Sunday 15 March 2015

இளையராஜாவும் இசைத்திருட்டும்

இசைஞானி இளையராஜா தமது பாடல்கள் உரிமம் பற்றி கிட்டதட்ட ஓய்வு பெறும் வயதில் ஞானோதயம் வந்தவராக காவல்துறையின் உதவியை நாடியுள்ளார். சில நிறுவனங்களின் மீது உரிமம் இல்லாமல் விற்பனை செய்வதாக வழககும் போட்டிருக்கிறார்.
நிச்சயமாக தமது படைப்புக்கான உரிமை கோருவதில் படைப்பாளிக்கு முழு தகுதி உண்டு. இளையராஜா தமது பாடல்களுக்காக வாங்கிய ஊதியத்தை விட பல மடங்கு அதிகமாக பணம் சம்பாதிக்க முடியும். நான் ஏர்டெல் மொபைலில் ராஜா சாரின் நல்லதோர் வீணை காலர் டியூனை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன். மாதம் அதற்காக 30 ரூபாய் கட்டணம் செலுத்தி வருகிறேன். எதி்ல் எத்தனை சதவீதம் பணம் அவருக்குப் போய்ச் சேருகிறது?
இப்படி அவர் இசையமைத்த பல்லாயிரக்கணக்கான பாடல்களில் இசைத்தட்டு, ஆடியோ கேசட்,சிடி,விசிடி, டிவிடி வடிவில் உரிமம் பெறாமல் பதிவாகி பல லட்சம் லட்சமாக விற்பனையாகி அதி்ல் கொள்ளை லாபம் அடைந்தவர்கள் எத்தனை பேர்...அது மட்டுமின்றி இணையத்தில் யூடியூப்பில் ஏற்றி விட்ட புண்ணியவான்கள் எத்தனை.
ஒரு படைப்பாளிக்கு உரிய மரியாதையும் அவர் படைப்புக்கான லாபத்தில் பெரும் பங்கும் தரப்பட வேண்டும். இதில் நான் உடன்படுகிறேன். ஆனால் இளையராஜா மாதிரியான ஜாம்பவான்களுக்கு அப்படி கிடைக்காமல் போனது ஏன் என்று யோசி்ப்பது அவசியமாகும். எம்.எஸ்.விஸ்வநாதன், தேவா, விகுமார், கேவிமகாதேவன் போன்ற முந்தைய தலைமுறை இசையமைப்பாளர்களுக்கு நேர்ந்ததுதான் இது. ஏ.ஆர.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் உட்பட இனியும் பலருக்கு நேரக்கூடியதுதான்.
முதலில் இந்தப் பாடல்கள் வெளியிட்டு மக்களை சென்றடையும் முறையிலேயே கோளாறு உள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பல லட்சம் செலவு செய்து நடத்துகிறார்கள். கிட்டதட்ட நூறு ரூபாய் விலைக்கு ஆடியோ சிடிக்கள் வெளியிடப்படுகின்றன. யார் வாங்குவார்கள்.?
பாடல்கள் ஹிட்டாக இருந்தால் ஓரளவு லாபம் காணலாம். இல்லையென்றால் அது பத்து ரூபாய்க்கு கூட தேறாமல் பழைய குப்பைகளி்ல் போய் விடும்.

இரண்டு வருடங்களுக்கு மேல் இனி எந்த ஒரு திரைப்படப் பாடலும் உயிர் வாழுமா என்ற சந்தேகமான நிலையில் திரையிசை தேய்ந்துக் கொண்டிருக்கிறது. அன்றைக்கு அன்றை கொரித்து செரிக்கிற பாப்கார்ன் மாதிரி சினிமா பாடல்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. இதை நம்பி எந்த ரசிகனும் ஒருநாள் முழுதும் உழைத்துப் பெற்ற காசிலிருந்து நூறு ரூபாயை ஆடியோ சிடிக்காக செலவழிப்பானா? திருட்டு சிடியில் எம்பி 3 வடிவில் 200 இளையராஜா பாடல்களை அவன் சுலபமாக 20 ரூபாய்க்கு வாங்கி விட முடிகிறது அல்லவா? இது இளையராஜாவுக்குத் தெரியவே தெரியாதா?

ஒவ்வொரு திரைப்படத்துடன் திரைப்பட கட்டணத்திலேயே பத்து அல்லது இருபது ரூபாயை கூடுதலாக தந்தால் பாட்டு புத்தகமும் ஆடியோ சிடியும் படத்தின் டிக்கட்டுடன் வழங்கப்படும் என்றால் அது பலன் தருவதாக இருக்கும்.இதை செய்வதற்கு திரைப்படத்துறைக்கு எது தடையாக இருக்கும் என்று தெரியவில்லை.

திரைப்படம் பார்க்கும் செலவுகள் அதிகமாகி திருட்டி சிடி தொழில் ஓகோ என வளர்ந்ததற்கு காரணம் திரைப்படத்துறையும் திரையரங்கு உரிமையாளர்களும்தான். தப்பை தங்கள் மேல் வைத்துக் கொண்டு வியாபாரிகளையும் பொதுமக்களையும் குறை சொல்லக்கூடாது. விற்க கூடிய சரக்கை விற்கத்தான் செய்வார்கள் வியாபாரிகள்.
சேரன் ஒரு முயற்சி செய்தார்.ஜே.கே.என்ற நண்பனின் கதை திரைப்படத்தை நேரடியாக டிவிடியாக விற்பனைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் என்ன நேர்ந்தது? 50 ரூபாய் விலை குறிக்கப்பட்ட அது அடுத்த நாளே 20 ரூபாய்க்கு திருட்டி டிவிடி வடிவில் வந்துவிட்டது. யார் 50 ரூபாய் கொடுப்பார்கள்? அதை அவர் வெளியிடும்போதே 18 ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருக்க வேண்டும். படத்தயாரிப்பு செலவுகள், தனிநபர் வருமானம் போன்றவற்றால் அவருக்கு அது சாத்தியமாகி இருக்காது . போகட்டும் பத்து லட்சம் டிவிடிக்கள் விற்பனையானதாக விளம்பரப்படுத்துகிறார்களே அது உண்மைதானா. உண்மை என்றால் இந்த முயற்சி வளரட்டும்.



















No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...