை விரல் காபிக்குள் இருந்தது. இதனால் எரிச்சலைடந்த வாடிக்கையாளர் நாங்கள் சாப்பிடும் உணவில் விரலை வைக்கலாமா என கோபமாக கேட்டார். மன்னிக்கவும் என் கட்டை விரலில் வெடிப்பு இருக்கிறது. வெதுவெதுப்பான சூட்டில் கட்டைவிரலை வைத்தால் ஆறுதலாக இருக்கிறது என்றாள் அந்த பணிப்பெண். போய் உன் பின்பக்க புட்டத்தில் விரலை விடு .இன்னும் சூடாக இருக்கும். என்று கத்தினார் அந்த வாடிக்கையாளர் சமையலறையில் அப்படித்தான் வைத்திருப்பேன். அப்புறம்தான் உணவை எடுத்து வரும்போது உணவுக்குள் வைத்திருப்பேன் என்றாள் அவள். --------------- இன்னொரு கதை ஒரு கணவரும் மனைவியும் பூங்காவில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த காளை மாடு சீற்றத்துடன் அவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தது. டார்லிங் என்றான் கணவன். "அந்த காளை மாடு முட்டிமோதுவதற்காக நம்மை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்" அய்யோ என்று அலறினாள் மனைவி. என்ன செய்யலாம்....என்றும் கேட்டாள் நான் நான்கு காலில் மண்டியிட்டு புல்லைத் தின்னப் போகிறேன். நீ எப்படியாவது உன்னைக் காப்பாற்றிக் கொள் " என்றான் கணவன். -------------------- ஜென் தேநீர் 34 ஓஷோவும் ஜென்னும் .... செந்தூரம் ஜெகதீஷ் OSHO -THE GOOSE IS OUT ஓஷோ ஜென் பற்றி உரை நிகழ்த்தியவை நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. புதிய வாசகர்களுக்காக முதலில் எளிய புத்தகங்களை வரிசையாய் அறிமுகம் செய்து வருகிறேன். இந்த நூலில் சீசாவுக்குள் அடைபட்ட வாத்தை வெளியேற்றும் வித்தையை ஓஷோ விளக்குவதைக் கண்டோம். இனி இதர பகுதிகளையும் காண்போம். பிரார்த்தனைக்கும் தியானத்துக்கும் என்ன வித்தியாசம் என்று ஓஷோ விளக்குகிறார். பிரார்த்தனை கூட்டாக செய்வது. பல பேர் கூடி பஜனை பாடுவார்கள். ஆனால் தியானம் என்பது தனிமையில் நிகழ்வது. ஓஷோ கூறுவதை கேட்போம்.. " தியானம் எல்லாவற்றையும் விளக்கமற்றதாக்கி விடுகிறது. தியானம் திட்டமிடப்படாத அறியாத ஓரிடத்திற்கு அழைத்துச் செல்கிறது. தியானம் மெல்ல மெல்ல உன்னை கரைத்து காண்பவரையும் காட்சியையும் ஒன்றாக்கி விடுகிறது.இது அறிவியலில் சாத்தியமற்றது.அறிவியலில் பார்வையாளர் பார்வையாளராகவே இருக்க வேண்டும். காட்சி காட்சியாகவே இருக்க வேண்டும். இரண்டுக்கும் இடையில் தெள்ளத் தெளிவான இடைவெளி இருக்க வேண்டும்.ஒரு கணத்துக்கு கூட நீ உன்னை மறந்துவிடக் கூடாது .உனது ஆராய்ச்சியில் உணர்வுபூர்வமாக கலந்து கரைந்துப் போய் விடக்கூடாது.அதன் மீது அன்பு செலுத்தக் கூடாது.