Wednesday 11 September 2013

The Book of mirdad - Mikhail Naimy

மைக்கேல் நேமி



மீர்தாத்தின் புத்தகம்

லெபனான் நாட்டு மகாகவி கலீல் கிப்ரானின் ஆப்த நண்பர் மைக்கேல் நேமி. இவரது கற்பனைப் பாத்திரம் தான் மீர்தாத். இந்த மீர்தாத் தான் கலீல் கிப்ரானின் தீர்க்கதரிசி ( Prophet) என்று கூறுபவர்கள் உண்டு.
மிகப் பெரிய ஆன்மீகப் பொக்கிஷமாக கருதப்படும் மீர்தாதின் புத்தகத்தை என்னைப் போல கோவை நண்பர் ராஜேந்திரனும் தேடி வந்தார். இருவரும் தனித்தனியாக அதை கைப்பற்றினோம்.
தற்போது அது ஆங்கிலத்திலும் தமிழில் கண்ணதாசன் பதிப்பகத்தில் சுமாரான மொழிபெயர்ப்பிலும் கிடைக்கிறது.
இந்தப் புத்தகத்தை புரிந்துக் கொள்வது சற்று சிரமம். மிகவும் எளிமையான கவித்துவம் நிரம்பிய வரிகள்தாம். ஆனால்  அதை உள்வாங்கிக் கொள்ள ஏதோ ஒரு ஆத்ம நிவேதனம் இருக்க வேண்டும். ஓஷோ படிக்கும் நண்பர்களுக்கு அது எளிதில் வசப்படலாம்.
இந்த புத்தகத்தை பைபிள் போலவோ கீதையைப் போலவோ படிக்காதீர்கள் என்பார் ஓஷோ.கவிதைப் புத்தகத்தை படிப்பது போல தியானத்திலிருந்து எழுந்தவர் பேசுவதைக் கேட்பது போல படியுங்கள் என்பார்.
மீர்தாத்துக்கும் அவர் சீடர்களுக்கும்  இடையே நடைபெறும் உரையாடல்தான் இந்தப் புத்தகம்.அவரது பிரதான சீடர் நரோன்டாவின் கேள்விகளுக்கு மீர்தாத் பதிலளிக்கிறார்.
மனித உறவுகள், அன்பு, பணம், மரணம், நோய் போன்ற பல்வேறு விஷயங்கள் இந்நூலில் அலசப்படுகின்றன. ஒரு புனைகதையின் சுவாரஸ்யத்துடன் இது எழுதப்பட்டிருக்கிறது.
தாவோவைப் போல முரண் வாக்கியங்களில் பொதிந்துள்ள அர்த்தங்களையும் அபத்தங்களையும் மீர்தாத்தின் சொற்கள் வெளிப்படுத்துகின்றன.
கைத்தடி இல்லாமல் நடப்பவன் தடுமாறி விழுவதில்லை.
வீடற்றவர்களே மகிழ்ச்சியானவர்கள், அவர்களே வீடுபேறு அடையத் தக்கவர்கள்.
என்று இதில் கூறப்படுகிறது. லௌகீகங்களுக்குப் பற்று இல்லாதவர்களே உண்மையான வீட்டைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கும் நிலத்தை வளைப்போருக்கும் சொத்து குவிப்போருக்கும் சொல்லி புரிய வைக்க முடியாது. அதை ஒப்புக் கொள்ள அதிசுத்தமான நேர்மையும் வெகுளித்தனமும் வேண்டும்.
உண்மையில் மகத்தானது என்பது மிகவும் தாழ்த்தப்பட்டிருப்பதுதான்.
மிகச்சிறந்த வேகம் என்பது மெதுவாக செல்லுதல்தான்.
மிகவும் உணர்வுப்பூர்வமான மனிதன் பேசா மடந்தையாயிருப்பான்.
வழிகாட்டியே இல்லாமல் நடப்பவன் நிச்சயமான வழிகாட்டியாக மாறுவான்.
தன்னிடம் இருப்பதை எல்லாம் கொடுக்கத் தயாராக இருப்பவனே எல்லாவற்றையும் அடையும் பேறு பெற்றவன்.
மனிதர்கள் தங்களுக்குள் இடித்துத் தரைமட்டமாக்கி விட்ட ஆன்மீக கோவிலை மீண்டும் கட்டியெழுப்புபவராக மீர்தாத் வருகிறார். மனிதர்கள் மறந்துவிட்ட மனிதத்தை அவர் உயிர்ப்பிக்கிறார்.
உங்கள் கண்களுக்கு முன்னால் ஏராளமான மூடுதிரைகள் தொங்கி உங்கள் பார்வையை மறைக்கின்றன.
உங்கள் உதடுகளில் ஏராளமான பூட்டுக்கள் போடப்பட்டுள்ளன. நீங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும் மேலும் பூட்டுக்களை போட்டுக் கொண்டிருக்கிறது என்பார் மீர்தாத்.
