Saturday, 11 March 2017

சென்னை சர்வதேச திரைப்பட விழா 2017


குமுதம் தீராநதி பிப்ரவரி ,மார்ச் இதழ்களில் வெளியான கட்டுரைத் தொடர்


சென்னை சர்வதேச திரைப்பட விழா படங்கள்
செந்தூரம் ஜெகதீஷ்






இருளில் பூத்த கனவு மலர் ( பிரான்ஸ்)
சென்னை சர்வதேசத் திரைப்பட விழா 2017ல் திரையிடப்பட்ட படம்....
செந்தூரம் ஜெகதீஷ்
மனித மனம் இருமை நிறைந்தது. இருட்டுக்குள் இருந்துதான் ஒவ்வொரு கலையும் வெளிப்பட்டு உன்னதம் பெறுகிறது. கலைஞனின் மன உழல்வுகளும் கண்ணீரும் வெளியே தெரிவதில்லை. ஆனால் கலை போற்றப்படுகிறது.
டான்சர் ( நடன மங்கை ) என்ற இந்தப் படம் ஒரு கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு நடன மங்கையின் உண்மைக் கதையைத் தழுவியது. பிரான்சின் புகழ் பெற்ற நடனக்காரி லூயி புல்லர் மற்றும் அவருடைய போட்டியாளர் இசடோரா டங்கன் ஆகிய முக்கிய கதாபாத்திரங்களை சுற்றி பின்னப்பட்டுள்ளது. இதன் திரைக்கதையை தாமஸ் பிடேகன் மற்றும் சாரா தெய்போட் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்தின் இயக்குனர்  ஸ்டபெனி டி குயிஸ்ட்டோ (Stéphanie Di Giusto. )
கடந்த டிசம்பர்  இறுதியில் இப்படம் திரையிடப்பட்டது. புத்தாண்டு பிறந்த 5வது நாளிலேயே இது சென்னை ரசிகர்களுக்கு சர்வதேசத் திரைப்பட விழாவில் காணக் கிடைத்தது. ஆனால் இப்படம் திரையிட்ட ஐநாக்ஸ் திரையரங்கில் குறைந்த அளவே இருக்கைகள் நிரம்பியிருந்தன. காலை 9.30 மணிக் காட்சி என்பதாலோ என்னவோ இப்படத்தை நிறைய ரசிகர்கள் தவற விட்டனர். ஆனால் அடுத்த காட்சி ஒரு வேசியைப் பற்றிய படம் என்பதால் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். உண்மையில் மக்கள் நல்ல படங்களைக் காண வருகிறார்களா அல்லது சென்சார் செய்யப்படாத படுக்கையறைக் காட்சிகளுக்காக வருகிறார்களா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
லூயி பில்லர் என்ற நடன மங்கையை இப்போது யாருக்கும்நினைவில்லை. ஆனால் நவீன நடக்கலையை வடிவமைத்ததில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு.லா லூயி என பிரான்ஸ் மக்கள் அவரை அழைத்திருந்தனர். அவர் ஒரு நடனப் புயலாக இருந்தார். நடனத்தை சந்தைப்படுத்தியவர்களுக்கு வசூலை வாரிக் குவித்தார். புல்லரின் சுழன்றாடும் நடனமில்லையென்றால் இன்றைய நடனக்கலை இத்தனை உயரங்களை எட்டியிருக்க முடியாது. புல்லரின் சுழல் நடனச் சித்திரங்கள், கோட்டோவியங்கள், சிற்பங்கள், படங்கள் யாவும் இப்போதும் காணக்கிடக்கின்றன.
புல்லரின் பாத்திரத்தில் நடித்தவர் நடன மங்கையும் நடிகையுமான சோகோ. சோகோவின் தனிப்பட்ட நடனக்கழுவினர் இந்த படத்திற்கான நடனங்களை வடிவமைத்தனர்.
 தந்தையுடன் லூயி புல்லர் அமெரிக்காவின் ஒரு மலை கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். அவர் ஒரு முறை தனது பாத் டப்பில் குளிக்கும் போது எதிரிகளால் சுட்டுக் கொல்லப்படுகிறார். பாத் டப்பில் ஓட்டை விழுந்து ரத்தம் கலந்த செந்நீர் கொட்டுவதில் இருந்து அவள் தந்தையின் மரணத்தைப் புரிந்துக் கொள்கிறோம். பின்னர் லூயி நியுயார்க்கில் உள்ள தமது தாயாரிடம் செல்கிறார். தாயார் ஒரு தேவாலயத்தில் தம்மை அர்ப்பணித்து விட்டவர். தந்தையை பற்றி குறை கூறும் போது நீ அவரை புரிந்துக் கொள்ளவில்லை அம்மா என்று பிரெஞ்ச் மொழியில் மகள் கூறுகிறாள். தாயிடம் நேரில் பேச பயம். லூயிக்கோ மேடை நாடக நடிகையாக வேண்டும் என்பது விருப்பம். ஆனால் தாய்க்கு தன்னைப் போல் கிறிஸ்துவ சமயத்திற்கு தமது மகளையும் தாரை வார்க்க வேண்டும் என்று ஆசை. மகளின் கூந்தலை வெட்டி கருப்பு கவுன் அணியச் செய்து அவளை தன்னைப் போல் மாற்ற முயற்சிக்கிறாள். ஆனால் நடிகையாகும் ஆசையில் புல்லர் ஒரு விளம்பரத்தைப் பார்த்து ஒரு நாடக கம்பெனிக்கு வாய்ப்பு கேட்டுச் செல்கிறாள். அங்கு மேலாடை இல்லாத நடிகை கேட்  அருகில் போர் வீராங்கனை போல் கவசமும் ஆடைகளும் அணிந்த புல்லர் அமர வைக்கப்படுகிறாள். அவள் ஸ்கர்ட்டை தூக்கி நிர்வாணமாக்க இயக்குனர் முயற்சிக்க, அதற்கு இணங்க மறுக்கிறாள் புல்லர்.
ஆனால் அந்த நிர்வாண நடிகை அருகில் அமர்ந்து எடுத்த படம் தாய்க்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. மகளின் புகைப்படத்தை தீயிட்டுப் பொசுக்குகிறாள். இந்நிலையில் நாடகத்தில் வாய்ப்பு கிடைத்து மேடையில் ஒரு காட்சியில் நடிக்கிறாள் புல்லர். அப்போது ஒரு விபரீதம் நிகழ்கிறது.
புல்லருக்கு நீண்ட வெள்ளை அங்கி ஆடையாக வழங்கப்பட்டுள்ளது. அதில் கைகளை மூடும் நீண்ட ஸ்லீவ்களும் உண்டு. அந்த ஸ்லீவ் களுக்குள் நீண்ட மூங்கில்களை மறைத்து வைத்திருக்க வேண்டும். ஆவியைப் போல் அவள் கைகளை நீட்டிக் கொண்டே கண்களை மூடியவாறு கல்லறையில் நடந்து வர வேண்டும் என்பதே காட்சி .ஆனால் அவள் அணிந்திருந்த தொள தொள பாவாடை இடுப்பில் நிற்காமல் நழுவுகிறது. தனது மானத்தைக் காப்பாற்ற புல்லர் முயன்று தடுக்கி விழுகிறாள். பார்வையாளர்கள் எள்ளி நகையாடுகின்றனர். ஆனால் தன்னை சுதாரித்துக் கொண்ட அவள், எழுகிறாள். பாவாடையை ஒரு கையாலும் தமது அங்கியை ஒருகையாலும் பிடித்து சுழன்று சுழன்று அந்த இயலாமையான தருணத்தை ஒரு நடனமாக மாற்றுகிறாள். அவள் சுழன்றாட சுழன்றாட நவீன நடனத்தை அவள் கண்டுபிடித்துவிடுகிறாள். மக்கள் மெய் மறந்து கைத்தட்டுகிறார்கள். அவள் ஒரு நடனமங்கையாக அவதரித்துவிட்டாள்.
ஆனால் வியாபாரிகள் அவள் நடன டிசைன்களையும் நடன ஸ்டைலையும் காப்பியடிக்கிறார்கள். நிர்வாண நடிகை கேட் அவளைப் போலவே நீண்ட அங்கியை அணிந்து மூங்கில்களை வைத்து சுழன்று ஆடுகிறாள். இது என் நடனம் நீ எப்படி ஆடலாம் என கத்துகிறாள் புல்லர்.
கலையைத் திருடுபவர்களுக்கும் வணிகமாக்குபவர்களுக்கும் கலையை உருவாக்கியவரின் வலி தெரியுமா...?
அவள் நடனத்தால் கவரப்பட்ட ஒரு அரசர் குல வாலிபர் அவளை அடைய முயற்சிக்கிறார். கவுன்ட் லூயிஸ் என்பவர் அவளை தமது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். ஆனால் அவள் இணங்கவில்லை. இந்நிலையில் அவருடைய பணம் கட்டுக்கட்டாக இருப்பதைப் பார்த்து அதைத் திருடி அவள் அங்கிருந்து தப்பிச் செல்கிறாள். தன் கனவைத் தேடி அவள் நியுயார்க்கை விட்டு பாரீசுக்கு குடிபெயர்கிறாள். ராயல் பாலே நடன மேடைகளில் ஆட வேண்டும் என்பதே அவளுக்கு இலக்காக இருக்கிறது. அங்கு அவள் ஒரு பிரபல கம்பெனிக்கு சென்று வாய்ப்பு கேட்கிறாள் முதலில் நிராகரிக்கும் மார்ச்சந்த் என்ற நடன கம்பெனி மேலாளர் பின்னர் அவள் திறைமை உணர்ந்து வாய்ப்பு அளிக்கிறார். தமது நடனங்களுக்காக தாம் செலவு செய்யத் தயார் என்கிறாள் புல்லர். அவள் வண்ண விளக்குகளை கேட்கிறாள். கண்ணாடியைக் கேட்கிறாள். நீண்ட அங்கிகளைக் கேட்கிறாள். நடன நிகழ்ச்சியின் செலவுகள் கூடுகின்றன. ஆனால் அவள் வணிக ரீதியாக தோற்கவில்லை. ரசிகர்கள் ஆர்ப்பரித்து அவள் நடனத்தை அங்கீகரிக்கின்றனர். பத்திரிகைகள் அவளை புகழ்ந்து தள்ளுகின்றன. மார்ச்சந்தின் உதவியாளரான பெண் கேப்ரியல் புல்லரின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கிறாள். பணமும் புகழும் புல்லருக்கு கொட்டுகிறது. அவளைத் தேடி வரும் கவுண்ட் லூயிசுக்கு திருடிய பணத்தைத் திருப்பித் தருவதாக அவள் கூறுகிறாள். ஆனால் அவரோ அவள் உடலைக் கேட்கிறார்.
இந்நிலையில் லூயி புல்லரின் நடனக்குழுவுக்கு மற்றொரு நடனக்காரி வருகிறாள். இசாடோரா என்ற அந்தப் பெண் சிலகாலம் புல்லரின் குழுவில் பணியாற்றுகிறாள். அவள் ஜப்பானிய கெய்ஷா போன்ற நடனமாடுவதில்  வல்லமை பெற்றவள். அவளதுநடன பாவங்கள் புல்லரைக் கவர்கின்றன. அவளை தம்முடன் மேடையில் ஆட ஒப்பந்தம் செய்கிறார். இந்நிலையில் இசாடோராவின் மீதான அதிக அன்பினால் ஓரினச் சேர்க்கைக்கும் புல்லர் துடிக்கிறாள். ஆனால் அவளை ஒதுக்கிவிட்டுச் செல்லும் இசாடோரா மற்றொரு கம்பெனியால் விலை பேசப்பட்டு புல்லருக்கு துரோகம் இழைத்து தப்பிச் சென்றுவிடுகிறாள்.
மிகுந்த மன உளைச்சலுடன் தவிக்கும் புல்லர் நட்பின் துரோகத்தாலும் தமது கலையின் இருண்ட காலத்தாலும் மீள முடியாமல் பரிதவிக்கிறாள். அவளால் நடக்கவே முடியவில்லை, போதையில் தள்ளாடி விழுகிறாள் .மனம் உடைந்து நொறுங்கி அழுகிறாள். அவளால் எப்படி ஆட முடியும். ஆனால் செட்டுகளுக்காக நிறைய செலவாகிவிட்டது. பணம் வாரியிறைக்கப்பட்டு விட்டது. இனி என்ன செய்வாள் புல்லர் ?இருட்டிலிருந்து ஒரு கனவு மலராக அவள் மறுபடியும் மலர்ச்சிக் கொள்வதும் தமது கலையின் மூலமாகத்தான். மேடையில் துயரம் ததும்ப அவள் ஆடும் கிளைமேக்ஸ் நடனத்தின் இறுதியில் புல்லர் மேடையில் விழுந்துக் கிடக்கிறாள். தமது நடனம் தோல்வியில் முடிந்ததாக அவள் நினைக்கும் போது ரசிகர்கள் கைத்தட்டி ஆரவாரிக்கிறார்கள். நல்ல கலையை ரசிக்க எப்போதும் தரமான ரசிகர்கள் இருப்பார்கள் எனப் புரிந்துக் கொண்டு அவர்களுக்குத் தலை வணங்குகிறாள் புல்லர்.
கண்கவரும் நடனக்காட்சிகளுடன் இனிய பின்னணி இசை பல நேரங்களில் இளையராஜாவின் பழைய பாடல்களை நினைவூட்டுகிறது. இப்படம் சற்றே மெதுவாக நகர்வது போல் தெரிந்தாலும் அதன் நடனக்காட்சிகள் நம்மை நிமிரச் செய்கின்றன.
ஒரு கனவு மலர் பூத்திருப்பது போல் தமது நடனத்தால் வசீகரித்த அந்த நடனக்காரி புல்லர், துரோகத்தாலும் மன உழல்வினாலும் இருளில் தள்ளப்பட்ட போதும் அதிலிருந்து அவளை கலைதான் மீட்டது. கலை கனவு மலரைப் போல் அவளை இருளில் இருந்து ஒளி மிக்க மலராக மலரச் செய்து விட்டது.
-------------------------------------------------------------------------------------



THE CUT - தி கட் - ஜெர்மனி 2014
இயக்குனர் -ஃபதி அகின் ( Fatih Akin)
கடந்த 2016 திரைப்பட விழாவில் திரையிட முயற்சித்து முடியாமல் போன இத்திரைப்படம் இந்த 2017ம் ஆண்டு சென்னை சர்வதேச திரைப்பட விழாவில்  ஜெர்மன் தூதரக மாக்ஸ் முல்லர் பவன் இயக்குனரின் உதவியால் திரையிடப்பட்டது. இத்திரைப்பட விழாவின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக  இந்த படம் தனித்து நிற்கிறது.
மார்டின் நகரில் கதை தொடங்குகிறது.நாசரேத் என்ற பொற்கொல்லர் தமது குடும்பத்துடன் அங்கு வசித்துவருகிறார். கத்திரிக்கோல் கூர் தீட்டுவது போன்ற வேலைகளையும் அவர் செய்து வருகிறார். அவருக்கு ஒரு உதவியாளர். முதலாம் உலகப் போர் மூண்ட நேரம் அது. ஓட்டோமான் சாம்ராஜ்யத்தில் முஸ்லீம் அல்லாத கிறித்துவ சிறுபான்மையர் கட்டாயமாக போருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். துப்பாக்கி முனையில் அவர்கள் மதம்மாறி முஸ்லீம்களாக மறுக்கப்படுகிறார்கள். மறுப்பவர்களை துப்பாக்கித் தோட்டாவை வீணடிக்காமல் வாளால் கழுத்தை அறுத்து கொலை செய்கிறார்கள். அதுதான் கட். நாசரேத்தும் அவர் தோழர்களும் இந்த பிரச்சினையை சந்திக்க நேரிடுகிறது. அவர்கள் சாலை செப்பனிடும் பணிக்கு ஒரு பாலைவன குன்றுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்ரே அவர்கள் செப்பனிட்ட பாதையில் ஆர்மேனிய அகதிகள் நடந்து செல்வதைப் பார்க்கின்றனர். அதில் ஒரு பெண்ணை முஸ்லீம் வீரர்கள் பலவந்தமாக புணர்ந்து கொன்றுவிடுகின்றனர். அதன் குழந்தை கதறி அழுகிறது. போருக்கு அழைத்து வரப்பட்ட அவர்களை மதம் மாற்ற சுல்தான் கட்டளையிட மறுப்பவர்கள் கழுத்து அறுபட்டு சாகிறார்கள். கழுத்தை அறுக்கும் வேலைக்கு சிறைக்கைதிகள் அழைத்து வரப்பட்டனர். அதில் ஒரு மனிதாபிமான கைதி நாசரேத்தி்ன் கழுத்தை முழுதாக அறுத்துவிடாமல் சிறிய காயம் மட்டுமே ஏற்படுத்துகிறான். நாசரேத் மயங்கி விழுகின்றான்.( தற்காலங்களில் தீவிரவாதிகள் வீடியோவில் பத்திரிகையாளர்களையும் அப்பாவி பிணைக்கைதிகளையும் கழுத்தை அறுத்துக் கொல்லும் குருரம் நினைவுக்கு வருகிறது )
கழுத்தில் காயம் அடைந்த நாசரேத் பேச்சுத் திறனை இழக்கிறான். அவன் மனம் முழுக்க அவன் மனைவியுடன் சந்தோஷமாக இருந்த போது பாடிய ஜானோ ஜானோ என்ற இனிய பாடல் அவன் மனதுக்குள் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. இரட்டைக் குழந்தைகளான தனது பதின்பருவ மகள்களையும் எண்ணி ஏங்குகிறான். அப்போது அவனை காப்பாற்றிய கைதியே அங்கு வந்து அவன் காயத்துக்கு மருந்தளித்து உணவும் நீரும் தந்து அழைத்துச் செல்கிறான், அப்போது துருக்கியின் பாலைவனக் கொள்ளையர்கள் அவர்களை வழிமறிக்கின்றனர். அவர்கள் நிலையை அறிந்து அவர்களையும் தங்களுடன் சேர்த்துக் கொள்கி்ன்றனர். ஒருமுறை ஒருவரை கொள்ளையடிக்க முயன்ற போது அவர் தனது ஊர்க்காரர் என்பதை அறிகிறான் நாசரேத். ஆனால் அவர் ஒரு முஸ்லீம். தனது மனைவிகள், குழந்தைகளுடன் தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு குதிரை வண்டியில் செல்லும் போது சிக்கி விடுகிறார். முஸ்லீம்களுடன் நேற்றுவரை சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வந்த ஆர்மேனிய கிறித்துவரான நாசரேத்துக்கு இனம் புரியாத வெறுப்பும் கோபமும் ஏற்படுகிறது. குழந்தைகளுக்காக சிறிது உணவை மட்டும் விட்டு விட்டு இதரப் பொருட்களைக் கொள்ளையடிக்குமாறு தனது சகாக்களிடம் செய்கையால் கூறுகிறான் பேச முடியாத நாசரேத். அப்போது அந்த முஸ்லீம் நபர் பெண்களும் குழந்தைகளும்  ரா-ச-லன் எனும் பாலைவன கிராமத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறுகிறார். இதனையடுத்து தமது குடும்பத்தைத் தேடி ரா-ச-லன் செல்ல புறப்படுகிறான் நாசரேத் ,அவனுக்கு தனது காலணிகளையும் கம்பளிப் போர்வையையும் தந்து உதவுகிறான் அவனைக் காப்பாற்ற கைதி. துருக்கி கொள்ளையர்கள் அவனுக்கு செலவுக்கு பணமும் குடிநீரும் தருகிறார்கள். .
ரா-ச-லன் கிராமத்தில் பட்டினி, நோயால் மக்கள் செத்துக் கிடக்கிறார்கள். பல குழந்தைகள் உயிரிழந்த பெற்றோரை புதைக்கக்கூட முடியாமல் சுருண்டுக் கிடக்கிறார்கள். போரால் அதிக அளவில் பாதிக்கப்படுவது குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்தான் என்ற கோரக்காட்சியை அங்கு நாம் காண்கிறோம். என்ன செய்வது எங்கே செல்வது என்று தெரியாமல்  பாலையின் நடுவே பரிதவிக்கும் நாசரேத்தின் நிலை பரிதாபகரமானது. அப்போது ஒரு சோப்பு வியாபாரி வழியில் அவனைக் காண்கிறார் .அவனை தனது சோப்புக் குவியலில் வைத்து மறைத்து எல்லை தாண்டி தனது ஊருக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு அவருடைய சோப்பு பாக்டரியில் பல ஆர்மேனிய அகதிகளுக்கு அவர் அடைக்கலம் தந்தது தெரிய வருகிறது. அவரும் ஒரு முஸ்லீம்தான். துருக்கிகளுக்கும் அவனை காப்பாற்றிய சிறைக்கைதியும் கூட முஸ்லீம்கள் தான். சாதாரண மக்களுக்கும் ஆர்மேனியர்களுக்கும் எந்த வித பகையுணர்வும் இல்லை. போரால் நிகழும் வன்முறைகளுக்கும் அப்பாவி முஸ்லீம் மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது முழுவதும் அரசியல் காரணங்களால் நிகழ்வது என்பதை நாம் உணர்கிறோம். இப்போதும் தீவிரவாதிகளால் அப்பாவி முஸ்லீம் மக்களின் நல்வாழ்வும் நற்பெயரும் களங்கப்படுகிறது . தமது மனைவி இறந்துவிட்டதையும் தமது மகள்கள் லெபனானில் உயிருடன் இருப்பதாகவும் ஒரு தகவலை அங்கு அவன் சந்திக்கும் தனது முன்னாள் உதவியாளன் மூலம் தெரிந்துக் கொண்டு லெபனான் பயணிக்கிறான் நாசரேத்.  தமது மகள்கள் படித்த பள்ளிக்கு சென்று தேடிப்பார்க்கையில் அவர்களுக்கு மணமுடிக்கப்பட்டு  அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் கிடைக்கிறது. மகள்களின வளர்ந்த தோற்றத்திலான புகைப்படமும் அவனுக்கு பள்ளியில் இருந்து கிடைக்கிறது.
அப்போதுதான் தனதுமகள்களுக்கு திருமணம் நின்று போன தகவல் கிடைக்கிறது. இரட்டைப் பிறவிகளான அந்த பெண்களில் லூசினே என்ற பெண் போர் வன்முறையில் கால் ஒன்றை இழந்து விட்டதால் அவள் திருமணம் நின்று விட்டதை அறிகிறான். தனது தங்கையை விட்டு தாமும் மணமுடிக்க விரும்பாத ஆர்சினேவும் தங்கையை அழைத்து கியூபா சென்று விட்டாள்.
கியூபா முகவரிக்கு அவர்கள் ஒரு தந்தியை அனுப்புகிறார்கள். தமதுமகள்கள் பணியாற்றும் தையல் நிறுவனம் அது. ஆனால் அதன் முதலாளியோ பதில் தந்தி அனுப்பி அந்தப் பெண்கள் தற்போது அங்கு இல்லை என்றும் எங்கே எனத் தெரியவில்லை என்றும் தந்தி மூலம் பதில் கூறுகிறார். வேறு வழியில்லாமல் கியூபாவுக்கு சென்று தனது மகளை தேட கப்பலில் கியூபா தலைநகரான ஹவானாவுக்குச் செல்கிறான் நாசரேத் லெபனான் மகாகவி கலீல் கிப்ரான் பிறந்த மண். கியூபாவோ புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவின் பூமி இந்த ஊர்களின் காட்சிகள் நமக்கு மகிழ்ச்சியையும் பரவசத்தையும் ஏற்படுத்துகின்றன.
 அவனுக்கு கியூபாவில் அடைக்கலம் தரும் நண்பரான கிறித்துவர் ஒருவர் கடவுள் நம்பிக்கையை இழந்துவிட்டாயா எனக் கேட்கிறார். ஆம் என சைகையால் கூறுகிறான் நாசரேத் .நம்பிக்கையை இழக்காதே எனக்காக சர்ச்சுக்கு வா என அழைக்கிறார் அவர். அவனும் செல்கிறான். சர்ச்சில் தமது ஊனமான மகள் லூசியாவை மணமுடிக்க மறுத்துவிட்ட செல்வந்தனை சந்திக்க நேரிடுகிறது. ஆத்திரத்தில் அவனை ஒரு ஆளில்லாத இடத்தில் மடக்கி அடித்து உதைக்கிறான் நாசரேத், இரண்டு பெண்களும் அமெரிக்கா சென்று விட்டதையும் அறிகிறான்.
அவனிடமிருந்த பணத்தைப் பறித்துக் கொண்டு தமது குடும்பத்தைத் தேடி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு மதுவைக் கடத்தும் கப்பலில் பயணிக்கிறான் நாசரேத்
புளோரிடாவில் அவன் ஒரு கிராமத்தில் புகுந்து அங்கு வேட்டைக்காரர்களால் விரட்டப்பட்டு ஒரு புகை ரயிலில் ஏறி தப்பும் பரபரப்பான காட்சிகளுக்குப் பிறகு ஒரு சிறிய கிராமத்தில் ஊனமான ஒரு பெண்ணை சந்திக்கிறான் .அவள்தான் தன் மகள் லூசியானா என அறிந்து கண்ணீர் சிந்துகிறான். அவள் முன்னே நடந்து செல்ல பின்தொடர்ந்து அவளை லூசியானா என அழைக் க வாயெடுக்கிறான். அதுவரை தடைபட்டிருந்த அவன் பேச்சு மீண்டும் அவனுக்கு கிடைக்கிறது. அவன் குரல் கேட்டு அவள் திரும்புகிறாள். உணர்ச்சிகரமான இந்த காட்சியில் கைத்தட்டல்கள் அரங்கை அதிர வைக்கின்றன. பாபா ( அப்பா) நீ என்னை தேடி வந்திட்டியா பாபா என அந்த மகள் உருகும் காட்சி பிள்ளைப் பாசம் எத்தகைய பேறு என்று நம்மை துடிதுடிக்க வைக்கிறது. ஊனமுற்ற தனக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்துவிட்ட சகோதரி ஆர்சினி நோயால் இறந்து விட்டதாக கூறுகிறாள் லூசினி . இருவரும் ஆர்சினியின் கல்லறைக்கு சென்று மலரஞ்சலி செலுத்துகின்றனர்.
மிகச்சிறந்த மனித நேயம் தெறிக்கும் இப்படத்தில் தாஹிர் ரஹிம் ஆர்மேனிய அகதி நாசரேத்தாக அற்புதமாக நடித்துள்ளார். தமது மகள்களைத் தேடி விபச்சார விடுதிகளிலும்  உயிரற்ற சடலக்குவியல்களிலும் அவர் தேடிப் பரிதவிக்கும் காட்சிகள் நம்மை படம் என்பதையும் மறந்து கண்ணீரி்ல் மிதக்க வைக்கின்றன. ஜானோ ஜானோ என்ற தனது மனைவியின் காதல் குரலால் உந்தப்பட்டு பல பயணங்களுக்குப் பிறகு தனதுமகளை நாசரேத் இறுதிக் காட்சியில் சந்திப்பது ஒரு காவியப் பயணமாக மாறுகிறது.
என்னதான் போரும் மதவெறியும் இனவெறியும் மனிதர்களைப் பிரித்து ஒருவருக்கு ஒருவர் யுத்தம் செய்பவர்களாகவும் வன்முறை இழைப்பவர்களாகவும் அநீதி இழைப்பவர்களாகவும் மாற்றினாலும் மனித நேயமும் அன்பும் பாசமும் தான்  அவனுடைய சொர்க்கமயமான வாழ்க்கையை மீட்க முடியும் என்று அற்புதமான செய்தியுடன் இப்படம் முடிகிறது.





