Saturday, 7 November 2015

உலக சினிமா- THE LIFE OF DAVID GALE வாழ்க்கை ஒரு மின்னல் ஓவியம்-

THE LIFE OF DAVID GALE

குமுதம் தீராநதி நவம்பர் 2015 இதழில் வெளியான எனது கட்டுரை




மரண கண்டிதம் - வாழ்க்கை ஒரு மின்னல் ஓவியம்

THE LIFE OF DAVID GALE - செந்தூரம் ஜெகதீஷ்


 
நாம் பிறந்த தேதி நமக்கு தெரியும். நேரமும் கிழமையும் ஆண்டும் துல்லியமாக பதிவு செய்த பிறப்புச் சான்றிதழும் நம்மிடம் இருக்கிறது. அதில் மாற்றமும் இருக்காது. பிறவியெடுத்த யாருக்கும் பிறந்த கணம் ஒன்றுதான். அதே போல் இறக்கும் தருணமும் ஒன்றுதான். அந்த ஒரு மரண கண்டிதம்- கால நிர்ணயம் ஏனோ பலமுறை ஒத்திப் போடப்படுகிறது. நானே மூன்று முறை தற்கொலைக்கு முயன்று உயிர் வாழ்கிறேன். விபத்துகளிலும் உயிர் பிழைத்தவர்கள் உண்டு.மரணத்தின் கணத்தை தள்ளிப்போட முடியுமா, முன் கூட்டியே வரவழைக்க முடியுமா என்ற அபத்தமான கேள்விகளுக்கு பதிலே இல்லை.அது நிகழும் கணம் தான் நிகழும். மார்க் ட்வைன் என்ற எழுத்தாளர் ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதாக அவர் அம்மாவிடம் யாரோ கூற அவனுக்கு நன்றாக நீச்சல் தெரியும் என்று கூறிய அந்த தாய் அந்த கிராதகப் பயல் தலையில் இடி விழுந்து சாகக்கடவான். அவன் தண்ணீரில் சாகவே மாட்டான் என்றாராம்.இதனை மார்க் ட்வைன் நகைச்சுவையாக குறிப்பிடுவார்.

தி பைனல் டெஸ்டினேசன் என்ற திரைப்படம் 5 பாகங்களாக வந்தது. இதில் மரணத்தின் கணத்தை ஏமாற்றி விட்டால் மரணத்திலிருந்து தப்பி உயிர் வாழ முடியும் என்ற கோட்பாடு மூலம் கதாபாத்திரங்கள் தங்கள் மரணத்தைத் தள்ளிப்போட நினைப்பதும் அவர்களை மரணம் சுற்றி வளைப்பதும்தான் திரைக்கதையாக்கப்பட்டது.

மரணம் மற்றொரு வகையிலும் நிகழும். அது சட்டத்தால். மரண தண்டனை விதிக்கப்படும் போது மரணத்திற்கான கண்டிதம் எழுதப்படுகிறது. கால நிர்ணயம் செய்யப்படுகிறது.கசாப் முதல் யாகூப் மேனன் வரை தீவிரவாத குற்றங்களுக்கு ஆளானவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 3 பேருக்கு மட்டும் தான் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று உலகம் முழுவதும் விவாதங்கள் எழுகின்றன. அறிவுஜீவிகள் ஓரணியாக திரண்டு மரண தண்டனையை கடுமையாக எதிர்க்கின்றனர்.

