Wednesday, 14 January 2015

பெருமாள் முருகன் மாதொருபாகன் சர்ச்சை

எழுத்தாளர் பெருமாள் முருகனை ஓரிரு முறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். ஒரு நண்பரைப் போல் அவரை எப்போதும் கருதியிருக்கிறேன். அவரது ஏறு வெயிலை கோவை விஜயா பதிப்பகத்தில் வாங்கி வாசித்த காலம் இன்னும் பசுமையாக நினைவுக்கு வருகிறது. நண்பர்களுடன் வடசென்னையில் இருந்த ஓடியன்மணி திரையரங்கு சென்று ஷகிலாவுக்கு முந்தைய காலக்கட்டத்தின் காலைக்காட்சி மலையாளப்படங்களைப் பார்த்த போது, ஓடியன்மணி போன்ற திரையரங்குகளை சித்தரித்த பெருமாள் முருகனின் நிழல் முற்றம் படித்து வியந்திருக்கிறேன். தொடர்ந்து அவர் எழுதிய விமர்சனங்கள், சிறுகதைகளையும் வாசித்து வருகிறேன். அவர் ஏழு நூல்கள் எழுதியது கவனத்தில் தவறிவிட்டது. மாதொரு பாகனும் தவற விட்ட நூல்தான். கடந்த சில ஆண்டுகளாக போதிய வருமானமும் சேமிப்பும் இல்லாமல் பல நூல்களை வாங்க இயலவில்லை. இலவசமாக நூல்களை கேட்பதில் நான் நிறைய கூச்சப்படுகிறவன். நூலகங்களுக்கு செல்லவும் வாசிக்கவும் செய்தாலும் பல புத்தகங்கள் கை நழுவிப் போய் விட்டன.
அண்மையில் மாதொரு பாகன் நாவலில் திருச்செங்கோட்டில் ஒரு வழக்கத்தை கற்பனையாக அவர் எழுதியது சர்ச்சைக்குள்ளானது. அது முழு கற்பனையும் அல்ல என்ற போதும்.
பெண்கள் கற்பு, தமிழ் உணர்வு, சாதி அரசியல், போன்றவை மின்சாரத்தை விட ஆபத்தானவை. அதில்தான் மாட்டிக் கொண்டிருக்கிறார் பெருமாள் முருகன் என்று நம்புகிறேன்.ஒரு எழுத்தாளர் இவற்றை கையாளும்போது சமூகப் பொறுப்புணர்வும் அவசியம்தான். ஒரு படைப்பால் சமூகத்தில் அமைதி உருவாக வேண்டுமே தவிர வன்முறையோ பதற்றமோ அல்ல.
ஆனால் சமுதாயம் படைப்பாளிக்கும் படைப்புகளுக்கும் ஆற்றும் எதிர்வினை வன்முறைதான். அல்லது என் போன்ற நுட்பமான படைப்பாளிகளுக்கு நேரும் புறக்கணிப்பு. இந்த பாவக்கறை பெருமாள் முருகன் மீதும் இருக்கிறது.அவர் எத்தனை நுட்பமான படைப்பாளிகளின் திறன்களை மதித்தார் என்பது இப்போது பிரச்சினையல்ல
இப்போது பிரச்சினை பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் இறந்து விட்டார். இனி நான் பி.முருகன். என்னைை அமைதியாக வாழ விடுங்கள் என்று தமது முகநூல் பக்கத்தில் பெருமாள் முருகன் விடுத்த செய்திதான் தேசிய செய்தித் தொலைக்காட்சிகள் வரை தலைப்புச் செய்தியாகியிருக்கிறது.
THE AUTHOR IS DEAD என்று போஸ்ட் மாடர்னிச கொள்கையில் ஒரு கருத்தியல் உண்டு. அது தவறாக தமிழ்ச்சூழலால் புரிந்துக் கொள்ளப்பட்டதால் தான் பெருமாள் முருகன் போன்றவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். மறைந்த மணிக்கொடி எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராமன் இன்று என்ற பத்திரிகைக்கு அளித்திருந்த பேட்டியில் தமிழில் எழுத்தாளனாக பிறக்கவே கூடாது அது மிகப்பெரிய பாவத்திற்கான தண்டனை எனக் கூறியிருந்தார். இது பெருமாள் முருகன் வரை தொடர்கிறது. இதுவே ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தால் அருந்ததி ராய் மாதிரி கொண்டாடியிருப்பார்கள்.
ஆனால் பெருமாள் முருகன் ஒரு விஷயத்தில் சந்தோஷப்படலாம். அவர் இஸ்லாமைப் பற்றி எழுதவில்லை. மாதொருபாகனான சிவபெருமானைப் பற்றியல்லவா எழுதினார். அதனால் பிரச்சினை இத்துடன் விட்டது என ஆசிரியரை அவரே கொன்று விட்டு சாதாரண  பேராசிரியராக மற்ற நூற்றுக்கணக்கான மந்தைகளில் ஒருவராக வாழ்வது சுலபம்- ஈகோவை வி்டடுவிட்டால். இஸ்லாம் பற்றி எழுதியிருந்தால் சல்மான் ருஷ்டியைப் போலவோ, தஸ்லீமா நஸ் ரீனைப் போலவோ பத் துவா விதிக்கப்பட்டு மரண தண்டனைக்கு பயந்து நாடு நாடாக தப்பியோடிக் கொண்டிருக்க நேரிடும். சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலை எண்ணிப் பாருங்கள்.

பெருமாள் முருகனை நண்பர் என்றழைத்தேன். நட்புடன் ஒருவார்த்தை. தன்முனைப்பு, அகங்காரம், தான் ஒரு பெரிய படைப்பாளி என்ற பட்டங்களை இழக்க வேதனைப்படாதீர்கள். மகிழ்ச்சியுடன் LET GO சில ஆண்டுகள் குடும்பத்துடன் நிம்மதியாக வாழுங்கள். பின்னர் விரும்பினால் இன்னொரு புத்தகம் எழுதுங்கள்.வேறு பெயரிலும் எழுதலாம். அதற்கு சாகித்ய அகடமியும் கிடைக்கலாம். நாடே பாராட்டலாம்..வாழ்த்துகள்

ஒரேயொரு வேண்டுகோள்- தற்கொலை போன்ற பலவீனமான முடிவுக்குத் தள்ளப்படாமல் மனதின் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள். பல தடவை மனநலம் பாதிக்கப்பட்ட சூழ்நிலைகளில் ரயில் தண்டவாளங்களில் நின்று பெற்ற அனுபவ ஞானத்தையே உபதேசமாக அளிக்கிறேன்.












Sunday, 11 January 2015

புத்தகக் கண்காட்சி 2015

சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன். இந்த ஆண்டு போக வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, சுஜாதாவை விட இப்போதெல்லாம் கண்ணதாசன், வாலி, வைரமுத்து, சினேகன், தாமரை, யுகபாரதி போன்றோரைத்தான் பிடிக்கிறது.
இசையிலும் பாடல்களிலும் முழுமையான ஈடுபாட்டுடன் அடுத்த நாவலுக்கான களத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்.

