Saturday 17 September 2016

உலக சினிமா - தி பர்ம் ( THE FIRM)

குமுதம் தீராநதி செப்டம்பர் இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை இது..

உலக சினிமா
சட்டத்தின் இருட்டறையில் ஒளிவிளக்கு
THE FIRM based on a novel by john grishm
செந்தூரம் ஜெகதீஷ்
உலகில் அதிகம் விற்பனையாகும் நாவல்களில் ஜான் கிரிஷமின் நாவல்களுக்கும் சிறப்பிடம் உண்டு. தமிழில் ஆயிரம் பிரதிகள் புத்தகங்கள் அச்சிட்டு அவற்றை 5 ஆண்டுகளுக்கு விற்கக் கூடிய சூழ்நிலையில் பெரிய மாற்றம் ஏதுமி்ல்லை. சில துறை சார்ந்த நூல்களும் பிரபல எழுத்தாளர்களின் நூல்களும் மட்டும் சில ஆயிரம் பிரதிகள் விற்கின்றன. ஆனால் ஜான் கிரிஷம் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களின் புத்தகங்கள் உலகின் மூலை முடுக்கெல்லாம் மொழிபெயர்க்கப்படுகின்றன. பல லட்சம் பிரதிகள் விற்கப்படுகின்றன. எந்த ஊரிலும் எந்தப் புத்தகக் கடையிலும் எந்த பிளாட்பாரத்தின் பழைய புத்தக அடுக்குகளிலும் ஜான் கிரிஷமின் நூல்களை கண்டெடுப்பது எளிதானது. இணைய வழி விற்பனையும் இப்போது கிடைக்கிறது.ஆனால் மலிவாக கிடைப்பதால் இந்த நூல்கள் மலிவானவை அல்ல. இன்னும் சொல்லப்போனால் தமிழில் நாம் ஆயிரமாயிரம் பக்கம் எழுதிக் குவிக்கப்படும் நவீன இலக்கிய, காப்பிய குப்பைகளை புத்தகக் கண்காட்சிகளில் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து வாங்குவதை விட இந்த புத்தகங்களை வாங்குவது புத்திசாலித்தனமானது.
ஜான் கிரிஷமின் நாவல்கள் சட்டத்தை பின்புலமாக கொண்டவை. சட்டம் அதன் ஓட்டைகள், அதனை வளைப்பதறகான நுட்பமான வாதங்கள், ஆதாரங்கள். சூழல்கள், அசாதாராணமான கதாபாத்திரங்கள் யாவும் நம்மை கட்டிப் போட்டு விடுகின்றன. ஆங்கில அறிவு சுமாராக இருப்பவரும் படித்து புரிந்துக் கொள்ளத்தக்க உயிர்ப்பான மொழிநடையில் பக்கத்துக்குப் பக்கம் விறுவிறுப்பையும் ஆர்வத்தையும் தூண்டும் புத்தகங்கள் இவை.கூடவே ஏராளமான புதிய தகவல்கள் சட்டத்துறை அறிந்தவர்களுக்கு மட்டுமின்றி அறியாதவர்களுக்கும் அதன் சாதகங்களையும் பாதகங்களையும் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன இந்த நாவல்கள்.
வணிக ரீதியான எழுத்து என்று நிராகரிப்பது சுலபம். ஆனால் ஒன்று வணிக ரீதியாக வெற்றி பெறுவதில் ஏகோபித்த மக்களின் ஆதரவு இருப்பதே காரணமாக இருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மக்களால் தேர்வு செய்யப்படும் அரசு , மக்களால் நடத்தப்படும் தேர்தல்கள், மக்களால் செல்வாக்குப்பெறும் திரைப்பட நட்சத்திரங்கள், மக்களால் செல்வாக்குப் பெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மக்கள் விரும்பி படிக்கும் பத்திரிகைககள், மக்கள் பெருவாரியாக வாசிக்கக் கூடிய எழுத்தாளர்கள் இவை யாவும் தீண்டத்தகாதவையல்ல. அப்படி கலையின் பெயரால் இவற்றை ஒதுக்குபவர்கள் ஒன்று கலை அறியாதவர்கள். அல்லது வணிக ரீதியாக தோல்வியடைந்தவர்கள்.
எழுத்து ஒரு மகத்தான கலை. தன் எழுத்தை லட்சக்கணக்கான வாசகர்கள் படிக்க வேண்டும் அது திரைப்படமாக வேண்டும் என்று நினைக்காத எழுத்தாளன் யாராவது இருப்பானா....புதுமைப்பித்தனுக்கே அந்த கனவு இருந்ததே.