Fragements of love - பியூரிட்டோ ரிகோ-2016
இயக்குனர் - பெர்ணாண்டோ வலேஜோ (fernando vallego)
கொலம்பிய நாவலாசிரியர் ஹெக்டர் அபாத் பாசியோலின்சியின் நாவலை மையமாக வைத்த காதல் கதை. ஆயிரத்தி ஒரு இரவுக் கதைகளைப் போல் தினமும் இரவில் காதலனுக்கு தனது முன்னாள் காதலர்கள் பற்றி கூறும் ஒரு காதலியின் கதை இது.
சூசனும் ரோட்ரிக்கும் காதலர்களாக மாறுகிறார்கள். சூசன் ரோட்ரிக்கின் நண்பனின் நிச்சயம் செய்யப்பட்ட பெண். அவனுக்கு துரோகமிழைத்து இவனுடன் சரஸமாடுகிறாள். அவன் ஒரு பியானோ கலைஞன். ஆனால் அண்மைக் காலமாக ஒரு காதல் தோல்வியின் காரணமாக மனமுடைந்து தனது இசையை கோர்க்கும் வேலையை அவன் மறந்துவிட்டான். சூசனுடனான முறைதவறிய காதல் அவனுக்கு புதிய ஆசைகளையும் கனவுகளையும் மகிழ்ச்சியையும் தருகிறது .தனது இருண்ட கடந்த காலத்தை அவன் கடந்து வர முயற்சிக்கிறான். ஆனால் சூசன் எத்தகைய பெண்?  5
சூசனுக்கு ஏகப்பட்ட காதலர்கள். அவள் ஒவ்வொரு நாளும் ஒரு காதல் கதையை அவனுக்குக் கூறுகிறாள்.முதலில் அதை கேட்க தாம் விரும்பவில்லை என்று கூறும் ரோட்ரிக் படிப்படியாக அவள் வசியத்திற்கு ஆட்பட்டு அவள் தனது காதல் களியாட்டங்களைக் கூறுவதை கேட்பதில் ஆர்வம் கொள்கிறான். ஊருக்குள் குண்டு வெடிப்புகளும் வன்முறைகளும் நிகழும் போது படுக்கையறையில் இத்தகைய காதல் கதைகளின் இடையே கிடைக்கும் உடலுறவு சுகம் அவனுக்கொரு இளைப்பாறுதல் தருகிறது. ஆனால் யதார்த்தத்திற்கும் கனவுக்கும் இடையிலான இடைவெளிகள் குறையக் குறைய, சூசன் மீதான தனது அன்பும் காதலும் அதிகரி்த்து அவள் இல்லாமல் ஒருகணம் கூட வாழ முடியாத இயலாமை அவனை உறுத்துகிறது. தமக்கும் சூசன் துரோகம் செய்து தன்னையும் ஒரு முன்னாள் காதலனாக்கி அந்தக் கதையையும் யாரிடமாவது அவள் கூறுவாள் என்று அவன் கலங்குகிறான். அவளை சோதிக்க புதிய காதலன் போல் ஒரு மொட்டைக் கடிதம் எழுதி அவளை உணவு விடுதிக்கு வர அழைப்பு விடுக்கிறான். சூசனும் புதிய காதலனை சந்திக்க உணவு விடுதிக்கு செல்வதால் தனது எண்ணம் சரிதான் என்று அவன் கணிக்கிறான்.
பிறகு அவளது குடியிருப்பில் மாற்று சாவி மூலம் சென்று ஒளிந்துக் கொள்கிறான் . சூசன் புதிய காதலனுடன் அங்கு வருகிறாள். இருவரும் ஆடைகளைக் களைந்து மதுவருந்தி உடலுறவுக் கொள்வதை ஒளிந்திருந்து பார்க்கிறான். கோபத்தில் வந்தவனின் காலணி ஒன்றை மட்டும் எடுத்துச் சென்றுவிடுகிறான்.
மறுநாள் காலையில் சூசனை சந்தித்து சண்டை போடுகிறான். பாவம் அவர் ஒரு காலணியுடன் வீட்டுக்குப் போனார் என புதிய காதலன் பற்றி சூசன் பேச ஆத்திரமும் ஆசையும் கொண்டு அவளை சோபாவில் சாய்த்து ஆத்திரம் தீர உடலுறவுக் கொள்கிறான். அப்போது அவளும் கண்ணீர் விடுகிறாள். எத்தனையோ பேரிடம் நான் படுத்திருந்தாலும் உன்னைத்தான் காதலிக்கிறேன். உன்னுடன்தான் அதிகமான நேரம் இருக்கிறேன் என்று அவள் உள்ளம் திறந்து கூறுகிறாள். அவன் அதனை நம்ப மறுத்து இனி ஒருபோதும் உன்முகத்தில் முழிக்க மாட்டேன் என்று கூறி பிரிந்து செல்கிறான். இசை உலகில் தனது எதிர்காலம் நாடி அவன் விமானத்தில் பயணிக்கும் போது அந்த விமானம் விபத்துக்குள்ளாகி அவன் இறந்துவிட்டதை சூசன் கேட்கிறாள்.
சூசனாக நடித்த கொலம்பியா நாட்டின் ஆஞ்சலிக்கா பிளாண்டன் அழகான நடிகை. அதிக அளவிலான நிர்வாண காட்சிகளும் உடலுறவுக் காட்சிகளும் இல்லாத போதும் அவள் சிரிப்பும் ஒருசில காட்சிகளில் அவள் காட்டும் தொடைகளும் மார்பகங்களும் நம்மை கிறங்கடிக்கின்றன.
ஒரு கலைஞனுக்கு ஏற்படும் கிரியேட்டிவ் பிளாக் எனப்படும் மனத்தடையை காதல் மீட்பதையும் அதுவே அவனுக்கு வேறொரு மனத்தடையை ஏற்படுத்துவதையும் இப்படம் சித்தரிக்கிறது. நவீன காலத்தில் பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட காதலர்களுடன் இருப்பதையும் அந்த காதலர்களுக்கு எந்த மனசாட்சி குறுகுறுப்பும் இல்லாமல் துரோகம் செய்வதையும்  சூசனின் பாத்திரப்படைப்பு மூலம் அறிகிறோம். அழகான பெண்கள் ஒருவனுடன் மட்டும் இருக்க வேண்டும் என்ற நியதிகள் பொய்த்துப் போயின. அழகில்லாத பெண்கள் மட்டும் கற்புக்கரசிகளாக இருக்கலாம் போலும். அழகிகளை சுற்றி வட்டமிடுபவர்கள் ஏராளம். அவர்களில் வேண்டியவர்களைத் தேர்வு செய்து படுக்கை வரை அழைத்துச் சென்று உடனடியாக மறப்பதும் பெண்களுக்கு எளிதாகிக் கொண்டிருக்கிறது. ஆயிரத்து ஒரு இரவுகள் என்ற அரேபிய பாலியல் கதைகள் சமகால வாழ்வுடன் பொருந்திப் போகின்றன



தனிமை - Lonely - ஈரான் 2016
இயக்குனர் -பஹாரா சதேகி ஜாம் ( Bahareh sadeghi jam)
திருமணமாகி மகிழ்ச்சியாக இல்லாத தம்பதியர் அமீர் அலி மற்றும் ஷார்சத்தின் இடைவெளி பெரிதாகிக் கொண்டே போகிறது .தங்கள் மகிழ்ச்சிக்காக ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க விரும்புகிறாள் ஷார்சத். ஆனால் உடலுறவு மூலம் அதை சாத்தியமாக்க கணவனால் இயலவில்லை. அதனால் செயற்கை முறை கருத்தரிப்புக்கு அவள் மருத்துவர் ஒருவரின் ஆலோசனையை நாடுகிறாள். கணவரின் விந்தணுக்களை கர்ப்பப்பையில் செலுத்தி கருத்தரிக்க செய்யமுடியும் என மருத்துவர் விளக்குகிறார். கணவரை விந்து வங்கிக்கு அழைத்துச் செல்கிறாள் .ஆனாலும் அவள் கனவு நிறைவேறாமல் போகிறது. கணவருடைய மனநிலைப் பிறழ்வும் இடைவெளியும் அதிகரித்து விட துயரமான ஒரு முடிவை நோக்கி படம் நகர்கிறது. சற்றே சலி்ப்பையும் பொறுமையின்மையையும் ஏற்படுத்திய படம் இது. அழகான நடிகை யின் முகத்திற்காக சகித்து உட்கார வேண்டியிருந்தது.




Load - மெக்சிகோ 2016
இயக்குனர் ஆலன் ஜான்சர் காவிகா ( Allen jonnssor gavica )
பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் நிகழும் கதைக்களத்துடன் அற்புதமாக எடுக்கப்பட்டிருக்கிறது இப்படம். சென்னை பளாசோ திரையரங்கில் சாய்ஸ் என்ற மற்றொரு திரைப்படம் காணப்போன போது அந்தப் படத்தை ரத்து செய்து இதனை போட்டனர் விழாக்குழுவினர்.
அரை மனத்துடன் படத்தில் போய் உட்கார்ந்தால் படம் நிமிர வைத்துவிட்டது. தாமேமி செவ்விந்தியர் இனத்தைச் சேர்ந்த கதாநாயகன் ஸ்பானிய உயர்குல பெண் ஒருத்தியை லோடாக பாதுகாப்புடன் அரசவைக்கு கொண்டு செல்ல பாதிரியார் ஒருவரால் பணிக்கப்படுகிறான். அந்தப் பெண் தனது கணவரைக் கொன்ற சிற்றரசரான தனது தந்தைக்கு எதிராகவும் சிறையில் அடைபட்டிருக்கும் செவ்விந்தியர்களின் புரட்சியாளனை விடுவிக்கவும் முக்கிய சாட்சியம் கூறப்போகிறாள். ஆனால் தனது அழகு ததும்பும் சுமையுடன் காடுகளில் திரியும் நாயகனின் எதிரி அவனது அண்ணன்தான். அந்த அழகியை நேசிக்கும் தளபதி அவன் அண்ணனை கைக்குள் போட்டுக் கொண்டு அவர்களை காடுகளிலும் மலைகளிலும் அருவிகளிலும் வேட்டையாடுகிறான். என் மகள் சாட்சியம் கூற விடாமல் சிறைப்பிடித்து அழைத்து வந்தால் பாதி ராஜ்ஜியமும் மகளையும் தருகிறேன் என்கிறான் அவள் தந்தை.
அண்ணனுக்கு தம்பி மேல் என்ன பகை? அவன் மணமுடிக்க பார்த்து வைத்த பெண் தம்பியைத் தேர்வு செய்து மணமுடித்துவிட்டதால் ஆத்திரம். ஒரு ஆண் குழந்தையைப் பெற்று அந்தப் பெண் இறந்துவிட்டதையும் அந்த சிறுவனுக்குஅம்மை நோய் போட்டிருப்பதையும் வேறு சில காட்சிகளின் மூலம் நாம் அறிகிறோம்.
தன் பொறுப்பில் உள்ள ஒருசுமை என்ற அளவில்தான் அந்த அழகியை லோடு டெலிவரி பாயாக ஏற்று பயணிக்கிறான் நாயகன். வழியில் இயற்கையின் ஆபத்துகளுடன் எதிரிகளையும் அவன் சமாளிக்கும் போதுதான் அவள் மீது காதல் வயப்படுகிறான் .அவன் நேர்மை , அன்பு , திடாத்கரமான உடல்வாகு என அவளும் அவன் மீது ரகசியமாக காதல் கொள்கிறாள். இருவரிடைய கனிந்த காதலுடன் அவர்கள் பயணம் நிறைவு பெறுகிறது. அவள் இலக்கை அவள் அடைகிறாள். அவளை துரத்தி வந்த தளபதி தன் உயிரை மாய்த்து தியாகம் செய்கிறான். இந்த படத்தில் நாயகியாக நடித்த மாரியா வல்வார்டே மிக அழகான நடிகை. ஒருகாட்சியில் அருவியி்ல் உடலைக் கழுவும் போது தனது கால் அழகை மட்டும் காட்டுகிறார். படம் முழுக்க உடல் மறைக்கும் அங்கியுடன் மூடிய அழகாகவே மேகம் மறைத்த நிலவாக காட்சியளிக்கிறார் மாரியா.
தனது நோயுற்ற மகனை அருவியில் வீசியெறிந்த அண்ணனைக் கொல்லும் வெறியுடன் பாய்கிறான் நாயகன். ஆனால் எதிரிகளின் கட்டாயத்தால் அதை செய்ய நேரிட்டதை கூறும் அண்ணன் உயிரற்ற சடலத்தையே  அருவியில் எறிந்ததாக கூறுவது நல்லதொரு திருப்பம். அவனுக்கும் அம்மை நோய் பரவியிருப்பதை பார்த்து கொல்லாமல் செல்கிறான் தம்பி
அண்ணனாக நடித்தவரும் அற்புதமான நடிகராக இருக்கிறார். அவர் குதிரைகளுடன் ஓடிவரும் ஓட்டம் அபாரம். செவ்விந்தியர்களின் வீரம், உடல் பலம் திடம் ஆகியவற்றை இப்படம் உணர்த்துகிறது.





Twa-tiu-tiann -தைவான் 2014
இயக்குனர் டியன் லுன் யே ( Tian -lun-yeh)
இது தைவானியர்கள் ஜப்பானியரின் ஆதிக்கத்திற்கு எகிராக போராடிய கதை. ஆனால் நூறு வருடங்கள் பின்னோக்கி காலவெளியில் பயணிக்கும் ஒரு இளைஞன் மூலம் கூறப்படுகிறது. இதில் மெலிதான காதல் துயரம், தாய்ப்பாசம், விடுதலையுணர்ச்சி போன்ற உணர்வுகளும் சித்தரிக்கப்படுகின்றன, அழகும் திறமையும் மிக்க நடிகர்கள் பாத்திரங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளனர். காமிக்ஸ் கற்பனையும் கலந்த கதை. உலகம் எவ்வளவு பெரியது என்று தைவான் மக்களுக்கு ஜப்பானியர்கள் தாம் காட்டினார்கள் என்றொரு வசனம் வருகிறது. ஆனால் தைவானியர்களை மிகவும் சிறியவர்களாகவும் அதுதான் மாற்றிவிட்டது என்று வசனத்தின் அடுத்த வரி கூறுகிறது.