ஆனாலும் புத்தகக் கண்காட்சிக்குப் போனேன்.
வழக்கம் போல அதிகமாக பணமில்லை. ஆனால் முக்கியப் புத்தகங்களை தவற விட இயலாது. இத்தனை ஆண்டுகளாக இப்படித்தான் வாழ்ந்துவிட்டேன். இனியும் மாற வேண்டியதி்ல்லை.
என் பட்ஜெட்டிற்கு உட்பட்டு கிடைத்த நல்ல புத்தகங்களை வாங்கினேன். ஷோபா சக்தியின்  கட்டுரைத் தொகுபபு மற்றும் கதைகளை கருப்பு பிரதிகள் அரங்கில் வாங்கினேன். திருவாரூரை சேர்ந்த தேன்மொழியின் சிறுகதைத் தொகுப்பு கவனம் ஈர்த்தது. வாங்கினேன். நகைச்சுவை நடிகர் பாலையாவின் வாழ்க்கை வரலாறு நிழல் வெளியிட்டிருந்தது. இதே போல தோழமை வெளியிட்டு சேவியர் எழுதிய கே.பாலசந்தரின் வாழ்க்கை வரலாற்றை வாங்கினேன்.சு.வேணுகோபாலின் இரண்டு புத்தகங்களும் இன்னும் சில முக்கிய நூல்களும், இதழ்களும் வாங்கி வந்தேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக எனக்குப்பிடித்த முத்து காமிக்ஸ் கிடைத்தது. இரும்புக்கை மாயாவி, சிஐடி லாரன்ஸ் டேவிட், ஜானி நீரோ ஆகிய ஹூரோக்களின் தலா ஒரு காமிக்ஸ் 50 ரூபாய் விலையில போட்டிருக்கிறார்கள். பழைய காமிக்சில் இருந்த சித்திரங்கள் போல் இதில் இல்லைதான். ஆனாலும் இதன் நாயகர்கள் காமிக்சின் சூப்பர் ஸ்டார்களாச்சே

முத்துகாமிக்ஸ் பதிப்பாளர் எஸ்.விஜயன், இணை இயக்குனர் பொன். சுதா, நிழல் திருநாவுக்கரசு, புதிய தரிசனம் இதழாசிரியர் ஜெபக்குமார், கவிஞர் மனுஷ்யப்புத்திரன் தமிழினி வசந்தகுமார் போன்ற சில நண்பர்களையும் சந்திக்க முடிந்தது.
சாப்பிட வாங்க கான்டீனில் இட்லியும் கல்தோசையும் அதன் துணையாக தந்த சாம்பாரும் அருமையாக இருந்தது

குட்பை புத்தகக் கண்காட்சி 2015

அடுத்த ஆண்டேனும் இன்னும் அதிகமாக பணம் சம்பாதித்து வருகிறேன்.


Friday, 9 January 2015

அறிவிப்பு

கடந்த 6 மாதங்களாக மனச்சோர்வு, பிரச்சினைகள் காரணமாக முழுமைப்படுத்த முடியாத இந்த இணைய வலைப்பக்கத்தை இனி கூடியமட்டும் அதிகமான கவனம் கொண்டு புத்துணர்வு அளிக்க திட்டமிட்டிருக்கிறேன். திரைப்படம் தொடர்பான எனது மற்றொரு தளம் முடக்கப்பட்டதால் இனி திரைப்படக் கட்டுரைகளையும் இங்கே வாசிக்கலாம்
அன்புடன்
செந்தூரம் ஜெகதீஷ்

Wednesday, 28 May 2014

கோச்சடையான்

அபிராமி 7 ஸ்டார் திரையரங்கில் கோச்சடையான் படம் பார்த்தேன்.முதலில் சில நிமிடங்கள் பிரமிக்க வைத்தது 3 டி தொழில்நுட்பம். ஆனால் படம் பெரும் ஏமாற்றம். ரஜினிமாதிரி ஒரு பொம்மை வந்து ஆடுகிறது, பன்ச் டயலாக் பேசுகிறது, சண்டை போடுகிறது.நாகேஷ், தீபிகா படுகோனே, ஜாக்கி சராப், நாசர் என நிறைய பொம்மைகள் வந்து வந்து போகின்றன. சோபனாவின் பொம்மை லோ -ஹிப் புடவை மட்டும் நிஜம் போல கிளர்ச்சியைத் தருகிறது.சினிமாவே பொம்மை எனும் போது இது பொம்மையின் பொம்மை என்று சொல்லத் தோன்றுகிறது. நான் ஒன்றும் தொழில்நுட்ப மாயங்களுக்கு எதிரியல்ல. இந்த தொழில்நுட்பத்தில் மகாபாரதமோ ராமாயணமோ எடுக்கலாம். அனுமானையும் கண்ணனையும் அப்படி பிரம்மாண்ட ரூபத்தில் பார்க்க ஆசைதான். ஆனால் ரஜினி.....
எஜமான் படத்தில் நிலவே முகம் காட்டு என மீனாவை ஒரு தாய் போல மடியில் தூங்க வைத்து பாடுவாரே அந்த உணர்வு மிஸ்ஸிங்.அதுவல்லவா எங்கள் ரஜினிகாந்த்.
ஹீரோவை சூப்பர் ஹீரோவாக காட்டியே அழிச்சுட்டாங்கப்பா

அந்த ரஜினியைத்தான் நானும் ரசிகர்களும் காண விரும்புகிறோம். வைரமுத்து, ஏ.ஆர்.ரகுமான், சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் உழைப்பும் பல்லாயிரம் தொழில்நுட்பக் கலைஞர்களின் திறமையும் வீணாகிப் போச்சே என்ற வருத்தத்துடன் தான் படத்தை விட்டு வெளியே வந்தேன்.

Thursday, 3 April 2014

படித்ததும் பார்த்ததும்

பல புத்தகங்கள் படிக்கப்படாமல் உள்ளன. ஜனவரி தொடங்கி இன்று வரை 17 புத்தகங்கள் மட்டுமே படித்திருக்கிறேன். 36 படங்களைப் பார்த்திருக்கிறேன். படிக்க வேண்டியவை 500 பார்க்க வேண்டிய படங்கள் ஆயிரக்கணக்கில். கண்கள், பற்கள், உடல்திறன், ஊக்கம் யாவும் வயதின் காரணமாக தேய்ந்து வருகின்றன. அடுத்த சில ஆண்டுகளில் உடலைப் பற்றியே அதிகம் கவலைப்பட நேரிடும். படிப்பும் படம் பார்க்கும் ஆர்வமும் என்ன ஆகும் என்றே தெரியவில்லை. அது ஒருபுறமிருக்க எழுத வேண்டிய பக்கங்கள் பதிப்பிக்க வேண்டிய புத்தகங்கள் என மனதை அழுத்தும் சுமைகள்....

அதுமட்டுமின்றி அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்கள். கடன்கள், பற்றாக்குறைகள்
----------------------------------

சமீபத்தில் மீண்டும் படித்த இந்திரா பார்த்தசாரதியின் ஏசுவின் தோழர்கள் கருணையில் ஏசுவையும் மார்க்சையும் ஒரு நேர்க்கோட்டில் இணைக்க முயன்ற எழுத்து. ஆனால் சலிப்பூட்டும் நடை, கம்யூனிச வியாக்கியானங்கள், போலந்து வாழ்க்கை முறைகள் என அந்நியமாக நிற்கிறது. இ.பா.வின் இதர புத்தகங்களை பார்க்கலாம்.

------------------------

கலீல் கிப்ரான் தனது ரகசிய ஸ்நேகிதி மேரி ஹட்சனுக்கு எழுதிய ஏராளமான கடிதங்களை அவர் பாதுகாத்து வைத்திருந்தார். அதே போல மேரி எழுதிய கடிதங்களை கிப்ரான் ஒரு பெட்டி நிறைய சேர்த்து வைத்திருந்தார். கிப்ரான் மரணத்திற்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட அந்த கடிதங்களை மேரியிடம் ஒப்படைத்தார் கிப்ரானின் உதவியாளர். தன்னைப் போல கிப்ரானும் கடிதங்களைப் பாதுகாத்ததை கண்டு மெய்சிலிர்த்த மேரி இருவரின் கடிதங்களையும் அச்சிட தந்து விட்டார். அப்படி அச்சான ஒரு புத்தகம்தான்
BELOVED PROPHET என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது. அதில் கிப்ரானின் வழக்கமான தெறிப்புகள் ஏராளம்....ஒரே நேரத்தில் ஒருவர் மலைச்சிகரத்தையும் அதன் பள்ளத்தாக்கையும் பார்க்க முடியுமா என்றொரு வரி....எனது உடலுறவின் ஆற்றலில் ஒரு பகுதியைத்தான் என் எழுத்தில் தருகிறேன் என்று கூறுகிறார்.தனது ஓவியங்களைப் பற்றியே அதிகமாகப் பேசுகிறார் கிப்ரான். அதுதான் அவருக்கு வருமானம் அளித்தது போலும். எழுத்தைப் பற்றி மிகச்சிறிய குறிப்புகள் உள்ளன.
மரணம் பற்றி சிந்திக்கிறார் . மரணித்துப் போனவர்கள் எங்கே போனார்கள்...நிச்சயமாக அவர்கள் எங்கேயோ இருந்துக் கொண்டுதான் இருப்பார்கள்.நம்மைப் போல அவர்கள் கடந்தகாலத்தை திரும்பிப் பார்க்க முடியுமா என கேட்கிறார்.நான் மறைந்த பிறகு எங்கே செல்வேன் என்றும் கேட்கிறார்.....
எங்கே போனாய் கிப்ரான்...?

