Sunday 2 June 2013

சி.சு.செல்லப்பாவும் எழுத்தும்

                                                                 
c
மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவரான சி.சு.செல்லப்பா, எழுத்து என்ற தமது இதழ் மூலம் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றவர். நான் அவரை சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற ஒரு இலக்கிய விழாவில் சந்தித்து என் பேரைக் கூறி, அவர் கதைகளைப் படித்திருப்பதாகக் கூறியதும் குழந்தையைப் போல வெகுளியாக சிரித்து என் கையைப் பிடித்து தன் வாக்கிங் ஸ்டிக்குடன் நடந்து சென்றார். வாசல் வரை அவரை வழியனுப்பும் போது பிரமீள் வந்துவிட்டார்.இருவரும் பேசிக் கொள்வதில்லை என நண்பர்கள் கூறினார்கள்.அதற்கேற்றாற்போல செல்லாப்பாவும் விடுவிடுவென விலகி சென்று யாரோ அழைக்க அவருடன் போய்விட்டார். அதன் பிறகு மீண்டும் ஒரு முறை திருவல்லிக்கேணி-அமீர் மகால் அருகே இருந்த அவர் வீட்டுக்குப் போனபோது, வீட்டு வாசலில் நாற்காலியைப் போட்டு உட்கார்ந்திருந்தார். சில நிமிடங்கள் மட்டுமே பேச முடிந்தது. அழைத்து வந்த நண்பர் அவரது அவசரம் காரணமாக செல்லப்பாவுடன் என்னைப் பேச விடவில்லை. அவரும் பேச ஆர்வம் காட்டவில்லை. யாரோ வந்தாங்க போனாங்க என்று நினைத்திருப்பார். ஆனால் மானசீகமாக ஒரு சீடனைப் போல ஒரு ஏகலவனைப் போல நான் செல்லப்பாவை வாசித்திருக்கிறேன். அவருடைய வாடிவாசலைவிடவும் கள்ளர் மடத்தையும் சரஸாவின் பொம்மையையும் ராட்டினம் கதையையும் நேசித்திருக்கிறேன். கலைஞர் தொலைக்காட்சியில் என்னால் இயன்றவரை அவருக்கு மிகச்சிறந்த அஞ்சலி செலுத்தும் வகையில் ,எழுத்து பற்றியும் செல்லப்பாவைப் பற்றியும் ஆவணப் படமாகத் தயாரித்தேன். ஆனால் துரதிர்ஷ்ட்டவசமாக அதன் பிரதி இப்போது என்னிடம் இல்லை. நண்பர்கள் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியை அணுகி இதுபோன்ற அரிய ஆவணப்படங்களை மீட்க எனக்கு வழிகாட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். கனிமொழி மனது வைத்தால் நடக்கும்.

சிசு.செல்லப்பா பிராமணர் என அவரை எதிர்க்கும் குணம் எனக்கு இல்லை. பாரதிதான் பார்ப்பானை அய்யர் என்ற காலம் போச்சே என்று பாடினான். எந்த தலித்தும் பாடவில்லை. 

அண்மையில் நண்பர் தீபம் திருமலை எழுதிய நா.பா பற்றிய புத்தகம் வாசித்துக் கொண்டிருந்த போது அதில் செல்லப்பாவைப் பற்றி திருமலை எழுதிய சில பக்கங்கள் மனதை நெருடின. எத்தனை அபூர்வமான மனிதரை நமது வாழும் காலத்தில் நாம் தவறவிட்டிருக்கிறோம் என்ற வேதனையும் வலியும் அதிகமானது. எழுத்து தொகுப்பை வெளியிட கலைஞன் பதிப்பகம் முன்வந்த போதும் சி.சு.செல்லப்பாவின் மகன் தொடர்பற்றுப் போனதும், பணத்துக்கு ஆசைப்பட்ட செல்லப்பாவின் உறவினர் ஒருவர் அதை இழுத்தடித்ததும் அவரும் மறைந்த பிறகு அந்த முயற்சி பயனற்றுப் போனதையும் திருமலை தமது நூலில் பதிவு செய்திருக்கிறார்.  

எழுத்து இதழ்களின் தொகுப்பு ஒன்று கோவை ஞானியிடம் இருக்கிறது. அதை அவர் யாருக்கும் தரமாட்டார். ஆனால் ஞானிக்கே தெரியாமல் எப்படியோ அப்படியே அத்தொகுப்பை வேறொருவர் மூலம் லவட்டிக் கொண்டு பிரதி எடுத்து திருப்பிக் கொடுத்திருக்கிறேன். இப்போதும் அது ஞானியின் வீட்டில் இருக்கலாம். இல்லையென்றால் கூட என்னிடம் பிரதி இருக்கிறது- பத்திரமாக.

எழுத்து இதழ்களைப் போலவே மணிக்கொடி இதழ்களும் கிடைப்பதில்லை. ஒரிஜினலான மணிக்கொடி இதழ்கள் சில எனக்குக் கிடைத்திருந்தாலும் அவற்றை பொள்ளாச்சி நசனும் சில தோழியரும் பறிமுதல் செய்துவிட்டனர். பதிலுக்கு எனக்கு மசால்தோசையும் சில நூறு ரூபாய்களும் நசன் கொடுத்திருக்கலாம். அப்படித்தான் மணிக்கொடி கிடைத்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். எனக்கு நினைவில்லை.

சமீபத்தில் மூர்மார்க்கெட் போன போது செல்லப்பாவின் சுதந்திர தாகம் நாவலின் மூன்று பாகங்களும் எனக்குக் கிடைத்தன. சுமார் 200 ரூபாய் கொடுத்து வாங்கி வந்துவிட்டேன். செல்லப்பாவின் எழுத்துகள் அனைத்தையும் தேடித்தேடி சேகரித்திருக்கிறேன். அவரது அரிய நூல்கள் இன்னும் பல இருக்கலாம். அவற்றுக்கு ஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, சுஜாதா போன்றோரின் மார்க்கெட்டும் இணைய ரசிகர்களும் இல்லை என்பதுதான் துரதிர்ஷ்ட்டம்.  கல்லூரிகளுக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கும் தானே பதிப்பித்த தனது நூல்களை சுமந்து திரிந்த ஒரு அசடான தமிழ் எழுத்தாளனுக்கு நாம் திருப்பிக் கொடுப்பது இணையம் வழியாக பட்டுச் சட்டை போட்ட ஒரு பூர்ஷ்வா கூட்டத்தைத்தான். நீங்கள் போட்டுக் கொண்டிருக்கும் டெர்லின் சட்டை அவர்கள் அடிவயிற்றிலிருந்து திருடியதுதான் என்ற புதுமைப்பித்தனின் குரல்தான் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...