அதிலிருந்து நீ விலகியே இருக்க வேண்டும். நீ சுடச்சுட இருக்காமல் உறைந்துப் போனவனாக இருக்க வேண்டும். இதனால் அறிவியல் மாயத்தன்மையைக் கொன்று விடுகிறது. தியானத்திற்கும் மனத்துக்கும் இடையே ஒரு பாலம் உள்ளது. அந்த பாலத்தின் பெயர்தான் இதயம். எனவே தான் கவிஞர்கள் நட்சத்திர உலகத்தில் வாழ்கின்றார்கள்.கவிஞனுக்குள் சில அம்சங்கள் அறிவியலாக இருக்கின்றன. சில அம்சங்கள் மாயத்தன்மையுடன் இருக்கின்றன..இரு வேறு துருவங்களில் வாழ்வதனால் கவிஞனுக்கு அதில் அதிகமான படபடப்பு ஏற்படுவது இயல்புதான். இதனால் கவிஞர்கள் பித்தர்களாகிறார்கள் .( பித்தனாயிருக்க அருள்வாய் -ந.பிச்சமூர்த்தி ) தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். ( ஆத்மா நாம், சில்வியா பிளாத் , சாதனா ) கவிஞர்களை எப்போதுமே பைத்தியக்காரர்கள் என்றே அழைப்பார்கள்.அவர்கள் பித்த நிலையில் இருப்பதற்கு காரணம் அவர்கள் இருவேறு நிலைகளில் இருப்பார்கள். ஆனால் எதிலும் நிலை கொள்ளாமல் இருப்பார்கள். அவர்கள் நிகழ் உலகிலும் வசிக்க மாட்டார்கள். இருத்தலியல் உலகிலும் இருக்க அவர்களால் முடியாது. கவிஞனுக்கு மாயத்தன்மையின் சில ருசிகள் தெரிந்திருக்கும்.அதுவும் மிக மிக அபூர்வமாக வந்து போய் விடும்.ஞானம் அடைந்தவர் அந்த மாயத்தன்மையில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். கவிஞன் அங்கு வந்து போய் விடுபவனாக இருக்கின்றான்.அவன் அதில் குதித்து அதன் ஆனந்தத்தை அடைந்து விடுவான் . எகிறி குதிப்பவன் புவி ஈர்ப்பு சக்தியில் இருந்து விடுபடுகிறான். சில கணங்கள் குதித்தலின் ஆனந்தத்தைப் பெறுகின்றான். மீண்டும் புவி ஈர்ப்பு சக்தியால இழுக்கப்பட்டு தரையில் கால் பதிக்கிறான். கவிதை என்பது ஒரு வகை குதித்தல் . தத்தி தாவி எழுதல் .ஏதோ ஒரு கணத்தில் நீ வானத்தில் இருப்பதைப் போல் உணர்கிறாய். உனக்கு இரண்டு சிறகுகள் முளைத்தது போல் இருக்கும். ஆனால் அது கணப்பொழுதுதான். கவிஞன் மீண்டும் மீண்டும் சிகரங்களைத் தொட்டு கீழே விழுந்துவிடுகின்றான். இதனால் அவன் வேதனை அடைகின்றான். அவன் சிகரத்தின் சில காட்சிகளைக் கண்டவனாகிறான். ஆனால் சில நொடிகளில் சில நிமிடங்களில் அவன் மீண்டும் பூமிக்கு வந்துவிடுகின்றான். ஆனால் ஞானிகள் அந்த சிகரத்தில் வசிக்கிறார்கள். " மாயத்தன்மையால் தான் உலகம் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது என்பார் ஓஷோ. அடுத்த நொடி என்ன நடக்கும் என்று நம்மால் அறிய முடியாது. ரீவைண்ட் செய்து கடந்த காலத்தை பின்னோக்கிப் பார்க்க நம்மால் முடியும். ஆனால் ஒரு போதும் பாஸ்ட் பார்வர்ட் செய்து எதிர்காலத்தைப் பார்க்க இயலாது. ஏன் அடுத்த நொடியைக் கூடப் பார்க்க முடியாது. அதுதான் வாழ்க்கையின் மர்மத்தன்மை. " மனமும் மாயத்தன்மையும் ஒன்றாக இருக்க முடியாது .