Thursday 1 August 2013

மரியோ வர்காஸ் லோசா- சிற்றன்னையின் புகழ் - In praise of the stepmother

மரியோ வர்காஸ் லோசா பெருநாட்டின் மகத்தான எழுத்தாளர். 2011ம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதும் அவரைப் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நண்பரும் எழுத்தாளருமான சாருநிவேதிதாவை தொலைபேசியில் அழைத்தேன். லோசா பற்றி அவர் ஏற்கனவே பலமுறை எழுதியிருப்பதை அறிவேன். வேறு எந்த எழுத்தாளரும் லோசாவை குறிப்பிட்டதாக நினைவில்லை, எனவே சாருவை கேட்டதும் மகிழ்ச்சியுடன் லோசா பற்றி பேச ஒப்புக் கொண்டார். மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவில் லோசா பற்றி சாருவுடன் உரையாடிய அந்த ஒருமணி நேரத்திற்குப் பிறது லோசாவின் எழுத்துகளை தீவிரமாகத் தேடிப்பிடித்து படிக்கலானேன். ஓரிரு புத்தகங்கள் படித்தாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தினார் என்று கூறமுடியவில்லை.ஓமன் பாரூக் உள்ளிட்ட எந்த நோபல் பரிசு எழுத்தாளரையும் பெரிதாக நினைக்கவில்லை. அதைவிட ஹென்றி மில்லரும். டாஸ்டய ஸ்கியும், காப்காவும் ,செக்காவும் மிகப் பெரிய எழுத்தாளர்களாக தெரிகிறார்கள். சாரு நிவேதிதா மிகைப்படுத்துகிறாரோ என்றுகூட எண்ணியிருக்கிறேன்.

ஆனால் அண்மையில் ஒரு புத்தகம் பழைய புத்தகக் கடையில் சிக்கியது. லோசாவின் இன் பிரெய்ஸ் ஆப் ஸ்டெப் மதர்ஸ் என்ற புத்தகம் தான் அது. 
வாங்கி வீடு வந்த இரண்டாவது நிமிடமே படிக்க ஆரம்பித்துவிட்டேன். கீழே வைக்கவே முடியவில்லை. காரணம் அதன் எரோடிகா தீம்  - சிறுவயது பையனுக்கும் அவன் மாற்றாந்தாய்க்கும் ஏற்படும் பாலியல் விபரீத உறவு சிறிய முத்தங்கள் தொடங்கி மார்பகத்தை கசக்கி படுத்து எழும் வரை அந்த உறவு வளர்வதையும் அப்பாவி சிறுவனை மாற்றாந்தாயே மயக்குகிறாளோ என்ற எண்ணத்தையும ஏற்படுத்தும் நுட்பமான கதையோட்டம்....ஆனால் வேலைக்காரப் பெண்ணை மடக்கவே மாற்றான்தாயை வீட்டைவிட்டு விரட்ட பையன் திட்டமிட்டதாக இறுதி அத்தியாயம் கூறுகிறது.


கதையை நம்மூர் பழைய சரோஜாதேவி புத்தகம் பாணியிலானது என்று குறைத்து மதிப்பிட வாய்ப்பு நிறையவே இருக்கிறது- இப்பத்தான் எல்லாம் சிடியில் அப்பட்டமாக வந்தாச்சே- ஆனால் கிரேக்க பண்டைய மன்னர்களின் அந்தரங்க கதைகளுடன், வீனஸ் தேவதையின் காம இச்சை பற்றிய பதிவுடன் நகரும் கதையின் இடைச்செருகல்கள் போர்னோ கதையையும் இலக்கியமாக்குவது எப்படி என்று கற்றுத்தருகின்றன. இப்பாணி நண்பர் சாருவுக்கும் உவப்பானது என்பதால் அவர் லோசா போன்ற படைப்பாளிகளிடம் மனதைப் பறிகொடுப்பதில் வியப்பேதுமில்லை.

என்னைப் பொருத்தவரை லோசாவை அத்தனை மகத்தான எழுத்தாளராகக் கூற முடியவில்லை, அவருடைய மேலும் சில புத்தகங்களைப் படித்தால் மதிப்பீட்டில் தெளிவு ஏற்படலாம். ஆனால் எரோடிக்கா எனப்படும் பாலியல் தொடர்பான படைப்புகளால் ஒரு இலக்கியவாதியை குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதை ஹென்றிமில்லரும் டால்ஸ்டாயும் எனக்கு ஏற்கனவே உணர்த்தியிருக்கிறார்கள். டால்ஸ்டாயின் நடனத்திற்கு முன் முழுக்க அடல்ட்ரி சம்பந்தமான கதை .ஆனால் இக்கதை பலநாட்களுக்கு என்னை அலைக்கழித்திருக்கிறது. இதே போல ஹென்றி மி்ல்லரின் டிராபிக் ஆப் கேன்சர், டிராபிக் ஆப் கேப்ரிகார்ன் .

லோசா சலனப்படுத்தினார் .ஆனால் பாதிக்கவில்லை. இருப்பினும் லோசா போன்றவர்கள் அறம் குற்ற உணர்வுகளுக்கு அப்பால் இன்பத்தை துய்ப்பதில் மனிதனுக்குத் தடை ஏதுமில்லை என்பதை துணிந்து கூறுகின்றனர். செக்ஸ் ஒரு பாவம் என்று பைபிளும் கிறித்துவமும் கூறலாம். ஆனால் இளம் பிஞ்சு உதடுகள் தன் உதடுகளில் ஒருகணம் பட்டு நகரும்போது, நடுத்தர வயதுப் பெண்ணுக்கு ஏற்படும் பாலியல் கிளர்ச்சி, கியூபிட்டாக அந்த சிறுவனைப் பார்க்கும் பார்வை, தன் மகன்போன்ற பையனுக்கு முன் முழு நிர்வாணமாக பாத்ரூமில் நீண்டநேரமாக அவன் மறைந்திருந்து பார்க்கிறான் என்று தெரிந்தே ஆடையணியாமல் நிற்கும் அவளது இச்சையும் உள்ளார்ந்த மகிழ்ச்சியும் அற்புதமாக எழுதப்பட்டுள்ளன.
நானோ சிறுவன் மனசாட்சியோ குற்ற உணர்ச்சியோ எனக்கில்லை என்று அச்சிறுவன் மிகவும் முதிர்ச்சியுடன் பேசுகிறான்.
இதே போல அந்தப் பெண் காமத்தின் உச்சக்கட்ட இன்பத்தை கணவனிடம் அனுபவிக்கும் இடத்தில் செபாஸ்டியன் என்ற புனிதர் ஏசுவுடன் சிலுவையில் அறையப்படும் காட்சி அவள் மனக்கண்  முன்பு காட்சியாக விரிவதைப் படிக்கையில் ஒருகணம் உடல் குப்பென வியர்த்து நடுநடுங்கிவிட்டது.

லோசாவை கவனித்தே ஆக வேண்டும்.


No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...