Sunday 14 July 2019

ரசனை -புத்தகம் 1

முகநூல் பகுதியில் senthooram என்ற எனது பக்கத்தில் புத்தகங்கள் பற்றியும் சினிமா பற்றியும் எழுதி வருகிறேன். இதில் புத்தகம் குறித்த கட்டுரைகள்
1-5 
ரசனை -புத்தகம்
செந்தூரம் ஜெகதீஷ் 

1 -ஸ்ரீலெஜா வின் கவிதை நூல்- கமுகம் பூ 
குழித்துறை ஸ்ரீதேவிகுமார் தாவரவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக பணிபுரியும் திருமதி ஸ்ரீலெஜாவின் முதல் கவிதைத் தொகுப்பு இது...அவருடைய இயற்பெயர் தெரியவில்லை. 
முன்னுரை எழுதியுள்ள பொன்னீலன் அய்யா அவர்கள், ஸ்ரீலெஜாவின் கவிதைகளில் காமாட்சிப் பாட்டி நீலியோடு நட்புகொண்டுஉறங்குவதையும் ஆள் உயர கருநாகமும் நியாயத்திற்கு கட்டுப்பட்டுநிற்பதையும் சிலாகிக்கிறார்.
கவிதைகள் தென்தமிழகத்தின் கவிமொழியுடன் கலந்த பெண் மொழியுடன் படிக்க அழகாகஇருக்கின்றன. குமரி மாவட்டத்தின் ஓணம் பண்டிகை, 
அம்மியில் அரைத்த விழுதுடன் 
ஆற்று மீன் குழம்பு
உரலில் இடிக்கப்பட்ட சிகப்பரிசி பொடியுடன் 
தேங்காய் சேர்த்து ஆவியில் வேக வைத்த
குழாய் புட்டு
போலத்தான் இருக்கின்றன இவரது கவிதைகள்..எளிய மனிதர்கள், பால்ய காலம் , இயற்கை மீதான காதல் என்று புறவயம் சார்ந்தே சிந்திக்கிறார். கவிதையின் ஒரு கிளை புறம் நோக்கி வானுயர விரிந்தாலும் இன்னொரு வேர் அகம் நோக்கி ஆழ்மனதுக்குள் பேசப்படாத ரகசியங்களை நோக்கி பாயும் போது இவருடைய கவிதைக் களத்திற்கு ஒரு புதிய எழுச்சி கிடைக்கும் என்று நம்பலாம். வாழ்த்துகள் ஸ்ரீலெஜா.
தொடர்புக்கு - இ மெயில்.. sunjaysree@gmail.com
----------------------------------------------------------------------
2  சுதா உலக ஒளியின் கவிதைகள் -ஓர் அறிமுகம்
எழுது எழுது 
விழியோரம் நீரிருக்கும் வரை
இதழ்க்கடையோரம்
சிரிப்பிருக்கும் வரை
எனக்கென எனக்கென
நெஞ்சில் நினைவிருக்கும்வரை
நினைவில் நான் அகலும் வரை