எனக்கும் எழுந்துள்ளது இக்கேள்வி பல முறை...எங்கே போவேன்....எங்கே போனார்கள் எல்லோரும்......

இதைப்பற்றி நகுலன் எழுதியிருக்கிறார் நினைவுப்பாதையில். ஜானே வாலே லவுட்கே ஆஜா என்ற முகேஷ் பாடிய பாந்தினி படப்பாடலை வைத்து ஜானே வாலே என்ற சொல்லை மீண்டும் மீண்டும் பயன்படு்த்தினார் நகுலன்.

போகிறவர்கள் எங்கே போனார்கள்...என்ன ஆனார்கள்.....

கயிற்றரவு கதையில் புதுமைப்பித்தன் கேட்ட அதே கேள்விதான்.
----------------------------
பார்த்த திரைப்படங்களில் கிம் குக் டுக்கின் தி ஐசல் என ஒரு படம், ஜான் தாரா என்ற காமக்களியாட்ட படம் போன்ற படங்கள் பட்டியலிட்டு பேசலாம் என்றாலும் மனதுக்குள் நிற்பதென்னவோ பழைய ஆயிரத்தில் ஒருவன்தான். எம்ஜிஆரின் வாள்வீச்சு, ஜெயலலிதாவின் நடனம், பந்தலுவின் சலிப்பு தராத இயக்கம், நாகேஷின் மயக்கும் நகைச்சுவை, கண்ணதாசன் வாலியின் பாடல்கள் மெல்லிசை மன்னர்களின் இசை, ஆர்.கே.சண்முகத்தின் அற்புதமான வசனங்கள் என ஆயிரத்தில் ஒருவன் படத்தின் சிறப்புகள் ஏராளம்.
ஒரு வசனம்- உங்கள் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா நிரந்தரமாக நீடிப்பதற்கு....இந்த வசனம் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் சரியான அடி.. ஜெயலலிதாவின் அகங்கார ஆட்சிக்கும் சேர்த்துதான்











Thursday, 27 March 2014

கோமல் ஸ்வாமிநாதனின் பறந்து போன பக்கங்கள்

கோமல் சுவாமிநாதனை அதிகமாக அறிந்ததில்லை. அவர் நடத்திய ஓர் இந்திய கனவு நாடகத்தைக் காண தி.நகர் வாணி மகாலுக்கு நண்பர் இளையபாரதியுடன் போயிருக்கிறேன். அங்கு சிகரம் செந்தில்நாதன் ஆட்களுக்கும் இளையபாரதிக்கும்  நடந்த அடிதடியில்,தப்பியது தலைபுண்ணியம். அடுத்து கோமல் ஸ்வாமிநாதன் நடத்திய கூட்டத்திற்கு ஜெயமோகனுடன் போனேன். அங்கும் அறிவுமதி அண்ட் கோ நாற்காலிகளை எடுத்து ஜெயமோகன் மேல் வீச கையைப் பிடித்து அவரை இழுத்து வந்த போது ஒரு கார் எங்களை ஏற்றிக் கொண்டது. அக்காரில் வந்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா.
இன்னொரு முறை கோமல்சுவாமிநாதனை நான் பார்த்த போது விஷம் சாப்பிட்டிருந்தேன்.
கோவையில் நடைபெற்ற சுபமங்களா நாடகவிழா- 94 ம் ஆண்டு. அப்போது அங்கு இருந்த கோமல் ஸ்வாமிநாதனை சந்திக்க நேர்ந்தது. ஆனால் குடும்பத்தில் நிலவிய கடுமையான சிக்கல்கள், மன உளைச்சல்களால் அருகில் இருந்த கடையில் எலி விஷம் 10 பாக்கெட் வாங்கி ஒன்று சாப்பிட்டு மீதி வைத்திருந்த போதுதான் கோமலை சந்தித்தேன். அப்போது எம்.வி.வெங்கட்ராமனின் காதுகள் நாவலுக்கு சாகித்ய அகதமி கிடைத்திருந்தது. அதற்கு சுபமங்களாவில் காதுகள் பற்றியும் எம்.விவியை சந்தித்தது பற்றியும் நான் எழுதிய கட்டுரையும் சிறிய அணில்பங்காற்றியது.
(( நீங்கதான் எனக்கு சாகித்ய அகடமி கிடைக்க காரணம் என்று எம்.விவியே நேரில் என்னிடம் உருக்கத்துடன் கூறினார் )) எம்விவிக்கு சாகித்ய அகடமி கிடைக்க சுபமங்களா கட்டுரை காரணமானது பற்றி கோமலுடன் பேசினேன். தரையில் சப்பணமிட்டு சாதாரண மனிதராக அமர்ந்திருந்தார். மிகவும் மகிழ்ச்சியுடன் பேசினார். நான் எழுத நினைத்ததை நீங்க எழுதிட்டீங்க என்று கையைப் பிடித்துக் கொண்டார். அப்புறம் அந்த எலி விஷத்தை நண்பர்கள் பிடுங்கி எறிந்தது எல்லாம் தனிக்கதை
கடைசியாக அவர் மரணப் படுக்கையில் இருந்த போது மேற்குமாம்பலத்தில் உள்ள அவர் வீட்டுக்கு ஜெயமோகனுடன் போய் பார்த்தேன். அடையாளம் தெரிந்துக் கொண்டாலும் அவரால் பேச இயலவில்லை. சில நாட்களில் அவர் இறந்ததாக அறிந்து வேதனைப்பட்டேன்.

----------------
பழைய புத்தகக் கடையில் கோமல் சுவாமிநாதனின் பறந்துப் போன பக்கங்கள் கிடைத்தது. நாடக, திரையுலக பத்திரிகையுலக அனுபவங்களை அதில் அவர் பதிவு செய்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முதல் மரியாதையில் நடித்ததற்கு தேசிய விருதுக்காக நடுவராக இருந்த கோமல் பரிந்துரை செய்த போதும் ஜெயாபச்சனால் அந்த பரிசு சசிகபூருக்கு போனதை கோமல் பதிவு செய்துள்ளார். இதே போன்று வைரமுத்துவுக்கு தேசிய விருது கிடைக்க தாம் பாரதிக்கு அடுத்த பெரிய கவிஞரே இவர்தான் என 20 நிமிடம் அடித்துப் பேசவேண்டியிருந்தது என்றும் கோமல் கூறினாராம். வைரமுத்துவுக்கு கிடைத்தது , சிவாஜிக்கு கிடைக்கவி்ல்லை.
வீடு ஜப்தி செய்யப்படுவதா தண்டோரா போடப்பட்டுக் கொண்டிருக்கும் போதும் நடிப்புப் பயிற்சியளிப்பதில் குறியாக இருந்த பழம்பெரும் நடிகர் சகரஸ்நாமம், கோமல் என்ற பெயரை கோல்மால் என உச்சரித்து சிரித்த நடிகை நூதன், தாஜ்மகால், டெல்லி, வாரணாசி பயணங்கள், தாஜ்மகாலில் நீரி்ல் விழுந்த குழந்தையை காப்பாற்ற வீரதீரமாக குதித்த நடிகரை அந்தக் குழந்தை கைகொட்டி சிரித்து கேலி செய்தது, நடிகர் முத்துராமன் கிண்டலடித்தது  போன்ற ஏராளமான தகவல்களை இந்நூல் அள்ளித் தருகிறது. சுபமங்களாவில் நான் ஓரே ஒரு கட்டுரையும் சில கடிதங்களும் மட்டும்தான் எழுதியிருக்கிறேன். கோமலுடன் பழகியதும் இவ்வளவுதான். ஆனால் மனதுக்குள் பெரிய தாக்கம் பாதிப்பை அவரால் ஏற்படுத்த முடிந்தது. மற்ற கம்யூனி்ஸ்ட் தோழர்களைப் போல அவர் இறுகிய மனிதராக இல்லை. ஆனாலும் திருவனந்தபுரம் திரைப்பட விழாவில் நடுவராக அழைக்கப்பட்டது, பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு யார் செலவிவோ அரசு செலவிவோ அவர் பயணம் போனது போன்றவற்றை படிக்கும் போது ஒரு ஜோல்னா பையும் குர்தாவும் அணிந்தால் நல்ல இன்டலக்சுவல் லுக் வந்துவிடும் என்று தோன்றுகிறது. வாழ்க்கையை இத்தனை சுமையாக கழிக்காமல் கோமல் போல சுகமாக கழித்திருக்கலாம் என்று தோன்றாமல் இல்லை
---------------------------------