ஜப்பான் ஆதிக்கத்திலிருந்து தைவான் மீளும் உலகிலேயே அதிகமான உயரமுடைய வர்த்தக கோபுரத்தை தைவான் மக்கள் கட்டுவார்கள் என்ற தைவானி்ன் பிதாமகரான அரசியல் தலைவர் சூளூரை செய்வதை எதிர்காலத்தில் இருந்து கடந்த காலத்திற்கு வந்த பேராசிரியரும் அவர் மாணவனான கதாநாயகனும் உறுதி செய்கின்றனர்.
கடைசியில் தனது கடந்த கால காதலியை அவள் காலத்திற்கு திருப்பி அனுப்பும் நாயகன் அது உனது பொற்காலம். அதில் நீ வாழ்ந்து முடிந்துவிட்டாய். இது எனது பொற்காலம். இதை நான் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று கூறி அவளை முத்தமிட்டு விடை கொடுத்து அனுப்பிவைக்கும் காட்சி ஒரு அழகான ஹைகூ கவிதை.படத்தில் இடம்பெறும் தைவான் பாடல் ஒன்றும் அதன் நடன அமைப்பும் அற்புதம்.




The violin player - இந்தியா 2016
இயக்குனர்-  பவுதாயின் முகர்ஜி ( Bauddayeen mukherji)
சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்ட இந்திப்படம் இது.
திரையில் பின்னணி இசைக்காக வயலின் வாசிக்கும் கதாநாயகனின் வறுமையுடன் படம் தொடங்குகிறது.அவன் மனைவி ஒரு துணை நடிகை. ஒருநாள் மும்பை மின்ரயில் நிலையத்தில் சந்திக்கும் ஒரு இயக்குனர் தமது படத்திற்கு சோலோவாக வயலின் வாசிக்க இருபதாயிரம் ரூபாய் சம்பளம் பேசி அவனை அழைத்துச் செல்கிறார். சர்ச் கேட் அருகில் ஒரு பாழடைந்த மாடி வீ்ட்டில் அவர் எடுத்த நீலப்படத்திற்கு பின்னணி இசைக்கோர்ப்புக்காக அவன் வயலின் வாசிக்கிறான். அந்த நீலப்படத்தில் நடித்திருப்பது அவன் மனைவிதான்.
கனத்த இதயத்துடன் வீடு திரும்பும் அவன் தனது மனைவியை அடித்துக் கொல்கிறான். தன் வயலினை அடித்து நொறுக்குகிறான். அவள் உயிரற்ற உடல் மீது காறித்துப்புகிறான். ஆனால் அது கற்பனை, கனவுதான். கதவைத் திறந்து என்ன என்று கேட்கும்மனைவியிடம் தனக்கு வேலை கிடைத்து பணம் சம்பாதித்து வந்ததை கூறுகிறான். அவள் மகிழ்ச்சியாக கதவை சாத்துவதுடன் படம் முடிகிறது.
ART CLEANSES THE DUST GATHERED FROM EVERYDAY LIFE -கலை தினசரி வாழ்க்கையில் நாம் சேகரித்த அழுக்குகளைக் கழுவி விடுகிறது என்ற பிகாசோவின் பொன்மொழியுடன் படம் முடிகிறது.
------------------------------------------
Revelations ஆங்கிலம்-தமிழ்
இயக்குனர் விஜய் ஜெய்பால்
தமிழும் ஆங்கிலமும் கலந்த ரிவீலேசன்ஸ் படம் மந்தமான மதிய நேரத்து வெயிலைப் போல் ஆரம்பித்து சிலுசிலுவென வீசும் மாலைத் தென்றலாய் தவழ்ந்து அடர்த்தியான இருளை நோக்கி முடிகிறது. படத்தில் இளம் மனைவியாக நடித்துள்ள லட்சுமிபிரியா தனது மாடிவீட்டில் குடியிருக்கும் வயதான சேத்தன் மீது ஆசைப்படுவதுதான் கதை. சென்னையை விட்டு கொல்கத்தா வந்து குடியேறிய சேத்தன் யார், அவர் பின்னணி என்ன  , லட்சுமி பிரியாவுக்கு கணவரை விட்டு வேறொரு வயதான நபர் மேல் ஆசை ஏன், லட்சுமியின் கணவரும் ஆபீசில் தீபா என்ற பெண்ணுடன் ஆழமான முத்தங்களைப் பரிமாறி பின்னர் உடலுறவுக் கொள்ளாமல் ஓடி வந்தது ஏன் என்பது போன்ற கேள்விகளுக்கு இறுதியில் விடை கிடைக்கிறது. மிகவும் எதிர்பார்த்த முடிவாகி விட்டதால் படத்தின் திரைக்கதையில் தொய்வு. அதிலும் சேத்தனின் நடிப்பு மட்டமான தொலைக்காட்சித் தொடரை நினைவுபடுத்துகிறது.அவருக்கு அழகான லட்சுமியுடன் ஒருமுத்தக் காட்சி வேறு. நம் காதிலும் மூக்கிலும் புகை வரத்தான் செய்கிறது. லட்சுமிபிரியாவின் நடிப்பு மனதில் நிற்கிறது. காட்டன் புடவைகளிலும் கையில்லாத கொல்கத்தா பாணி ரவிக்கைகளிலும் சுடிதார்களிலும் நல்ல வளர்த்தியான உடல்வாகுடன் மனதை கவர்கிறார் லட்சுமி பிரியா சந்திரமவுலி.







தமிழிலும் மாயா, கலப்படம் ,கௌரவம் . சுட்டகதை போன்ற சில  படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் இயக்குனர்கள் இவரை தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆழமான உணர்வுகளை மிகவும் அழகாக வெளியிடுகிறார். நான்கு கதாபாத்திரங்களை மட்டுமே சுற்றிச் சுழலும் இப்படத்தில் 70 சதவீத வசனங்கள் தமிழில்தான் இருக்கின்றன.
இப்படம் பூசன் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்கிய விஜய் ஜெய்பாலுக்கு இது முதல் முழு நீளப் படம் . சில குறும்படங்களையும் அவர் இயக்கியுள்ளார். வித்தியாசமான கதைக் கருவை தேர்வுசெய்த அவர் அதில் ஆபாசத்தை கலக்காமல் ( சில முத்தக்காட்சிகள் விதிவிலக்கு) ஆண்களின் பிரச்சினையையும் ஆண்களின் பலவீனத்தைப் பயன்படுத்த நினைக்கும் பெண்களின் உணர்வுகளையும் அழகாக கூறியுள்ளார். குறிப்பாக அலுவகத் தோழியாக வரும் இளம் பெண் அர்பிதாவின் சாகச நடிப்பு, பணத்தைப் பிடுங்க பழகும் எத்தனையோ பெண்களை குறித்த எச்சரிக்கையை உருவாக்கிவிடுகிறது.
Love and other casatropies -denmark 2016
இந்தப் படத்தை யாராவது தேர்வு செய்து பார்த்தார்கள் என்றால் அவர்களைப் பாராட்ட வேண்டும். கதை சுருக்கத்தைப் படித்து படத்தைப் பார்க்கப் போனது அற்புதமான அனுபவமாக இருந்தது. படத்தின் நாயகி ரோசா ஒரு வெற்றிகரமான தெராபிஸ்ட், மனநல நிபுணி. அவள் கணவன் பிரெட்ரிக்கிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படுகிறது. மெக்கானிக்கான அவன் அந்த பெண்ணுடன் வாழ்வதை அறியாமல் அந்தப் பெண்ணுக்கே மன நல சிகிச்சையளிக்கிறாள் ரோசா. ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணுடன் உறவு கொண்டிருப்பது தனது கணவன்தான் என்று அறிகிறாள் ரோசா. இப்போது அந்தப் பெண் கர்ப்பிணியாக இருக்கிறாள். கணவரின் துரோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமலும் டீன் ஏஜ் மகள் மற்றும் சிறுவயது மகனின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமலும் தடுமாறும் அந்த நடுத்தர வயதின் தடுமாற்றங்களை, பெண்ணிய உணர்வுகளை மிகவும் அற்புதமாக வெளியிடும் கதாபாத்திரமாக ரோசா பரிணமிக்கிறது.ஒரு கட்டத்தில் ஒரே ஆணால் வஞ்சிக்கப்பட்ட இரண்டு பெண்களும் நேருக்கு நேர் சந்திப்பதும் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ளுவதும் இருவருக்கும் இடையே இணக்கம் ஏற்படுவதும் படத்தில் அற்புதமான நிகழ்வு என்றால் மறுபுறம் கணவரைப் பழிவாங்க ரோசாவும் வேறு ஒருவனுடன் முதல் பார்வையிலேயே காமம் கொண்டு அவனுடன் உடலுறவு கொள்வதும் கணவனின் நண்பன் முத்தமிடும் போது பரவாயில்லை என்று இயல்பாக இருப்பதும் படத்தின் தன்மையை மிகவும் வேறொரு மன நிலைக்குக் கொண்டு சென்று விடுகிறது. நண்பனுடன் மனைவி தொடர்பு கொண்டிருப்பதாக மாடியில் சுவர் ஏறி வந்து சத்தம் போடும் கணவன் தொபுகடீரென கீழே விழுந்து விழுந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவது துயரமான சிரிப்பை வரவழைக்கிறது. அதே மருத்துவமனையின் இன்னொரு வார்டில் தான் அந்தப் பெண்ணுக்கும் பிரசவம் நடக்கிறது. தனது கணவனின் காதலிக்குப் பிறந்த குழந்தையை எடுத்து கணவரிடம் காட்டுவதற்காக ரோசாசெல்வதுடன் படம் முடிந்துவிடுகிறது. மிகவும் கவித்துவமான ஒரு முடிவுக்கு முன்னோட்டமாக ரோசாவின் இரண்டு குழந்தைகளும் பிறக்கப் போகும் தங்கள் தம்பி பாப்பாவுக்காக பொம்மை செய்து அனுப்பி வைப்பதைச் சொல்லலாம்.
ரோசாவாக நடித்துள்ள கிறிஸ்டினா அல்பெக் தமது நடிப்பால் நம்மை படத்தின் இறுதிவரை கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார். ஒரு காட்சியில் அவர் முழு உடலையும் நாம் பார்க்கிறோம். கணவராக நடித்தவரும் முதிர் காதலியாக நடித்த மற்றொரு நடிகையும் தங்கள் பாத்திரங்களை நன்றாக உணர்ந்து நடித்திருந்தாலும் ஒரு காட்சியில் தாயுடன் வாக்குவாதம் செய்து தனது மேல் சட்டையை அத்தனை பேர் மத்தியிலும் அவிழ்த்து வீசும் இளம் பெண்ணாக நடித்தவர் பாத்திரம் இன்றைய இளம் தலைமுறையின் அப்பட்டமான வெளிப்பாடு.
Personal shopper - France 
மவுரீன் என்ற இளம் பெண் கடை கடையாக சென்று விதம் விதமான கவுன்களை வாங்குகிறார். பர்ஸ்கள், காலணிகள், லிப்ஸ்டிக் போன்ற அலங்கார சாதனங்களை பை பையாக வாங்கிக் கொண்டு வருகிறார். இதுதான் அவர் தொழில். பெண்களுக்கு ஷாப்பிங் என்றால் மிகவும் பிடிக்கும் .அதுவும் விலையுயர்ந்த நகைகள், ஆடம்பர ஆடைகளை வாங்கிக் குவிப்பதென்றால் சொல்லவும்வேண்டுமா.. .அதையே தொழிலாகக் கொண்ட ஒரு இளம் பெண்ணின் மனநிலை எப்படிஇருக்கும்? அவள் வாங்கும் அந்த ஆடைகளும் ஆபரணங்களும் அவளுக்கானது அல்ல. அவளது எஜமானியான கைரா என்ற நடிகைக்கானது. மவுரீனுக்கு ஆவிகளுடன் தொடர்பு ஏற்படுகிறது. அறியப்படாத ஆவிகளிடம் இருந்து அவள் செல்போனுக்கு குறுஞ்செய்திகள் வருகின்றன. ஆவியுடன் உரையாடுகிறாள். காதல் வயப்படுகிறாள், பேய்க்கதையாகவும் மர்மக்கதையாகவும் செல்லும் திரைப்படம் கிளைமேக்சில் உளவியல் ரீதியான படமாக மாறிவிடுகிறது. இப்படத்தின் இயக்குனர் ஆலிவர் அசாயஸ்.
படவிழாவில் திரையிடப்பட்ட பல படங்கள் சுமார் ரகம் என்று பொதுவான கருத்து இருந்தாலும் சன் ஆப் சால், சேல்ஸ் மேன் போன்ற பிரசித்தி பெற்ற ஆஸ்கர் போன்ற விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களும் இருந்தன. ஆனால் அதிகமான படங்களைப் பார்க்க முடியாமல் அங்கும் இங்கும் திரையரங்குகளை நோக்கி அலைய வேண்டியதைத் தவிர்த்திருக்கலாம்.
திரைப்பட விழாவில் பார்க்கும் படங்களைப் போல் வேறு எங்கும் இத்தகைய படங்களைப் பார்க்க முடியாது என்பதுதான் இதன் தனிச்சிறப்பு. குறைகள் இருப்பினும் சினிமாவை ஆழமாய் நேசிக்கும் ஒரு ரசிக மனத்தால் இதை புறக்கணித்துவிட முடியாது


Sunday, 5 March 2017

ஷாராஜ் கவிதைகள்

நண்பர் ஷாராஜின் கவிதை நூல் கௌதம புத்தனின் கசாப்புக் கடை வெளியீட்டு விழா கடந்த பிப்ரவரி மாதம் திருப்பூரில் நடைபெற்றது. இதில் பாமரன், வாமு கோமு , ஸ்ரீபதி பத்மனாபா, கவிஞர் மகுடேஸ்வரன் உள்ளிட்டோருடன் கலந்துக் கொண்டு நூலைப் பெற்று உரை நிகழ்த்தினேன்
ஷாராஜின் கவிதைகள் எதிர்மனநிலை கொண்டவை. தஞ்சை ப்ரகாஷூடன் இருந்த நெருக்கம் காரணமாக அவருக்கு இந்த தாக்கம் ஏற்பட்டிருக்கலாம். மேலும் சொந்த வாழ்வின் அலைக்கழிப்புகள், அவதானிப்புகளும் ஒரு கலைஞனை எதிரான மனநிலைக்கு கொண்டு செல்வதை குருதத்தின் பியாசா படத்தை மேற்கோள் காட்டி பேசினேன். இந்த வகையில் எழுதப்பட்ட கவிதைகளுக்கு ஷாராஜ் தான் முன்னோடி என்றும் குறிப்பிட்டேன்.

Thursday, 12 January 2017

மீண்டும் புத்தகக் கண்காட்சிக்கு

புத்தகக் கண்காட்சிக்கு மீண்டும் இருமுறை சென்று வந்தேன். சினிமா, கவிதை புத்தகங்கள் மட்டுமே கவனம் ஈர்க்கின்றன. மு.முருகேஷின் ஹைகூ ஆய்வு போன்றவற்றையும் அதன் உழைப்பு கருதி வாங்கினேன்.
நற்றிணை பதிப்பகம் யுகனுடன் சிறிது நேரம் பேசியதி்ல் பதிப்புத்துறையிலும் தமிழ் இலக்கியத்திலும் அவருக்குள்ள ஈடுபாடும் பிரியமும் அளவற்றது எனத் தெரிந்துக் கொண்டேன். இப்படி ஒரு வாசகர் பதிப்பாளராக இருப்பது எழுத்தாளர்களுக்கு பெரும் பேறு. அவர் சினிமா பற்றி வெளியிட்ட ஒரு புத்தகம் விலை ரூ 300 தான் ஆனால் அதன் அச்சும் தரமும் இதுவரை தமிழ்ப் பதிப்புலகம் காணாதது.
பிரபஞ்சனின் சிறுகதைத் தொகுப்புகள், அசோகமித்திரனின் கதைகள் மற்றும் கட்டுரைகள் உள்ளிட்டவற்றையும் மிகவும் நேர்த்தியாக வெளியிட்டுள்ள யுகன் ஜெயமோகனின் மகாபாரதத் தொடரையும் அற்புதமாக வெளியிட்டுள்ளார். இப்படியெல்லாம் புத்தகங்கள் அச்சாக வேண்டும் என்ற கனவு எந்த எழுத்தாளனுக்குத்தான் இல்லை. என்னுடைய புத்தகங்கள் சிலவற்றையும் நற்றிணை மூலம் வெளியிட முயற்சிக்கிறேன்.
யுகனுடன் பேசும் போது சந்தித்த இன்னொரு முக்கிய நபர் பல்லடம் மாணிக்கம் அவர்கள். விருதாச்சலத்தில் மிகப்பெரிய நூலகம் வைத்துள்ளார். திருக்குறள் மீதும் தமிழ் இலக்கியங்கள் மீதும் தீராத காதல் கொண்டவர். கோவை ஞானியின் களம் கூட்டங்களின் போது தொண்ணூறுகளில் அவரை பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். நீண்ட இடைவெளியில் நோயாலும் வயதின் முதிர்வாலும் சிறிய தளர்ச்சி உடலில் இருந்தாலும் அவருடைய அதே ஆர்வத்தை காண முடிந்தது. தீராநதியில் வெளியாகும் எனது சினிமா கட்டுரைகளை படித்து வருவதாக கூறினார்.
அதே போல் எழுத்தாளர் தேவகாந்தனை சந்தித்ததும் மகிழ்ச்சியளித்தது. பழைய எழுத்தாளர்கள் நண்பர்கள் என புத்தக கண்காட்சியில் மகிழ்ச்சிக்கு குறைவே இல்லை. கௌதம சித்தார்த்தன், கால சுப்பிரமணியன், பாஸ்கர் சக்தி, என எத்தனையோ நண்பர்களை மீண்டும் பார்ப்பதில் மனம் மகிழ்ந்து வந்தேன்.
வரும் வழியி்ல் வழக்கம் போல் பழைய புத்தகங்களை வேட்டையாடினேன்.

-----------------------------------
மறுநாளும் புத்தகக் கண்காட்சிக்கு நண்பர் சூர்யராஜனுடன் சென்றிருந்தேன். முன்னாள் சினிமா இயக்குனரான அவர் பழைய பாசத்தில் பியூர் சினிமா அரங்கில் இயக்குனர் மகேந்திரனின் சினிமாவும் நானும் நூலை வாங்கினார். நான் காலச்சுவடு பதிப்பகத்தில் சுந்தர ராமசாமி நேர்காணல்கள், நானும் என் எழுத்தும் போன்ற நூல்களை வாங்கினேன். எஸ்.சண்முகத்துடன் சிறிது நேரம் பேசினேன். எல்லா நண்பர்களும் கிடங்குத்தெரு பற்றி விசாரிக்கிறார்கள். அந்த நாவலின் இடத்தை வேறு எந்த புத்தகமும் ஈடு செய்யவில்லை என்ற நண்பர்கள் சிலரின் கருத்து நீண்ட யோசனையை ஏற்படுத்தியது.
 இன்னொரு நாவல் விரைவில் வெளியிட வேண்டும். கிடங்குத் தெருவை விடவும் பெரிதாகவும் ஆழமாகவும்......எழுதிக் கொண்டிருக்கிறன்.




சந்திப்பு - அம்பை

எழுத்தாளர் அம்பையின் கதைகள் மீது எனக்கு இளம் வயது முதலே ஈர்ப்பு உள்ளது. சென்சிபல்என்ற ஆங்கில வார்த்தைக்கு நிகரான இலக்கியம் அவருடையது. அவர் யார் எனத் தெரியாமல்தான் பல ஆண்டுகளாக அவர் கதைகளை சிற்றிதழ்களிலும் பின்னர் காட்டில் ஒரு மான், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை போன்ற தொகுப்புகளிலும் வாசி்த்திருக்கிறேன். நண்பராக இருந்த ஜெயமோகன் நடத்திய சொல்புதிது இதழில் அம்பை கதைகளைக் குறித்து விரிவான கட்டுரை ஒன்றும் எழுதியிருக்கிறேன். சென்னை புத்தகக் கண்காட்சியின் விருட்சம் அரங்கில் தற்செயலாக அம்பையை சந்திக்க நேர்ந்தது. அழகிய சிங்கர் அவரிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அமைதியாக கேட்டுக் கொண்டிருந்து விட்டு அவரிடம் என்னை அறிமுகம் செய்துக் கொண்டேன். அட நீங்கதானா செந்தூரம் ஜெகதீஷ் என மகிழ்ச்சியுடன் கைகுலுக்கிய அவர், எனது கிடங்குத் தெரு நாவலை மிகவும் விரும்பியதாக கூறினார். ஐ லவ் தட் நாவல் என்று அவர் கூறுவதைக் கேட்க எனக்கு அளவற்ற மகிழ்ச்சி. சுந்தர ராமசாமியும் அந்த நாவலை விரும்பியிருக்கிறார் என்று காலச்சு வடு கண்ணன் முன்பு எனக்கு எழுதிய கடிதம் மூலம் தெரிந்தது. பிரம்மராஜனும் காலச்சுவடு கட்டுரையில் அந்த நாவலை குறிப்பிட்டார். நாஞ்சில் நாடன் மிக சுவாரஸ்யமான இலக்கியப் படைப்பு எனப் பாராட்டியிருக்கிறார். கோவை ஞானி, பிரபஞ்சன், க.மோகனரங்கன் என பலர் விமர்சனம் செய்துள்ளனர். இது எனக்கு மிகவும் பெருமையானதுதான். அம்பையும் இந்தப்பட்டியலில் இணைந்தார். அந்த நாவல் போதிய கவனம் பெறாமல் போய்விட்டதாக ஒரு சிறு ஏக்கம் இருக்கிறது. மறுபதிப்புக்கும் தயாராகி வருகிறேன். நான் அந்த நாவலைப் பற்றி எழுதுகிறேன் என்றார் அம்பை. கடைசியில் அவரிடமிருந்து விடைபெறும் போதும் மகிழ்ச்சியை தெரிவித்த அவர் இந்தியில் உங்களை சந்தித்தது பெரும் மகிழ்ச்சியை தந்தது என்று கூறினார்.( மஜா ஆயா அம்பை எனும் ஆளுமையிடம் பேசிய சில மணித்துளிகள் முக்கியமானவை. இலக்கியத்தில் இதையெல்லாம் யாராவது பதிவு செய்தால் தேவலாம்.