இயற்கையிலேயே அவை இரண்டும் ஒன்றாக இருக்க முடியாதவை.இருளும் ஒளியும் போல, வெளிச்சம் வந்தால் இருட்டு போய் விடும். விளக்கை அணைத்தால் இருட்டு வந்துவிடும். ஏதாவது ஒன்றைத் தான் பெற முடியும் .இரண்டும் ஒன்றாக இருக்க இயலாது.இருள் என்பது ஒளியின் இன்மை" என்கிறார் ஓஷோ ( இருள் என்பது குறைந்த ஒளி -பாரதி ) --------- போதி தர்மர் ஞானம் அடைந்த போது ஏழு நாட்களுக்கு அவரால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.சிரித்துக் கொண்டே இருந்தார். மீண்டும் மீண்டும் அவர் சிரிப்பதைக் கண்ட சீடர்கள் புரியாமல் திகைத்து நின்றனர். ஏழு நாட்களுக்குப் பிறகே அவர் சிரிப்பு நின்றது. ஏன் இத்தனை சிரிப்பு என்று சீடர்கள் கேட்டனர். போதி தர்மர் சொன்னார் எல்லாவற்றிலும் உள்ள அபத்தத்தைப் பார்த்து சிரித்தேன். " இது ஒரு பெரும் தரிசனம். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் துன்பங்கள் , பிரச்சினைகள் அதனால் நமக்கு மனத்துக்குள் ஏற்படும் துயரங்கள் இவற்றை தூர இருந்து பார்த்து சிரிக்கக் கற்றுக் கொண்டால் அவை அத்தனையும் காணாமல் போய் விடுகின்றன. ஒரு முறை நான் தற்கொலை செய்ய முடிவெடுத்தேன். சென்னையின் புட்லூர் கோவில் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் இறங்கினேன். ஏராளமான ரயில்கள் வந்தும் போய்க் கொண்டும் இருந்தன. கோவிலுக்குப் போய் வந்தேன். சோடா வாங்கி தாகத்தை தணித்தேன். பின்னர் ரயில் நிலையத்தைத் தள்ளி இருந்த மண் பாதையில் நடக்கலானேன். சிறிது தூரம் நடந்தேன் .அக்கம் பக்கம் யாருமில்லை .உச்சி வெய்யில் நேரம். இதுதான் சரியான இடம் என தீர்மானித்துக் கொண்டேன். கையைப் பிடித்து இழுத்து யாரும் காப்பாற்ற வர மாட்டார்கள். நிம்மதியாக சாகலாம் என்று முடிவெடுத்தேன். திடீரென பொங்கிய அழுகை வந்தது. ஆசை தீர அழவேண்டும் போல் இருந்தது. அங்கிருந்த ஒரு கல்லின் மீது அமர்ந்தேன். அழுதுக் கொண்டே இருந்தேன். நீண்ட நேரம் அழுகை நிற்கவில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் நினைத்துக் கொண்டேன். தவிர்க்கமுடியாமல் அதன் இனிய தருணங்களும் அதனுடன் வந்தன. இரண்டும் கலந்து வந்தன. குழப்பம் அடைந்தேன். அழுகை நின்றது. ரயில் தண்டவாளத்தில் தூரத்தில் ரயில வருவதைப் பார்த்து எழுந்து தண்டவாளத்தின் நடுவில் போய் அமர்ந்தேன். வெய்யில் சுட்டது. ரயில் என்னை நெருங்கி வந்துக் கொண்டிருந்தது. இன்னும் ஓரிரு நிமிடங்களில் என் கதை முடியப் போகிறது. ரத்தமும் சதைக் கோளமுமாக சிதறப் போகிறேன். சட்டென யாரோ கையைப் பிடித்து இழுத்தார்கள் .