Sunday, 9 March 2014

உலக சினிமா THE MAN WHO LOVED WOMEN

FRANCOIS TRUFFAUT இயக்கிய THE MAN WHO LOVED WOMEN

பெண்கள் மீதான ஈர்ப்பு அறுபது வயதிலும் குறைவதில்லை. வயதுக்கும் மனதுக்கும் சம்பந்தமிருப்பதில்லை. முதியவர் குழந்தையைப் போலும் நடந்துக் கொள்ள முடியும். எப்போ பார்த்தாலும் ஹைஸ்கூல் பையன் போல நடந்துக்கறே என்று காதலியால் திட்டு வாங்கிய அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கும்.
ஆதமின் முதுகெலும்பிலிருந்து தேவனால் படைக்கப்பட்ட பெண் ஓர் அற்புதம். அவள் உடல் அழகு, கண்கள், கூந்தல்,மார்பகங்கள், யோனி, வாளிப்பு, நறுமணம், குரல், சிரிப்பு, இடை என ஆண்களை வீழ்த்தும் பல ஆயுதங்கள் அவளிடம் உண்டு. ஆண்களில் மட்டும்தான் தேவதாஸ்கள் தோன்றுவார்கள். ஆண்கள்தான் தாஜ்மகால்களை கட்டுவார்கள். ஆண்கள்தான் காதலுக்கு உயிரைத் துறப்பார்கள். பெண்கள் மிக குறைந்த அளவிலேயே காதலில் தீவிரமாக இருக்கிறார்கள். தாய்மையும் குடும்பநிர்வாகமும் தான் அவர்களின் தனிச்சாதனை.

பல பெண்களை நேசிக்கிற ஒரு நடுத்தர வயது மனிதனின் கதைதான் பிராங்கோ ட்ரூஃபாட்டின் இந்த திரைப்படம். கதாநாயகன் முதல்பார்வையில் ஒரு பொம்பளைப் பொறுக்கி போல தோன்றலாம். உமன் ஈட்டர் என்று ஓரிடத்தில் அவன் காதலி கூறும்போது, எனக்கு அத்தகைய ஆண்களைப் பிடிக்காது என்கிறான் சார்லஸ் டெனர்.
பெண்களின் கால் அழகுதான் அவனை ஈர்க்கும் முதல் விஷயம். மினி ஸ்கர்ட்டில் நடந்து செல்லும் கால்களை அவன் ரசிக்கிறான். மினி ஸ்கர்ட் மீண்டும் குறைய முடியாமல் வளர்ந்து மிடியாக மாறுவதையும் ஓரிடத்தில் குறிப்பிடுகிறான். பெண்களின் கால்கள் கம்பஸ் கருவியைப் போல ( compass) என்று கூறுகிறார் இயக்குனர் ட்ரூஃபாட்.ஒரு கால் மரபை மீறாமல் உறுதியாக ஊன்றியிருக்க மற்றொரு கால் உலகை சுற்றுவதாக கூறுகிறார்.
ஒரு அங்காடியில் பெண்ணின் கால்களைப் பார்த்து, அவள் முகவரியைப் பெற போலியாக ஒரு விபத்தை உருவாக்கி, அவள் கார் நம்பர் மூலம் அவள் முகவரியை கண்டுபிடித்து, தொலைபேசியில் அவளுடன் கொஞ்சி பேசி சிரிக்க வைத்து அவளை உணவுவிடுதிக்கு அழைத்து லெமன் சாம்பெயின் அருந்துவது வரை அவனுக்கு வெற்றிதான். ஆனால் அந்தப் பெண் நான் அல்ல என்கிறாள் அங்கு வந்தவள். அவள் கால்களை பார்க்க முடியாதபடி பேண்ட் போட்டு வந்திருக்கிறாள். அவள் தனது  ஒன்றுவிட்ட சகோதரி என்றும் தேவையானால் அவள் முகவரியைத் தருவதாகவும் அந்தப் பெண் கூறுகிறாள். இந்த முக்கியமான காட்சிதான் படத்தின் ஆரம்பம். ஆனால் அவன் வேண்டாம் என்று திரும்பிச் செல்கிறான். அவன் உமன் ஈட்டர் இல்லை என்பதற்கான ஒரு சிறிய உதாரணம் இக்காட்சி. அந்தப் பெண்ணையும் அவன் தொடவில்லை. முகவரி தேடி இன்னொரு பெண்ணையும் தேடிச் செல்லவில்லை. மாறாக இந்த பேண்ட் பெண்ணை கண்டுபிடிக்க தனக்கு உதவிய வாடகைக் கார் நிறுவன அழகியை படுக்கைக்கு அழைத்துச் செல்கிறான். முதல் பார்வையிலேயே அழைப்பு விடுக்கும் அந்தப் பெண்ணை அவன் எளிதாக சாய்க்க முடிகிறது.
இடையில் கதாநாயகனின் பால்ய காலம் காட்டப்படுகிறது. அவன் தாய் மினி ஸ்கர்ட்டில் வேகமாக நடப்பதை வழக்கமாக கொண்டிருந்தாள். தான் ஒரு விபச்சாரி என்பதை மறைத்து தன்னுடன் நேரடியாக யாரும் பேரம் பேசலாம் என்பதை மறைத்து, வேகமாக நடப்பதன் மூலம் பலரது கவனத்தை கவர்வது அவள் உத்தி. அவளைப் பின்தொடர்ந்து வந்து பைத்தியமாக ஆனவர்கள் பலர். அதனால்தானோ என்னவோ அவனுக்கு ஸ்கர்ட் அணிந்த கால்கள் மீது ஈர்ப்பு குறையவில்லை.