Saturday, 7 January 2017

புத்தகக் கண்காட்சி 2017

இரண்டாவது நாளிலேயே புத்தகக் கண்காட்சிக்குப் போவது வழக்கம். இம்முறையும் சென்றேன். காரணம் அதிக கூட்டமில்லாத நிலையில் பொறுமையாக புத்தகங்களைத் தேடலாம் என்பதே. கூட்டத்தில் தேடுவது சிரமம் ,மேலும் விரும்பும் விரும்பாத நண்பர்கள் சூழ்ந்துவிடுவார்கள். சிலரைத் தவிர்க்க முடிந்தாலும் சிலரைத் தவிர்க்க முடியாது. சிலருடன் பேச விரும்பினாலும் நேரம் இருக்காது. இப்படிப்பட்ட சிக்கல்கள் தொடக்க நாட்களில் இருக்காது.
க்ரியா பதிப்பகத்தில் சார்லஸ் பௌதேலரின் கவிதை நூல், மணற்கேணி வெளியிட்ட தேன்மொழியின் மூன்று கவிதைத் தொகுதிகள் , முத்துகாமிக்ஸ் அரங்கில் இரண்டு இரும்புக்கை மாயாவி காமிக்ஸ், இரண்டு சிஐடி லாரன்ஸ் டேவிட் காமிக்ஸ், குதிரைவீரன் பயணம் வெளியிட்ட சி.மோகன் சிறப்பிதழ், படச்சுருள் ,நிழல் சினிமா இதழ்கள், எடிட்டர் பி.லெனின் எழுதிய சினிமா ரசனை புத்தகம் போன்ற நூல்களை வாங்கி வந்தேன்,கடலில் இது கையளவுதான்.

எஸ்,ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதாவின் அனைத்து நூல்களையும் வாங்க வேண்டும். புதிய நாவல்களை வாங்க வேண்டும். சினிமா தொடர்பான புத்தகங்களையும் க்ரியா அகராதியையும் டாக்டர் இல்லாத இடத்தில் நூலையும் பூமணியின் அஞ்ஞாடியையும் சாகித்ய அகாடமி வெளியீடான தமிழ் இலக்கிய வரலாறு ( சிற்பி, நீல பத்மனாபன் தொகுத்தது ) அகநி வெளியீடான சிவனடியின் வரலாற்று தொகுதிகள், பெண் படைப்பாளிகளின் நூல்கள், பாலகுமாரன் சுஜாதாவின் சில புத்தகங்கள், மனுஷ்யபுத்திரன் கவிதைகள், பிரமீள், பிரம்மராஜன் தொகுப்புகள் என வாங்க வேண்டிய புத்தகங்கள் ஏராளமாக கண்ணில் தட்டுப்பட்டன.
பெரும்பாலும் புத்தகங்கள் விலை 400, 500 என இருப்பதால் வாங்க இயலுவதில்லை, ஒரு சில மட்டும் அடுத்த ரவுண்டில் வாங்குவேன்.

தமிழினி பதிப்பத்தில் வசந்தகுமார் அண்ணாச்சியை சந்தித்துப் பேசினேன். மற்றபடி புத்தகக் கண்காட்சியில் ஈர்ப்பும் ஆர்வமும் குறையத் தொடங்கியுள்ளது .பணமி்ன்மை, எனது புத்தகங்கள் வெளி வராமை, வேலை குறித்த எதிர்காலம் முதுமை குறித்த கவலைகள், இருக்கும் புத்தகங்களையே படிக்க முடியாமல் பராமரிக்க முடியாமல் இருக்கும் இயலாமை என பலவித காரணங்கள் இருக்கலாம். எழுத்தாளர்களின் போலியான முகங்களை கசப்பான அனுபவங்களூடாக கண்டதும் முக்கியக் காரணமாக இருக்கலாம். நல்ல எழுத்தாளர்கள் நல்ல மனிதர்களாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மடத்தனமாக இருக்கிறது. பதிப்பாளர்களோ கடைந்தெடுத்த அயோக்கிய கொள்ளையர்களாக இருக்கிறார்கள் என்பதும் ஒரு கசப்பான அனுபவம், நல்ல பதி்ப்பாளர்கள் நல்ல வியாபாரிகளாகவும் இருக்கிறார்கள். வியாபாரிகளுடன் எனக்கு ஒருபோதும் ஒட்டுதல் இருந்ததில்லை.
ஆனாலும் புத்தகங்களுடனான உறவு முடிவதே இல்லை. புத்தகக் கண்காட்சி முடித்து திரும்பும் வழியில் எனக்கு மட்டும் தெரிந்த ஒரு பழைய புத்தகக் கடையில் பாலிவுட் சினிமா பற்றிய இரண்டு ஆங்கில நூல்கள், சில ஆங்கில நாவல்கள், ஏராளமான ஆங்கில பத்திரிகைகள் வாங்கிக் கொண்டு இரண்டு புத்தக மூட்டைகளுடன் வீடு திரும்பினேன். இரண்டாவது மூட்டையின் செலவு வெறும் ரூ 150 மட்டும்தான்.

Thursday, 5 January 2017

உலக சினிமா - கருவில் பிறந்த காதலன் -WOMB

குமுதம் தீராநதி ஜனவரி 2017 ல் வெளியான எனது உலக சினிமா கட்டுரை இது....









ஜெர்மானிய திரைப்படம்
     WOMB - கருவில் பிறந்த காதலன்
          செந்தூரம் ஜெகதீஷ்


தந்தைக்கு மகளை பிடிப்பதும் தாய்க்கு மகனைப் பிடிப்பதும் ஏன் என்றொரு கேள்விக்கு உளவியல் மேதை சிக்மண்ட் பிராய்ட்  விடை காண முயன்றார். இளம் வயது கணவரை மகன் பிரதிபலிப்பதும் இளமையில் மனைவியின் தோற்றத்தை மகள் பிரதிபலிப்பதும் ஓர் உளவியல் காரணமாக கருதப்பட்டது. இப்பிரச்சினையை மையமாக வைத்து உருவான படம் தான் வோம்ப்( கர்ப்பப் பை)
இப்படத்தின் ஆரம்பத்தில் கருவில் உள்ள தனது குழந்தையுடன் ஒரு தாய் பேசுகிறாள். " நீ என்னை விட்டு விலகிப் போய்விட்டாய் என்பதால் நீ இல்லவே இல்லை என்பதை என்னால் ஏற்க முடியாது" என்கிறாள் ரெபக்கா என்ற அந்த தாய்.
படம் பின்னோக்கி நகர்கிறது. இளம் சிறுமியான ரெபக்காவுக்கும்  டாமி என்ற தாமசுக்கும் பால்ய கால காதல் மலர்கிறது. கடற்கரையில் அலைகளையும் மேகங்களையும் பார்க்க பிரியமுடைய தாமஸ் புயல் காலத்தில் கடலைப் பார்க்க ரெபக்காவை அழைத்துச் சென்று கலங்கரை விளக்கம் அருகே அமரச் செய்கிறான். அற்புதமான காட்சிகளுடன் கேமரா அந்த இளம் காதல் உள்ளங்களின் அலைக்கழிப்பை நமக்கு உணர்த்துகிறது. கடல் அலைகளில் அவன் ஆடைகளின்றி நீந்துவதையும் சைக்கிளில் வேகமாக செல்வதையும் அவள் ரசித்து சிரி்க்கிறாள்.
ஒரு முறை அவளை அவன் மிக மிருதுவாக இதழுடன் இதழ் பட்டும் படாமலும் முத்தமிடுகிறான், பின்னர் அவள் படிப்புக்காக தூரத்திற்கு பிரிந்து சென்று விடுகிறாள் .கடற்கரையில் அவர்கள் பிடித்து வந்த நத்தை ஒன்று அவள் நினைவாக மேஜையில் ஊர்ந்து செல்கிறது.
12 ஆண்டுகள் கழித்து பட்டப்படிப்பு முடித்து இளம் பெண்ணாக திரும்பி வரும் ரெபக்கா தாமசை மறக்கவில்லை. இருவரும் மீண்டும் நட்புடன் கைகோர்க்கிறார்கள். டாமி தீப்பெட்டியில் அவள் விட்டுச் சென்ற நத்தையை காட்டுகிறான். அது ஒரிஜினல் நத்தையல்ல,குளோனிங் மூலம் உருவாக்கியது என்கிறான். பழைய நத்தை இறந்துவிட்டது.
டாமி இப்போது அறிவியலில் நிபுணனாகி குளோனிங் செய்ய முற்படுகிறான்.  வயல்களில் பயிரை பாதுகாக்கும் பூச்சிகளை குளோனிங் மூலம் அதிகரிக்க செய்வது அவன் திட்டம்.
அவனும் ரெபக்காவும் அவனுடைய எஸ்டேட்டை பார்க்க காரில் செல்கிறார்கள். ஆனால் அப்போது சாலையை கடக்கும் டாமி மீது வேகமாக வந்த வேன் ஒன்று மோத அங்கேயே அவன் பட்டென செத்துப் போகிறான்.
மரணம் ஒரு முடிவல்ல....இன்னொரு வாழ்க்கையின் புதிய ஆரம்பம்தான் என்ற டாமியின் சொற்கள் ரெபக்காவின் காதுகளில் எதிரொலிக்கின்றன.
இந்த அதிர்ச்சியைத் தாளாமல் அழுது கதறும் டாமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறும் ரெபக்கா மீண்டும் டாமியை வரவழைக்க முடியும் என்கிறாள். டாமியின் தந்தையின் உடலில் உள்ள மரபணுக்களை தமது கருவில் செலுத்தினால் மீண்டும் டாமி பிறந்து வருவான் என்பது அவளது நம்பிக்கை. குளோனிங் என்பது வயல்வெளி பூச்சிகளுக்கு தான் மனிதர்களுக்கு அல்ல என்று டாமியின் தந்தை ரபேல் புத்தி கூறுகிறார், இயற்கை தருவதைப் பெற்றுக் கொள்வதும் அது பறித்துக் கொள்வதை விட்டுக் கொடுப்பதும் தான் மனிதர்களுக்கு உகந்தது என்று கூறும் அறிவுரையை ரெபக்கா ஏற்கவில்லை. வாழ்க்கை தான் மீண்டும் ஒருமுறை டாமியை நம்மிடம் கொண்டு வர இந்த பரிசை அளித்திருக்கிறது என்று அவள் மருத்துவ வளர்ச்சியை புகழ்கிறாள். ஒருவழியாக டாமியின் பெற்றோர் ஒப்புக் கொள்கிறார்கள்.
டாமியின் மரபணுக்கள் ரெபக்காவின் உடலில் செலுத்தப்படுகிறது. அவள் கன்னி கழியாமலே கருவுறுகிறாள். அழகான ஆண் குழந்தை ஒன்று பிறக்கிறது. அதற்கு டாமி என்றே பெயர் வைக்கிறாள் ரெபக்கா.
அவள் மார்பகத்தில் சுரக்கும் தாய்ப்பாலை பசியுடன் கைக்குழந்தையான டாமி கேட்கும் போது, குழந்தையின் வாயில் முலையை ஊட்டி சாப்பிடு என்கிறாள் ரெபக்கா. அப்போது அவள் கூறும் வசனம் ஒரு தாய் மகனுக்கு கூறுவதாக இல்லை. ஒரு காதலியின் முலையைப் பருகும் காதலனுக்கு கூறுவதாக இருக்கிறது. அன்பே , யாரும் இல்லை இங்கே உன்னையும் என்னையும் தவிர .எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடு என்கிறாள் ரெபக்கா.
மனித நடமாட்டம் யாருமற்ற ஒரு அத்துவான கடல் பண்ணை வீட்டில் தாயுடன் வளர்கிறான் டாமி. தாயுடன் தண்ணீர்த் தொட்டியி்ல் நிர்வாணமாக குளிக்கிறான். தாய்தான் உடலும் உள்ளமுமாக அவனுடன் நெருங்கிப் பழகும் ஒரே மனிதப்பிறவி. அவன் பிறந்தநாளுக்குக் கூட குழந்தைகளை அனுப்ப தாய்மார்கள் விரும்பவில்லை. அவன் ஒரு "காப்பி "குழந்தை என்பதால்.
ஆனால் டாமி வளர்ந்து வாலிபனானதும் அவனுக்கு மோனிகா என்றொரு காதலி கிடைக்கிறாள். மோனிகாவும் டாமியும் முத்தமிடுவதை போர்வையில் முகத்தை மூடிக்கிடக்கும் ரெபக்கா பொறாமையுடன் ஒரு கண்ணால் பார்க்கிறாள்.
டாமிக்கு தன் தந்தையின் குணங்கள் அப்படியே இருக்கின்றன. அதில் ரெபக்கா மீதான அளவு கடந்த அன்பும் அந்த அன்புக்கு என்ன பெயரிடுவது என்று தெரியாத குழப்பமும் உள்ளது.
ஆனால் கடற்கரையில் தாயிடம் நெருக்கமாக இருக்கும் டாமியைப் பார்த்து மோனிகா அதிர்ச்சியடைகிறாள். இதைப் பற்றி அவள் ரெபக்காவிடமும் டாமியிடமும் பேசிப் பார்க்கிறாள். ஆனால் இருவரும் குற்ற உணர்ச்சியால் பேச மறுக்கி்றார்கள். மோனிகா பிரிந்து செல்கிறாள்.
தாயுடன் சண்டை போடுகிறான் மகன். நீ என்னை என்னவென்று நினைத்திருக்கிறாய் என்று அவன் கேட்டாலும் அவன் தனக்குள்ளும் அந்தக் கேள்வியை கேட்கத் தவறவில்லை. பாலியல் ரீதியான பதற்ற நிலைகளுடன் டாமி ரெபக்காவை உலுக்கி எடுக்கிறான். நீ யார் நான் யார் என்ற அவனது கேள்வி்க்கு அவள் அவன் தந்தையைப் பற்றியும் அவன் பிறப்பை பற்றியும் அவனை தான் பெற்றெடுத்த நோக்கம் குறித்தும் கூறுகிறாள். டாமி அழுகிறான் . தாயிடம் கோபம் வெடிக்கிறது. ஆனால் அந்தக் கோபத்தை அவன் காமம் மிஞ்சுகிறது. நடுத்தர வயதில் இளமை மாறாமல் உள்ள தாயை காதலியைப் போல்  முத்தமிடுகிறான். அவளும் அதை விரும்புகிறாள். இருவரும் உடலுறவு கொள்கிறார்கள்.  அந்தக் காட்சியில் ரெபக்கா கன்னி கழிவதை இயக்குனர் நமக்கு அவள் கையில் இருக்கும் ரத்தம் மூலம் உணர்த்துகிறார். படத்தின் இயக்குனர் பெண்டக் ஃபிளைகாப்(Bendek fliegauf)
அதன் பிறகு குற்ற உணர்ச்சியால் டாமி ரெபக்காவை நிரந்தரமாக பிரிந்து சென்று விடுகிறான். போகும் போது அவன் முதன்முறையாக அவளை அம்மா என்றழைக்காமல் ரெபக்கா எனப் பெயர் கூறி அழைக்கிறான்.
ஆனால் டாமி கொடுத்த கரு அவள் கர்ப்பப் பையில் வளர்கிறது. இது இயற்கையான கருத்தரிப்பு, ஆனால் ஒரு முறையற்ற உறவில்.
அந்த கருவில் உள்ள குழந்தையுடன் தான் ரெபக்கா படத்தின் ஆரம்பக் காட்சியி்ல் பேசிக் கொண்டிருக்கிறாள். இந்தக் குழந்தையை அவள் ஒரு தாயாக மட்டுமே பார்க்கப் போகிறாள் என்று நாம் ஊகிக்கிறோம்
வாழ்க்கை புதிரானது. மனிதர்களின் உணர்ச்சிகளுடனும் உறவுகளுடனும் விளையாடி சி்க்கல்களை உருவாக்கி விடுகிறது. அண்ணன்-தங்கை, தாய்-மகன் போன்ற புனிதங்களைப் போட்டு உடைத்துவிடுகிறது. ஆதி மனிதன் விலங்குகளைப் போல் தாயையும் தங்கையையும் புணர்ந்துதான் மனித சமூகம் வளர்ச்சியடைந்துள்ளது. பாலியல் உணர்வுகள் தாயிடமும் தங்கையிடமும் வளராதவாறு மதரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒழுக்கத்தைப் போதித்து குழந்தைகளை வளர்க்கிறோம். ஆனால் சிக்மண்ட் பிராய்டையும் நாம் மறந்து விடமுடியாது .
ஜெயகாந்தனின் ரிஷிமூலம், தி.ஜானகிராமனின் நாவல்கள் போன்றவை இத்தகைய பிரச்சினைகளை நுட்பமாக கையாண்டுள்ளன. இந்தப்படமும் மேலோட்டமாக பாலியல் பிறழ்வு, ஒழுக்கக்கேடு ஆகியவற்றை சித்தரிப்பதாக தோன்றினாலும் நமது கலாச்சாரத்திற்கு முற்றிலும் அந்நியத்தன்மையுடன் திகழ்ந்தாலும் நாம் பேச மறுக்கும் பார்க்க மறுக்கும் ஒரு உண்மையை அப்பட்டமாக நம் கண் முன் நிறுத்தி நம்மை அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறது. ரெபக்காவாக இவா கிரீனும் டாமியாக மேட் ஸ்மித்தும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். படத்தில் அனாவசியமான நிர்வாணக் காட்சிகளோ உடலுறவுக்காட்சிகளோ இல்லை. ஒரு சில காட்சிகளே கதைக்கு தேவையாக இருந்தபோதும் இயக்குனர் அதனை மிகவும் ஆபாசமாக சித்தரிக்கவில்லை. இதுவே இப்படத்தின் தரத்திற்கு உயர்வை அளிக்கிறது.
ஆண்களைப் பொருத்தவரை பெண் உடல் இச்சைக்கான ஒரு போக வஸ்துதான். இது நமது பண்பாட்டில் ஒரு அம்சமாகவே மாறிப் போயிருக்கிறது. இணக்கமாக இருக்கும் எந்த ஒரு பெண்ணையும் படுக்கையில் சாய்க்க ஆண்களுக்கு குற்ற உணர்ச்சியோ தயக்கமோ இல்லை. மகளிடம் அத்துமீறும் தந்தை, மாணவிகளிடம் அத்துமீறும் ஆசிரியர், நண்பரின் மனைவியுடன் கள்ளக்காதல்  என ஏராளமான செய்திகளை தினமும் செய்தித் தாள்களில் வாசிக்கிறோம், மூன்று வயது நான்கு வயது பெண் குழந்தைகளைக் கூட பாலியல் ரீதியாக வன்புணர்ச்சி செய்யும் வக்கிரங்களையும் நமக்கு இச்சமூகம் தினமும் கண்முன்னே நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறது. மனிதனுக்குள் இருக்கும் ஆதி மனிதனின் மிருக உணர்ச்சி இலக்கியத்தாலும் இசையாலும் கலையாலும் மதத்தாலும் மாறிவிடவில்லை. மாறாக அடக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிவாளத்தை கட்டவிழ்த்து விட்டால் எந்த ஒரு குதிரையும் தறிகெட்டு ஓடும். எந்த ஒரு யானையும் மதம் பிடித்து ஆடும். எந்த ஒரு புலியும் வேட்டையாடிக் கொல்லும். டெல்லியில் நிர்பயாவுக்கு நிகழ்ந்தது இதுதான்.
ஒரு பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு அது குறித்த புரிந்துணர்வும் விழி்ப்புணர்வும் அவசியம் என்பார் ஜே.கிருஷ்ணமூர்த்தி .அத்தகைய ஒரு புரிந்துணர்வை இப்படம் அளிக்கத் தவறவில்லை.







