Sunday 3 December 2017

பயணம் 10 -ராஜமுந்திரி -ஆந்திரா

உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக இரண்டு நாட்கள் ராஜமுந்திரிக்கு பயணித்தேன். ராஜமுந்திரி பற்றி எனக்கு என்ன தெரியும்? அங்கு கோதாவரி நதி ஓடுகிறது. மிகப்பெரிய ரயில் பாலம் இருக்கிறது. ராஜமுந்திரி அருகே பாலியல் தொழில் புரியும் ஒரு கிராமம் -பெத்தாபுரம் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தாளர் சுகுமாரன் குங்குமம் இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். நண்பர்கள் வட்டத்தில் பெத்தாபுரம் போகணும் என்பது ஒரு லட்சியக் கனவாக இருந்த இளமைக்காலமும் ஒன்று இருந்தது. எந்த ஆசையும் வெறும் கனவாகவே நின்று போனது போல இதுவும் அங்கேயே முடிந்து போனது.
அப்புறம் ராஜமுந்திரி அருகே அரக்கு பள்ளத்தாக்கின் இயற்கை அழகைப் பற்றி ஒரு பத்திரிகையில் கட்டுரை படித்திருந்தேன். ரயில் நிலையத்திலும் அரக்கு பள்ளத்தாக்கு செல்பவர்கள் இங்கே இறங்கவும் என்று பலகை இருப்பதை கவனித்தேன்.
இரவு தன்பாத் வண்டியில் சென்ட்ரலில் இருந்து பயணம் -கிளம்பும் போது கிட்டதட்ட 2 மணி நேரம் தாமதம். அதனால் பகலில் 11 மணிக்கு பதிலாக 1 மணிக்குத்தான் போய் சேர்ந்தோம். வழியில் தெனாலி ரயில் நிலையம் பார்த்தேன். தெனாலி ராமன் கதைகள் நினைவிலாடின. விஜயவாடாவுக்கு ஏற்கனவே ஒரு முறை போயிருக்கிறேன். ஆனாலும் கிருஷ்ணா நதியின் அழகான பாலம், மலைக்குன்றுடன் கூடிய அந்த நகர ரயில் நிலையம் அருகே இருக்கும ்பி.எஸ்.என்.எல் கட்டடம் அந்த நகரை நான் ஒருநாள் சுற்றிப்பார்த்த நினைவுகளை கோர்க்க முயன்றது. விஜயவாடாவில் மழை தூறும் ஒரு நாள் அது. நண்பர் தேவராஜூடன் சுற்றி வந்து அருமையான ஆந்திரா சாப்பாடு சாப்பிட்டதும் நினைவுக்கு வந்தது. ருசிகள் மறக்காதவை. அப்போது மலையாள பிட்டு படம் ஒன்று தெலுங்கில் டப்பிங் செய்து ஓடிக் கொண்டிருந்தது. மழைக்கு அங்கேதான் ஒதுங்கினோம். சென்னையில் இருந்து சுமார் ஏழு மணி நேர ரயில் பயணத்தில் எளிதாக அடையக்கூடிய விஜயவாடா போன்ற நகரங்களை ஏன் மீண்டும் பார்க்கத் தோன்றவில்லை என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். கண்டிப்பாக போக வேண்டும்.
விஜயவாடாவை கடந்து ராஜமுந்திரியை சென்றடைந்தோம். கல்யாண மண்டபத்தில் அறை. அருமையான உணவு வகைகள், அற்புதமான அலங்காரம் ,இசை ,நடனம் அழகான மனிதர்கள் என பொழுது ரம்மியமாகவே இருந்த போதம் மனம் வேறு எதையோ தேடிக் கொண்டிருந்தது. பெத்தாபுரம் தானா என்று என்னை நான் கேட்டுக் கொண்டேன். இல்லை. வேறு என்ன , இலக்கியம், சினிமா,ஆன்மீகம், ஆந்திரா சாப்பாடு, கடைவீதிகள் என வழக்கமாக ஒவ்வொரு பயணத்திலும் நான் தேடும் பல்வேறு ரசனைகள் நினைவில் தோன்றின. ஆட்டோ பிடித்து புறப்பட்டு விட்டேன். கடைவீதியில் ஒன்றும் கிடைக்கவில்லை. சில வகை ஊறுகாய்கள், பொடிகள், அப்பளம் வாங்கி வந்தோம். பேக்கரிகளில் சில ருசியான கேக்குகள் கிடைத்தன. காதிம்ஸ் கடையில் ஒரு ஷூ வாங்கினேன். அப்புறம் செய்தித்தாள்கள், இளநீா் சர்பத், ராஜமுந்திரியின் ஓட்டல் ருசியறிய ஆட்டோக்காரனிடம் கேட்டு சத்யா என்றொரு டிபன் ஓட்டலுக்குப் போனோம். அங்கு பெசரட் ஆர்டர் செய்தால் நம்மூர் ஆனியன் தோசை போல் ஏதோ ஒன்றுவந்தது. ஒரேயொரு தேங்காய் சட்னி தவிர மற்ற எல்லா சட்னிகளும் சாம்பாரும் இனிப்பாய் இனித்தன.வாயில் வைக்க முடியவில்லை. அய்யோ ஆநதிராவே உன் மிர்ச்சி எங்கே?
மறுநாள் காலையிலேயே கோதாவரி பார்க்க புறப்பட்டோம். கோதாவரி கரையில் உடைகளைக் களைந்து நீராடிய அனுபவம் ஹரித்துவாரை நினைவுபடுத்தியது. ஆனால் கோதாவரி படிகளில் பாசி படர்ந்து இருந்ததால் அதிகமாக ஆற்றுக்குள் இறங்க பயமாக இருந்தது. சில படிகள் மட்டும் இறங்கி கம்பியை பிடித்தபடி நீராடினேன். ஒரு நதியில் இரண்டு முறை இறங்க முடியாது என்று ஹெராகுலிட்டிஸ் கூறியதை மனதில் ஓடவிட்டு ஓடும்நீரைப் பார்த்துக் கொண்டே குளித்து முடித்தேன்.



