Monday 3 October 2016

கவிதை-எனது மரணம்

எனது மரணம் -செந்தூரம் ஜெகதீஷ்


எப்படி நிகழும் எனது மரணம்?
மாரடைப்பா
தற்கொலையா
கொலை செய்யப்படுவேனா
சாலை, ரயில் விபத்தில் பலியாவேனா
நிலநடுக்கம், மழை,புயலில் வீழ்வேனா
அல்லது
வன்முறை, தீவிரவாதத்தால் சாய்க்கப்படுவேனா?
தெரியவில்லை.
எப்படியும் ஒருநாள் இறக்கத்தான் போகிறேன்.
எப்படி இறப்பேன் என்பதை அறிவதில் என்னவோ ஆர்வம்
இறப்பதற்கு முன் செய்யவேண்டிய காரியங்கள் ஏராளம்.
சோம்பலாக கழிக்கும் நேரங்களை சுறுசுறுப்பாக்க வேண்டும்.
சோகங்களை சுகங்களுக்காக தேடிப் பெற்றேன்,
அவற்றை சுமக்கப் பழக வேண்டும்
சும்மா இருந்தாலும் சும்மா இல்லாமல்
ஓராயிரம் விடயங்களுக்காக அல்லாடுகிறேன்
அதில் அமைதியை காண வேண்டும்.
செல்போன், நட்புவட்டங்களை தாண்டி
தனிமையில் என்னை இருத்திக் கொள்ள வேண்டும்.
யாரும் யாருடனும் இல்லை என்ற வாழ்வின் தரிசனத்தை
ஒவ்வொரு கணந்தோறும் கற்றுணர வேண்டும்.
எப்படி நிகழும் எனது மரணம்
எப்போது நிகழும் எனது மரணம்.
எந்த நாள், எந்த தேதி, எந்த ஆண்டு எந்த கணம்  என்பது
எனக்குத் தெரியாது.
தெரிய வேண்டும் என்று எண்ணுவதில் அர்த்தமில்லை.
ஏதேனும் ஒருநாளில் அது நிகழ்ந்துவிடும்.
நான் இல்லாமல் போனாலும் எழுதிய இந்தக் கவிதை இருக்கும்.
இக் கணத்தில் பதிவாகி.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...