ஜான் கிரிஷமின் நாவல்களும் திரைப்படங்களாகியுள்ளன. இதில் தி ஃபர்ம் என்ற இந்த நாவலும் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரமான டாம் க்ரூஸ் இதன் நாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தின் கதையை பார்க்கலாம். மிட்ச் மிக்தீரே ஒரு இளம் சட்டக் கல்லூரி மாணவன். மிகவும் ஏழ்மையான நிலையில் சிரமப்பட்டு ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி பயின்று மிகச்சிறந்த மாணவனாக புகழ் பெற்றுள்ளான். அவன் படிப்பை முடிக்கும்போதே கேம்பஸ் இன்டர்வியூ முறையில் ஏராளமான சட்ட ஆலோசனை நிறுவனங்கள் அவனுக்கு வேலை வாய்ப்பை அளிக்க முன்வருகின்றன. அப்போது பென்டினி லாம்பர்ட் &லோக்கே என்ற நிறுவனம் அவனுக்கு ஒரு அரிய வேலை வாய்ப்பை வழங்குகிறது. மெம்பிஸ் நகரில் உள்ள அதன் அலுவலகத்தில் பணியாற்ற அழைக்கப்படுகிறான் மிட்ச். பெரும் செல்வந்தர்களின் வருமான கணக்கு, வரி, தொடர்பான சட்டச்சிக்கல்களை தீர்ப்பதே இந்நிறுவனத்தின் பணி. இதையடுத்து தன் கணவனுடன் திருப்தியடையாத அபியை அழைத்துக் கொண்டு அவன் மெம்பிஸ் நகரில்  கம்பெனியால் தரப்பட்ட புதிய காரில் தன் புதிய வீட்டிற்கு குடிபெயர்கிறான்.தன் மனைவி என்றே அபியை அறிமுகம் செய்கிறான். அபியாக நடித்தவர் ஜீனி டிரிப்பிள் ஹார்ன் என்ற மிக அழகான நடிகை. இவர் பேசிக் இன்ஸ்டிங்ட் படத்தில் ஒரு படுக்கையறைக் காட்சியில் சூட்டை கிளப்பியவர்.









இந்தப் படத்தில் ஓரிரு முத்தக்காட்சிகளுடன் சரி. ஒரு படுக்கையறை காட்சி இருப்பினும் அதிக நிர்வாணத்தை காணமுடியவில்லை. படத்தின் மையக்கருவிலிருந்து திசைதிருப்ப இயக்குனர் விரும்பவில்லை போலும். ஆனால் மிட்ச்சுக்கு இன்னொரு பெண்ணுடன் தற்செயலாக ஒரு நட்பும் அதைத் தொடர்ந்து உடல் உறவும் ஏற்படுகிறது. கடற்கரையில் சில குடிகாரர்களால் தாக்கப்பட்டு காயம் அடைந்த அந்தப் பெண்ணை அவன் காப்பாற்றுகிறான். அப்போது அவள் அவன் கைககளை தன் மார்பில் வைக்கிறாள். அழகான பெண்ணைப் பார்த்து தடுமாறும் அவனும் அந்தக் கையை அவள் சட்டைக்குள் செலுத்துகிறான். இநத காட்சியும் வழக்கமான ஆங்கிலப் படங்களின் உடலுறவுக் காட்சிகளில் பத்து சதவீதம் கூட படமாக்கப்படவில்லை. இந்த இரண்டாவது அழகியாக நடித்தவர் கரீனா லோம்பார்ட்.. இவர் இந்தக் காட்சிக்குப் பிறகு படத்தில் காணாமல் போய்விடுவார். அவர் யார் என்று பின்னால் தெரிய வரும்.
தான் பணியாற்றும் நிறுவனம் பற்றி மிட்ச் அறிகிறான்.மிகப்பெரிய பணக்காரர்களே இதன் குறி. இவர்களிடமிருந்து பெரும் தொகையை கறப்பதே இந்த நிறுவனத்தின் உத்தி. இதற்காக இந்த நிறுவனம் பல்வேறு சட்ட மீறல்களிலும் குற்றச்செயல்களிலும் மறைமுகமாக ஈடுபடுவதை அவன் கண்டுபிடிக்கிறான். ஒவ்வொரு ஊழியரும் கேமரா, மைக் மூலம் கண்காணிக்கப்படுவதையும் பின்தொடரப்படுவதையும் அவன் அறிகிறான். கடற்கரையில் அவன் பெண்ணுடன் உறவு கொண்டதும் படமாக்கப்பட்டு விட்டது. இந்தப் படங்களை வைத்து அபியிடமிருந்து மறைத்த ரகசியத்தை அம்பலப்படுத்தாமல் இருக்க சில காரியங்களை செய்யும் படி அவனுடைய நிறுவனம் அவனை பிளாக் மெயில் செய்கிறது.