ஒவ்வொரு பெண்ணிடத்திலும் ஆண் தேடுவது தனது தாய் மடியை என்று உளவியல் அறிஞர்கள் கூறுவதை இங்கு நினைவுகூரலாம்.
ஏராளமான பெண்களுடன் பழகும் அவன் சிலரால் ஏமாற்றத்துக்கும் ஆளாகிறான். அவனைப் போல நடுத்தர வயதை அடைந்த உள்ளாடைக் கடை அழகி ஹெலினா ஒரு உதாரணம். அவனுடன் கொஞ்சி பேசுகிறாள். உடைமாற்றும் பெண்களின் மார்பகங்களைப் பற்றி கூச்சமில்லாமல் அவனிடம் பகிர்ந்துக் கொள்கிறாள். அவள் செம்மை ஈசியாக படிவாள் என்று சார்லஸ் டெனர் நினைக்கும் போது அவளோ எனக்கு உன்னைப் போல வயதான ஆண்களுடன் உறவு கொள்ள விருப்பமில்லை. எனக்கு சின்னப் பையன்கள் மீதுதான் ஆசை என்கிறாள்.
இதே போன்று அவனால் மிகவும் காதலிக்கப்பட்டு அவன் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளாமல் பிரிந்துப் போன மற்றொரு பெண் வேரா.
தான் சந்தித்த பெண்களைப் பற்றிய நினைவுகளை புத்தகமாக எழுத நினைக்கிறான் சார்லஸ். அவன் டைப் செய்த பிரதிகளை திருத்தி மீண்டும் தட்டச்சு செய்யும் பெண் அந்தப் பிரதியை திருப்பித் தந்துவிடுகிறாள். உன் புத்தகம் என்னை மிகவும் அலைக்கழிக்கிறது. அதன் உண்மை என்னை சுடுகிறது. ஆனால் அதை நான் ஏற்க முடியாது. நான் குடும்ப பெண். ஒழுக்கத்தை மதிப்பவள். என்று அவள் நல்ல விதமாக அவனை நிராகரிக்கிறாள். அவனை மட்டுமல்ல, அவனுக்குள் இருக்கும் படைப்பாளியையும் நிராகரிப்பது அவனுக்கு மிகவும் வலிக்கிறது.
ஆனால் அந்தப் புத்தகத்துக்காக வாதாடி, அதை பதிப்பிக்க முன்வரும் பெண் பிரிட்ஜட். அவள் மட்டும்தான் அவன் புத்தகம் மூலம் அவன் காதலித்த அத்தனைப் பெண்களையும் உணர்ந்தவள். அவளும் அவனது எண்ணற்ற காதலிகளில் ஒருத்தியாக மாறுகிறாள். ஆனாலும் ஒரு உண்மையை அவள் உணர்கிறாள். அவன் எந்தப் பெண்ணையும் கட்டாயப்படுத்தியதில்லை. வசப்படுத்தியிருக்கிறான். அவனிடம் வலிய வந்து விழுந்தவர்களை தொட்டிருக்கிறான். பதிப்பாளரான தன்னை கவர்ந்து தன்னை படுக்கையில் சாய்த்தவன், தன்னிலும் அழகான அச்சுக் கோர்க்கும் லே அவுட் ஆர்ட்டிஸ்ட் பெண்ணை தொடவே இல்லை என்பதுதான் அவனது குணாதிசயத்தின் ஆச்சரிய முரண் என்று அவள் உணர்கிறாள்.
பணம் கேட்டவர்களுக்கு பணத்தைக் கொடுத்தான். அன்புக்காக அழுதவர்களுக்கு அன்பை வாரியிறைத்தான். உடல் பசிக்காக வந்தவர்களுக்கு ஆண்மையின் இன்பத்தை அள்ளித் தந்தான். ஏமாற்றம் தந்தவர்களையும் எளிதாக மறக்கப் பழகிக் கொண்டான். அவன் யாரையும் ஏமாற்றவில்லை. அவன் பெண்களை வீழ்த்தவில்லை. பெண்களை அவன் நேசித்தான். பெண்கள்தான் அவனை வீழ்த்தியவர்கள். ஏமாற்றம் தந்தவர்கள். கடைசியில் பெண்ணின் கால்களைப் பார்த்து சாலையைக் கடக்கும்போதுதான் அவன் காரில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். அங்கும் நர்சின் கால் அழகை கண்டு படுக்கையிலிருந்து எழ முயன்று ரத்த பாட்டில் சிதற மரணமடைகிறான். அவன் கல்லறையில் ஒரு ஆண்கூட இல்லை. ஆனால் ஏராளமான பெண்கள்.

இந்தப் படத்தில் இன்னும் சில முக்கியமான காட்சிகள் உண்டு. ஸ்டோர்சில் ஒரு பெண் வேலை தேடி தனது போன் நம்பரை எம்பிளாய்மெண்ட் கவுண்ட்டரில் ஒட்டிச் செல்கிறாள். அந்த நம்பரை வைத்து குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் வேலைக்கு அவளை அவன் அழைக்கிறான். வீட்டுக்கு வரும் அவள் குழந்தையை காணவில்லை என்று தேடி படுக்கையில் இருந்து ஒரு பொம்மையை எடுத்து வந்து இதுதான் குழந்தையா என்று கோபமாக கேட்க, இல்லை நான்தான் அந்த பேபி என்கிறான் சார்லஸ்.
இவன் மேல் பைத்தியமாகிறாள் ஒருத்தி.நெல்லி என்ற அந்தப் பெண்ணின் கணவர் ஒரு டாக்டர். ஒரு ரெஸ்டாரண்டில் தன் மீதான அவள் பார்வையை அவன் கவனித்து விடுகிறான். ரெஸ்டாரண்ட்தான் பட்சிகளைப் பிடிக்க நல்ல இடம் என்பது அவன் அனுபவம். உணவுப் பரிமாற லேட்டாகும்போது கணவனால் மனைவியை ஜாலியாக வைத்துக் கொள்ள முடியாது என்பது அவன் அனுபவம். இருவரும் போரடித்து உட்கார்ந்திருப்பார்கள். அந்த பலவீனமான நேரத்தில் பெண்ணை ஈசியாக கவர முடியும் என்று அவன் முயற்சிப்பது வீண் போகவில்லை.
அவனுக்காக அவள் கணவரை சுட்டுவிட்டு ஜெயிலுக்குப் போகிறாள். அவன் அந்தக் குற்றத்தில் பங்குதாரனாகிவிட்டானா...இல்லை. அதற்கும் ட்ரூஃபாட் ஒரு விளக்கம் தருகிறார். அவள் ஏற்கனவே தனது கணவனுடன் வாழவே முடியாத எல்லைக்கு சென்றுவிட்டாள். கணவனைக் கொல்ல வேண்டும் என்று அவன் கூறவில்லை. அது அவளது உளவியல் பிரச்சினை.
அவனது சுயசரிதை நாவலில் அவன் எழுத மறந்துவிட்ட ஒருத்தியைப் பற்றி எழுத வேண்டும் என்று பதிப்பாளர் பிரிட்ஜட்டிடம் கூறும்போது அதை தனி புத்தகமாக எழுது என்று ஆலோசனை கூறுகிறாள். ஸ்கர்ட் சேசர் என்ற அவன் புத்தகத்தின் தலைப்பையும் அவள் தி மேன் ஹூ லவ்ட் உமன் என்று மாற்றியமைக்கிறாள். அவனை மிகவும் நுட்பமாகப் புரிந்துக் கொண்டவளும் அவள் மட்டும்தான். அதன் மூலம் தன்னையும் அவள்  தன் போன்ற இதரப் பெண்களையும் அவள் புரிந்துக் கொள்கிறாள்.
பிராங்கோ ட்ரூஃபாட்டின் இந்த திரைப்படம் 70 களின் பிரான்ஸ் வாழ்க்கையையும் இன்றைய இந்திய வாழ்க்கையையும் சித்தரிக்கிறது. அதனால்தான் படம் வெளியாகி 30 ஆண்டுகளாகி விட்ட போதும் இந்தப் படம் புத்தம் புதிதாக இருக்கிறது.

(( இக்கட்டுரை மே 2015 தீராநதியில் வெளியாகியுள்ளது ))

Sunday, 2 March 2014

மரண தண்டனை

வாழ்க்கையே ஒரு தண்டனை என்பது போல் வாழும் நிலை சிலருக்கு. அதிலும் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் கழித்தவர்களுக்கு மரண தண்டனை என்பது முற்றிலும் மனிதாபிமானமற்றது. சட்டத்தின் பார்வை எதுவாயினும் மனிதாபிமான அடிப்படையில் மரண தண்டனைகள் ஏற்கக் கூடியவை அல்ல. ஆனால் கசாப் போன்ற தீவிரவாதிக்கு மரண தண்டனை நியாயமாக தெரிகிறது. கோவையில் குழந்தைகளை கடத்தியவனை துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் என போலீசார் வழக்கை முடித்ததும் நியாயமானதுதான் என்று தோன்றுகிறது. இது பற்றிய விரிவான கட்டுரை ஒன்றை பூக்கோ, ஆல்பர்ட் காம்யூ, சார்த்தர் சிந்தனைகளுடன் எழுத நினைக்கிறேன்.