Saturday, 31 December 2016

புத்தாண்டு 2017



நாளை மற்றொரு நாளே என்ற ஜி.நாகராஜனின் நாவல் தலைப்பு மனதுக்குள் நிறைந்துள்ளது. அதனால் புத்தாண்டு, தீபாவளி போன்ற கொண்டாட்டங்களின் போது கூறுவதற்கு ஒன்றுமில்லை. இந்த ஆண்டும் எனக்கு காதலில் வெறுமையும் ஏமாற்றமும் நீடிக்கும் என்று ராசிபலன் கூறுகிறது. எந்த உற்சாகத்தில் வாழ்த்துக் கூறுவது என்றே தெரியவில்லை. நண்பர்கள் ஓயாமல் தொலைபேசியிலும் நேரிலும் வாழ்த்தி மகிழ்கிறார்கள். தனிமையிலே இனிமை காண முடியுமா என்ற பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தேன். எங்கே மனிதன் யாருமில்லையோ அங்கே எனக்கொரு இடம் வேண்டும் என்ற கண்ணதாசனின் அழுகுரலும் மனதுக்குள் எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறது. திடீரென நேற்றிரவு முதலே துயரமான மனநிலைக்கு ஆட்பட்டு விட்டேன். கடந்த 2016ம் ஆண்டு தந்தையை இழந்தது ஒரு சோகத்தை உருவாக்கியது ஒரு காரணமாக இருக்கலாம்.
இருப்பினும் எனது உணர்வுகளால் மற்றவர்களின் உற்சாகத்துக்கு தடை சொல்ல முடியாது. என் மீது பிரியம் கொண்ட அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Friday, 30 December 2016

பயணம் 7 -பாலக்காடு

பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா என்ற பாடல் வியட்நாம் வீடு படத்திற்காக கண்ணதாசன் எழுதியது. ஆனால் அது எம்.எஸ்.விக்காக எழுதப்பட்டிருக்கலாம். ஏனென்றால் எம்.எஸ்.வி பாலக்காடு மாவட்டம் பாறா பகுதியைச் சேர்ந்தவர். சில நாட்களுக்கு முன்பு பாலக்காடு சென்றிருந்தேன். ஒரு இலக்குமில்லாத பயணங்களில் இதுவும் ஒன்று நினைத்தபோது நினைத்த ஊருக்குப் போய்விடுவேன். கோவை போனதும் எங்கே போகலாம் என யோசித்து பாலக்காடு சென்றேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஊராக இல்லை. ரயில் நிலையம் முதல்  பேருந்து நிலையம் வரை பல மாற்றங்கள்,
ரயிலில் மதுக்கரை, கஞ்சிக்கோடு என பார்த்த பகுதிகளை மீண்டும் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. ரயிலில் காய்கறிகளை கவரில் போட்டு விற்பது இன்றும் தொடர்கிறது. திரும்பி வரும் போது கோவைக்கு கே.எஸ்.ஆர்டிசி பேருந்து செல்ல வேண்டும் என டவுன் பஸ்ஸில் ஏற்றி விட்டார்கள்.
அதற்கு முன்பு  சில மணி நேரங்களுக்கு ஊரை
சுற்றி வந்தேன். இரண்டு கடைகளில் பழைய மலையாள டிவிடிக்கள் வாங்கினேன். ராமு காரியாட்டின் நெல்லு அதில் ஒன்று பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்தது. கனகதுர்காவும் ஜெயபாரதியும் நடித்த படம். அதே போல் கமல்ஹாசன் நடித்த ஈட்டா உள்ளிட்ட 4 மலையாளப் படங்கள் ஒரே டிவிடியில் கிடைத்தன.

கேரள வாழைக்காய் சிப்ஸ், தேநீர் ருசியுடன் என் நினைவுகள் பின்னோக்கி்ச் சென்றன. பாலக்காட்டில் சில நண்பர்கள் இருந்தனர். இப்போது ஷாராஜ் மட்டுமே தொடர்பில் இருக்கிறார். சித்தூர் அரசு கல்லூரியில் பேராசிரியரான வேதசகாயகுமார் நாகர்கோவில் சென்றுவிட்டார். பாறா பகுதியைச்ம சேர்ந்த நோம்பிக்கோடு என்.மனோகரன் சித்தூர் அரசுக்கலை கல்லூரியில் பேராசிரியராக இருப்பதாக தெரிகிறது. சந்திக்கவில்லை. மற்ற நண்பர்களுக்கு வயதாகி டீன் ஏஜில் பெண் குழந்தையோ ஆண்குழந்தையோ இருப்பதை அறிகிறேன். எனக்கும் 15 வயது மகன் விக்கி இருக்கிறான்.

காலம் எத்தனையோ சுவடுகளை அழித்து விடுகிறது. சில வலிகளையும் நீக்கி விடுகிறது. சில துளி கண்ணீரை மட்டும் விழிகள் தக்கவைத்துள்ளன. சில நினைவுகளை உள்ளம் ஆழமாகப் புதைத்து விட்டது. சில உணர்வுகளை நானே ரத்து செய்யத் தொடங்கிவிட்டேன். சில கனவுகள் மட்டும் இருக்கின்றன. அவையும் அர்த்தமற்றவை. சில சந்திப்புகளுக்கான ஏக்கம் இருக்கிறது. சில நண்பர்களுக்கான உறவுக்கு என் கைகள் இன்றும் நீள்கின்றன. ஆனால் மறுமுனையில் வெறுமைதான் எஞ்சியிருக்கிறது.
கோவையும் பாலக்காடும் எனது கடந்தகாலத்தின் ரணங்களைக் கீறிச் சென்றாலும் இன்றும் அதன் வசியம் குறைந்துவிடவில்லை


Saturday, 24 December 2016

தமிழ்மணவாளன் கவிதை நூல்

நண்பர் கவிஞர் தமிழ்மணவாளனின் புதிய கவிதை நூல்- உயிர்த்தெழுதலின் கடவுச்சொல் வெளியீட்டுவிழா டிசம்பர் 24-2016 சென்னை இக்சா மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபஞ்சன், எஸ்.சண்முகம் ஆகியோரின் அடர்த்தியான உரைகள் நவீன கவிதைகள் குறித்த பொது அபிப்ராயங்களை கேள்விக்குட்படுத்தி நீண்ட விவாதத்திற்கு வழி வகுத்தன. லதா ராமகிருஷ்ணன், சொர்ணபாரதி, சூரியதாஸ்,விஜயேந்திரா உள்ளிட்ட படைப்பாளிகளும் சிறப்பாக தங்கள் பங்களிப்பை செலுத்தினர்.
பாவையர் மலர் ஆசிரியர் வான்மதி, கல்கி துணை ஆசிரியர் அமிர்தம் சூர்யா, தளம் இதழ் ஆசிரியர் பாரவி உட்பட ஏராளமான இலக்கிய முகங்களை காண முடிந்தது. நீண்ட காலத்திற்குப் பிறகு நிறைவான இலக்கிய நிகழ்வு. சாத்தியமாக்கிய தமிழ் மணவாளனுக்கு நன்றியும் வாழ்த்தும்

Wednesday, 21 December 2016

வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி

கல்யாண்ஜி என்ற பெயரில் அகரம் பதிப்பகம் வெளியிட்ட புலரி தொகுப்பு முதல் கல்யாணசுந்தரத்தை பரிச்சயம் செய்து சில சந்தர்ப்பங்களி்ல் நேரிலும் கலந்துரையாடியிருக்கிறேன். (அவருடைய தந்தை திகசியுடனும் இணக்கமான நட்பு இருந்தது. திருநெல்வேலி டவுனில் உள்ள சுடலைமாடன் வீதிக்கு திகசியை சந்திக்க ஓரிரு முறை போயிருக்கிறேன்.)
வண்ணதாசன் என்ற பெயரில் கல்யாண்ஜி எழுதும் ஏராளமான கதைகளை வாசித்தும் இருக்கிறேன், கோவை ஞானியின் களம் கூட்டங்களில் வண்ணதாசன் படைப்புகள் குறித்து பேசியிருக்கிறோம். அவருடைய கடிதங்கள் தொகுதிக்கு நிகழ் இதழில் விமர்சனமும் எழுதியிருக்கிறேன். எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் வண்ணதாசன் ஒருவர். மென்மையான உணர்வுகளுடைய அற்புதமான மனிதர் என்பதை வாசிப்பிலும் அனுபவத்திலும் அறிந்திருக்கிறேன்.அவருக்கு தாமதமாகவேனும் சாகி்த்ய அகாடமி அளிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியாக உள்ளது. விஷ்ணுபுரம் இலக்கிய விருதுடன் அவருக்கு சாகித்ய அகாடமி கிடைக்க காரணமாக இருந்த அனைவருக்கும் மானசீகமாக நன்றி. வண்ணதாசனுக்கு வாழ்த்துகள்.

Thursday, 8 December 2016

அஞ்சலி -ஜெயலலிதா




தமிழக மக்களின் அபிமானத்தைப் பெரிய அளவில் பெற்றவர் ஜெயலலிதா.அவருடைய அரசியல் நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ எம்ஜிஆரால் அழைத்து வரப்பட்டவர் என்றும் எம்ஜிஆரைப் போல் தம்மை அரசியலுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர் என்றும் கூறப்படுவது உண்மைதான். திராவிட இயக்கங்களால் தமிழகம் வறட்டுத்தனமான பெரியாரின்நா த்திகப் பாதைக்குத் திரும்பிவிடாமல் ஆன்மீகப் பாதைக்கு அழைத்து வந்ததில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பங்கு  முக்கியமானது என்று கூறப்படுவதை மறுக்க முடியாது. எனக்கு நடிகையாக பார்த்த ஜெயலலிதாவின் திறன்கள் நடனம், அபிநயம், அழகு எல்லாமே மறக்க முடியாத பதிவுகள். தமிழக முதலமைச்சராக அவர் ஆற்றிய பணிகள் குறைவாக இருப்பினும் மக்களின் அன்பை முழுமையாகப் பெற்றவர். இன்னும் பல காலம் வாழ வேண்டியவர் போய் விட்டது நம்ப முடியாததாக உள்ளது. கடைசியில் வாழ்க்கையை மரணம் தான் ஜெயித்து விடுகிறது.



ஜெயலலிதாவின் பாடல்களில் கட்டழகுத் தங்க மகள் திருநாளோ என்ற காவல்காரன் படப்பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். வாலி எழுதிய இந்தப் பாடலில் என் கண்களில் நீ தரும் தரிசனமோ என்ற வரிகளில் நெகிழ்ச்சியடைந்திருக்கிறேன்.


ஜெயலலிதா நடித்த சிறந்த படங்கள் என பட்டியலிட்டால் எம்ஜிஆருடன்
ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், அன்னமிட்டகை, நம்நாடு, ராமன் தேடி சீதை, தேடி வந்த மாப்பிள்ளை, காவல்காரன், புதிய பூமி ,கண்ணன் என் காதலன், சந்திரோதயம் , ஒருதாய் மக்கள் ,என் அண்ணன், ரகசிய போலீஸ் 115
போன்ற படங்களை சொல்லலாம்
சிவாஜி கணேசனுடன்
ராஜா, சுமதி என் சுந்தரி, எங்கிருந்தோ வந்தாள், அவன்தான் மனிதன், பட்டிக்காடா பட்டணமா, சவாலே சமாளி, தெய்வமகன் ,எங்க ஊர் ராஜா , எங்க மாமா, கலாட்டா கல்யாணம், போன்ற படங்கள் நினைவில் நிற்கின்றன.
கமலுடன் ஒரே ஒரு படத்தில் ( அன்பு தங்கை ) மேனகையாக நடனமாடியிருக்கிறார் ஜெயலலிதா. ரஜினியுடன் தமது கடைசி படமான நதியைத் தேடி வந்த கடல் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் அந்தப் படத்தில் சரத்பாபு நடித்தார்.

முத்துராமனோடு சூரியகாந்தி. ஜெய்சங்கருடன் யார்நீ, பொம்மலாட்டம், வைரம்,  ரவிச்சந்திரனுடன் நான், மூன்றெழுத்து, குமரிப்பெண், ஜெமினி கணேசனுடன் அன்னை வேளாங்கண்ணி என்று பலதரப்பட்ட படங்களில் பலவித வேடங்களில்  ஜெயலலிதாவின் நடிப்பு பாராட்டைப் பெற்றது.

அவர் மிகச்சிறந்த பாடகியும் கூட. அம்மா என்றால் அன்பு பாடல் நல்ல உதாரணம், ஆனால் அந்தப் பாடலை எழுதிய வாலி மறைந்த போது ஒரு இரங்கல் குறிப்பைக் கூட முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிடவில்லை. அதே போல் ஜெயலலிதாவின் இறுதி அஞ்சலிக்காக வந்த வடிவேலு திருப்பி அனுப்பப்பட்டதும் ஜெயலலிதாவுக்கு குரல் கொடுத்த பி.சுசிலா பத்துடன் பதினொன்றாக கூட்டத்தில் வந்து போனதும் தான் மனதுக்கு வருத்தமளிக்கிறது. மகத்தான கலைஞர்களை மதிக்க வேண்டாமா.......

Saturday, 3 December 2016

உலகசினிமா -கண்ணீரில் எழுதிய காதல் கடிதங்கள்

குமுதம் தீராநதி -டிசம்பர் 2016 இதழில் வெளியான எனது கட்டுரை இது....

உலக சினிமா -
கண்ணீரில் எழுதிய காதல் கடிதங்கள்......
செந்தூரம் ஜெகதீஷ்
Letters to Juliet








அவன் தனதுஇருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தான். அந்தப் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பெண்ணின் முகம் பரிச்சயமானதாக தெரிந்தது. வண்டியின் வேகத்தை குறைத்து அவளை நெருங்கிச் சென்று வண்டியை நிறுத்தினான். அவள் முகத்தில் புன்னகை. ஆம் அது அவளே தான் சுமார் 25 ஆண்டுகள் கழித்து அவன் சந்திக்கும் பெண் அவள். இள வயதில் நான்கு ஆண்டுகள் அவள் கையைப் பிடித்து சென்னை நகரம் முழுவதையும் அவன் பேருந்திலும் கால் நடையாகவும் சுற்றியிருக்கிறான். வள்ளுவர் கோட்டத்திலும் மியூசியத்திலும் யாருமில்லாத இடங்களில் முத்தமிட்டிருக்கிறார்கள். சினிமாவுக்குப் போயிருக்கிறார்கள். இலக்கே இல்லாமல் எங்கேயோ எங்கேயோ கால் வலிக்க வலிக்க நடந்து போயிருக்கிறார்கள். அவளுக்குத் திருமணமாகி விட்ட பிறகு கண்ணீருடன் அவளை ஒருமுறை சந்தித்து அவள் எழுதிய காதல் கடிதங்களை ஒரு பையில் போட்டு அவளிடம் கொடுத்து விட்டான். அவளுக்குத் தெரியாமல் ஒரே ஒரு கடிதத்தை அவள் நினைவுக்காக அவன் எடுத்து வைத்துக் கொண்டான். அது கடிதம் கூட அல்ல. அவன் பெயரையும் அவள் பெயரையும் ஒவ்வொரு எழுத்தாக கோர்த்து அவள் வடித்த ஒரு மலர் மாலையின் சித்திரம். அவளுக்கு அரசு ஊழியருடன் நடைபெற்ற திருமணத்திற்குப் பிறகு ஒழுக்கம் கருதி அந்த உறவு துண்டிக்கப்பட்டது.வேலையில்லாமல் திரிந்த இவன் அவளை அதன் பிறகு சந்திக்கவே இல்லை. ஒரு ஊரில் இருந்தாலும் அரை மணி நேரத்தில் பார்த்து விடக்கூடிய தூரத்தில் இருந்தாலும் அவர்கள் சந்திக்கவில்லை. இப்போது இத்தனை ஆண்டுகள் கழித்து ஒரு பேருந்து நிறுத்தத்தில் தற்செயலாக நிகழ்கிறது சந்திப்பு . எங்கே போக வேண்டும் வா என்றழைக்க தயக்கத்துடன் அவள் அவன் வண்டியில் ஏறுகிறாள். அவள் பட்டுப்புடவையின் சலசலப்பும் பல ஆண்டுகள் கழித்து பட்ட அவள் ஸ்பரிசமும் சாலையில் அவனுடைய வாகனத்தை பறக்கச் செய்கின்றன. ஓரிரு வார்த்தைகள் நலம் விசாரிப்பதற்குள் அவள் செல்ல வேண்டிய இடம் வந்து விடுகிறது. இறங்கிப் போகிறாள். அவள் கையைப் பிடிக்க மனம் அலைபாய்கிறது. நாளை புத்தாண்டு என நினைவு வர புத்தாண்டு வாழ்த்துகள் என அவன் கையை நீட்டுகிறான். அவள் கைகுலுக்குகிறாள். ஆனால் அந்த கையில் பழைய மென்மை இல்லை. பழைய அன்பு இல்லை. பழைய சலனங்கள் இல்லை. மரத்துப் போன ஒரு இரும்புக் கரத்தை அவன் பற்றி குலுக்குவது போல் உணர்கிறான். அவன் தொட்டுத் தழுவிய பெண் அவள்அல்ல என்பது போல் தோன்றுகிறது.முதுமையும் காலமும் அவளை மாற்றி விட்டது. அவன் மனம் தான் மாறவே இல்லை. அப்படியே அந்தக் காலத்தில் நிலைத்து நின்று விட்டது.அவள் நடந்து செல்வதை அவன் கண்ணீருடன் பார்த்துக் கொண்டே நின்று விட்டான்.

