Tuesday 25 October 2016

கேள்வி-பதில் 1

பல விஷயங்களை பேச விரும்பினாலும் வாய்ப்பு அருகி விடுகிறது. எனவே வாரம் ஒருமுறையாவது கேள்வி பதில் மூலம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நண்பர்களும் கேள்விகளை அனுப்பி வைக்கலாம்
செந்தூரம் ஜெகதீஷ்

--------------------------------------------------------------------

கே. முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த வதந்திகள் பரப்புவதால் கைது செய்வது சரிதானா...

பதில்- ஒருவரின் உடல்நிலை மோசமாகிவிடும்போது அவர் விரைவில் குணம் பெற வேண்டும் என வேண்டுவதே மனித பண்பு. வதந்திகள் பரப்புவோர் சாடிஸ்ட்டுகள்தாம்.

கே. மேன் புக்கர் விருது கருப்பின எழுத்தாளர் பால் பீட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது குறித்து....

பதில் -  பால் பீட்டி கருப்பின எழுத்தாளர். அமெரிக்கர் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறை. தி செல் அவுட் நாவலுக்காக சுமார் 70 ஆயிரம் டாலர் பரிசு பெறுகிறார். நாவலின் தொடக்கமே நான் கருப்பின மனிதன் ,ஆனால் எதையும் திருடவில்லை என்பது நம்ப முடியாமல் இருக்கும் உங்களுக்கு என்று ஆரம்பிக்கிறார். நகைச்சுவையான சாடல்களுக்காக இந்த நாவலுக்கு பரிசு கிடைத்திருக்கிறது

கே. சென்னையில் இலக்கியக் கூட்டங்கள் எப்படி நடக்கின்றன....
பதில்-  நானும் செந்தூரம் இலக்கிய வட்டம் சார்பில்  நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன். அவை தினமணி, செந்தூரம் ஆகிய இதழ்களில் பதிவு செய்யப்பட்டதுடன் சரி. வெளியே யாருக்கும் தெரியாமல் காற்றோடு போய் விட்டது. நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் என்ற வாலியின் வரிகள்தான் மிச்சம். கூட்டம் நடத்திய செலவில் பத்து புத்தகம் போட்டிருந்தால் புத்தகக் கடைகளின் அலமாரிகளில் எனது நூல்களும் கிடைத்திருக்கும். இப்போது நான் புத்தகமே எழுதாத வெளியிடாத எழுத்தாளனைப் போல் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறேன். தற்போது நிறைய செலவுகளை செய்து சிற்றுண்டி காபியுடன் இலக்கியக்கூட்டம் நடத்துகிறார்கள். அதற்கு ஏராளமான புரவலர்களும் அள்ளி தருகிறார்கள். சில பேருக்கு மட்டும்தான் கூட்டம் கூடுகிறது.

கே. சமீபத்தில் படித்த புத்தகம்

கே.வி. ஜெயஸ்ரீ மொழிபெயர்த்த ஹிமாலயம் என்ற பயண நூல். குருநித்ய சைதன்ய யதியின் சீடரான ஷௌகத் என்பவர் கீதா என்ற தோழியுடன் இமய மலைப் பயணம் பற்றி எழுதியது. மிகவும் சுவையான அற்புதமான அனுபவங்களின் தொகுப்பு. ஆன்மாவையும் இயற்கையையும் இணைக்கும் மையப்புள்ளியை நோக்கி பயணித்துக் கொண்டே இருப்பதால் இதர பயண நூல்களை விடவும் சிறப்பாகவே உள்ளது. அற்புதமான தமிழ் மொழிபெயர்ப்பு. அவசியம் படிக்க வேண்டிய நூல் .இந்நேரத்தில் குரு நித்ய சைதன்ய யதியை நேரில் அறிமுகம் செய்து அவருடன் சில நாட்களை கழிக்கச் செய்த நண்பர் ஜெயமோகனை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.

கே. குரு நம்பிக்கை உண்டா உங்களுக்கு

குரு என எனது மதம் எனக்கு போதித்தது குருநானக்கை. நான் பிறப்பால் சீக்கியன்தான். ஆனால் இந்துக்களின் வழி நடப்பவன். குருநானக்கிற்குப் பிறகு நான் இலக்கிய ஆசானாக வரித்துக் கொண்டது பாரதியை. அதன் பிறகு ஓஷோ. என் மானசீக குரு அவர்தான். அடுத்து நித்ய சைதன்ய யதியையும், சென்னை சூஃபி தர் ஆலய தாதா ரத்தன்சந்த் ஆகியோரையும் நிஜ வாழ்வில் குருவாக மதித்து கால்பணிந்திருக்கிறேன். குரு ஒரு வழிகாட்டி பல நேரங்களில் மனசாட்சியும் அற உணர்வும்தான் குருவாக வழிகாட்டி ஆசிகளைப் பொழிகிறது.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...