சுதாவை சந்தித்தது கிட்டதட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்பு. கையில் வைத்திருந்த ஜெயகாந்தனின் இறந்த காலங்கள் சிறுகதைத் தொகுப்பை 28 சி பேருந்தின் படிக்கட்டில் தொற்றிய நிலையில் என்னிடமிருந்து வாங்கிய ஒரு கல்லூரி மாணவி அப்போதுஅவர். தொடர்ந்து புத்தக வாசிப்பு பகிர்தல்கள் நட்பாக மாறியது.வழக்கமாக காதல் கண்றாவி இல்லாத நட்பாக இன்று வரை சுதாவுடனான நட்பு நீடிப்பது வியப்புதான். ஆரோக்கியமான சிந்தனைகளும் கபடமற்ற மனமும் இருந்தால் ஆண் பெண் நட்புக்குத் தடையே இல்லை என்று இன்று வரை உணரச் செய்தவர் சுதா.
சுதா கவிதைகள் எழுதுவார். எங்கள் செந்தூரம் இலக்கிய வட்டம் கவியரங்குகளிலும் இதர கல்லூரி மேடைகளிலும் அவர் கவிதைகள் வாசிப்பதை அறிந்திருக்கிறேன். கவிதைகளைக் குறித்தும் நவீன கவிதையின் இலக்கும் போக்குமம் குறித்தும் அவரிடம் விவாதிக்கக் கூடாது. மனத்தில் பட்டதை அழகான எழுத்தால் வடிக்கத் தெரிந்தவர் . 
பெண்கள் நிறைய பேர் கவிதை எழுதுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பெண் கவிஞர்களின் கவிதைகளே விற்பனையாகின்றன. சிலர் உடலை மையப்படுத்தி பாலியல் உணர்வுகளை வடிப்பதை கவிதையி்ல் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றனர்.அது குறித்த விமர்சனத்திற்கு இடம் இது அல்ல. சுதாவின் கவிதைகள் தொலைநோக்கும் இலக்குகளும் கொள்கைகளும் கொண்டவை. கருத்தியல் உலகின் சுதந்திரமான ராணி அவர்.
சுதாவை கவிதைகள் எழுதி புத்தகமாக வடிக்கக் கூறிய போது உடனே ஆர்வத்துடன் அதற்கான காரியத்தில் இறங்கிவிட்டார். அதற்கு காரணம் இத்தனை நாளாக எழுதி வைத்ததெல்லாம் யாராவது வாசிக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வுதான். மற்றபடி பணம் புகழ் போன்றவற்றுக்கு அவர் மயங்க மாட்டார்.
எழுத்தின் மீதான விமர்சனமும் படைப்பின் மீதான தராதரமும் சற்று ஒதுக்கி வைத்துப் பார்த்தால் சுதாவின் உள்ளுணர்வு புரியும். உண்மையே விட உயர்ந்த தரம் வேறில்லை.
சுதாவின் வாழ்க்கையில் சில எதிர்பாராத திருப்பங்கள், துன்பங்கள் நேர்ந்துள்ளன. அதைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்துடன் தன் மகனின் நினைவாக வசந்தன் நூலகம் நடத்தி வருகிறார். ஏராளமான மாணவ மாணவிகளுக்கு கல்வியுடன் ஒழுக்கத்தையும் அறிவையும் போதிக்கும் தூய்மையான பணியை மேற்கொண்டு வருகிறார்.
அவருக்குத் துணையாக நிற்கும் உலக ஒளி பாராட்டுக்குரியவர். 
இந்த தொகுப்பின் மூலம் சுதா உலக ஒளியின் உலகம் தனது வாசலை திறக்கிறது. நண்பர்களுக்கு இங்கு இடம் உண்டு. படைப்புகள் குறித்து நீங்கள்  அவரிடம் விவாதிக்கலாம். இதன் மூலம் அவர் படைப்புகள் மேலும் சிறக்கலாம்.
அன்புடன்
நீரும் பாறையும் -கவிதைகள் 
சுதா உலக ஒளி
முதல் பதிப்பு - மார்ச் 2019
வெளியீடு 
செந்தூரம் பதிப்பகம்
சிருஷ்டி 
6 புரசை நெடுஞ்சாலை
சென்னை-600007 
----------------------------------------------------------------------
3. வாணி கபிலனின் 2 கவிதை நூல்கள்
கடலோடும் காதல் 
வாழ்க்கை
போதிக்கிறார்கள் யானைக்கு 
பறப்பது சுகமென்று
காலில் சங்கிலி போட்டு விட்டு
என்று எழுதத் தெரிந்தவர்தான் வாணி கபிலன். வங்கி ஒன்றில் பணியாற்றி வரும் சென்னை கவிஞர். ஆனால் கவிதை என்பது இரண்டு மூன்று வரிகளில் முடிந்து விட வேண்டும் என்று இவரும் மற்றவர்களைப் போல் தப்பாக நினைக்கிறார். நகுலனின் இரு நீண்ட கவிதைகளையும் பாரதியின் பாஞ்சாலி சபதத்தையும் படித்திருக்கலாம். 