இது ஒரு நிஜவாழ்க்கை அனுபவம், இந்த காதலை என்னவென்று சொல்வது. இது உடல் கவர்ச்சியா, உள்ளத்தின் பரிதவிப்பா இரண்டும் கலந்ததுதானா....வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும் ஆனாலும் அன்பு மாறாதது என்கிறார் வாலி.....அன்பு மட்டும்தான் மாறுவதில்லை. மற்றதெல்லாம் மாறி விடுகிறது.
உலகின் மிகவும் புகழ் பெற்ற காதல் கதைகளான ரோமியோ ஜூலியட், லைலா மஜ்னு போன்றவைகளில் காதலர்கள் சேராமல் மடிந்துப் போனார்கள். மொகலே ஆசம் படத்தில் பியார் கியா தோ டர்னா கியா என்று லதா மங்கேஷ்கரின் எதிரொலி கண்ணாடிகளால் பதிக்கப்பட்ட மாளிகை முழுவதும் எதிரொலிக்க மதுபாலா ஆடிக் கொண்டிருக்கிறாள். இந்த காதல் காவியங்களில் கண்ணீர் ததும்பிக் கிடக்கிறது.
இந்த படமும் கண்ணீர் நிரம்பிய காதலர்களின் கதைதான். 15 வயதில் ஒருவனை காதலிக்கும் ஒருத்திக்கு அந்த காதல் முதிராமல் உதிர்ந்துப் போகிறது. ரோமியோவை ஜூலியட் காதலித்த போது அவளுக்கு வயது 14 தான். என்ன செய்வது மிகமிக இள வயதில்தானே பால்யம் காலாவதியாகி காதல் மலர்கிறது. இருவரும் வயல்வெளி, ஆற்றங்கரை என எங்கெங்கோ கையைப் பிடித்தும் முத்தமிட்டும் திரிகிறார்கள். புல்தரையில் படுத்து வானத்து நட்சத்திரங்களுடன் உரையாடுகிறார்கள். காலமெல்லாம் இணைந்து வாழ வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். ஆசையுடன் ஒருவருக்கு ஒருவர் கடிதங்களை எழுதிக் கொள்கிறார்கள்.
காதலுக்கு எதிர்ப்பு எழுந்த போது வீட்டை விட்டு ஓடிப்போகலாம் என்று காதலன் அழைக்கிறான். காதலியோ வரவில்லை. இளவயதின் அச்சங்கள் அவளைத் தடுத்து நிறுத்தி விடுகின்றன. தன் தாயையும் தந்தையையும் துடிக்க விட அவள் மனம் விரும்பவில்லை. காதலனை ஏமாற்றுவது தான் அவளுக்கு முடிகிறது. அவள் வீட்டுக்குப் பயந்து தன் குடும்பத்தினருடன் லண்டன் சென்றுவிடுகிறாள். அங்கு வேறொரு செல்வந்தனுடன் அவளுக்குத் திருமணம் ஆகிறது. 50 ஆண்டுகள் வாழ்ந்து பேரன் பேத்தி எல்லாம் எடுத்த பிறகு திடீரென அவள் தனது முதுமைப்பருவத்தில் காதலனைத் தேடி செல்கிறாள். 50 வருடம் கழித்து தன்னைத் தேடி வந்த வயது முதிர்ந்த காதலியை காதலன் ஏற்றுக் கொண்டானா..... லெட்டர்ஸ் டூ ஜூலியட் என்ற இந்த திரைப்படம் இக்கதையை மிகுந்த கலாரசனையுடன் காட்சிகளாக்கியுள்ளது.2010ம் ஆண்டில் இப்படம் வெளியான போது முதல் வாரத்தில் வசூலில் சக்கை போடு போட்டது. ஆனால் இரண்டாவது வாரத்தில் ஐயன் மேன், ராபின் ஹூட் போன்ற படங்கள் ரிலீசானதால் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
லெட்டர்ஸ் டூ ஜூலியட் படத்தில் ஆரம்பத்தில் நாம் அழகான ஒரு இளம் பெண்ணை சந்திக்கிறோம். படத்தில் அவள் பெயர் சோஃபி. அமெரிக்காவின் நியுயார்க்கர் இதழில் வரும் தகவல்களை சரிபார்ப்பதே அவள் பணி .ஒரு டிடெக்டிவ் போல் ஆராய்ச்சி செய்து உண்மை எது பொய் எது என்பதை புட்டு புட்டு வைக்கிறாள். அதற்காக அவளுக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது. ஆனால் அவளுக்கோ எழுத்தாளராக வேண்டும் என்று ஆசை. தன் காதலனுடன் அவள் விடுமுறை நாட்களைக் கழிக்க இத்தாலியின் வெரனோவா செல்லத் திட்டமிடுகிறாள். காதலன் நியுயார்க்கில் ஒரு உணவகம் நடத்துகிறான். உணவைத் தவிர அவனுக்கு வேறு சிந்தனையே இல்லை. அருகில் இருக்கும் காதலியை விடவும் அவனுக்கு சமையலில் உப்பு மணம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதில்தான் அக்கறை....இத்தகைய காதலனுடன் விடுமுறையை கழிக்க அவள் வெரோனா நகருக்கு செல்கிறாள். வெரோனா ரொமாண்டிக்கான நகரம், ஷேக்ஸ்பியர் படைத்த மகத்தான காதலர்களான ரோமியோவும் ஜூலியட்டும் வாழ்ந்த இடம். திருமணத்திற்கு முன்பே காதலனுடன் ஹனிமூனா என்று அலுவலகத் தோழியர் கிண்டலடிக்கிறார்கள்.ஆனால் அந்த தேனிலவில் அவள் தனியாகத்தான் இருக்கிறாள். காதலனோ தன் சமையல் உலகில் நிலைக்கிறான். ஒரு மஷ்ரூம் விளைவதைப் பார்க்க 120 கிலோ மீட்டர் பயணம் செல்கிறான். திராட்சைத் தோட்டத்தை காண ஒரு நாளை வீணாக்குகிறான். ஒயின் ஏலத்தில் பங்கேற்க பல நாள் காணாமல் போகிறான்....
சோஃபி தன் தனிமையில் வெரோனை வலம் வருகிறாள். அப்போதுதான் அவள் ரோமியோ ஜூலியட்டைக் காண செடி கொடிகளை பிடித்து பால்கனியில் ஏறிச் சென்ற பழைய காலத்து வீடு ஒன்றை காண்கிறாள். ஆம் அதுதான் ஜூலியட் வாழ்ந்த வீடு. ஒரு காவிய காதல் நாயகியின் துயரம் தோய்ந்த அந்த வரலாற்றை ஷேக்ஸ்பியர் ஒரு கண்ணீர் நிரம்பிய காதல் கதையாக வடித்திருந்தார். அந்த வீட்டின் பழைய செங்கல் இடுக்குகளில் பல காதல் கடிதங்கள் அன்பு முத்தங்களுடன் வைக்கப்படுகின்றன. பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து என பல நாடுகளில் இருந்து வந்த இளம் பெண்கள் தங்கள் காதலரை நினைத்து கண்ணீருடன் கடிதங்களை எழுதி அந்த செங்கல்களின் இடுக்குகளில் செருகி செல்கின்றனர். மாலை நேரத்தில் ஒரு பெண் கூடையுடன் வருகிறாள்.அந்த சுவர்களில் செருகப்பட்ட கடிதங்களை கூடையில் சேகரித்து எடுத்துச் செல்கிறாள். அந்த பெண்ணை ஆர்வத்துடன் பின்தொடர்கிறாள் சோஃபி. அந்த கடிதங்கள் என்னவாகின்றன என்பதை கண்டுபிடிக்க அவள் முயற்சிக்கிறாள்.
ஒரு வீட்டிற்குள் அந்தப் பெண் நுழைகிறாள். அங்கு ஒரு வரவேற்பறையில் மேலும் சில பெண்கள் இருக்கிறார்கள். பெரும்பாலோர் வயதானவர்கள். தங்கள் திருமண வாழ்க்கையை சபிக்கிறவர்கள். தங்கள் கணவரை நாயை விடக் கேவலமாக மதிப்பவர்கள். தங்களுக்காக உயிரைக் கொடுக்கவும் காதலிக்கவும் யாரும் இல்லையே என்று ஏங்குபவர்கள்....
அவர்கள் அந்த காதல் கடிதங்களுக்கு கவிதை நடையில் பதில் எழுதுகிறார்கள். ஒருவகையில் அவர்கள் குட்டி எழுத்தாளர்கள். காதலின் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் கூறுவதுதான் அவர்களின் வேலை. ஜூலியட் எழுதும் பதில்களாக அந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. நீங்கள் என்ன ஜூலியட்டா அவள் பெயரில் கடிதம் எழுதுவதற்கு என சோஃபி கோபப்படுகிறாள். இல்லை நாங்கள் ஜூலியட்டின் காரியதரிசிகள் என்பது அவர்களின் பதில். சோஃபிக்கு இத்தொழிலில் ஆர்வம் எழுகிறது. அவர்களுடன் சேர்கிறாள். மறுநாள் கூடையில் கடிதங்களை சேகரிக்கும் பெண்ணுடன் அவளும் சென்று செங்கல் இடுக்குகளில் வைக்கப்பட்டுள்ள விதவிதமான வண்ணவண்ண கடிதங்களை அவள் கூடையில் அள்ளிப் போடுகிறாள். அப்போது தற்செயலாக ஒரு கல் தகர்ந்து விழுகிறது. அந்தக் கல் விழுந்த இடத்தில் ஒரு பொந்து இருக்கிறது. அந்த இடுக்கில் ஒரு பழைய தூசுபடிந்த காதல் கடிதத்தை சோஃபி கண்டெடுக்கிறாள்.
அக்கடிதம் 50 ஆண்டுகளுக்கு முந்தைய கடிதம். தன் காதலனுக்காக அந்த 15 வயது பெண் மன்னிப்பு கோரி எழுதிய கடிதம். லண்டன் சென்று செல்வந்தனை மணந்துக் கொண்டதற்கு மன்னிப்பு கேட்டு அவள் கண்ணீருடன் எழுதி வைத்த கடிதம் 50 ஆண்டுகள் கழித்து சோஃபியின் கைகளில் சிக்கியுள்ளது. இப்போது அவள் என்னவாக இருப்பாள்.....இந்த கடிதத்திற்கு பதில் எழுதினால் என்ன என்று எண்ணுகிறாள் சோஃபி. 50 ஆண்டுகள் கழித்தா ஒரு கடிதத்திற்கு பதி்ல் போடுவது என்று சக தோழிகள் வியக்கிறார்கள். எழுதினால் என்ன என்று எழுத ஆரம்பிக்கிறாள் சோஃபி. எல்லோரும் இயந்திரத்தனமாக இதர கடிதங்களுக்கு இனிக்க இனிக்க ஜூலியட்டின் பெயரால் கடிதங்களை எழுதி வைக்க இவளோ ஒரே கடிதத்திற்கு பதில் எழுதுவதில் ஆழ்ந்துவிடுகிறாள். அவள் மனதில் எழுத்தாளராக வேண்டும் என்ற ஆசை விழித்துக் கொள்கிறது. அந்த கடிதம் தான் அவளுடைய முதல் எழுத்து அனுபவமாகவும் மலர்கிறது.
சில நாட்கள் கழித்து சார்லி என்ற இளைஞன் ஒருவன் அந்தப் பெண்களைத் தேடி வருகிறான். நீங்கள் தான் ஜூலியட்டின் செயலாளர்களா என விசாரிக்கிறான்.கிளேர் என்பவருக்கு கடிதம் எழுதியது யார் என விசாரிக்கிறான். சோஃபி ஆர்வத்துடன் நான்தான் என முனஅவருகிறாள். இதுபோன்ற அபத்தத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என கோபமாக சொல்லி அவன் வெளியேறுகிறான். சோஃபி அவனைப் பின் தொடர்ந்து ஓடுகிறாள். இதைச் சொல்லவா லண்டனில் இருந்து வெரோனாவா வரை இத்தனை தூரம் வந்தாய் என்று சார்லியை கேட்கிறாள் சோஃபி. நான் ஏன் இங்கே வருகிறேன். என் பாட்டி கிளேர் தான் அழைத்து வந்தார் என்று கூறுகிறான் சார்லி.
என்னது கிளேர் இங்கே வந்திருக்காங்களா.....சோஃபியால் நம்பவே முடியவில்லை. ஆமாம் எனக் கூற எதிரே அந்த 65 வயது பாட்டி கிளேர் நாகரீக ஆடைகளில் நிற்பதைக் காண்கிறாள் சோஃபி. அவளுக்கு ஒரே ஆச்சரியம். தன் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை. 50 ஆண்டு கழித்து காதல் கடிதத்திற்கு பதில் எழுதியது யார் என காண அந்தப் பெண் தேடி வந்திருக்கிறார்.15 வயதில் தன் வீட்டை விட்டு ஓடிப்போக முடியாமல் அச்சத்துடன் பின்வாங்கி லண்டன் சென்ற பெண்ணாக அவள் வரவில்லை. மாறாக வெரோனா அருகில் உள்ள துஸ்சான் டவனுக்கு தன் காதலனைத் தேடி ஒரு மூதாட்டியாக திரும்பி வந்திருக்கிறார். லாரன்சோ என்ற அந்த காதலரை தேடும் பணியில் தன்னையும் இணைத்துக் கொள்கிறாள் சோஃபி.
இத்தனை ஆண்டுகள் கழித்து அவரை கண்டுபிடிக்க முடியுமா எனக் கேட்கிறாள் சோஃபி .முடியும் என்பது கிளேரின் நம்பிக்கை. ஏனென்றால் லோரன்சோ தனது நிலத்தை மிகவும் நேசித்தவர் .தன் நிலத்தை விட்டு எங்கேயும் போயிருக்க மாட்டார் என்கிறார் கிளேர் .
பல லோரன்சோக்களை சந்திக்கிறார்கள். சிலர் பெண் பித்தர்களாக இருக்கிறார்கள். சிலர் பெண்களையே வெறுப்பவர்களாக இருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு என்னைவிட்டு ஓடிப்போன சண்டாளியை நினைவுபடுத்த வந்தீர்களா என கத்தும் ஒரு லோரன்சோவைக் கண்டு அவர்கள் மூவரும் வயிறு குலுங்க சிரிக்கிறார்கள். இந்த பயணங்களின் போது சார்லிக்கும் சோஃபிக்கும் இடையே ஒரு அந்நியோன்னியம் பிறக்கிறது. ஒரு மெல்லிய காதல் அங்கு மலர்கிறது.
கடைசியில் ஒரு லோரன்சோவின் கல்லறையில் சார்வி வெடித்தெழுகிறான் .இந்தப் பைத்தியக்காரத்தனத்துக்கு ஒரு முடிவே இல்லையா....இதுதான் முடிவு. இந்த கல்லறைதான் கடைசி .இன்னொரு லோரன்சோவை தேடி நான் செல்ல விரும்பவில்லை. எனது விடுமுறை நாட்கள் முழுவதையும் ஒரு அபத்தமான தேடலுக்காக இழந்துவிட்டேன் என அவன் குமுறுகிறான். தனது பாட்டி ஒவ்வொரு முறையும் லோரன்சோவை சந்திக்க பரபக்கும் போதும் அந்த லோரன்சோ அவர் அல்ல என ஏமாற்றத்துடன் திரும்பும் போதும் அவர் மனம் தவிப்பதை தன்னால் காண முடியவில்லை என்கிறான் சார்லி
ஆனாலும் ஏனோ அவன் பிறகு தன் செயலுக்கு வருந்துகிறான். சோஃபியிடம் மன்னிப்பு கேட்கிறான் ,இன்னும் எத்தனை லோரன்சோக்கள் இந்தப் பகுதியில் இருந்தாலும் தேடிப்பார்த்து விடலாம் என்கிறான்.
இரவில் புல்தரையில் வானத்து நட்சத்திரங்களைப் பார்த்தபடி சார்லி படுத்திருக்க சோஃபியும் அருகில் வந்து படுக்கிறாள்.பேசிக் கொண்டே இருவரும் திடீரென முத்தமிட்டுக் கொள்வதை தனது அறை ஜன்னல் வழியாகப் பார்க்கிறார் கிளேர். அவர் முகத்தில் ஒரு புன்னகை மலர்கிறது.
நீ வேறொருவனுக்கு நிச்சயித்த பெண். உன்னை முத்தமிட்டது தப்பு .அது உணர்ச்சிவசப்பட்ட தவறு வேண்டாம். இனி நாம் பழக வேண்டாம் என்று தடை போடுகிறான் சார்லி. சரி என அவள் கூறினாலும் அவள் கண்களில் கண்ணீர் ததும்புகிறது. உணவகத்தின் தேவைகளுக்காக தன்னைத் தனியாக விட்ட காதலனையும் தன் பயணத்துணையாக வந்து பிரிய முடியாத தோழனாகிவிட்ட சார்லியையும் அவள் எடை போடத்தொடங்குகிறாள். அவள் எழுதிய கதையை சார்லி ரசித்துப் படிக்கிறான் . நீ அற்புதமான எழுத்தாளர். மிக நன்றாக எழுதுகிறாய் என ஊக்கபப்டுத்துகிறான். அவள் ஒரு எழுத்தாளராக மலர்ந்துக் கொண்டிருப்பதை குறித்து எந்த ஒரு அக்கறையும் இல்லாத பொருட்படுத்தாத காதலனை நினைத்து அவள் பெருமூச்சு விடுகிறாள்.
கடைசியாக அவர்கள் ஒரு வயல்பகுதிக்கு செல்லும் போது வயலில் வேலை செய்யும் ஒரு இளைஞனை கையைக் காட்டி இவர்தான் லோரன்சோ என்கிறார் கிளேர். ஆம் அவன் லோரன்சோவின் இள வயது தோற்றத்தில் இருந்த அவர் பேரன்.அவனிடம் விசாரி்க்கிறார்கள் .தன் தாத்தா குதிரை சவாரிக்கு போயிருப்பதாகவும் சில நிமிடங்களில் வந்துவிடுவார் என்றும் கூறுகிறான் அந்த இளைஞன். அதுவரை தன் காதலரை சந்திக்க துடித்த கிளேருக்கு உள்ளம் பதறுகிறது. கைகள் நடுங்குகின்றன. அவர் என்னை நினைவில் வைத்திருக்காவிட்டால் என்ன செய்வது. நீ யார் என கேட்டுவிட்டால் என்ன செய்வது ....அந்த நினைவை அவரால் தாங்க முடியவில்லை. வோரன்சோ வருவதற்குள் போய் விடலாம் என்று சார்லியையும் சோஃபியையும் அழைக்கும் போதே லோரன்சோ குதிரை மீது சவாரி செய்தபடி வந்து இறங்குகிறார். தன்னைப் பற்றி யாரோ விசாரிக்கிறார்கள் என்பதையறிந்து அவர்கள் பக்கம் திரும்புகிறார். ஒரே கணத்தில் அவரால் கிளேரை அடையாளம் காண முடிகிறது. 15 வயதில் பருவம் கனியாத ஒரு பருவத்தில் பார்த்த அதே பெண்ணை 65 வயது முதிர்ந்த கோலத்திலும் அவரால் மறக்க முடியவில்லை. அதே முகம் .அதே புன்னகை.அதே கண்கள்.....அதே அன்பு
லோரன்சோ அளிக்கும் உபசரிப்பு விருந்தில் அவருடைய பேரன் பேத்திகள் உட்பட குடும்பத்தினர் அனைவரும் கலந்துக் கொள்கிறார்கள். அப்போது அந்த கூட்டத்தின் மத்தியில் சோஃபி தனக்கு ஜூலியட்டின் பெயரால் எழுதிய கடிதம்தான் தன் வாழ்க்கையின் திருப்புமுனையாக இந்த பயணத்தை மேற்கொள்ள வைத்ததாக கூறுகிறார் கிளேர். கடிதத்தின் சில வாக்கியங்களை அவர் மேற்கோள் காட்டுகிறார்.
WHAT - IF  என்று ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தைகள் உள்ளன. இவை தனித்தனியாக இருக்கும் போது தனி அர்த்தங்கள் தோன்றலாம். ஆனால் இந்த இரண்டு வார்த்தைகளும் சேர்ந்துவிட்டால் அதன் அர்த்தமே மாறி விடும். அப்படி நடந்தால்தான் என்ன என்று கேள்வி எழும். அந்த கேள்விக்கு விடை காணச் சென்றால் அது வாழ்க்கையின் பாதையையே மாற்றிவிடும்.
அப்படியொரு மாற்றம் இங்கே நிகழ்ந்திருக்கிறது என்று கூறுகிறார் கிளேர். வயதான பிறகு தடைகள் ஏதுமில்லை. காதலர்கள் இணைகிறார்கள். இன்னொரு புறம் மலரத் தொடங்கிய காதலை மொட்டிலேயே நசுக்கி சார்லியும் சோஃபியும் பிரிகிறார்கள்.
அப்போது பேரனின் வாடிய முகத்தைப் பார்த்து கூறுகிறார் கிளேர் . உலகில் ஒரு சோஃபிதான் உண்டு. போ . என்னைப் போல் 50 ஆண்டுகள் காத்திருக்காமல் இப்போதே போய் உன் காதலை சொல்லி விடு....
சோஃபியைத் தேடி மீண்டும் வெரோனா செல்லும் சார்லி பால்கனியில் சோபியும் அவள் காதலன்  விக்டரை முத்தமிடுவதைப் பார்த்து திரும்புகிறான். முத்தமிட்ட அடுத்த கணமே காதலனை வெறுக்கத் தொடங்கி விடும் சோஃபியோ சார்லியை மறக்க முடியாமல் பால்கனியில் பார்க்கும் போது தொலை தூரத்தில் திரும்புகிறது சார்லியின் கார். அவளால் அதை பார்க்க முடியவில்லை.,
லோரன்சோவுக்கும் கிளேருக்கும் திருமணம் நடத்தப்படுகிறது. சோஃபிக்கு அழைப்பிதழ் வருகிறது. திருமணத்திற்கு செல்ல விரும்புவதாக கூறும் சோஃபி விக்டருடனான தனது உறவை முறித்துக் கொள்கிறாள். நிரந்தரமாக அவனுக்கு குட்பை சொல்லி விட்டு அவள் தன் அடக்க முடியாத மனத்துடன் வெரோனவா பயணிக்கிறாள். ஆனால் திருமண விருந்து நிகழ்ச்சியில் சார்லி பாட்ரிசியாவை அறிமுகம் செய்கிறான். பாட்ரிசியாவை தான் காதலித்து அவளை ஏற்க மறுத்துவிட்டதாக ஒருமுறை சார்லி கூறியது அவளுக்கு நினைவுக்கு வருகிறது.
இப்போது அவளால் மனம் திறக்க முடியவில்லை., அவள் அழுதுக் கொண்டே செல்லுவதைப் பார்த்து சார்லி தொடர்கிறான். பால்கனியில் நிற்கும் சோஃபியாவை கீழே இருந்தபடியே அழைக்கிறான் சார்லி
சார்லி நான் உன்னை காதலிப்பதை சொல்லத்தான் ஓடி வந்தேன். ஆனால் நீ மீண்டும் பாட்ரிசியாவுடன் இணைந்துவிட்டாய் .ஆனாலும் சொல்லி விடுகிறேன். ஐ லவ் யூ என கண்ணீருடன் கூறுகிறாள் சோஃபி
அடிப்பாவி அந்த பாட்ரிசியா வேறு இவள் என் சகோதர முறையிலான பெண் என சார்லி கூற இருவரும் சிரிக்கிறார்கள். சோஃபியை அடைய ரோமியாவாக மாறுகிறான் சார்லி, அங்குள்ள கொடியை பிடித்து பால்கனியில் ஏற அவன் முயற்சிக்கையில் கொடி அறுந்து கீழே விழுகிறான். ஆனால் புல்தரை என்பதால் அடிபடவில்லை.
சோஃபி அவனை நோக்கி ஓடிவருகிறாள். இருவரும் முத்தமிட்டுக் கொள்கிறார்கள் .அதைக் காண கிளேருடன் வோரன்சோவும் திருமணத்திற்கு வந்த அத்தனை விருந்தினர்களும் திரண்டுவிடுகிறார்கள்.
இப்படத்தில் சோஃபியாக தனது அழகா ன கண்களாலேயே நடித்திருப்பவர் அமன்டா செய்பிரீட் ,காரில் அவர் சார்லியுடன் பயணிக்கும் போது பின்சீட்டில் அமர்ந்திருக்கும் போது சார்லி அவளை பார்த்து ரசிப்பதையும் இன்னொரு காட்சியில் சார்லியின் முகத்தை கண்ணாடியில் அவள் பார்த்து ரசிப்பதையும் இயக்குனர் கேரி வினிக் அற்புதமான கவிதையாக படமாக்கியுள்ளார். அமன்டாவுக்கு சார்லியாக நடித்த கிறிஸ்டோபர் ஈகன் கிளைமாக்சில் கொடுக்கும் அழுத்தமான முத்தம் நம்மை கிளர்ச்சியுறச் செய்கிறது. காதலின் முத்தங்களுக்காக உதடுகள் ஏங்குகின்றன.
கிளேராக நடித்திருப்பவர் மூத்த ஹாலிவுட் நடிகை வானேசா . அவர் சிறுவயதில் தொலைத்து முதுமையில் மீட்ட காதலர் லோரன்சோ பாத்திரத்தில் நடித்திருப்பவர் ராபர்ட் நீரோ.  இவரை ஜாங்கோ கௌபாய் படங்களின் சண்டைக்காட்சிகளில் நாம் பார்த்திருக்கிறோம்.
14 வயதில் ரோமியோவை காதலித்து ரோமியோலை அடைய முடியாத குடும்ப பகையால் உயிரைத் துறந்த ஜூலியட் என்ற காதல் தேவதையின் சடலத்தைக் கண்டு கதறுகிறான் ரோமியோ. அவனும் தன்னை வாளால் வெட்டி மாய்த்துக் கொள்கிறான். காதலர்களின் கண்ணீருடனும் ரத்தத்துடனும் ஷேக்ஸ்பியரின் காதல் கதை துயரத்தில் முடிவடைந்தது. ஆனால் அந்த காதல் தேவதையான ஜூலியட்டின் பெயரால் எழுதப்பட்ட ஒரு கடிதம் 50 ஆண்டுகள் கழித்து ஒரு காதல் ஜோடியை இணைத்து வைக்கிறது. இன்னும் 50 ஆண்டுகள் ஒன்றாக வாழப்போகும் ஒரு காதல் ஜோடியையும் அது உருவாக்கியுள்ளது.
காதல் நிகழ்வது கணப்பொழுதில்தான். ஆனால் சில நேரங்களில் அந்தக் கணம் நித்தியத்துவமாகி நிரந்தரமாய் நிலைபெற்று விடுகிறது.