தான் மிகப்பெரிய சிலந்தி வலையில் சிக்கியிருப்பதை மிட்ச் அறிகிறான். இந்த நிறுவனத்தை விட்டு விலக நினைத்த இரண்டு பேர் படகில் செல்லும் போது குண்டு வெடித்து இறந்ததையும் அவன் அறிகிறான். நிறுவனத்தின் ரகசியங்களை அறிந்த யாரும் அதை விட்டு விலகிப்போய் விடமுடியாது. போக நினைத்தால் மரணம்தான் அதன் ஒரே வழி.
அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களும் அதன் உயர் அதிகாரிகளும் மிகப்பெரிய வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்டிருப்பதை அவன் கண்டுபிடிக்கிறான். குற்றச் செயல்களுக்காக பெரும் தொகையை கைமாற்றுவதிலும் இந்த நிறுவனம் சில போலியான நபர்களின் பெயர்களில் நிழல்மறைவு காரியங்களை செய்து வருகிறது. இந்த ரகசியத்தை அறிந்ததால்தான் அந்த இரு அதிகாரிகளும் உயிரிழந்தனர்.
இத்தகைய சூழலில் அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான FBI அதிகாரிகள் சிலர் மிட்ச்சை நெருங்குகின்றனர். தனி இடத்தில் வைத்து அவனிடம் பேரம் பேசுகின்றனர். நிறுவனத்தின்  மிகப் பெரிய பணக்கார வாடிக்கையாளரான மொரால்டோ  தொடர்பான வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத காரியங்கள் குறித்த ஆதாரங்களை அளித்தால் மிட்ச்சுக்கு சட்டத்தால் எந் த தொந்தரவும் ஏற்படாது என்று உறுதியளிக்கின்றனர். இப்போது மிட்சுக்கு இரண்டு பக்கமும் பிளாக் மெயில். நெருக்குதல் மொரால்டோவை கைது செய்ய புலனாய்வு அதிகாரிகளுக்கு உதவினால் நிறுவனத்திற்கு துரோகம் செய்ய வேண்டியிருக்கும். தான் படித்த சட்டத்துறையில் தனது கிளையன்ட்டின் ரகசியங்களை காப்பேன் என்று அளித்த உறுதிமொழியை மீற வேண்டும். புலனாய்வு அதிகாரிகளின் உதவியை நிராகரித்தால் என்றைக்காவது தனது நிறுவனத்தின் சட்டவிரோத செயல்களில் படகில் குண்டுவெடித்து இறந்தவர்களைப் போல் தானும் கொல்லப்பட்டு விடுவோம் என்பதை அவன் உணர்கிறான். தன் வாழ்க்கை ஒரு முட்டுச்சந்தில் முட்டிக் கொண்டு இருப்பதை அவன் உணர்கிறான். இப்படியும் நகரமுடியாமல் அப்படியும் போக முடியாமல் இக்கட்டான நிலையில் அவன் தன் உயிரையும் தன் மனைவியையும் காப்பாற்றிக் கொள்ளப் போராடுகிறான். பல லட்சம் டாலர் ஊதியம் என்று ஆசை காட்டிய எதிர்காலமும் பொய்த்துப் போன வேதனையையும் அவன் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்.
அப்போது தற்செயலாக ஒரு வாடிக்கையாளர் அவன் பணியாற்றும் நிறுவனம் தன்னிடம்  5 மணி நேரத்திற்குரிய கூடுதலான தொகையை வசூலித்துள்ளதாக புகார் அளிக்கிறார். தனது நிறுவனம் வாடிக்கையாளர்களை ஏமாற்றி பில் தொகையை கூட்டி வசூலி்ப்பதையும் அவன் கண்டுபிடிக்கிறான் .ரகசியமாக அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு இமெயிலில் அனுப்பிய பில்களை காப்பியடித்து ஒவ்வொரு வாடிக்கையாளரும் எவ்வளவு தொகை அதிகமாக வசூலிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற ஆவணத்தை சேகரிக்கிறான்.
