Monday, 3 June 2013

மூர்மார்க்கெட்

சென்னை சென்ட்ரல் நிலையத்தை ஒட்டி மூர்மார்க்கெட் இருப்பது பலருக்கும் தெரியும். முன்பு  இருந்த மூர்மார்க்கெட் இப்போது ரயில்வே புக்கிங் கவுண்டரும் புறநகர் ரயில்கள் புறப்படும் இடமும் அமைந்த கட்டிடத்தில் இருந்ததும் நாம் அறிந்திருப்போம். அந்த பழைய மூர்மார்க்கெட் தீயில் கருகியதும் நாம் அறிந்த செய்திதான். ஆனால் அந்தப் பழைய மூர்மார்க்கெட்டுடன் எனது பால்ய காலத்திற்கு நெருக்கமான உறவு உண்டு.

திருச்சியில் படித்துக் கொண்டிருந்த நான் குடும்பத்தின் இடம் பெயர்தல் காரணமாக, சென்னை வந்து சேர்ந்தேன். இங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் போது, மாலையில் நானும் எனது நண்பன் சேகரும் விளையாடச் செல்லும் இடம் இந்த மூர்மார்க்கெட்தான்.

அப்போது அங்கே பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுவதாக ஒருவர் மோடி வித்தை காட்டுவார். ஒரு நாளும் நாங்கள் அந்தச் சண்டையைப் பார்க்க முடியவில்லை. காரணம் கையில் காசு இல்லை. காசு இருப்பவர்கள் மட்டும் நிற்க வேண்டும் மற்றவர்கள் போய்விட வேண்டும் என்றும் பாம்பு-கீரி சண்டையில் காசு போட மறுப்பவர்கள் ரத்தம் கக்கி செத்து விடுவார்கள் என்றும் அந்த பாம்பாட்டி மிரட்டுவான். அதனால் நாங்கள் பயந்து ஓடியே போய் விடுவோம்.

கொஞ்சம் வளர்ந்த நிலையில் எனிட் பிளைட்டன் புத்தகங்களை வாங்க நான் மூர் மார்க்கெட் சென்றேன். பதின் பருவங்களில் அமர்சித்ர கதாவும் முத்துக் காமிக்சும் அணில் முயல் போன்ற இதழ்களும் படித்து வந்த எங்களுக்கு அட்வென்ச்சர் கதைகளில் நாட்டம் அதிகரித்தது. சங்கர்லால் துப்பறியும் கதைகள், மேதாவி சிரஞ்சீவி மர்ம நாவல்கள் மற்றும் எனிட் பிளைட்டன் நூல்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. எனிட் பிளைட்டன் எனக்கு விரைவில் சலித்துப் போய்விட்டார். அதைவிட கனமான நூல்களில் நாட்டம் அதிகரித்து, விக்டர் ஹ்யூகோவையும் ஷேக்ஸ்பியரையும் ரஷ்யாவிலிருந்து மாஸ்கோ பதிப்பகம் வெளியிட்ட டால்ஸ்டாய், புஷ்கின். மாயகாவாஸ்கி, மாக்சிம் கார்க்கி, ஷோலக்கோவ் போன்ற நூல்கள் மீது ஆர்வம் அதிகரித்திருந்த்து.
ஆனால் மூர்மார்க்கெட் எங்கும் நிறைந்திருந்த புத்தகக் கடைகளைப் பார்க்கவே அடிக்கடி அங்கு செல்வது வழக்கமாகி விட்டது.
மூர்மார்க்கெட் எரிந்து சாம்பலாகிப் போன போது இரண்டு மூன்றுநாட்கள் சோறு தண்ணீ இல்லாமல் ஜூரமடித்துக் கிடந்தேன். இப்போது சற்று பின்னால் இருந்த அல்லிகுளத்தில் மற்றொரு மூர்மார்க்கெட் முளைத்திருக்கிறது. இங்கும் புத்தக கடைகள் இருக்கின்றன. வாரத்தில் ஒருமுறையாவது இங்கு போய்விடுகிறேன். அபூர்வமான புத்தகங்களுடன் அருகில் உள்ள பழைய பொருட்கள் சந்தையில் சில ஒரிஜினல் திரைப்பட டிவிடிக்களும் பத்து இருபது ரூபாய்க்கு கிடைக்கின்றன. பாம்புச் சண்டை நடைபெற்ற இடத்தில் இப்போது சர்க்கஸ் கூடாரம் அமைக்கிறார்கள். எத்தனையோ சினிமாப் பட டூயட்கள் படமாக்கப்பட்ட மைலேடீஸ் பூங்காவில் இப்போது காதலர்களும் தொப்பையைக் குறைக்க வரும் மார்வாடிகளும் சில ஏழைச்சிறுவர்களும்தான் காணப்படுகின்றனர்.
எனது நினைவுகளில் உள்ள மூர்மார்க்கெட்டும் இன்று நான் கண்ணெதிரில் காணும் மூர்மார்க்கெட்டும் வேறுதான். ஆனால் ஏதோ ஒரு பழைய புத்தகத்தின் வாசனையும் அதனுடனான எனது உறவும் நீங்காமல் இங்கு நிலைத்திருக்கிறது.



No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...