மத்திய அரசு நியமித்த சட்டக்கமிஷன் அண்மையில் உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்த அறிக்கையில் மரண தண்டனையை ரத்து செய்யலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. அரிதினும் அரிதான தீவிரவாத வழக்குகளில் மட்டும் மரண தண்டனையை கடைபிடிக்கலாம் என்றும் சட்டக்கமிஷன் ஆலோசனை தெரிவித்துள்ளது. இதனை உள்துறை அமைச்சகம் நிராகரிக்கப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது. தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாட்டில் மரண தண்டனை அவசியம்தான் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கருதுகிறது. இதனால் இப்பரிந்துரையை மத்திய அரசு அப்படியே ஏற்குமா நிராகரிக்குமா என்பது தெளிவாகவில்லை.
தி லைப் ஆப் டேவிட் கேல் என்ற படம் மரண தண்டனைக்கு எதிரான விவாதங்களை கிளப்புகிறது. டேவிட் கேல் ஒரு கொலைக்குற்றவாளி , ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றச்சாட்டுக்காக அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் சிறையில் அவன் தனது வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறான். அவனை தூக்கில் போடுவதற்கான காலம் நிர்ணயம் செய்யப்பட்டு விடுகிறது. சாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அவன் தன் உணர்வுகளை வெளிப்படுத்த விரும்புகிறான். பிரபல தொலைக்காட்சி பெண் செய்தியாளருக்கு தான் பேட்டியளிக்க விரும்புகிறான்