Thursday, 1 December 2016

அஞ்சலி- கவிஞர் இன்குலாப்

கவிஞர் இன்குலாப்பை எனக்கு 80 களில் இருந்தே தெரியும். அவர்தான் என்னை முதன்முதலாக வழிநடத்தியவர். கவிதையை புரட்சிகரமாக எழுதும் பித்து அந்தக் கால இளம் கவிஞர்கள் பலருக்கும் இருந்தது. எனக்கும்தான். அப்போது எங்களுக்கெல்லாம் ஆதர்சமாக இருந்தவர் இன்குலாப். கண்மணி ராஜம் கவிதையில் பீட்டர் சாலை பெரிய சாலைஎன்று தொடங்கும் அந்த வர்ணனை மனதுக்குள் எத்தனையோ அதி்ர்வுகளை ஏற்படுத்தியது. மனுசங்கடா என்று அவர் பாடும் போது மேடையில் மார்க்சீய உணர்வு பெருகி பார்வையாளர்களை எழுச்சியுறச் செய்தது. சோசலிக் கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்ற சில மொழிபெயர்ப்புகளையும் இன்குலாப் செய்திருந்தார். அதே போல் இன்குலாப் கவிதைகள் என்று அகரம் பதிப்பகம் வெளியிட்ட தொகுப்பில் இளவேனில் எழுதிய நீண்ட முன்னுரை கவிதைகள் குறித்த ஒரு அற்புதமான ஆவணமாகவே இருக்கிறது.
இன்குலாப்பை செந்தூரம் இதழுக்காக சந்தித்து  நீண்ட பேட்டி ஒன்று எடுத்திருக்கிறேன். அது இரண்டு இதழ்களில் தொடர்ச்சியாக வந்தது. நான் எப்போது அழைத்தாலும் பிரியத்துடன் ஒரு ரூபாய் கூட வாங்காமல் கூட்டத்திற்கு வந்து அருமையாகப் பேசி கடைசி வரை இருந்துவிட்டு செல்வார். ஜானி ஜான் கான் தெருவில் இருந்த அவர் வீட்டுக்கு செல்லும் போதெல்லாம் அருமையான டீ ஒன்றை தருவார். அப்போது அவர்  பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். தொண்ணூறுகள் வரை இன்குலாப்பின் சிஷ்யன் எனக்கூறுமளவுக்கு அவருடன் நெருங்கி பழகியவன் தொண்ணூறுகளில் ஓஷோவால் மார்க்சியம், புரட்சி கோஷங்களில் இருந்து விலக ஆரம்பித்தேன். ஜெயமோகன், சுந்தர ராமசாமி, கோவை ஞானி, பிரபஞ்சன், பெரியார்தாசன் என்று பலருடன் நட்பு வட்டம் வளர்ந்ததில் இன்குலாப்பின் இடம் விலகிப் போனது.
பல ஆண்டுகளாக நானும் தொடர்ச்சியாக பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் இலக்கியம், சினிமா குறித்து எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன் .கிடங்குத்தெரு என்ற மிக முக்கியமான படைப்பையும் தமிழுக்கு தந்துள்ள திருப்தி இருக்கிறது. பல மொழிபெயர்ப்புகளையும் செய்து வருகிறேன். ஊடகத்துறையில் மனுஷ்யப்புத்திரன், டாக்டர் கவுசல்யா போன்றவர்கள் இன்று அடிக்கடி தென்படுவதற்கு ஒரு வகையில் நானும் காரணம்.
ஆனால் நான் காணாமல் போய்விட்டதாக பலரும் கருதுவதுண்டு. என் இயக்கம் ஒருநிமிடம் கூட ஓய்ந்ததில்லை.
பல ஆண்டுகள் கழித்து சென்னை பல்கலைக்கழக வாயில் அருகே கவிஞர் இன்குலாப்பை சந்தித்த போது மிகவும் மகிழ்ச்சியுடன் பேசினார். ஜெகதீஷ் நீங்க எப்படிப்பட்ட ஆக்டிவான ஆளு நீங்க எங்கே காணாமல் போயிட்டீங்க , நீங்க இல்லாதது இலக்கியத்திற்கு மிகப் பெரிய இழப்பு என்று  அவர்  கேட்டார். தன் உலகை விட்டு வெளியுலகை அவர் எட்டியே பார்க்கவில்லை என்றுதான் எண்ணிக் கொண்டேன்.
அவர் மறைவு வரை மீண்டும் அவரை சந்திக்கவில்லை.அதற்காக மிகவும் வருந்துகிறேன். இன்குலாப் எப்போதும் மதிக்கக்கூடிய ஆளுமை. முரண்பட்டாலும் கூட.

எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி குறைவாக இருக்கும் மனிதர்களில் இன்குலாப்பின் இடம் முதலிடம்தான். கடைசி இடத்தைக் கூட கொடுக்க முடியாத ஒருவர் இருக்கிறார். யார் என்பதை நீங்களே ஊகி்த்துக் கொள்ளலாம்.

Saturday, 5 November 2016

புதையல் -புதுமைப்பித்தன் கதைகள்

புதையல்
செந்தூரம் ஜெகதீஷ்
1. புதுமைப்பித்தன் கதைகள்


(( கல்வெட்டு அக்டோபர் 2016 இதழில் வெளியான எனது கட்டுரை ))



காலத்தால் அழியாத படைப்புகள் மூலம் தமிழ் இலக்கியத்தை உலகத்தரத்துக்கு உயர்த்திய படைப்பாளி புதுமைப்பித்தன். 1906ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி சொக்கலிங்கம்-பர்வதம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த சொ.விருதாசலம்  கூத்தன் ,நந்தன் போன்ற பல பெயர்களில் கதைகள், கட்டுரைகள் எழுதி வந்தாலும் அவரே கூறியது போல் அமெரிக்காவின் விளம்பரத்தன்மை வாய்ந்த புதுமைப்பித்தன் என்ற பெயரை சூடிக் கொண்ட பிறகுதான் கவனம் பெற்றார்.
பல ஊர்களுக்கு மாற்றலான புதுமைப்பித்தனின் பெற்றோர், கடலூருக்கு அருகில் இருந்த திருப்பாதிரிப்புலியூரில் இருந்தபோதுதான் புதுமைப்பித்தன் பிறந்தார்.தாய் காலமான போது பு.பிக்கு வயது எட்டுதான். தாயின் அன்பையும் அரவணைப்பையும் இழந்த அவர் பின்னாளில் தமது துணைவியாரைத்தான் தாய் வடிவில் கண்டார்.
1931ம் ஆண்டு கல்லூரிப் பட்டப் படிப்பை முடித்துக் கொண்டு புதுமைப்பித்தன் கமலாம்பாளை மணமுடித்தார். மணிக்கொடி பத்திரிகை அவருக்கு எழுதுவதற்கு வாசலைத் திறந்தது. ஒரு கதை பிரசுரமானால் இரண்டு ரூபாய் கிடைக்கும். இதை நம்பித்தான் அவர் தனது இல்லற வாழ்வைத் தொடங்கினார். புதுமைப்பித்தனின் முதல் சிறுகதை மணிக்கொடி இதழில் பிரசுரமானது.
"மணிக்கொடி பொருளாதார நிர்ப்பந்தம் என்ற நபரால் கிரஹத்தி செய்யப்பட்டு அசிரத்தை என்ற முனிசிபல் குப்பைத் தொட்டியில் எறியப்பட்டது. மூச்சுப்பேச்சற்றுக் கிடந்த அந்தக் குழந்தையை வளர்ப்பதற்காக நானும் பி.எஸ்.ராமையா என்ற நண்பரும் எங்களைப் போலவே உற்சாகத்தை மட்டும் மூலதனமாகக் கொண்ட இன்னும் சில எழுத்தாளர்களும் சேர்ந்து நடத்தி வந்தோம் " என்று மணிக்கொடி இதழ் பற்றி 1947ம் ஆண்டில் குறிப்பிடுகிறார் புதுமைப்பித்தன்.
"மணிக்கொடி இதழில் எழுதியவர்களில் மிகவும் கேலிக்கும் நூதனம் என்பதனால் திக்பிரமைக்கும் ஆளான ஒரே கதாசிரியன் நான் .கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்பு சாதனமாகக் கொண்டு தாவித்தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன். அது நானாக எனக்கு வகுத்துக் கொண்ட ஒரு பாதை.அது தமிழ்ப்பண்புக்கு முற்றிலும் புதிது. அதனைக் கையாண்ட நானும் கல்வி கற்றதன் விளைவாக பாஷைக்குப் புதிது...." என்று தமது கதைகளைப் பற்றி புதுமைப்பித்தன் கூறுகிறார்.
பொன்னகரம் என்ற கதையில்  விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கிறார் புதுமைப்பித்தனர். முக்கால் ரூபாய் துட்டுக்காக சோரம் போகும் ஒரு பெண்ணைப் பற்றி எழுதுகையில் "என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே இதுதான் அய்யா பொன்னகரம்" என்ற அக்கதையின் இறுதி வரிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார் புதுமைப்பித்தன். குழந்தைகளின் ரகசியமாய் சாக்கடையில் மிதந்து வரும் ஆப்பிளைப் பற்றியும் மிகவும் நுட்பான அவதானிப்புடன் குறிப்பிட்டார் புதுமைப்பித்தன். ( வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் நல்லதோர் வீணை படத்தில் சாக்கடையில் விழுந்து வரும் ஒரு ஆப்பிளுக்காக ஏராளமான பட்டதாரிகள் கமல் கையிலிருந்து அதை பிடுங்கும் காட்சி பொன்னகரத்தின் பாதிப்பாக இருக்கலாம்)
மிஷின் யுகம் மனிதன் இயந்திரமாக மாறிக் கொண்டிருப்பதையும் ஒரு கணத்தில் அவன் மனிதனாக மீள்வதையும் மிக அழகாக சொன்ன சிறிய கதை. சாபவிமோசனம் கதை புதுமைப்பித்தனை சர்ச்சையில் சிக்க வைத்தது. அகலிகைக்கு சாபவிமோசனம் அளித்த ஸ்ரீராமன் சீதையின் கற்பை பரிசோதிக்க அக்னிப்பிரவேசம் செய்ய சொன்னான் என்ற தகவலை அறிந்த அகலிகை , அவனா, ராமனா சொன்னான் என்று அதிர்ச்சியில் மீண்டும் கல்லாகிப் போனாள்  என எழுதியது அப்போதைய முதலமைச்சராக இருந்த ராஜாஜிக்கு முரணாக தோன்ற புதுமைப்பித்தன் கதைகளை அந்தக்கால  பத்திரிகைகள் வெளியிட மறுத்தன.இதனால் புதுமைப்பித்தன் பலநாட்கள் பட்டினி கிடக்க நேரிட்ட கதைகள் நம் கண்களை கசிய வைக்கின்றன.
செல்லம்மாள் கதை நோயுற்ற மனைவி மீது அளவு கடந்த பிரியம் வைத்துள்ள கணவனைப் பற்றிய கதை. ஆனால் மனைவி இறந்ததும் அவனுக்கு விட்டுவிடுதலையாகும் உணர்வு பிறப்பதாக உளவியல் ரீதியான ஒரு தர்க்கத்தை இக்கதை எழுப்பியது. சுந்தர ராமசாமி, வேதசகாயகுமார் போன்ற பலர் புதுமைப்பித்தனின் இக்கதையே அவரது மற்ற கதைகளை விடவும் சிறந்தது என்று மதிப்பிடுகின்றனர்.
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த எள்ளல்( satire) கதைகளில் ஒன்று. அதுவரை எழுதப்பட்ட கதைகளில் இதுவே அந்த பாணியில் முதல் கதை.
மேலகரம் மே.ரா.கந்தசாமிப் பிள்ளை என்ற ஏழை கதாசிரியர் ஒருவர்  பிராட்வே எஸ்பிளனேட் பகுதியில் டிராமுக்காக காத்திருப்பதாக கதை தொடங்குகிறது. டிராமுக்கு காலணா தேவை என்ற யோசனை அவருக்கு.கையிருப்போ காலணா. அதை டிராமுக்கு கொடுத்துவிட்டால் வெற்றிலைக்கு என்ன செய்வது என்பது அவர் பிரச்சினை. பக்கத்து கடையில் வெற்றிலைப் பாக்கு போட்டுக் கொண்டு வீட்டுக்கு நடந்துவிடலாம். அல்லது பேருந்தில் ஏறி நடத்துனரை ஏமாற்றிக் கொண்டே சென்ட்ரலை கடந்துவிட்டு அப்புறம் டிக்கட் வாங்கி திருவல்லிக்கேணிக்குப் போனால் அரை கப் காபி குடித்து விட்டு வீட்டுக்குபோகலாம் ( மயக்கம் அடையாதீர்கள். இவை எல்லாமே காலணாவில்தான் ) ஆனால் வெற்றிலை கிடைக்காது.இதில் எதைத் தேர்வு செய்வது என்பதுதான் அவருடைய யோசனை. டிராம்ப் அல்லது வெற்றிலையுடன் நடைப்பயணம், அல்லது பேருந்தும் காபியும்.
இந்த இருத்தலியல் சி்க்கலுடன் நிற்கும் கந்தசாமிப் பிள்ளைக்கு கடவுள் மனித ரூபத்தில் பிரசன்னமாகி பேச்சுக் கொடுக்கிறார். கடவுளின் வயது 60 ஆயிரமாக இருக்கலாம்.ஆனால் அத்தனை வருஷமும் நன்றாக தின்றுக் கொழுத்து கொழு கொழு என்று மேனி வளப்பத்துடன் தோன்றும் கடவுளை புதுமைப்பித்தனின் பேனா சரியான எள்ளல் செய்கிறது. கடவுள் கந்தசாமியை சாப்பிட அழைக்கிறார். பில்லை நம் தலையில் கட்டிவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பயந்துக் கொண்டே போகிறார் கந்தசாமி. ஹோட்டலின் சுகாதாரம் புதுமைப்பித்தனின் பேனாவிடம் சிக்கிக் கொள்கிறது. காபி பவுடர் கலப்படம், சில்லரைத் தட்டுப்பாடு. போன்ற லௌகீக பிரச்சினைகளுடன் கடவுளுக்கும் கந்தசாமிப் பிள்ளைக்கும் உரையாடல் நடைபெறுகிறது. ஆயுளைப் பற்றிய உரையாடலுக்குப் பிறகு தமது தீபிகை என்ற சிறுபத்திரிகைக்காக ஆயுள் சந்தா கேட்கிறார் கந்தசாமி. யாருடைய ஜீவியம் என்று கேட்கிறார் கடவுள். அப்போதும் கந்தசாமி கடவுளிடம் கூறுகிறார். " உங்கள் ஆயுள்தான்.பத்திரிகையின் ஆயுள் அழியாத வஸ்து" கடைசியில் ரிக்சாவில் ஏறி இருவரும் செல்கின்றனர். கடவுள் தான் யார் என்பதை கூறுகிறார். கடவுள் தந்த கூலி ஒரு ரூபாயை வாங்கிய ரிக்சாக்காரன் நீங்க நல்லா இருக்கணும் சாமி என்று கடவுளுக்கே ஆசி கூறுகிறான்.
கந்தசாமிக்க வரும் தர விரும்புகிறார் கடவுள். அந்த வித்தை எல்லாம் என்கிட்ட செல்லாது என்கிறார் கந்தசாமி. வரத்தை வாங்கிக் கொண்டு பிறகு தலைக்கு ஆபத்தைத் தேடிக் கொள்ளும் ஏமாந்த சோணகிரி நான் அல்ல என்று கூறுகிறார் அவர். அப்பா என்று உறவு கொண்டாட விழையும் கந்தசாமியை கடவுள் அப்பா என்று அழைக்காதே என்றும் பெரியப்பா என்று அழைக்கும்படியும் கடவுள் கூறுகிறார். தமது சொத்தை கந்தசாமி கேட்பாரோ என்ற பயம் கடவுளுக்கு. வரம்வேண்டாம். எங்கள் கூட இருந்து எங்கள் வாழ்க்கையை வாழ்ந்து பார் என்கிறார் கந்தசாமி.கடவுள் மனிதனின் முன்னால் தோல்வியை ஒப்புக் கொள்கிறார். உங்களிடமிருந்து எட்டி நின்று வரம் கொடுக்கலாம். உடன் இருந்து வாழ முடியாது என்கிறார் கடவுள். உங்கள் வர்க்கமே அதற்குத்தான் லாயக்கு என்று கந்தசாமி கடவுளை விரட்டி விடுகிறார்.
எழுத்தையே முழுநேர வாழ்வுக்கும் வருமானத்திற்கும் நம்பிய ஒரு தமிழ் எழுத்தாளனான புதுமைப்பித்தன், வறுமையுடனும்  வணிக இலக்கியத்துடனும் போராடித் தோற்றார்.
எழுத்தாளனின் வறுமையை சித்தரிக்க அவர் எழுதி மற்றொரு கதை ஒருநாள் கழிந்தது. இதுவே புதுமைப்பித்தனின் சிறந்த கதை என்று கூறுவோரும் உண்டு. ஆனால் சி.சு.செல்லப்பாவோ சிற்பியின்  நரகத்தையே புதுமைப்பித்தனின் சிறந்த கதையாக தேர்வு செய்கிறார். சி.சு.செல்லப்பா பற்றி அறியாமல் நானும் இக்கதையே புதுமைப்பித்தனின் மிகச்சிறந்த கதையாக முன்னிறுத்தினேன்.
சிற்பியின் நரகம் உண்மையான கலைஞனின் பசியைப் பற்றியது. உண்மையான கலையையும் கலைஞனையும் போலித்தனம் மிக்க உலகமும் நகல் கலைஞர்களும் அதிகாரம் செலுத்தும் கதை .
மலையத்த நடிகையின் முக சாந்தி, நீலமலைக் கொடுங் கோலன் சிரச்சேதம் செய்யப்பட்ட போது அவனது இடைத் துவளுதல் போன்ற பாவனைகளை இணைத்து வடிக்கிறான் ஓர் அபூர்வமான சிற்பத்தை.சிற்பம் அரசனிடம் அனுப்பி வைக்கப்படுகிறது.சிற்பி பயணம் போய் விடுகிறான். பல ஆண்டுகள் கழித்து அவன் திரும்பி வரும் போது சிற்பி தனது உன்னத கலைப்படைப்பு இருண்ட அறைக்குள் தூசு படர்ந்து கிடப்பதைக் கண்டு மனம் வாடுகிறான்.கோவில் பிரகாரத்தில் ஏதோ ஒரு சிற்பம் தெய்வமாக பூஜிக்கப்படுகிறது.உண்மையான கலை புறக்கணிக்கப்பட்டு போலியான நகல் கலை ஆராதிக்கப்படுகிறது.எனக்கு மோட்சம் மோட்சம் என்று அழுகின்றது இருட்டறையில் கிடந்த அவனது சிற்பம். சிலை மீது தலையை மோதி ரத்தம் பீறிட கலைஞன் தனது படைப்புக்காக தனது உயிரையே தியாகம் செய்கிறான்.
மொத்தம் 97 கதைகளை எழுதியிருக்கிறார் புதுமைப்பித்தன்.ஏராளமான கட்டுரைகள், கவிதைகளுடன் பல மொழிபெயர்ப்புகளையும் பணத்தேவையின் பொருட்டு அவர் செய்துள்ளார்.இறுதிக்காலத்தில் கடும் நெருக்கடியில் தவித்த புதுமைப்பித்தன் பணம் சம்பாதிக்க திரைப்படத் துறையை நாடி வந்தார். அவரது முழுமைப் பெறாத ஒரு நாடகம் பின்னர் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிக்க சரஸ்வதியின் சபதமாக வெளியானது.
ராசாத்தி மாதிரி தனது மனைவி கமலாம்மாவை வைத்திருக்க நினைத்த புதுமைப்பித்தன் வறுமையையே அவருக்குப் பரிசாக அளித்தார். தமது மனைவிக்கு அவர் எழுதிய கடிதங்களை நூலாக தொகுத்துள்ளார் கவிஞர் இளையபாரதி.
இரவில் நிம்மதியற்ற மனநிலையில் பயங்கர சொப்பனங்கள் கண்டு திடீர் திடீர் என விழித்துக் கொள்வதாக எழுதுகிறார் புதுமைப்பித்தன். தனது மனைவிக்கு ஸ்டாம்பு கூட வாங்கி அனுப்ப முடியாததால் கடிதம் எழுத முடியாத நிலையிலும் தனது குழந்தையின் நோய் குறித்து கவலைப்படுகிறார். தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று குமுறலை வெளியிடுகிறார். வறுமை, நோய் காரணமாக மிக இளம் வயதிலேயே தமது 42 வது வயதில், 1948ம் ஆண்டு புதுமைப்பித்தன் காலமானார். புதுமைப்பித்தனின் வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம். உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை என்று எழுதினார் அவருடைய நெருங்கிய நண்பரான தொ.மு.சி.ரகுநாதன்.
புதுமைப்பித்தன் மறைவுக்குப்பிறகு கமலா அம்மையார் தமது 3 வயது குழந்தையுடன் உறவினரிடம் அடைக்கலம் நாடி சென்னைக்கு ரயிலில் செல்லும் போது தாமிரபரணி பாலத்தில் ரயில் சென்றுக் கொண்டிருந்த போது குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்துக் கொள்ள எண்ணியிருக்கிறார். ஆனால் அப்போது புதுமைப்பித்தனின் வரி ஒன்று அவர் மனதுக்குள் ஓடியிருக்கிறது. ஒளிநிச்சயம் வரும். ஒளி வரும்போது நான் இல்லாவிட்டால் என்ன என்ற வரியின்மூலம் மீண்டும் நம்பிக்கையை மீட்டு கமலா அம்மையார் தினகரியுடன் சென்னை வந்தார். பிற்காலத்தில் அக்குடும்பம் லாட்டரி டிக்கட்டில் 2 லட்சம்ரூபாய் பரிசு கிடைக்க நிம்மதியாக வாழத் தொடங்கியது.
இத்தனைக்கும் மேலே
இனி ஒன்று
அய்யா நான்
செத்ததற்குப்பின்னால்
நிதிகள் திரட்டாதீர்
வானத்து அமரன் வந்தான் காண்
வந்தது போல் போனான் காண்
என்று புலம்பாதீர்.
அத்தனையும் வேண்டாம் .
அடியேனை விட்டு விடும்.
என்று புதுமைப்பித்தன் எழுதினாலும் தமிழ்ச்சூழ் உலகம் அவரை இன்று விடுவதாக இல்லை. வாழும் போது அசல் படைப்பாளிகளுக்கு ஒரு துரும்பைக் கூட தராத தமிழ்க்கூறு நல்லுலகம் மறைந்த பிறகு அவருக்கு அமரத்துவம் அளித்து விடுகிறது. இதுவும் புதுமைப்பித்தன் எழுத மறந்த ஒரு கதைதானோ.....


