Tuesday 28 May 2013

பிரபல வார இதழ்களின் மறுபக்கம்

தமிழில் வெளியாகும் பிரபல வார இதழ்கள் அனைத்தும் சாதாரண வாசகனை நோக்கியே தங்கள் புத்தம் புதுக் கட்டுரைகளை வெளியிடுகின்றன. பாதிக்கும் மேலான பக்கங்களை  சினிமாவும்  சில பக்கங்களை  சினிமாவும் ஆக்ரமிக்கின்றன. அரசியலுக்காகவே வெளியாகும் ரிப்போர்ட்டர், ஜீ.வியிலும் கூட நடுப்பக்க அரைகுறை ஆடை அழகி அவசியமாகி விட்டது. 
மக்கள் அதிகமாக படிப்பது சினிமாவையும் அரசியலையும் அதை விட்டால் ஆன்மீகம், ஜோசியம் ஆகியவற்றையும்தான். 
பெண்கள் பத்திரிகை என்றால் கைத்தொழில்,வீட்டிலிருந்து சம்பாதிக்க தொழில், சமையல் குறிப்புகள், நாகரீகம், ஆடை அணிகலன்கள், அந்தரங்க பிரச்சினைகள்.
இதையெல்லாம் பத்திரிகை ஆசிரியர்கள் துல்லியமாக நாடி பிடித்து வைத்து விட்டனர். ஆனால் இந்த தேவைக்கு பரிமாற வேண்டிய கட்டுரைகளை எழுதுபவர்களை தேர்வு செய்வதில்தான் அவர்கள் தோற்றுப் போகின்றனர். ஒவ்வொரு இதழிலும் ஆசிரியருக்கு வேண்டிய சிலர் மட்டும் குறைந்தது பத்து பக்கம் அல்லது நான்கைந்து கட்டுரைகளை அவர்கள் எழுதி விடுவார்கள். அதற்கு தனியாக கவர்கூட வாங்குவார்களா என்று தெரியாது. இதே நபர்கள்தாம் அந்நிறுவனத்தின் அனைத்து இதழ்களிலும் வெள்ளி, ஞாயிறு இணைப்புகளிலும் எழுதித் தள்ளுவார்கள். தனி சன்மானமும் இதற்கு உண்டு. மற்ற உதவியாசிரியர்கள் பாவம் நாலு வாரத்தில் நாலு பக்கம் கூட எழுத விடமாட்டார்கள். அவர்கள் ஙே என விழித்தபடி கிடைக்கும் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்காக வாசகர் கடிதம், கவிதை தேர்வு செய்வார்கள், பரிசுக் கூப்பன்களை பரிசீலித்து பிரித்து வைப்பார்கள். அல்லது கேன்டீனில் உட்கார்ந்து புலம்பித் தள்ளுவார்கள்.

ஒரு பெரிய பத்திரிகையும் அதன் துணை இதழ்களும் சகோதர இதழ்களும் நான்கைந்து பேர் கொட்டமடிக்கும்  கூடாரமாக இருப்பதற்குக் காரணம் ஆசிரியர்தான். பெரும்பாலும் ஆசிரியர் பெயர் வேறு ஆசிரியர் வேலை செய்பவர் வேறாக இருக்கும்.

பிரபல வார  இதழில்  பத்தி எழுத 2 அல்லது 3 பக்கம் தரும்படி அதன் ஆசிரியர் பொறுப்பில் இருந்தவரிடம் கேட்டேன். நீங்க பிரபலமானவரா எனக் கேட்டார். இப்போது மனுஷ்யப்புத்திரன் பத்தி எழுதுகிறார்.  மனுஷ்ய புத்திரனின் கால்கள் ஆல்பம் கவிதைதான் அவரை சுஜாதாவிடம் அறிமுகம் செய்து அவரை தமிழ்ச்சூழலில் பிரபலமாக்கியது. அந்தக் கவிதையை தேர்வு செய்து கோவை ஞானியின் நிகழ் இதழில் வெளியிட்டதில் முக்கிய காரணகர்த்தா நான்தான். ஆனால் நான் பிரபலமாகவில்லை.

ஒருவரின் தகுதியையோ அல்லது திறமையையோ கணிக்கும் அளவு பத்திரிகை ஆசிரியர்கள் அறிவுஜீவிகள் அல்ல, தனக்கு அடங்கிய தன்னை மிஞ்சி விடாத  மந்த நிலை பத்திரிகையாளர்கள் போதும் அவர்களுக்கு. பத்திரிகை  விற்க அவர்கள் முழுதாக நம்புவது நடிகைகள் மற்றும் அஜித்,விஜய்,சூர்யா போன்றோரின் ஸ்டில்களை மட்டும்தான்.

இந்த வம்பை இன்னும் வளர்க்கலாமா இத்துடன் விட்டுவிடலாமா  



No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...