டேவிட் கேலாக நடித்திருப்பவர் பிரபல ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேசி. பெண் நிருபராக வருபவர் டைட்டானிக் படத்தின் நாயகியாக நம் உள்ளங்களை கொள்ளை கொண்ட அதே கேட் வின்ஸ்லெட். அதே அழகுடன்.
முதல் காட்சியில் கேட் ஓடி வருகிறார். டேவிட்டின் மரண தண்டனையை தடுத்து நிறுத்த அவர் பழுதான காரை நிறுத்தி மூச்சுவாங்க ஓடோடி வருகிறார். அவர் கையில் ஓர் ஆதாரம் இருக்கிறது. டேவிட் குற்றவாளியல்ல என்று நிரூபணம் செய்யும் ஒரு முக்கிய ஆதாரம். ஆனால் காலம் கடந்துவிடுகிறது. டேவிட் கேலுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. கேட் வின்ஸ்லெட் உடைந்து போய் நொறுங்கி அழ கதை பின்னோக்கி சுழலுகிறது.
ஒரு கொலைக்குற்றவாளியை பேட்டியெடுக்க செல்லும் கேட் வின்ஸ்லெட்டை தனியாக செல்ல வேண்டாம் என ஆசிரியர் அறிவுறுத்துகிறார். துணைக்கு ஜாக் என்பவனை அனுப்பி வைக்கிறார். பெண் பாதுகாப்பற்றவள் என்ற ஆணாதிக்க சிந்தனையை வெறுக்கும் கேட் அரை மனதாக பாதுகாப்புத்துணையை ஏற்கிறாள்.
மழை பொழியும் முதல் நாள்- சிறைச்சாலைக்கு செல்கிறார் செய்தியாளர் பிட்சி புளூம் அதாவது கேட் வின்ஸ்லெட். முன்னதா உணவு விடுதியில் அவர் ஜாக்குடன் பேசும் போது டேவிட் கேல் ஒரு ஜீனியஸ் என தான் திரட்டிய தகவல்களை வைத்து கூறுகிறான் அவளது பாதுகாவலன். சிறைக்குள் செல்லும் கேட்டிடம் அரை மில்லியன் டாலர் பணம் தந்தால்தான் டேவிட் கேல் பேட்டி தருவார் என அவருடைய வழக்கறிஞர் பேரம் பேசுகிறார்.பல முக்கிய ரகசியங்களை டேவிட் கேல் வெளிப்படுத்துவார் என்றும் அவர் உறுதியளிக்கிறார். கேட் வின்ஸ் லெட்டும் அவர் பணிபுரியும் ஊடகமும் ரகசியங்களைக் காப்பதில் பேர் பெற்றது என்பதால்தான் பேட்டியளிக்க டேவிட் கேல் ஒப்புக்கொண்டார் என்கிறார் லாயர்.
பேட்டிக்கு தயாராகிறார் பிட்சி புளூம் என்ற இளம் பத்திரிகையாளர். பாதுகாப்பாக இரு என அறிவுரை கூறுகிறார்கள் சிறைக்காவலர்கள். இதற்கு அந்த வழக்கறிஞர் கூறும் பதில் "அவர்கள் குரூரமாகவும் அசாதாரணமாகவும் இருப்பது எப்படி என்று இங்குதான் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். " என்பதே.
டேவிட் கேல் வருகிறார். தடுப்பு கம்பிகளுக்கு அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் குற்றவாளியும் பேட்டி காண்பவரும் அமர்த்தப்படுகிறார்கள். தனது கதையை கூறத் தொடங்குகிறார் டேவிட் கேல்,
டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறை பேராசிரியராக பணியாற்றுகிறார் டேவிட் கேல்.அவர் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் விதம் அவரது அறிவுபூர்வமான சிந்தனையை நமக்கு வெளிப்படுத்துகிறது. தத்துவவாதி லகானின் கோட்பாடுகளை விளக்கும் வகையில் அவர் நடத்தும் அந்த வகுப்பில் அவர் மாயைகள் மற்றும் யதார்த்தம் பற்றி பேசுகிறார்.மாயைகள் யதார்த்தத்தை போல் தோன்றினாலும் யதார்த்தம் அல்ல. அவை மாயைகளே.அதை நாம் பல காலம் விரும்பி தேடிக் கொண்டிருப்போம் ,கிடைத்த கணமே அது நமக்கு தேவையற்றதாகி விடும். நாம் தேடியது அல்ல முக்கியம். நமது தேடல்தான் முக்கியம் என்று விளக்குகிறார்.
மனித மனம் மனிதாபிமானம் என்ற கொள்கையுடன் வாழ்கிறது. அதன் காரணமாக வாழ்க்கையை போட்டுக் குழப்பிக் கொள்ள தேவையில்லை. நமது சொந்த வாழ்க்கைதான் நமது கொள்கைகளின் மதிப்பு என்ன என்பதை கூறுகிறது.
பேராசிரியர் டேவிட் கேல் டெத் வாட்ச் என்ற அமைப்பில் தீவிர உறுப்பினர். மரண தண்டனைக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தும் இயக்கம் அது. ஒரு நாள் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடித்து கும்மாளம் போடும் போது ஒரு அழகான இளம் பெண்- படிப்பை பாதியில் விட்டவள்- டேவிட் கேலை வட்டமிடுகிறாள். முதலில் மறுக்கும் அவர் பின் பெண்ணிடம் ஈர்க்கப்பட்டு அவளுடன் உடலுறவு கொள்கிறார். ஆனால் அந்தப் பெண் பொய்யாக டேவிட் கேல் மீது பாலியல் வன்முறை புகார் அளிக்கிறாள்.
மறுநாள் மாகாண ஆளுனருடன் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்கிறார் டேவிட் கேல். அதில் ஒரு கண்ணுக்கு பதில் ஒரு கண் என பழிவெறியில் உலகம் இருந்தால் உலகமே குருடாகிப் போய்விடாதா என்ற மகாத்மா காந்தியின் கருத்தை மேற்கோள் காட்டும் டேவிட். மரண தண்டனை அவசியமா என கேள்வி எழுப்ப , ஒரே ஒரு நிரபராதியாவது தூக்கில் தொங்கியதை நிரூபிக்க முடியுமா என்று கேட்டு டேவிட்டின் வாதங்களை தவிடு பொடியாக்கி விடுகிறார் ஆளுநர். இதனால் இருவருக்கும் இடையே விவாதம் தனிப்பட்ட வன்மமாக மாறுகிறது. நிகழ்ச்சியை முடித்து ஆளுநர் புறப்பட டேவிட் கேலை போலீசார் பாலியல் வன்முறை வழக்கில் கைது செய்கின்றனர். அப்போதுதான் இது ஆளுநரின் திட்டமிட்ட சதிவேலை என அவருக்குப் புரிகிறது.