அக்கம் பக்கம் யாரும் இல்லை. ஒருவரும்இல்லை. புட்லூர் அம்மன் வந்து கையைப் பிடித்தாளா தெரியவில்லை .அது ஒரு பெண்ணின் கையைப் போலும் இல்லை. ஏதோ ஒரு அரூபமான கை. காண முடியாத ஒரு கை என்னை இழுத்தது. என் வாழ்வில் துன்பங்களுடன் இருந்த இன்பங்களின் கையாக இருக்கலாம். எதுவோ என்னை இழுத்தது. சட்டென விலக ரயிலின் காற்று என் முகத்தில் பட்டு தடதடவென ரயில் நகர்ந்து விட்டது. அடுத்த நிமிடத்தில் தெளிவு பெற்றுவிட்டேன் ,வாழ வேண்டும் என்ற வைராக்கியத்துடன் ரயில் நிலையம் நோக்கி நடந்து அடுத்த ரயிலில் வீடு திரும்பி விட்டேன். இது ஒரு கணம்நேர முடிவு. கண நேர தியானம் என் உயிரைக் காப்பாற்றியது. கண நேரம் நான் நானாக இல்லாமல் இருந்தது என்னை மீட்டுக் கொடுத்தது. இப்போது நினைத்தால் அது அபத்தமானதாக தெரிகிறது .சிரிப்பு வருகிறது. அப்போது அது துன்பம். ------------- போதி தர்மருக்கும் வாழ்க்கையின் அபத்தங்களைக் கண்டு சிரிப்பு வந்தது. ஏழு நாட்கள் விடாமல் சிரி்த்து முடித்தார். ஓஷோ கூறுகிறார் " யார் ஞானம் அடைந்தவர் யார் ஞானம் அடையாதவர் என்று உங்களைப் பிரி்த்துப் பேசமாட்டேன். நீங்கள் ஞானத்தைப் புரிந்துக் கொள்வதற்கு எளிமையான உங்களுக்கு ஒளியாகக் கூடிய ஒன்றையே தருகிறேன். ஒன்று மட்டும் நிச்சயம் சாடோ மாஸோகிஸ்ட்டுகள் ஒருபோதும் ஞானம் அடைய முடியாது" என்கிறார் ஓஷோ. யார் சாடிஸ்ட் யார் மாசோகிஸ்ட் என்பது தெரியுமா? சாடிஸ்ட் என்பவன் அடுத்தவன் துன்பத்தைக் கண்டு இன்பம் அடைபவன். சாத்தான் குளம் காவல்துறையினர் சமீபத்திய உதாரணம். மாஸோகிஸ்ட் தன்னைத் தானே துன்புறுத்திக் கொண்டு இன்பம் காண்பவன், இருவரும் ஒரு முறை சந்தித்தனர். என்னை அடி என்றான் மாஸோகிஸ்ட் என்னால் முடியாது என்றான் சாடிஸ்ட் --------------------- " ஞானம் என்பது பேரானந்த நிலை . அது சீரியஸானதாக இருக்க முடியாது. அது உண்மையானதாக இருக்கும். ஆனால் சீரியஸானதாக இருக்காது ( SINCERE BUT NOT SERIOUS) ஞானம் என்பது சுத்தமான மகிழ்ச்சி. தூய்மையான ஆனந்தம்." என்கிறார் ஓஷோ. ஒரு குட்டிக் கதை ஒரு கிளி அடிக்கடி ஹிட்லர் வாழ்க என்று கத்திக் கொண்டிருந்தது .இதனால் கோபம் கொண்ட அதன் உரிமையாளர் அதனை சோறு தண்ணீ இல்லாமல் ஒரு கூண்டில் போட்டு அடைத்துவிட்டார். பின்னர் அதனை கொண்டு போய் கோழிப்பண்ணையில் கோழிகளுக்கு நடுவில் விட்டு விட்டார். ஒரு சேவல் வந்து கிளியிடம் பேச்சுக் கொடுத்தது. உன் எஜமான் எதற்காக உனக்கு தண்டனை கொடுத்தார். இங்கே எதற்காக அழைத்து வந்தார் என்று கூறு. சரியான பதிலை சொன்னால் நான் வைப்பாக வைத்திருக்கும் நான்கு கோழிகளை உனக்குப் பரிசாகத் தருகிறேன். " கிளி கோபமாக கத்தியது " என்னைத் தனியாக இருக்கவிடு .