அங்கு காணப்பட்ட பிரம்மாண்டமான சிவலிங்கத்தைக் கண்டு சிவன் கோவில் எங்கே என்று விசாரித்த போது பக்தர் ஒருவர் பரவசத்துடன் கோடி லிங்கங்கள் கோதாவரியில் மிதந்து வந்ததை விவரித்தார். அந்த லிங்கங்கள் காசிக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறிய அவர் ஒரே ஒரு லிங்கம் அருகில் உள்ள கோடிலிங்கம் கோவிலில் வைத்து வணங்கப்படுவதாக கூறியதால் ஆர்வத்துடன் ஆட்டோ பிடித்து கோதாவரி கரையோரம் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் உள்ள அந்த கோடிலிங்கம் கோவிலுக்கு சென்று சிவலிங்கத்தை தரிசித்தோம்.

மீண்டும் கல்யாண மண்டபத்தில் அடைக்கலமாகி மறுநாள் காலை கோரமாண்டல் எக்ஸ்பிரஸ் பிடித்து சென்னை மழையில் நனைய திரும்பினோம்.

மீண்டும் ராஜமுந்திரிக்குப் போவேனா என யோசித்தேன். மீண்டும் மீண்டும் பெத்தாபுரம் தான் மனதில் ஆடியது. ஒரு கிராமமே பாலியல் தொழில் செய்வது எத்தனை வேதனையான விஷயம் என்றுதான் இப்போது தோன்றுகிறது. பாலியல் இச்சைகள் என்றுமே பூர்த்தியாகாது என்றபோதும் , ஏனோ கோடி லிங்கங்கள் குறித்து எண்ணிய போது பெத்தாபுரத்தை விரைப்புடன் வட்டமிட்ட  ஆண்குறிகளையும் அது பற்றி எழுதித் தீர்த்த பத்திரிகைகளையும் இளம் வயதுகளில் அது ஏற்படுத்திய சலனங்களையும் பற்றி எண்ணாமல் இருக்க முடியவில்லை

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...