---------------------------------------------------------------


உலக சினிமா -கலை உழைக்கும் மக்களுக்கே

ஆந்திராய் தார்க்கோவஸ்கியின்
THE STREAMROLLER AND THE VIOLIN
குமுதம் தீராநதி நவம்பர் 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை....











உலக சினிமா  
ஆந்திராய் தார்க்கோவஸ்கி யின் திரைப்படம்
STREAM ROLLER AND THE VIOLIN ( Russia)
கலை என்பது உழைக்கும் மக்களுக்காகவே...
செந்தூரம் ஜெகதீஷ்


கலை கலைக்காக என்றும் கலை மக்களுக்காக இரு அணிகளாக அறிவாளிகள் திரண்ட காலம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தது. சோவியத் புரட்சி நிகழ்ந்ததையடுத்து முதலாளித்துவ கலையை ஒழிப்பதில் கம்யூனிஸ்ட்டுகள் குறியாக இருந்தனர். மார்க்ஸ், ஏங்கெல்ஸ் பாதையை பின்பற்றிய லெனின் மக்கள் கவிஞனாக அறியப்பட்ட புரட்சிக் கவிஞன் மாயகோவஸ்கியை விடவும் புஷ்கின் கவிதைகள் தரமானவை என்று அபிப்ராயம் கொண்டிருந்தார். இது கம்யூனிஸ்ட்டுகளுக்கு அதிர்ச்சியளித்தது. காரணம் புஷ்கினை அவர்கள் பூர்ஷ்வா என கருதியிருந்தனர். 
கலையில் வர்க்க பேதத்தை புகுத்துவதில் லெனினுக்கு இருந்த தயக்கம் அவரது நெருங்கிய சகாக்களான ஸ்டாலினுக்கும் டிராட்ஸ்கிக்கும் இருக்கவில்லை. கலையை ஆடம்பரமான செல்வந்தர்களின் பொழுதுபோக்காகவே அவர்கள் கருதினார்கள். மாக்சிம் கார்க்கி போன்ற கலைஞர்களால் மக்களுக்காகவும் கலையை படைக்க முடியும் என்ற புதிய சிந்தனை ஊற்றெடுத்தது. தல்ஸ்தோய் போன்ற மகா கலைஞர்களையும் கூட கம்யூனிஸ்ட்டுகளின் ஒருசாரார் நிராகரித்தனர். அந்தோன் செக்காவ் , மைக்கேல் ஷோலக்கோவ் போன்ற கலைஞர்கள் மக்களின் பக்கம் நிற்பதாக மரியாதை செலுத்தினர். கவிதை, சிறுகதை, நாவல் போன்ற இலக்கியத் துறைகளுக்கே கம்யூனிஸ்ட்டுகளின் அங்கீகாரம் கிடைப்பதற்கு கடுமையான அக்னிப்பரீட்சை நிகழ்ந்த இக்காலத்தின் தொடக்கத்தில் சினிமா என்ற காட்சி ஊடகமும் ஐரோப்ப நாடுகளின் தாக்கத்தால் ரஷ்யாவில் புத்தெழுச்சி பெற்றது. செர்கய் ஐசன்ஸ்டினின் போர்க்கப்பல் போட்டம்கின், கார்க்கியின் தாய் போன்ற படைப்புகள் சினிமாவாக  வடிவமெடுத்து சோசலிச சோவியத் ரஷ்யாவின் சினிமாவை உலகத்தரத்துக்கு உயர்த்தின.
இத்தகைய சூழலில் தான் ஆந்திராய் தார்க்கோவஸ்கி சினிமா உலகில் அடியெடுத்து வைக்கிறார்.1917 ரஷ்ய புரட்சிக்குப் பிந்தைய சோசலிச ரஷ்யாவில் லெனினின் மறைவுக்குப் பின்னர் ஸ்டாலின் அதிகாரத்தை கைப்பற்றியிருந்தார். மக்களுக்காக இயங்காத, கம்யூனிஸ்ட் கட்சியில் சேராத கலைஞர்கள் மீது கடுமையான வன்முறை கட்டவிழ்க்கப்பட்டிருந்தது. மென்மையான கலைஞர்கள் தலைமறைவாகவும் நாடு கடத்தப்பட்டும் தனிமைப்படுத்தப்பட்டும் வாழ்ந்து வந்தனர். 1932ம் ஆண்டில் பிறந்த தார்க்கோவஸ்கியின் நிலைமை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். 






அவருடைய பால்ய காலத்தின் போது இரண்டாம் உலகப் போர் மூண்டது. இதில்அவர் தந்தை உடல் உறுப்புகளை இழந்தார். பின்னர் அவர் மறைந்தார். இந்த இரண்டு சமூக, தனிப்பட்ட நிகழ்வுகள் தார்க்கோவஸ்கியின் பால்ய காலத்தை வெகுவாக பாதித்ததை அவருடைய திரைப்படங்கள் பிரதிபலித்தன.
திரைப்படங்கள் குறித்த கல்வி வளர்ந்து வந்த நேரம் அது. பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு சினிமாவை பயிற்றுவித்த வந்த மைக்கேல் ரோம் என்பவருடன் தார்க்கோவஸ்கி சினிமா கலையை பயின்றார். மாஸ்கோவில் குடிபுகுந்ததால் நிறைய திரைப்படங்களையும் பல திரைப்பட மேதைகளையும் சந்தித்து பேசும் வாய்ப்பை தார்க்கோவஸ்கி பெற்றார். 
1953ம் ஆண்டில் ஸ்டாலின் மறைந்த பிறகு கலைஞர்கள் மீதான கெடுபிடிகள், இறுக்கங்கள் தளர்த்தப்பட்டன. முதலில் இலக்கியமும் பின்னர் சினிமாவும் சுதந்திரமான வெளிக்கு வந்தனர். ஆனால் அதற்குள் படங்களை இயக்கத் தொடங்கி விட்ட ஆந்திராய் தார்க்கோவஸ்கிக்கு அவமதிப்புகள் ,புறக்கணிப்புகள் நிகழ்ந்தன. 1990ம் ஆண்டு கோர்பசேவின் புதிய அரசியல் பாதைகளால் சோவியத் யூனியனின் இறுகிய கட்டுமானம் நொறுங்கத் தொடங்கியது. அப்போது ஐரோப்பாவிற்கு குடிபெயர்ந்துவிட்ட ஆந்திராய் தார்க்கோவஸ்கியின் திரைப்படங்கள் முதன் முதலாக ரஷ்யாவில் மக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் அறிவாளிகள் மத்தியில் விவாதிக்கப்பட்டன. கோர்பசேவ் அரசும் தார்க்கோவஸ்க்கிக்கு லெனின் நினைவுப் பரிசை வழங்கி சினிமாவுக்கு அவர் அளித்த பங்களிப்புக்கு கௌரவம் அளித்தது. அதுவரை ஒரே ஒருமுறை மட்டுமே அவரை அவர் தாய்நாடு அங்கீகரித்தது. 
தமது வயதான காலத்தி்ல் நோய்வாய்ப்பட்ட நிலையில் தமது படங்களுக்கு ரஷ்யாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதை அறிந்து அவர் நாடு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க தார்க்கோவஸ்கி மறுத்து விட்டார்.
" உயிருடனோ பிணமாகவோ நான் என் தாய்நாட்டிற்கு திரும்ப விரும்பவில்லை, அத்தனை அவமானமும் புறக்கணிப்பும் வலியும் வேதனையும் அந்நாட்டு  மக்கள் எனக்கு அளித்திருக்கிறார்கள், நான் என்னை ரஷ்யன் என்று உலக அரங்கில் சொல்லிக் கொண்டாலும் சோவியத் யூனியனைச் சேர்ந்தவன் என்று ஒருபோதும் சொல்ல விரும்பவில்லை" என்று கூறினார் தார்க்கோவஸ்கி.
தார்க்கோவஸ்கியின் இவானின் குழந்தைப் பருவம் போன்ற புகழ் பெற்ற திரைப்படங்களுடன் மிகவும் அதிகமான கவனம் பெற்ற படம் ஸ்ட்ரீம் ரோலர் அண்ட் தி வயலின் என்ற குறும்படம். ஆம் இது ஒரு குறும்படம் தான். ஆனால் 47 நிமிடங்கள் ஓடக்கூடிய மிக நீளமான குறும்படம் அல்லது மினி திரைப்படம் என்று இதனை அழைக்கலாம்.1961ம் ஆண்டில் இதனை இயக்கினார் அவர்.
தார்க்கோவஸ்கியின் திரைப்படங்கள் கவித்துவ அழகும் காட்சியின் அழகும் பெற்றவை. கலை மரணத்திற்காக மனிதனை தயாரிக்க வேண்டும் என்று அவர் கருத்து கொண்டிருந்தாலும் வாழ்க்கையின் மீதும் அதன் அழகியல் மீதும் வெகுளியான மனிதர்கள் மீதும் உழைக்கும் வர்க்கம் மீதும் குழந்தைகள் மீதும் அவர் அலாதியான பிரியம் கொண்டிருந்தார். அதை தமது திரைப்படங்களில் பதிவு செய்ய அவர் தவறவில்லை. வாழ்க்கையை ஒரு கனவு போல் தமது படங்களில் சி்த்தரித்தார் ஆந்திராய் தார்க்கோவஸ்கி என்று மற்றொரு உலகப் புகழ் பெற்ற இயக்குனரான இங்மர் பெர்க்மென் பாராட்டியுள்ளார்.
குழந்தைகளுக்காக தார்க்கோவஸ்கி இயக்கிய படம் இது. சாலையில் தாரை போட்டு அதன் மீது ஸ்ட்ரீம் ரோலரை ஓட்டி சமன்படுத்தும் உழைப்பாளி ஒருவனுக்கும் வயலின் கற்றுக்கொள்ள இசைப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படும் ஏழு வயது சிறுவனுக்கும் ஏற்படும் நட்புதான் இதன் மையம்.
தந்தை இல்லாத அந்த சிறுவன் தாயால் வளர்க்கப்படுகிறான்.
வயலினுடன் இசைப்பள்ளிக்குச் செல்லும் சிறுவன் சாஷாவை டீசிங் செய்யும் பெரிய பையன்களிடமிருந்து சாஷாவை மீட்டு தோழமை கொள்கிறான் செர்கய். இவன் ஸ்ட்ரீம் ரோலர் ஓட்டுவதைப் பார்த்து தமக்கும் கற்றுக் கொடுக்குமாறு சிறுவன் கேட்க, செர்கய் அவனுக்கு ஸ்ட்ரீம் ரோலரின் தொழில்நுட்பங்களை கற்றுத் தருகிறான், பதிலுக்கு செர்கய் தன் உழைப்பின் களைப்பை மறக்க சாஷா அவனுக்காக வயலின் வாசிக்கிறான், 
கையில் கிரீஸ் கரையுடன் வீடு திரும்பும் சாஷாவை தாய் அதட்டுகிறாள். செர்கயுடன் தமது மகன் பழகுவதைஅவள் விரும்பவில்லை. முரட்டுத்தனமான தொழிலாளிகள் யாவரும் தீயவர்கள் என்பது அவள் எண்ணம். ஆனால் சாஷாவுக்கோ தந்தை இல்லாத தனது தனிமையைப் போக்க வந்தவன்தான் அந்த தொழிலாளி. தொழிலின் மீது சாஷாவுக்கு ஏற்படும் ஆர்வம் ஒரு மழைக்காலத்தில் படமாக்கப்படுகிறது. இடிந்த ஒரு கட்டடத்தை இரும்பு குண்டு கொக்கியில் வைத்து தாக்கி இடித்து நொறுக்கும் காட்சியை பரவசத்துடன் பார்க்கிறான் சாஷா. மனித உழைப்புதான் மாட மாளிகைகளை உருவாக்குகிறது. உலகை படைக்கிறது என்ற சிறுவயது முதலே உழைக்கும் வர்க்கத்தின் மீது சாஷாவுக்கு ஈர்ப்பு ஏற்பட இக்காட்சி உதவுகிறது. இக்காட்சியும் ஆந்திராய் தார்க்கோவஸ்கியின் கவித்துவமான கனவே போன்ற சினிமா மொழியில் மழை மழை ஈரம் படிந்த மணல், மணலில் தெரியும் சூரிய ஒளி, புறாக்களின் பறத்தல் , சிறுவனின் பிம்பம் என காட்சி வழியாக கவிதைகளைக் கொட்டிக் கொண்டே செல்கிறது.
தனது புதிய நண்பனுடன் சினிமா பார்க்க சாஷாவிரும்புகிறான். ஆனால் தாய் அவனை  செர்கயுடன் சினிமாவுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. சாஷாவுக்காக திரையரங்க வாசலில் காத்திருக்கும் செர்கய்க்கு குழந்தை வரவில்லை என்ற கவலை தோய்ந்திருக்க புதிதாக முளைத்த இளம் பெண் ஒருத்தி ஸ்நேகமாகிறாள். தனக்கும் அந்தப் படத்தைப் பார்க்க ஆர்வம் என அவள் அழைக்க அரை மனத்துடன் சாஷாவை தேடும் விழிகளுடன் செர்கய் தன் புதிய  தோழியுடன் படம் பார்க்க போகிறான். வீட்டில் தனியாக அடைபட்டிருக்கும் சாஷா கண்கலங்குகிறான், அவன் கண்ணீர் கண்ணாடி திரையில் நீர்பிம்பங்களாக காட்சிவடிவத்தை கலங்கடிக்கிறது. அப்போது கனவு போன்றதொரு காட்சியில் செர்கயின் ஸ்ட்ரீம் ரோலரை நோக்கி சாஷா ஓடிக் கொண்டிருக்க திரைப்படம் நிறைவு பெறுகிறது.






கலை கடைசியாக சேர வேண்டியது உழைக்கும் மக்களுக்குதான் என்ற குறியீட்டுத் தன்மையுடன் படம் முடிகிறது.
தந்தை இல்லாத குழந்தைக்கு தந்தை போல் பாசத்தையும் உழைப்பையும் கற்றுத் தந்த ஒரு இளைஞனுடனான நட்பைத் துண்டித்து அந்த குழந்தையின் இளம் பருவக் கனவுகளைக் கலைத்து விட்ட தாய் குழந்தையின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளவில்லை. அந்த ஏக்கம் சாஷாவின் கண்களில் இருந்து வயலின் இசை வரை நம்மை உறுத்துகிறது.
இந்தப் படத்துக்கு அமோகமான பாராட்டுகள் உலக அளவில் கிடைத்தன.தார்க்கோவஸ்கியின் கைவிரல் ரேகைகள் படம் முழுவதும் பதிவாகி இருப்பதாக விமர்சகர்கள் எழுதினார்கள். மனித சுபாவம் மற்றும் சூழலை மையமாகக் கொண்ட கவித்துவமான திரைப்படம் என்று பாராட்டினார்கள். தமது படங்களில் நாடகத்தன்மையான காட்சிகள்இருக்க வேண்டுமே தவிர இலக்கியப் படைப்பு போன்ற அடர்த்தியோ ஆழமோ தேவையில்லை என்று கருதியவர் தார்க்கோவஸ்கி. இலக்கியம் வேறு சினிமா வேறு என்று அவர் நினைத்திருக்கலாம். இப்படத்தின் காட்சிகள் நீண்ட டேக்குகளாக இருப்பதை சில புகழ் பெற்ற இயக்குனர்கள் விமர்சித்தனர். ஆனால் ஆந்திராய் தார்க்கோவஸ்கி அவர்களுக்கு கூறிய பதில் இது...
இயல்பான அளவு கொண்ட ஒரு காட்சியை சற்று நீட்டித்தால் போர் அடிக்கும் என்பது உண்மைதான். ஆனால் இன்னும் சிறிது நேரம் நீட்டித்தால் அதில் ஆர்வம் ஏற்படும். இன்னும் சற்று நேரம் நீட்டித்தால் அது புதிய பரிமாணத்தை எட்டி விடும். அனைவரின் கவனமும் அதன் மீது திரும்பி விடும் என்று அவர் கூறிய விளக்கம் ஷாட் ஷாட்டாக பட்டாசு போல் வெட்டி வெட்டி பாய்ந்தோடும் இன்றைய திரைப்படங்களுக்கு எதிரானது. இன்றைய இயக்குனர்கள் பாடல் காட்சிகளில் கூட ஒரு குளோசப்பையும் வைப்பதில்லை. சில நொடிகள் சஸ்டெய்ன் பண்ணக்கூடிய ஷாட்டுகளை வைப்பதி்ல்லை .மனித உணர்ச்சியை விடவும் தொழில்நுட்பம் ஆட்டிப்படைக்க வேண்டும் என்று இன்றைய இயக்குனர்கள் கருதுகிறார்கள். அதனால்தான் படத்தை விட்டு வெளியே வந்ததும் நடிகர்களின் முகம் கூட நமக்கு மறந்துப் போகிறது. ஆனால் சாஷா போன்ற ஒரு சிறுவனை பழைய படத்தில் நாம் சந்திக்க நேரும் போது அந்த முகமும் அவன் விழிகளும் அதில் தேக்கிய கண்ணீரும் கனவும் நம் நினைவை விட்டு அகலுவதே இல்லை.  UNSENTIMENTEL LYRICSM என்று இதனை ஆங்கிலத்தில் கூறுகிறார்கள். 
வாழ்க்கையும் பலநேரங்களில் இப்படித்தான் ஒரு உணர்ச்சியற்ற கவித்துவம் போல் காட்சிளிக்கிறது.

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...