Saturday, 1 March 2014

ஓஷோவின் புத்தகம்





ஜப்புஜி சாகி்ப் பற்றி கேள்வி்ப்பட்டிருக்கிறீர்களா....அது சீக்கிய குருநானக்கின் புனித நூல், இதைப் பற்றி ஓஷோ எழுதினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது அமிர்தசரசி்ல் பொற்கோவிலைப் பார்க்கும் போது.
அண்மையில் டெல்லி சென்ற போது பொற்கோவில் சென்றேன். அப்போது குருநானக்கின் போதனைகளைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது. எங்கள் வீட்டிலேயே மிகப் பழைமையான குரு கிரந்த சாகிப் புனித நூலை பரமபரை பரம்பரையாக பாதுகாத்து வருகிறோம். அது குரு முகி எனப்படும் சீக்கிய மொழியில் எழுதப்பட்டது. அப்பாதான் அவ்வப்போது படித்து அதைப் பற்றி பேசுவார்.
எந்த ஒரு புனித நூலைப் படிக்கும்போதும் அதுபற்றி ஓஷோவின் கமெண்ட்டுகளையும் சேர்த்து நினைவு கூர்வது வழக்கமாகி விட்டது. ஓஷோ அக்குவேறாக ஆணி வேறாக பிரித்து அர்த்தம் சொல்வார் என்பதற்காக அல்ல. சில சமயம் அவர் சம்பந்தப்பட்ட புனித நூலுக்கு எதிராகவே பேசுவார். மிகவும் ஆபத்தானவர் ஓஷோ. ஆனால் பகவத் கீதை பற்றிய ஓஷோவின் கமெண்ட்ரி படித்து பிரமித்திருக்கிறேன். ஓஷோவின் ஊடுருவல்கள், இடைச் செருகல்கள் மிகவும் கவித்துவமாக அமைந்திருந்தன. பாரதப் போரின் இருபுறம் பாண்டவர்களும் கௌரவர்களும் அணிவகுத்து நிற்க சாரதியான கண்ணன் தேரை நடுவில் குறுக்கே ஓட்டி வந்து நிற்பதாக கூறும் ஓஷோ கடவுள் நன்மைக்கும் தீமைக்கும் இடையே நின்று பகவத் கீதையை உபதேசித்ததாக கூறுகிறார். இது பிரமிக்க வைக்கும் ஒரு அவதானிப்பு
இதனால் இயல்பாகவே ஓஷோ குருநானக் பற்றி எழுதியிருந்தால் அதைப் படிக்க வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது. அந்த ஏக்கத்துடனே டெல்லியிருந்து சென்னை வந்தேன். ஆனால் மீண்டும் அடுத்த சில வாரங்களில் கோவை சென்றேன். அங்குள்ள பழைய புத்தகக் கடைக்கு போன போது எனக்காகவே அங்கு ஓஷோவின் ஜப்புஜி சாகிப் பற்றிய புத்தகம் காத்திருந்தது. அது எங்கேயாவது காத்திருக்கும் என்று எனக்கும் தெரிந்தே தான் இருந்தது.
முதல் வரி ஏக் ஓம்கார் சத்னாம் இதற்கு ஓஷோ விளக்கம் கூறுகிறார். ஓம் என்பதே முதல் மெய்மைப் பெயர் என்கிறார் நானக். சீக்கியரின் மொத்த போதனையும் இந்த ஒரு வரியில் அடங்கிவிடுகிறது என்று ஓஷோ கூறுகிறார்.
தமிழிலும் ஓம் என்று மந்திரம் முருகப் பெருமானுடன் ஒலிக்கிறது. நான் பாதி தமிழனாகவும் பாதி சீக்கியனாகவும் வாழ்வதற்கும் இந்த ஓம் என்ற மந்திரத்திற்கும் இப்போது பொருத்தத்தை தேடிக் கொண்டிருக்கிறேன்.

Thursday, 12 September 2013

Albert Camus -அபத்த வாழ்வும் தற்கொலை எண்ணமும்


அபத்த வாழ்வும் தற்கொலை எண்ணமும்

( ஆல்பர்ட் காம்யூவின் தத்துவார்த்த தர்க்கத்தை பின்தொடர்ந்து.......)

வாழ்க்கை அபத்தமானது என்பதை சுயசிந்தனை கொண்ட மனிதன் ஒருமுறையாவது உணர்ந்திருப்பான். வாழ வேண்டுமா இல்லையா என்ற கேள்வி ஒரு தத்துவார்த்த பிசாசாக விஸ்வரூபமெடுத்து ஹேம்லட்டை போல தன்னை உலுக்கிக் கொண்டிருப்பதை அவன் கட்டாயம் உணர்ந்திருப்பான்.
தற்கொலை உணர்வு மிகவும் ஆரோக்கியமான மனிதர்களுக்கும் நேரிடுகிறது. பாலியல் இன்பம், புகழ், பணம், ராஜபோக வாழ்வு எல்லாம் இருந்தும் நடிகைகள் தற்கொலை செய்வதைப் படிக்கிறோம்.
மனம்தான் தற்கொலையின் விதை ரகசியமாக வளரும் மண். அது வளர்வதே நமக்குத் தெரியாது என்பது உளவியல் நிபுணர்களின் கருத்து. திடீரென ஒருநாள் காலையில் ஒருவர் தூக்குமாட்டிக் கொள்வதோ, கடலிலோ ரயிலிலோ பாய்ந்து உயிரை விடுவதோ அந்தக்கணத்தில் நிகழ்ந்த தீர்மானம் போல தெரிந்தாலும் அக்கணத்திற்கான மனநிலையை அவன் பலமுறை அடைந்திருக்கிறான். தள்ளிப் போட்டும் தவிர்த்தும் வந்திருக்கிறான்.
ஆல்பர்ட் காம்யூ இருத்தலியலின் நவீன வாழ்க்கை சிக்கல்களை எழுதிய படைப்பாளி. தமது படைப்பு அனுபவம், தத்துவார்த்த தேடல் மூலம் அவர் தற்கொலையின் வேர்களை இனம் காண முயற்சிக்கிறார்.
தி மித் ஆப் சிசிபஸ் என்ற அவரது கட்டுரை தொகுப்பு இத்தேடலில் திளைக்கிறது.
படைப்பு மனதுக்குள் ரகசியமாக கிளர்வதைப் போலத்தான் தற்கொலை உணர்வும் முளைத்து வருகிறது என்கிறார் காம்யூ.
சிசபஸ் ஒரு கிரேக்க வீரன்.அவனுடைய கதை குறியீட்டுத் தன்மை கொண்டது. பெரும் பாறை ஒன்றை மலை உச்சிக்கு உருட்டிக் கொண்டு போன அந்த பலசாலி வீரன் உச்சியை அடைந்தாலும் பாறையை அதன் இடத்தில் பொருத்தி விட முடியாமல் தன் கரங்களால் தாங்கி சுமந்தபடி மலைமுகட்டில் நிற்கிறான். கையை விட்டால் பாறை அவனையும் சேர்த்து உருட்டிக் கொண்டு போய் அதலபாதாளத்தில் தள்ளி அவனை புதைத்து விடும். எனவே வாழ்நாள் முழுவதும் உருண்டுவிடாதபடி அந்தப் பாறையைத் தாங்கிப் பிடிக்கும் சாபத்திற்கு ஆளாகிவிட்டான். தற்கொலை செய்பவனின் மனநிலையை சிசபசுடன் பொருத்துகிறார் காம்யூ,
வீணாகிப் போன உழைப்பும் அவநம்பிக்கையும் எஞ்சும் சிசபசை கடவுள் கண்டித்தாராம். வாழ்க்கையை வீணடித்துவிட்டாயே என்று மனதும் கண்டிக்கிறது.
வாழ்க்கை பலமுறை அபத்தமாக இருக்கிறது. மனிதன் அபத்தமானவனாக இருக்கிறான். அபத்தமான இந்த வாழ்க்கையை நுட்பமான உணர்வுடைய மனிதன் மறுக்கிறான். இயற்கையின் விதியாக இதை அவன் ஏற்கவில்லை. அப்படி விதிக்கப்பட்டால் அதை நான் தூக்கியெறிகிறேன் என்று தற்கொலையாளனும் ஒரு கலகக்காரனாகிறான். காரணங்களால் நிறைந்திருக்கும் உலகில் வாழ்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருப்பினும் எனக்குப் பிடிக்காத ஒரு வாழ்க்கையை நான் சுமக்க கட்டாயப்படுத்தப்படும்போது தற்கொலை என்பது அதிலிருந்து விடுதலை அளிப்பதுடன் நிர்ப்பந்த வாழ்வுக்கு எதிரான கலகமாகவும் காட்சியளிப்பதாக ஆல்பர்ட் காம்யூ விவரிக்கிறார்.
படைப்பாளிகளிடம் தற்கொலை உணர்வும் இத்தகைய கலகத்தன்மையும் அதிகமாக காணப்படுகிறது. தஸ்தயேவஸ்கியின் டைரி ஆப் மேட்மேன் கதையில் வரும் கிரிலோவையும் காப்காவின் குற்ற உணர்வு கிறித்துவத்தின் அறத்திற்கு எதிராக கிளர்ந்து அவரது விசாரணை கதையில் உச்சத்தை தொட்டதையும் காம்யூ அபாரமான வாசக ஞானத்துடன் விவரிக்கிறார்.
தற்கொலை மட்டுமின்றி கொள்கைக்காக மதங்களுக்காக அரசியலுக்காக நிகழ்த்தப்படும் கொலைகளையும் ஆல்பர்ட் காம்யூ மன நிர்ப்பந்தமாக காண்கிறார். அத்தகைய வெறித்தனமான செய்கைகளுக்கு சிறுவயது முதலே கொலையாளியின் மனம் தயாராகி வருவதை அவர் குறிப்பிடுகிறார். திடீரென அது தன் வன்முறையை ஒருநாள் கட்டவிழ்த்துவிடுகிறது.
தற்கொலை செய்பவன் தனக்கும் தன் குடும்பத்திற்கும் தீங்கு இழைத்துக் கொள்கிறான். ஆனால் கொலையாளியோ இச்சமூகத்திற்கே தீங்கு விளைவித்து மனித உயிர்களின் மதிப்பையே குறைத்துவிடுகிறான்.
----------------------------