நான் ஒரு அரசியல் கைதி " -------------- வாழ்க்கை என்பது சிரித்து ரசிக்கத்தக்கது என்கிறார் ஓஷோ. அதன் அபத்தங்களை எண்ணி எண்ணி சிரிக்கலாம். உன் உடலில் ரஸவாதம் முற்றிலுமாக வற்றி விட்டால் தான் நீ சீரியஸான மனிதனாக இருப்பாய். வாத்து எப்போதும் சீசாவுக்கு வெளியே தான் உள்ளது. அதை ஏன் சீசாவுக்குள் போட்டு அடைத்து பின் அதனை வெளியே எடுக்க வேண்டுமே என்று கவலைப்படுகிறாய் என்று கேட்கிறார் ஓஷோ. செய்யத் தேவையில்லாத ஒரு செயலுக்காக இந்த உலகம் இத்தனை போராடிக் கொண்டிருக்கிறது என்பதை எண்ணியே நான் சிரிக்கிறேன். சிரித்துக் கொண்டே இருக்கிறேன் என்கிறார் ஓஷோ. --------------------- ஜென் தேநீர் 35 ஓஷோவும் ஜென்னும் .... செந்தூரம் ஜெகதீஷ் OSHO -THE GOOSE IS OUT இந்த புத்தகத்தில் புத்தரைப் பற்றி ஓரிடத்தில் ஓஷோ கூறுவதை கவனிப்போம்..." புத்தர் பிறப்பு ஒரு மாயம் என்றார். இளமை ஒரு மாயம் என்றார்.முதுமை ஒரு மாயம் என்றார் .மரணமும் ஒரு மாயை என்றார்.வாழ்க்கையின் அர்த்தம் ஏதுமில்லை. ஆனால் நீண்டதொரு துயரம் அது .நீங்கள் கொள்கைகளுடன் வாழ்க்கையை நடத்தினால் இது முற்றிலும் உண்மை என்பதற்கு நடமாடும் உதாரணமாக இருப்பீர்கள். ஆனால் நான் பிறப்பு மாயமில்லை என்கிறேன், வாழ்க்கை மாயமில்லை என்கிறேன். இதில் நான் புத்தருடன் உடன்படவே மாட்டேன். வாழ்க்கை ஒரு மாயமாக இருப்பதற்கு காரணமே நீதான். இல்லாவிட்டால் அது ஒரு பேரானந்தம். ஆனால் அந்த ஆனந்தத்தை உணர நீ உன் இதயத்தைத் திறந்து வைக்க வேண்டும். உன் கைகளைத் திறந்து வைக்க வேண்டும். கைகளை மூடிக்கொண்டு வாழ்க்கையை அணுகாதீர்கள்.கைகளைத் திறந்துவிடுங்கள். மிகுந்த வெகுளித்தன்மையுடன் வாழ்க்கையை அணுகுங்கள்." மனம் ஒரு ஸ்பாஞ்ச் போல கொள்கைகளை உறிஞ்சி கடைசியில் அது இதற்கு மேல் உறிஞ்சமுடியாமல் சிக்கிக் கொள்கிறது என்றும் ஓஷோ கூறுகிறார். வாழ்க்கையை திறந்த மனத்துடன் திறந்த கைகளுடன் வாழுங்கள். வெகுளியாய் வாழுங்கள் என்று ஓஷோ கூறுகிறார். திறந்த மனம் கொண்ட மனிதன் தன்னை பிறர்க்குத் தருபவன். அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு. கைகளை மூடி மறைப்பவன் கருமி. சுயநலவாதி. தன் கையில் இருப்பதை மறைக்காமல் பகிர்பவனே மனிதாபிமானி. வான்கோ என்ற மாபெரும் ஓவியக் கலைஞர் பற்றிய ஒரு கதை... வான்கோ வின் ஒரு ஓவியம் கூட விற்பனையாகவில்லை. ஆனாலும் அவர் சித்திரம் தீட்டுவதில் அளவிலாத ஈடுபாடும் மகிழ்ச்சியும் கொண்டிருந்தார்.