பின்னர் அந்த வழக்கிலிருந்து டேவிட் கேல் நிரபராதி என விடுவிக்கப்படுகிறார். ஆனால் அதற்குள் அவர் வாழ்க்கைக்கு மிகப்பெரிய இழப்புகள் ஏற்பட்டு விடுகின்றன. அவர் மனைவி அவரை விட்டு சென்று விடுகிறாள். அவர் அவமானமும் புறக்கணிப்பும் சந்திக்கிறார்.
மரண தண்டனைக்கு எதிரான இயக்கமான டெத் வாட்ச்சில் மற்றொரு தீவிர பெண் உறுப்பினர் கான்ஸ்டன்ஸ் ஹராவே .இவர் டேவிட்டிடம் நட்புடன் பழகுகிறார். ஒரு கட்டத்தில் அவர் தமது தோழியுடனும் உடலுறவு கொள்கிறார். மறுநாள் காலையில் ஹராவே மர்மமான முறையில் இறந்துக் கிடக்கிறாள். அவள் தலை பிளாஸ்டிக் பையால் மூடியிருக்கிறது. மூச்சு அடைத்து அவர் இறந்திருக்கலாம்.கைகளும் கால்களும் பிளாஸ்டிக் கயிறுகளால் கட்டப்பட்டுள்ளன. கைகளில் விலங்கு பூட்டப்பட்டு அதன் சாவியை அவளை கட்டாயப்படுத்தி விழுங்க வைத்திருக்கிறான் கொலைகாரன். அவள் நிர்வாணக் கோலத்தில் கிடக்கிறாள். கம்யூனிஸ அரசுகள் பயன்படுத்திய சித்திரவதைக்கு அவள் ஆளாகி கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பதை அவளது சடலம் கிடக்கும் காட்சி உணர்த்துகிறது. குற்றம் நடந்த இடத்தில் கடைசியாக கான்ஸ்டன்ஸ் ஹராவேயுடன் இருந்த டேவிட்டை நோக்கியே சந்தேகம் எழுகிறது. அங்கிருக்கும் தடயங்களும் அவரை குற்றவாளியாக்கி விடுகின்றன. இதனால் டேவிட் கேல் மீண்டும் பாலியல் வன்முறை வழக்கில் அதுவும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுகிறார்.மரண தண்டனைக்கு எதிராகப் போராட்டங்களை நடத்திய அவருக்கு தனது தோழியின் மரணத்திற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு விடுகிறது.
புளூம்என்ற பெண் செய்தியாளரிடம் டேவிட் தனது கதையை விவரிக்கிறார்.டேவிட்டுக்கு எதிரான ஆதாரங்கள் பலவீனமானவை என்றும் அவருக்கு சாதகமான சில தடயங்கள் கிடைக்கலாம் என்றும் கேட் வின்ஸ்லெட் நம்புகிறார். ஆனால் அவளையும் ஜாக்கையும் ஒரு மர்ம நபர் காரில் பின் தொடர்கிறார். அவர் தான் டஸ்டி ரைட். காண்ஸ்டன்ஸ் ஹராவேயின் முன்னாள் காதலன் என்பது கதையின் பிற்பகுதியில் நமக்குத் தெரிகிறது.
குற்றம் நடந்த வீட்டை ஜாக்குடன் பார்வையிடுகிறார் கேட் வின்ஸ்லெட் . டேவிட் நிரபராதி என நிரூபிக்க அவர் தடயத்தைதேடுகிறார்.
மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. அவளை அந்த மழையில் அந்த மர்மக்கார் துரத்துகிறது. உண்மையான கொலைகாரன் அந்தக் காரில் இருப்பதாக நினைக்கிறார் கேட்வின்ஸ்லெட். ஆனால் கான்ஸ்டன்ஸ் ஹராவேயின் முன்னாள் காதலனான அந்த நபர் டஸ்டி ரைட் முக்கியமான ஒரு ஆதாரத்தை கேட்டின் அறையி்ல் வைக்கிறான். ஒரு வீடியோ டேப் தான் அந்த ஆதாரம் .ஜாக்கும் புளூமும் அந்த வீடியோவைப் போட்டுப் பார்க்கிறார்கள். அவளை டஸ்டி ரைட்தான் கட்டிப் போடுகிறான். வீடியோவில் இந்தக் காட்சியைப் பார்த்து கேட் உண்மையான குற்றவாளி டஸ்டி ரைட்தான் என முடிவுக்கு வருகிறாள்.
ஆனால் மர்ம முடிச்சு மேலும் இறுகுகிறது. கேல் தமது கதையை இரண்டாவது நாளாக தொடர கொலை செய்யப்பட்ட ஹராவே ஒரு நோயாளி என்றுகேட் அறிகிறார். மரணத்தை எண்ணிக் கொண்டு வாழ்ந்து வந்தாரா் -கடுமையான புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹராவே அவளும் அவள் முன்னாள் காதலனும் ஒரு திட்டமிட்ட தற்கொலையை நடத்தி அதை கொலை போல் சித்தரிக்க முயற்சித்து இருந்ததை கேட் கண்டுபிடிக்கிறாள். ஒரு நிரபராதிக்கும் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்பதை நிரூபிப்பதற்காக ஹராவேயும் டஸ்டியும் திட்டமிட்டே டேவிட் கேலை சிக்க வைத்திருப்பதாக கேட் வின்ஸ்லெட் கருதுகிறார். அந்த வீடியோ டேப்புடன் தான் படத்தின் ஆரம்பக்காட்சியில் அவர் ஓடி வருகிறார். ஆனால் அதற்குள் தூக்குத் தண்டனைநிறைவேற்றப்பட்டு விடுகிறது. அப்பாவியான ஒருவர் மரண தண்டனை பெற்றுவிட்டார் .டேவிட் கேலின் மரணத்திற்குப் பிறகு அந்த வீடியோ டேப் வெளியாகி பெரும் விவாதங்களைக் கிளப்புகிறது. ஊடகங்கள் அரசை கண்டித்து கிளர்ந்தெழுகின்றன. பல்வேறுஇடங்களில் மரண தண்டனைக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கின்றன.
தொடர்ந்து அந்த பேட்டிக்காக கேட் செலுத்திய கட்டணம் அவருக்கு திரும்பக் கிடைக்கிறது. அதை டேவிட் கேலின்மனைவியை சந்தித்து கொடுக்கிறாள் கேட். நிரபராதியான தமது கணவரை பாலியல் பலாத்காரம் செய்தவர் என்று எண்ணி பிரிந்து வந்துவிட்டது தவறு என அவர் எண்ணி கண்ணீர் விடுகிறார். தமது குழந்தையையும் மனைவியையும் இழந்த விரக்தியில்தான் டேவிட் கேல் தமது தோழியிடம் அடைக்கலம் நாடி மற்றொரு பாலியல் வன்முறை கொலை வழக்கில் சிக்கிக் கொண்டதை டேவிட் கேலின் மனைவி உணர்கிறார்