பெண்கள் நிறைய பேர் கவிதை எழுதுகிறார்கள்.ஆர்வத்துடன் புத்தகமும் போட்டு விடுகிறார்கள், சில நூறுபிரதிகள் எப்படியோ போய்விடுகின்றன. கவிதை குறித்த விமர்சனங்களோ கவனமோ அவை பெறுவதில்லை. முக்கியப் படைப்பாளிகள் பலருக்கு அது ஒரு பொருட்டேயில்லை. யாரோ எதையோ அசட்டுத்தனமாக எழுதிக் குவிக்கிறார்கள் என்பதே பொதுபுத்தி. எனக்கும் அப்படித்தான் ஒருகாலத்தில் தோன்றியது.எனது எண்ணத்தை மாற்றியவர் கோவை ஞானி அவர்கள். பெண்களிடம் உங்கள் இலக்கிய படிப்பு, படைப்பாற்றல் போன்றவற்றை எதிர்பார்க்காதீர்கள். அவர்கள் குடும்பம், வீடு, குழந்தைகள் என்ற வட்டத்தில் இருந்து எழுத வருவதே பெரிது. எழுதட்டும். எழுத விடுங்கள். தீவிரமான ஈடுபாடு இருந்தால் அவர்களாகவே தங்கள் படைப்பின் பலவீனத்தை அறிந்து பலப்படுத்திக் கொள்வார்கள் என்றெல்லாம் ஞானி அய்யா பேசியது மனதுக்கு பிடித்திருந்தது. 
ஆனால் இத்தகைய தொகுப்புகளை யாரேனும் கவனப்படுத்த வேண்டும் என்று தோன்றியது. அதற்கு ரசனை ஒரு வாய்ப்பாக இருக்கிறது. 
வாணி கபிலனின் கடலோடும் காதல் தொகுப்பு இயற்கை கடற்கரை சார்ந்த காட்சிகளைப் பதிவு செய்கிறது. 
கடற்கரை மணலில் 
கையளவு குழியில்
தேங்கிய மழை நீர்
தீர்த்தது தாகத்தை
காக்கைக்கும் நாய்க்கும் என்று எழுதுகிறார் வாணி கபிலன். இதே போல் தனது முதல் தொகுப்பான வாழ்க்கையிலும் சில அழகான தெறிப்புகள் தென்படுகின்றன.
மௌனம் சம்மதம் என
மகிழ்ந்து கொள்கிறாய்
மறுப்பைக் கூறவும் 
மறுப்பது புரியாமலே என்றொரு கவிதை ஒரு நற்சான்று.
விவாணி பதிப்பகம்
vivanipbs@gmail.com
-------------------------------------------------------------
செந்தில் வஸந்த் கவிதைகள்
வஸந்த் செந்தில் என்ற பெயரில் எழுதுபவரும் இவரும் ஒருவர்தான் என்று நினைக்கிறேன், மருத்துவப் பணியாற்றி வருகிறார். இ்த்தொகுப்பு 2014ம் ஆண்டில் பரிதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு டிஸ்கவரி புக் பேலசில் நோ ஸ்டாக் என்று காட்டுகிறது. வாசகர்களே தேடிக் கொள்ளட்டும் என விட்டு விடுகிறேன்
இக்கவிதைகளுக்கு மா.அரங்கநாதன் முன்னுரையும் கந்தர்வன் பின்னுரையும் எழுதியுள்ளனர். மலை பற்றிய கவிதையை மிகச்சிறந்த கவிதை என்கிறார் மா.அரங்கநாதன்.
ரிஷிகளைப் போல
பிரம்மாண்ட மௌனம் 
என்று மலையை வர்ணிக்கிற போதே கவிதை நமது மனதுக்குள் அமரத் தொடங்கி விடுகிறது அதே மௌனத்துடன்.....
எங்கிருந்தும் மலை பார்க்கலாம்
மலையிலிருந்து எங்கும் பார்க்கலாம் என்ற வரிகளும் சிறப்பு. 
பூவை செங்குட்டவன் எம்ஜிஆருக்கு புதிய பூமி படத்தில் ஒரு பாடல் எழுதினார். நான் உங்கள் வீட்டுப் பிள்ளை என்ற அந்தப் பாடலில் உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும் எண்ணம் வேண்டும் இங்கே என்று குறிப்பிட்டு எழுதினார். மலை என்றாலும் கோபுரம் என்றாலும் உயர்வுதான் அதன் சிறப்பு. உள்ளத்தையும் மலைபோல் உறுதியாகவும் உயர்வாகவும் வைத்திருக்கலாம்.
கந்தர்வனுக்குப் பிடித்த கவிதை ஆம்புலன்ஸ் பயணம் ...ஒரு மரணத்தை எதிர்நோக்கிய புதுமாப்பிள்ளை விழித்தால் கால்களை இழந்து புது மனைவியின் தோளில் சாய்ந்து நடக்க நேரிடக்கூடிய சோகத்தை இக்கவிதை விவரிக்கிறது. நீ கண் திறந்தால் என்ற கடைசி வரி பதற வைக்கிறது.
"படித்தபின் வெகுநேரம் அவதிக்குள்ளாக்கும் கவிதை " என்று கந்தர்வன் கூறுவது உண்மைதான்.
அது தவிர  அப்பாவின் அஸ்தி என்ற கவிதையும் எனக்குப் பிடித்திருக்கிறது. அப்பாவின் மார்பு எலும்பைப் பார்த்து கதறி அழும் மகனாக நான் உணர்ந்த துக்கத்தை மீண்டும் ஏற்படுத்தியது இக்கவிதை. நான் எட்டி உதைத்த மார்பு என கவிஞர் கூறுகிறார். 
மேலும் பல நல்ல வரிகளை ஆங்காங்கே கோடிட்டு வைக்க முடிகிறது. ஒரு நல்ல தொகுப்புதான். ஆனால் விலையும் பக்கங்களும் அதிகம்.அப்போதை 200 ரூபாய் போட்டிருக்கிறார்கள். இப்போது கிடைக்கிறதா எனத் தெரியவில்லை.
-------------------------------------------------------------------------------------------------------




No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...