இத்தகைய சூழலில் வேறு வழியில்லாமல் ஒரு நிபந்தனையுடன் புலனாய்வு அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க முடிவு செய்கிறான் . பதினைந்து லட்சம் டாலர் பணம் தரவேண்டும் மற்றும்  பாலியல் பலாத்காரத்திற்காக தண்டனை பெற்று சிறையில் உள்ள தனது அண்ணனை விடுதலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை புலனாய்வு அதிகாரிகளுக்கு விதிக்கிறான். அதே நேரத்தில் தன்னை எப் பி ஐ அதிகாரிகள் பின்தொடர்வதாகவும் தனது நிறுவனத்தின் கூடுதல் பில்லிங் குறித்த தகவல்களை கேட்பதாகவும் கூறி நிறுவனத்திடமும் அந் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளரான மொரால்டோவிடமும் நன்மதி்ப்பை பெறுகிறான். எப்பிஐ கேட்கும் ஆவணங்களைக் கொடுத்தால் மொரால்டோவின் இதர சட்ட விரோத செயல்களை மறைத்துவிடலாம் என்று அழகாகப் பேசி அவர்களை நம்ப வைத்து அவர்களின் பில்லிங் பைல்களை நகல் எடுக்கும் அனுமதியைப் பெறுகிறான். தம்மை ஏமாற்றி கூடுதலாக பில்லை வசூலித்த நிறுவனத்தை அழித்து அதிலிருந்து மிட்ச்சை காப்பாற்றுவதற்கு உறுதியளிக்கிறது மொரோல்டோ சகோதரர்களின் நிறுவனம்.
எப்.பி.ஐ தந்த பணத்தை விடுதலையான தனது சகோதரனுக்குக் கொடுத்துவிட்ட மிட்ச் சட்டத்துறையில் கிளையண்டின் ரகசியத்தையும் காப்பாற்றி எப்பிஐ யையும் ஏமாற்றி தனது சட்டவல்லுனர் பதவியையும் காப்பாற்றிக் கொண்டு தனது மனைவியுடன் அதே புதிய காரில் பாஸ்டனுக்கு திரும்புவதாக கதை முடிகிறது.
ஒரு மர்மக் கதையின் திரில்லுடன் அடுத்தடுத்து தொடரும் சம்பவங்களுடன் இந்தப்படம் நம்மை அசர வைக்கிறது. கடற்கரையில் தன் உயிருக்குயிரான மனைவிக்கு துரோகம் செய்து இன்னொரு பெண்ணுடன் உறவு கொண்டதை அவளிடம் விளக்கும் காட்சியும் அழகானது. ஆவேசம் கொண்டு அவள் அவனை விட்டுச் செல்வதும், பின்னர் அவன் ஒரு பொறியில் சிக்க வைக்க அந்தப் பெண் பயன்படுத்தப்பட்டதையும் புரிந்துக் கொண்டு அவனுக்கு உதவுவதற்காக அவளிடம் வழியும் அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவரின் படுக்கையறை வரை சென்று ஒரு முத்தத்துடன் அவனை தூக்க மாத்திரையால் உறங்க வைத்து தப்பி விடுவதும் படத்தின் விறுவிறுப்பை கூட்டியுள்ளது. ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத வலையில் சிக்கிய தனது காதல் கணவனை காப்பாற்ற அபி இன்னொரு கிழவனின் இச்சைக்கு பலியாகி விடுவாளோ என்று நாம் பதற வைக்கிறது அந்தக் காட்சி. அநத் கிழவன் அவளை படுக்கையறைக்கு அழைத்துச் சென்று அவள் கவுனை கழற்றுகிறான். பிராவுடன் நிற்கும் அபி அவனை நெருங்கி அவன் உதட்டை பிடித்து அழுத்தமாக முத்தமிடுகிறாள். அய்யோ என நமக்கு பதற்றம் அதிகரிக்கிறது. ஆனால் அடுத்த கணம் பட்டென அந்தக் கிழவன் விழுந்துவிடுகிறான். முந்தைய காட்சியில் மதுவில் ஏதோ ஒரு மாத்திரையை அபி கலந்தது நமக்குநினைவுக்கு வருகிறது. பெருமூச்சு விடுகிறோம்.
எந்த ஒரு நல்ல திரைப்படமும் நுட்பமான மனித உணர்வுகளை நிராகரிப்பதில்லை. கணவன் தனக்கு துரோகம் இழைத்தவன் என்ற கோபத்தால் பிரிந்துப் போன மனைவி கூட கணவனுக்கு துரோகம் இழைக்கவில்லை. அந்த காதலின் தூய்மையை இக்காட்சி விளக்கிவிடுகிறது.
இப்படத்தின் இயக்குனர் சிட்னி போலாக் .இப்படம் மிகப்பெரிய வசூலை வாரி்க்குவித்த படங்களில் ஒன்றாகும். அதே நேரத்தில் விமர்சகர்களிடமிருந்தும் அமோகமான வரவேற்பை பெற்றது. நாவல்களைப் படமாக்கும் போது அதிலிருப்பதை மொத்தமும் எடுத்துக் கொள்ளாமல் சினிமாவுக்குத் தேவையான அளவுக்கே எடுத்துக் கொண்டு அதனை வெற்றிகரமான படமாக்க முடியும் என்பதை இந்தப் படம் நிரூபணம் செய்தது.
நல்ல சினிமா அனுபவத்தையும் இது அளிக்க தவறவில்லை.
--------------------------------------------------------------------

K Jagadish

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...