Wednesday, 11 September 2013

The Book of mirdad - Mikhail Naimy

மைக்கேல் நேமி



மீர்தாத்தின் புத்தகம்

லெபனான் நாட்டு மகாகவி கலீல் கிப்ரானின் ஆப்த நண்பர் மைக்கேல் நேமி. இவரது கற்பனைப் பாத்திரம் தான் மீர்தாத். இந்த மீர்தாத் தான் கலீல் கிப்ரானின் தீர்க்கதரிசி ( Prophet) என்று கூறுபவர்கள் உண்டு.
மிகப் பெரிய ஆன்மீகப் பொக்கிஷமாக கருதப்படும் மீர்தாதின் புத்தகத்தை என்னைப் போல கோவை நண்பர் ராஜேந்திரனும் தேடி வந்தார். இருவரும் தனித்தனியாக அதை கைப்பற்றினோம்.
தற்போது அது ஆங்கிலத்திலும் தமிழில் கண்ணதாசன் பதிப்பகத்தில் சுமாரான மொழிபெயர்ப்பிலும் கிடைக்கிறது.
இந்தப் புத்தகத்தை புரிந்துக் கொள்வது சற்று சிரமம். மிகவும் எளிமையான கவித்துவம் நிரம்பிய வரிகள்தாம். ஆனால்  அதை உள்வாங்கிக் கொள்ள ஏதோ ஒரு ஆத்ம நிவேதனம் இருக்க வேண்டும். ஓஷோ படிக்கும் நண்பர்களுக்கு அது எளிதில் வசப்படலாம்.
இந்த புத்தகத்தை பைபிள் போலவோ கீதையைப் போலவோ படிக்காதீர்கள் என்பார் ஓஷோ.கவிதைப் புத்தகத்தை படிப்பது போல தியானத்திலிருந்து எழுந்தவர் பேசுவதைக் கேட்பது போல படியுங்கள் என்பார்.
மீர்தாத்துக்கும் அவர் சீடர்களுக்கும்  இடையே நடைபெறும் உரையாடல்தான் இந்தப் புத்தகம்.அவரது பிரதான சீடர் நரோன்டாவின் கேள்விகளுக்கு மீர்தாத் பதிலளிக்கிறார்.
மனித உறவுகள், அன்பு, பணம், மரணம், நோய் போன்ற பல்வேறு விஷயங்கள் இந்நூலில் அலசப்படுகின்றன. ஒரு புனைகதையின் சுவாரஸ்யத்துடன் இது எழுதப்பட்டிருக்கிறது.
தாவோவைப் போல முரண் வாக்கியங்களில் பொதிந்துள்ள அர்த்தங்களையும் அபத்தங்களையும் மீர்தாத்தின் சொற்கள் வெளிப்படுத்துகின்றன.
கைத்தடி இல்லாமல் நடப்பவன் தடுமாறி விழுவதில்லை.
வீடற்றவர்களே மகிழ்ச்சியானவர்கள், அவர்களே வீடுபேறு அடையத் தக்கவர்கள்.
என்று இதில் கூறப்படுகிறது. லௌகீகங்களுக்குப் பற்று இல்லாதவர்களே உண்மையான வீட்டைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கும் நிலத்தை வளைப்போருக்கும் சொத்து குவிப்போருக்கும் சொல்லி புரிய வைக்க முடியாது. அதை ஒப்புக் கொள்ள அதிசுத்தமான நேர்மையும் வெகுளித்தனமும் வேண்டும்.
உண்மையில் மகத்தானது என்பது மிகவும் தாழ்த்தப்பட்டிருப்பதுதான்.
மிகச்சிறந்த வேகம் என்பது மெதுவாக செல்லுதல்தான்.
மிகவும் உணர்வுப்பூர்வமான மனிதன் பேசா மடந்தையாயிருப்பான்.
வழிகாட்டியே இல்லாமல் நடப்பவன் நிச்சயமான வழிகாட்டியாக மாறுவான்.
தன்னிடம் இருப்பதை எல்லாம் கொடுக்கத் தயாராக இருப்பவனே எல்லாவற்றையும் அடையும் பேறு பெற்றவன்.
மனிதர்கள் தங்களுக்குள் இடித்துத் தரைமட்டமாக்கி விட்ட ஆன்மீக கோவிலை மீண்டும் கட்டியெழுப்புபவராக மீர்தாத் வருகிறார். மனிதர்கள் மறந்துவிட்ட மனிதத்தை அவர் உயிர்ப்பிக்கிறார்.
உங்கள் கண்களுக்கு முன்னால் ஏராளமான மூடுதிரைகள் தொங்கி உங்கள் பார்வையை மறைக்கின்றன.
உங்கள் உதடுகளில் ஏராளமான பூட்டுக்கள் போடப்பட்டுள்ளன. நீங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும் மேலும் பூட்டுக்களை போட்டுக் கொண்டிருக்கிறது என்பார் மீர்தாத்.
கடவுள் மனிதனை விட்டுப் பிரிவதே இல்லை. ஆனால் நான் என்ற உள்ளுணர்வில் அவன் இருப்பதை பார்க்க தவறிவிடுகிறோம். ஒவ்வொரு தவறையும் அவன் உள்ளிருந்து சுட்டிக் காட்டுகிறான். ஒவ்வொரு சரியான செயலுக்கும் அவன் உள்ளிருந்து பூரிக்கிறான்.
நமது செயல்கள் மூலம் நாம் இறைவனுக்கு எதிராக இருக்கிறோமா அவன் விருப்பத்தை நிறைவேற்றுகிறோமா என்பதை புரிந்துக் கொள்ளலாம். ஒவ்வொரு செயலுக்கும் உங்கள் உள்மனமே பதில் கூறும்.
மனிதர்களோ நிஜத்தை காண மறுக்கிறார்கள். மெய்மையை தரிசிக்கும் அதனை ஏற்றுக் கொள்ளும் திராணி அவர்களுக்கு இல்லை. எனவே மீர்தாத் கூறுகிறார்
தன் நிழலாலேயே மனிதன் தடுக்கி விழுகின்றான்.
இருட்டு என்பது குறைந்த ஒளி என்று மகாகவி பாரதி கூறியதைத்தான் மீர்தாத்தும் கூறுகிறார். உலகில் இருள் என்பதே இல்லை. ஒவ்வொரு உயிரினத்திற்கும் தேவையான வெளிச்சத்தை இறைவன் தந்திருக்கிறான். இரவு வேறு உயிரினங்களுக்கு வெளிச்சமாகிறது.
அன்புதான் இறைவனின் ஒரேயொரு சட்டம் என்பார் மீர்தாத். அன்பு மூலம்தான் இறைவனை அடைய முடியும் என்பதையும் அவர் கூறுகிறார்.
நீதிபதிகளாக இருந்து ஒருவரின் நிறை குறைகளை எடை போடாதீர்கள். யாவர் மீதும் நிபந்தனையற்ற அன்பு செலுத்தப் பழகுங்கள் என்கிறார்.
அன்புக்காக எந்தப் பரிசையும் பாராட்டையும் எதிர்பார்க்காதீர்கள். அன்புக்கு அன்பே போதுமானது என்கிறார் மீர்தாத். அது கொடுப்பதோ பெறுவதோ அல்ல,விற்பதோ வாங்குவதோ அல்லகொடுப்பதே அதன் பெறுதல், எனவே எக்காலத்திற்கும் அது மாறாதது.
காதல் குருடானது என்பார்கள். மீர்தாத் சொல்கிறார் அத்தகைய காதல்தான் தெளிவான பார்வை கொண்டது என்று.
இதயத்திற்குள் ஆலயத்தை காணாதவன் எந்த ஆலயத்திலும் இறைவனின் இதயத்தை கண்டுபிடிக்க முடியாது என்பது மீர்தாத்தின் உபதேசம்.
பணம் கடன் தருவது பற்றியும் மீர்தாத் பேசுகிறார். பணத்தை அன்பளிப்பாக கொடுங்கள் என்கிறார். வாழ்க்கை என்ற மகத்தான பரிசு உங்களுக்கு இலவசமாக அன்பளிப்பாகத்தானே தரப்பட்டிருக்கிறது?
மரம் தன் நிழலை கடனாக தருகிறதா...உனக்கு தேவைப்படும் வரை அதன் நிழலை அனுபவிக்க அது இலவசப் பரிசுதானே.
மேகம், மழை, சூரியன் எல்லாமே இலவசமாக கிடைக்கிறது.இவை இல்லாமல் வாழ முடியுமா. இத்தனை மகத்தான தேவைகள் இலவசமாக கிடைக்கும் போது பணத்தை மட்டும் சொந்தம் கொண்டாடி கடனாக கொடுத்து வட்டிகள் வசூலித்து அடுத்த உயிரை வதைப்பது சரியா என்பது மீர்தாத்தின் கேள்வி
ஒரு போதும் கடன்காரர்களாக வாழாதீர்கள் என்றும் மீர்தாத் கூறுகிறார்.
மனிதனின் மகத்துவம் அவன் மனிதனாக இருப்பதில்தான் என்றும் உண்மையான விடுதலைப் போராட்டத்தின் வெற்றியும் தோல்வியும் உள்ளத்தின் உள்ளே நிகழ்வதுதான் என்றும் மீர்தாத் அறிவுறுத்துகிறார்.

