Wednesday 6 February 2013

புத்தகக் கண்காட்சி 2013

வழக்கம் போலவே இந்த ஆண்டும் புத்தகக் கண்காட்சிக்கு சென்றேன், கையில் பணமில்லாமல். அதிகபட்சமாக 300 ரூபாய்க்கு மட்டுமே புத்தகம் வாங்கி வந்தேன். சம்பத் கதைகள், விட்டல்ராவின் நவீன கன்னட சினிமா, விகடன் பிரசுரம் வெளியிட்ட மௌனி பற்றிய நூல், பகவத் கீதை போன்றவை நான் இந்த ஆண்டு வாங்கி வந்த நூல்கள்.
பொதுவாக புத்தகக் கண்காட்சி வரும் நேரத்தில் நான் வேளையில்லாமல் இருப்பேன். அல்லது சம்பளம் கிடைக்காமல். இந்த ஆண்டு இரண்டாவது விதம்.
வீட்டில் குவிந்திருக்கும் புத்தகங்களிலும் பாதிக்குமேல் படிக்கப்படாமல், ஆர்வத்தை ஏற்படுத்தாமல் இருக்கின்றன. ஒரு நாள் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் போது ஃபில்டர் பண்ணி தேவையற்ற புத்தகங்களை கழித்துவிட்டேன். ஜெயமோகன், ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, சுஜாதா, ஈழத் தமிழ் கவிதைகள், கதைகள் சில மொழிபெயர்ப்புகள், சில ஆன்மீக நூல்கள், சில கவிதை நூல்கள் என எதையெல்லாம் கழிக்க முடியுமோ கழித்துவிட்டேன். இவை இனி என் வாழ்வுக்குத் தேவைப்படாது.
பழைய புத்தகங்களை கழிப்பதிலும் பிரச்சினை. கடைக்கும் எடைக்கும் போட மனம் வராது. இலவசமாக நண்பர்களுக்கு அள்ளிக் கொடுத்தால் அவர்கள் பணம் கொடுத்து புத்தகத்தை வாங்க விருப்பமின்றி இலவசமாக கிடைக்குமா என எதிர்பார்க்கும் மனநிலைக்கு ஆளாகிறார்கள், குறைந்த விலைக்கு தந்தாலும் வாங்கிச் செல்லும் நண்பர்கள் பணம் தர மாட்டேன் என்கிறார்கள், கறாராகப் போய் கேட்கவும் தயக்கமாக இருக்கிறது.
என் செல்லக் குட்டிப் பயலை புத்தகக்கண்காட்சிக்கு அழைத்துப் போனேன். அவனுக்காக 500 ரூபாய் எடுத்துப் போனேன். படிக்கும் ஆர்வம் அவனுக்குச் சிறிதும் இல்லை. காமிக்ஸ் முதல் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட சிறுவர் நூல்கள் வரை புரட்டிப் பார்த்து வேண்டாம் என்றான். 200 ரூபாய்க்கு டிராயிங் மேஜிக் பேனாவும் சாதனமும் வாங்கி வந்து இரண்டு நாள் விளையாடி ஓரமாக வீசியெறிந்துவிட்டான்.
புத்தகக் கண்காட்சியில் வழக்கம் போல நண்பர்களை சந்திக்க முடிந்தது. அது மட்டும்தான் உற்சாகமளிக்கும் விஷயமாக இருக்கிறது.
புத்தகக் கண்காட்சியில் கூட்டமும் அதிகமாகவே காணப்படுகிறது. சிடிக்கள், டிவி சேனல் விளம்பரங்கள், கணினி மென்பொருட்கள், பாடப்புத்தகங்கள், பாப்கார்ன், இமாச்சலப்பிரதேச ஆப்பிள் சாறு, ஊட்டி வர்க்கி என எத்தனையோ பொருட்கள் கிடைக்கின்றன. போகப் போக புத்தகக் கண்காட்சி சுற்றுலாப் பொருட்காட்சி போல ஆகி விடும்.
ஆனால் பழைய புத்தகங்களுக்கு இடம் இல்லையாம், அவை ஏதோ ஒரு ரகசிய பதுங்குக்குழியில்வைத்து விற்கப்பட்டு வந்தன. தேடிக் கண்டுபிடித்து அங்கும் சில புத்தகங்கள் வாங்கினேன்.
புத்தகக் கண்காட்சிக்கு என்று ஒரு திருவிழா கூட்டமும் தயாராக இருக்கிறது. வைகோ முதல் கூறு கெட்ட தமிழ்ப்புலவர்கள் வரை பலர் மேடையேறிப் பேசுகிறார்கள். வாழ்நாளில் ஒரு புத்தகத்தையாவது காசு கொடுத்து வாங்கிப் படிக்காதவர்கள் அந்த நிகழ்ச்சிகளில் இடம்பெறுகிறார்கள். சாப்பாட்டு அரங்கம் விலையை இருமடங்காக்கி வாசகர்களை பழிவாங்கியது. கழிவறையோ பேருந்து நிலையங்களே மேல் என எண்ண வைத்துவிட்டது.

வெளியே வந்து சுண்டல் சாப்பிட்டால் அதுவும் அரைவேக்காடு.
அரைவேக்காடுகளுக்காகவே புத்தகக்கண்காட்சி நடத்தப்படுகிறதா என்ற சந்தேகத்துடன்தான் வீடு திரும்ப வேண்டியிருக்கிறது.








No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...