கடவுள் மனிதனை விட்டுப் பிரிவதே இல்லை. ஆனால் நான் என்ற உள்ளுணர்வில் அவன் இருப்பதை பார்க்க தவறிவிடுகிறோம். ஒவ்வொரு தவறையும் அவன் உள்ளிருந்து சுட்டிக் காட்டுகிறான். ஒவ்வொரு சரியான செயலுக்கும் அவன் உள்ளிருந்து பூரிக்கிறான்.
நமது செயல்கள் மூலம் நாம் இறைவனுக்கு எதிராக இருக்கிறோமா அவன் விருப்பத்தை நிறைவேற்றுகிறோமா என்பதை புரிந்துக் கொள்ளலாம். ஒவ்வொரு செயலுக்கும் உங்கள் உள்மனமே பதில் கூறும்.
மனிதர்களோ நிஜத்தை காண மறுக்கிறார்கள். மெய்மையை தரிசிக்கும் அதனை ஏற்றுக் கொள்ளும் திராணி அவர்களுக்கு இல்லை. எனவே மீர்தாத் கூறுகிறார்
தன் நிழலாலேயே மனிதன் தடுக்கி விழுகின்றான்.
இருட்டு என்பது குறைந்த ஒளி என்று மகாகவி பாரதி கூறியதைத்தான் மீர்தாத்தும் கூறுகிறார். உலகில் இருள் என்பதே இல்லை. ஒவ்வொரு உயிரினத்திற்கும் தேவையான வெளிச்சத்தை இறைவன் தந்திருக்கிறான். இரவு வேறு உயிரினங்களுக்கு வெளிச்சமாகிறது.
அன்புதான் இறைவனின் ஒரேயொரு சட்டம் என்பார் மீர்தாத். அன்பு மூலம்தான் இறைவனை அடைய முடியும் என்பதையும் அவர் கூறுகிறார்.
நீதிபதிகளாக இருந்து ஒருவரின் நிறை குறைகளை எடை போடாதீர்கள். யாவர் மீதும் நிபந்தனையற்ற அன்பு செலுத்தப் பழகுங்கள் என்கிறார்.
அன்புக்காக எந்தப் பரிசையும் பாராட்டையும் எதிர்பார்க்காதீர்கள். அன்புக்கு அன்பே போதுமானது என்கிறார் மீர்தாத். அது கொடுப்பதோ பெறுவதோ அல்ல,விற்பதோ வாங்குவதோ அல்லகொடுப்பதே அதன் பெறுதல், எனவே எக்காலத்திற்கும் அது மாறாதது.
காதல் குருடானது என்பார்கள். மீர்தாத் சொல்கிறார் அத்தகைய காதல்தான் தெளிவான பார்வை கொண்டது என்று.
இதயத்திற்குள் ஆலயத்தை காணாதவன் எந்த ஆலயத்திலும் இறைவனின் இதயத்தை கண்டுபிடிக்க முடியாது என்பது மீர்தாத்தின் உபதேசம்.
பணம் கடன் தருவது பற்றியும் மீர்தாத் பேசுகிறார். பணத்தை அன்பளிப்பாக கொடுங்கள் என்கிறார். வாழ்க்கை என்ற மகத்தான பரிசு உங்களுக்கு இலவசமாக அன்பளிப்பாகத்தானே தரப்பட்டிருக்கிறது?
மரம் தன் நிழலை கடனாக தருகிறதா...உனக்கு தேவைப்படும் வரை அதன் நிழலை அனுபவிக்க அது இலவசப் பரிசுதானே.
மேகம், மழை, சூரியன் எல்லாமே இலவசமாக கிடைக்கிறது.இவை இல்லாமல் வாழ முடியுமா. இத்தனை மகத்தான தேவைகள் இலவசமாக கிடைக்கும் போது பணத்தை மட்டும் சொந்தம் கொண்டாடி கடனாக கொடுத்து வட்டிகள் வசூலித்து அடுத்த உயிரை வதைப்பது சரியா என்பது மீர்தாத்தின் கேள்வி
ஒரு போதும் கடன்காரர்களாக வாழாதீர்கள் என்றும் மீர்தாத் கூறுகிறார்.
மனிதனின் மகத்துவம் அவன் மனிதனாக இருப்பதில்தான் என்றும் உண்மையான விடுதலைப் போராட்டத்தின் வெற்றியும் தோல்வியும் உள்ளத்தின் உள்ளே நிகழ்வதுதான் என்றும் மீர்தாத் அறிவுறுத்துகிறார்.

-------------------------------------------


No comments:

Post a Comment

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...