-------------------------------------------


Franz Kafka - alternative suicide

....
வாழ்க்கையின் மாற்று தற்கொலை
காப்காவின் வரிகளில் இருந்து பல முறை தற்கொலையின் வாடையை நுகர்கிறேன்.

காப்காவின் கடிதங்கள் சா.தேவதாசின் வளமான மொழியாக்கத்துடன் வ உசி நூலம் வெளியிட்டுளளது. இதில் பல வரிகள் அபாரமாக பதிவாகியுள்ளன. காப்கா தன்னால் ஒரு போதும் ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ள முடியாது என்றும், தன் எழுத்து, தனிமை பற்றியும் குறிப்பிடும் வரிகள் மனதை அலைக்கழிக்கின்றன.

காப்காவின் வரிகளுடன் பல இடங்களில் என்னை அடையாளப்படுத்த முடிகிறது. மிகுந்த மனச்சிக்கல் மிக்க மனிதனாக இருப்பினும் மிக உயர்ந்த கலை மேதையாக மிளிரும் காப்காவா நான் என பல முறை யோசனையும் வந்துள்ளது.மறுபிறவிகளில் நம்பிக்கை இருந்தால் நான்தான் காப்கா என்று சொல்லி விடுவேன்.

Saturday, 7 September 2013

ஏன் அழுதாய் மகனே

நேற்றிரவு கனவில் மிக அதிகமாக அழுதேன். விழித்துப் பார்த்தால் வெற்று மௌனம். வெறுமை. கண்களைத் தொட்டால் ஈரமில்லை. எல்லாம் கனவுக் கண்ணீர்.
திடீரென இரத்தத் திலகம் படப்பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.

நீ அழுத நிலை அறிந்து வான் நிலவும் அழுததம்மா
வானமும் அழுததம்மா
வண்ணமலரும் வாடுதம்மா
கானம் அழுததம்மா
கானகமும் கலங்குதம்மா....
யாரை அழித்தேன்
யார் குடியை நான் கெடுத்தேன்.....

அது சரி கனவில் நான் ஏன் அழுதேன்....துணுக்குச் சிதறல்களாய் யார் யாரோ முகங்கள்....நண்பர்கள், துரோகிகள், காதலிகள், களவாணிகள், உறவுகள் உயிராய் இருப்பவர்கள் என எத்தனையோ முகங்கள் கண்ணில் முகம்காட்டி சென்றன. யாருக்காக அழுதான் என ஜெயகாந்தனின் தலைப்பை வைத்து என்னை நானே கேட்டேன். எனக்காக அழுதேனா என்றும் தெரியவில்லை,. இந்த சிந்தனைகளுடன் டிவிடியில் பாடல்கள் கேட்டபோது அமீர்கானின் தில் சாஹதா ஹை படத்தில் தன்ஹாயி...என்ற பாடல் சோனு நிகாமின் உச்சஸ்தாயி குரலில் ஓங்கி அழுகிறது.







கனவில் நான் பார்த்தேன் ஒரு முந்தானையை
அது என் கைகளில் தவழ்ந்திருக்க கண்டேன்.
கண்விழித்துப் பார்த்தால் அது கண்ணாடி என்றும் உடைந்து விட்டது என்றும் உணர்ந்தேன்.
அதன் கண்ணாடித் துண்டுகள் கண்களில் குத்திக்கிழித்துக் கொண்டிருந்தன.
இதை யாரிடம் போய் நான் சொல்லுவேன்......

இவ்வளவுதான் இப்ப சொல்லத் தோணுது. வலிகள் குறைந்தபின் வரிகள் தொடரலாம்........



Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...