ஆனால் பசி அவரைக் கொன்றுவிடும் போல் இருந்தது. பட்டினிகிடந்தார். அவருடைய சகோதரர் தரும் சொற்பமான காசில் பாதியை ஓவியங்கள் தீட்டுவதற்கான மை ,பிரஷ் ,சார்ட் போன்றவற்றுக்கு செலவிட்டு பாதியில் மூன்று நாட்கள் தான் அவரால் சாப்பிட முடிந்தது. வாரத்தில் நான்கு நாட்களுக்கு உணவில்லாத நிலை. அவர் 33 வயதில் இறந்துவிட்டார்.அவர் தற்கொலை செய்துக் கொண்டார். ஆனால் அவர் தற்கொலை வாழ்க்கையை விடவும் உன்னதமானது. அவர் சாகும் முன்பு எழுதிய கடிதத்தில் நான் என் பணியை முடித்துவிட்டேன். பூரண திருப்தியுடன் இவ்வுலகை விட்டுச் செல்கிறேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். சாகும் முன்பு கடைசியாக அவர் சூரியன் மறையும் காட்சியை வரைந்திருந்தார். அந்த சித்திரத்தை வரைவது தான் அவருடைய நீண்ட நாள் கனவாக இருந்தது. அதை வரைந்து முடித்ததும் அவர் விடைபெற்றுக் கொண்டார். --------------------- ஒரு கேள்வி - பைத்தியக்காரன் புத்தனாக முடியுமா ? ஓஷோ - பைத்தியக்காரன் தான் புத்தனாக முடியும். அறிவுபூர்வமான மனிதர்கள் பௌத்தர்களாக மாறலாம். புத்தனாக முடியாது. அவர்கள் கிறித்துவர்களாக மாறலாம், ஏசு கிறிஸ்துவாக மாற முடியாது .பைத்தியக்காரனால் தான் முடியும். எனது அழைப்பு பைத்தியங்களுக்கானதுதான். பைத்தியக்காரர்கள் ஞானம் அடைவதற்கான வழிகாட்டிதான் நான். ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சில தத்துவவாதிகள் தப்பிச் செல்ல திட்டமிட்டனர். அவர்கள் ஒரு கள்ளச் சாவியைத் தயாரித்தனர். நள்ளிரவில் தப்பிச் செல்ல நேரம் பார்த்து அவர்கள் சாவியைக் கொடுத்து ஒருவரை அனுப்பி கதவைத் திறந்து வை என்றனர் .போனவர் திரும்பி வந்தார். என்ன ஆச்சு என்று மற்றவர்கள் கவலையுடன் கேட்டனர். காவலாளி இன்று வாயிலை பூட்ட மறந்துவிட்டான். எப்படி நான் பூட்டைத் திறப்பது என்று கேட்டார் தத்துவவாதி. உங்கள் தத்துவவாதிகள் இப்படிப்பட்டவர்கள் தாம். அவர்களால் புத்தனாக முடியாது .மறை கழன்றவரால் தான் அது முடியும் என்று ஓஷோ விளக்குகிறார். ஒரு குட்டிக் கதை ஒரு போலீஸ்காரரை நாய் கடித்து விட்டது. முதலில் அலட்சியப்படுத்திய அவர் நாளடைவில் காயம் பெரிதாகி வலிப்பதைக் கண்டு மருத்துவரிடம் சென்றார். மருத்துவர் பரிசோதித்து அந்த நாயை கொண்டு வருமாறு கூறினார். நாய் அதற்குள் செத்து விட்டது. மருத்துவருக்கு கவலை வந்துவிட்டது. மிகவும் தாமதமாக வந்திருக்கிறீர்களே என்று கூறினார். போலீஸ்காரர் உடனடியாக ஒரு பேப்பரை எடுத்து கடகடவென எதையோ எழுதத் தொடங்கினார். டாக்டர் கேட்டார். முயற்சி செய்வோம் .