இதன் பின்னர் புளூமுக்கு மற்றொரு வீடியோ டேப் தபாலில் வருகிறது. இதில் டஸ்டி ரைட் என்ற ஹராவேயின் முன்னாள் காதலன் அவள் இறந்துவிட்டதை உறுதி செய்கிறான். அப்போது அவன் அருகில் டேவிட் கேல் வருகிறார். அவர் தமது கைரேகைகளை இறந்துக் கிடக்கும் ஹராவேயின் முகத்தை மூடிய பிளாஸ்டிக் பையிலும் கைவிலங்குகளிலும் திட்டமிட்டே பதிவு செய்கிறார்.
நிரபராதிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற வாதத்தை உண்மையாக்க ஹராவே, ரைட் ஆகியோருடன் நடத்திய நாடகத்தில் டேவிட் கேலுக்கும் பங்கு இருந்ததை கேட்வின்ஸ் லெட் உணர்கிறார். புற்றுநோயால் மரணம் உறுதியாகிவிட்ட ஹராவை தனது கொள்கைக்காக தனது உயிரைத்தியாகம் செய்ய தற்கொலையை கொலையாக மாற்றி அவள் காதலனும் டேவிட் கேலும் நடத்திய நாடகத்தின் காட்சியை நாடகம் முடிந்துவிட்ட பிறகு காண்கிறாள் கேட் வின்ஸ்லெட்

