Tuesday 7 May 2013

குழந்தைகளுக்கு பள்ளிப் படிப்பு தேவைதானா ?

அண்மையில் எனது செல்லக் குழந்தை விக்னேஷ்- வயது 12,  ஏழாவது வகுப்பில் பெயிலானதாக தகவல் வந்தது.கூடவே அவனது குறும்புகளையும் விளையாட்டையும் சகித்துக் கொள்ள முடியாத பிரின்சி மேடம் டிசி கொடுத்து அனுப்பி விட்டார். எட்டாவது வரை குழந்தையை பெயிலாக்க முடியாது, 14 வயது வரை குழந்தைக்கு கல்வி கற்கும் உரிமை, பள்ளியை விட்டு வெளியேற்றப்படுதல் தடுக்க வேண்டும் என்பதுபோன்ற சட்டவிதிமுறைகளோ தார்மீக நெறிகளோ அந்தப் பள்ளிக்குப் புரியவே இல்லை. அத்தனைக் குழந்தைகளையும் பாஸ் செய்துவிட்டு இந்த ஒரு குழந்தையை மட்டும் வெளியேற்றிவிட்டது பள்ளி நிர்வாகம்.

விக்கி எனது வளர்ப்பு மகன்தான். ஆனால் அவன் தாய் தந்தையும் இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் அழுதது ஒருபுறம் இருக்க, எனது செல்லத்தால்தான் குழந்தை இப்படியாகி விட்டதாக பழிவேறு சுமக்க நேரிட்டிருக்கிறது.
என் குழந்தையாக இருந்திருந்தால் இப்படியொரு கேடுகெட்ட பள்ளியில் எனது குழந்தை படிக்கத்தான் வேண்டுமா என்று யோசித்திருப்பேன். குழந்தையின் விளையாட்டை ரசிக்கத் தெரியாத கிழட்டு முண்டங்கள் நடத்தும் அந்தப் பள்ளியில் படித்து அவன் வாழ்வின் ஒரு உன்னதத்தையும் கற்றுவிட முடியாது. மாறாக மந்தையில் ஒரு ஆடாக மாறிவிடுவான். எனது குழந்தையின் அறிவுக்கூர்மையும் அப்பாவித்தனமான அவன் சேட்டைகளும் எனக்குத் தெரியும். அதற்கு இப்பள்ளியோ நமது அரைவேக்காட்டு கல்வித்திட்டமோ தரும் சான்றுகள் தேவைதானா என்று கேட்டிருப்பேன். ஆனால் அவன் பெற்றோருக்கு இந்த சிந்தனை எழவில்லை. அவர்கள் விக்கியை எப்படியாவது ஏதாவது ஒரு நல்ல பள்ளியில் சேர்த்து விட அலைந்துக் கொண்டிருக்கிறார்கள். யார் யார் காலிலோ விழுந்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான் பள்ளியில் படித்ததால்தான் இப்போது தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுத முடிகிறது. எனது ஆசிரியர்களை இன்று நன்றியோடு நினைத்துக் கொண்டேதான் இதனை எழுதுகிறேன். ஆனால் விக்கி போன்ற குழந்தைகளுக்கு, குறும்புத்தனமும் உயிர்ப்பும் ததும்பும் அவர்களின் பால்ய கால சேட்டைகளுக்கு எந்தக் கல்வியும் ஈடாகாது. அதனை இழந்து அவர்கள் எதையும் அடைந்துவிடமுடியாது.


No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...