குணமாகவும் வாய்ப்புள்ளது. அதற்குள் ஏன் உயில் எல்லாம் அவசரமாக எழுதணுமா..? போலீஸ்காரர் கூறினார். "நான் உயில் ஏதும் எழுதவில்லை. யாரையெல்லாம் கடித்து குதற வேண்டும் என்று பட்டியல் போட்டுக் கொண்டிருக்கிறேன்" இன்னொரு குட்டிக் கதை ஒரு நடனமங்கைக்கு ஸ்ட்ரிப் டீஸ் நடனமாட வாய்ப்பு கிடைத்தது. இதை நீ சரியாக ஆடினால் உனக்கு நிரந்தரமாக வேலை தருகிறேன் என்றார் விடுதி மேலாளர். டிரம்ஸ் இசை முழங்க ஒவ்வொரு ஆடையாக கழற்றியபடி அவள் ஆடினாள் .தன் உடலை மறைக்க ஒரு ஆப்பிளை மட்டும் அவள் வைத்திருந்தாள். கடைசி துணியையும் கழற்றி வீசிவிட்டு அந்த ஆப்பிளை உடல் முழுவதும் உருட்டி உருட்டி பார்வையாளர்களை உணர்ச்சி வசப்படச் செய்தாள். அரங்கமே ஆர்ப்பரித்தது. ரசிகர்களுக்கு கடைசியாக வணக்கம் சொன்ன போது அவளை மறைத்த அந்த ஆப்பிளையும் அவள் தூக்கியெறிந்துவிட்டாள். அவளுடயை ஆப்பிள் நடனம் செம ஹிட். மேலாளர் மகிழ்ச்சியாக அவளிடத்தில் வந்தார்." நீ நிச்சயம் உலகப் புகழ் பெறப் போகிறாய்.உனக்காக உலகம் முழுவதும் லண்டன் ,டோக்கியோ, பாரீஸ், நியுயார்க் என பல நகரங்களில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறேன் " ஏன்னது நியுயார்க்கா ....வேண்டாம் என்றாள் அவள். ஏன் என்று கேட்டார் மேலாளர் "அங்கே இதே நடனத்தை என் அக்கா ஒரு பூசணிக்காயை வைத்து ஆடிக் கொண்டிருக்கிறாள்" என்றாள் அவள் ----------- சீசாவுக்குள் சிக்கிய வாத்தை வெளியேற்றுவது தொடர்பான இந்த ஜென் கதை விளக்க புத்தகத்தின் இறுதிப் பக்கங்களில் ஓஷோ கூறுகிறார். " வாத்து என்றுமே சீசாவுக்குள் இருந்ததில்லை. பிரச்சினை இல்லாமல் வாழத்தெரியாத மனிதன் தான் வாத்தை சீசாவுக்குள் போட்டு அடைக்கிறான். வாத்தை கட்டாயப்படுத்தி சீசாவுக்குள் திணித்து பின்னர் அதனை கொல்லாமல் எப்படி வெளியில் எடுப்பது என்று கவலைப்படுகிறான். பாட்டிலை உடைக்கக் கூடாது என்றும் சாத்தியமற்ற நிபந்தனைகளை வேறு விதிக்கிறான் .வாத்தையும் கொல்லக்கூடாது. சீசாவையும் உடைக்கக் கூடாது. இப்போது வாத்து பெரிதாக வளர்ந்துவிட்டது. அது பாட்டில் முழுவதையும் நிரப்பிவிட்டிருக்கிறது. நிபந்தனைகளை நிறைவேற்றுவது சாத்தியமே இல்லை. பாட்டிலை உடைத்துதான் ஆக வேண்டும் . அல்லது வாத்து சீசாவுக்குள்ளேயே செத்துப் போக வேண்டும். பிரச்சினையைத் தீர்க்கமுடியாதததால் மனிதன் மகிழ்ச்சியடைகிறேன். தன் பிரச்சினையைக் கூறிக் கொண்டே அந்த பாட்டிலை அவன் சுமந்து திரிகிறான். " பாட்டிலைத் தூக்கிப் போடுங்கள் . வாத்து அதற்குள் இல்லை என்கிறார் ஓஷோ. அது எப்போதோ பறந்துவிட்டது. ----------------

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...