காரில் பின்தொடர்ந்த அந்த மர்ம நபர், டஸ்டின் ரைட் ஒரு தேவாலயத்தில் ஏசு கிறித்து சிலுவையில் அறையப்படும் நாடகத்தை கண்டு கண்ணீர் விடுகிறான்.


----------------------------------------
இந்தப் படத்தின் காட்சிகள் முடிந்தாலும் விவாதங்கள் முடியவில்லை. மரண தண்டனை தேவைதான் என இந்திய அரசைப் போல் பலரும் தேவையில்லை எனப் பலரும் வாதம் செய்துக் கொண்டிருக்கிறார்கள். மரண தண்டனைக்கு ஆளானவர்கள் எல்லோரும் அப்பாவிகள் அல்ல. மும்பையில் 168 உயிர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற 10 பாகிஸ்தான் தீவிரவாதிகளில் உயிருடன் சிக்கியவன் அஜ்மல் கசாப்தான். அவனைப் பிடிக்க ஒரு காவலர் உயிர்த்தியாகம் செய்தார். சாதாரண கைத்தடியுடன் .கே.47 உடன் காரி்ல் சென்றுக் கொண்டிருந்த கசாப்பை அவர் மடக்கினார்.
கசாப்புக்கு சிறையில் நான்கைந்து வருடம் வைத்து விசாரணை நடத்திய போது அவனுக்கு பிரியாணி போட்டே பல லட்சம் ரூபாய் செலவானது பாதுகாப்புக்காக பலகோடிகள் செலவானது. ஒரு கொடிய குற்றவாளிக்கு இத்தனை கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதா என்றும் கேள்வி எழுந்தது.
திடீரென ஒருநாள் அதிகாலை புனே ஏரவாடி சிறையில் கசாப் தூக்கிலிடப்பட்டான். அந்த செய்தியை ஜிடிவி என்ற தமிழ்த் தொலைக்காட்சி சேனலுக்காக எழுதி அதை உலகிற்கு தெரிவிக்க முதன் முதலாக வெளியிட்ட நாள் எனக்கு இன்றும் நினைவில் உள்ளது.அதை நான் போட்ட பிறகுதான் சி.என்.என்-ஐபிஎன் உள்பட பல செய்தி சேனல்கள் பிளாஷ் நியூசாக அடித்தன

கசாப்பின் மரண தண்டனை நியாயமானதுதான் என்பதை மறுப்பவர் அதிகமில்லை. பாகிஸ்தானிய ஆதரவாளர்கள் மறுக்கலாம். அதே போன்று கோயமுத்தூரில் குழந்தைகளை கடத்திச் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தபின் இருவரையும் கொன்ற கொடியவர்களில் ஒருவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற போது அதை எதிர்த்தவர் யாருமில்லை. மானசீகமாக போலீசாரை பாராட்டியவர்களே அதிகம்.
பிறந்த கணத்தை எழுதி விட்ட இறைவன்தான் நமது இறப்பையும் அந்த கண்ணுக்குத் தெரியாத மர்ம நொடியையும் எழுதி வைத்து விட்டான். பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி இருப்பதென்பது மெய்தானே என கவிஞர் வைரமுத்துவும் எழுதி வைத்தார்.
இறப்பை சட்டம் தீர்மானிப்பதா என்பது தான் கேள்வி. அவரவர் பதில்அவரவர்க்கு. அடுத்தவரின் உயிருக்கு மதிப்பளிக்க தெரியாத குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பதற்கான நியாயங்களை வாதங்களால் அழித்துவிட முடியாது.
நீதி வேறாக இருப்பினும் நியாயங்கள் மாறாதவை


 jagdishshahri @gmail.com

 

 
 

Thursday, 22 October 2015

சந்திப்பு-10 வெங்கட் சுவாமிநாதன்


தமிழ் இலக்கிய உலகின் மாபெரும் விமர்சகர்களில் ஒருவரான வெ.சா.எனப்படும் வெங்கட் சுவாமிநாதன் கடந்த அக்டோபர் 21 2015 அன்று காலமானதாக சற்று தாமதமாகவே எனக்குத் தெரிய வந்தது. தாமதத்திற்கு காரணம் நானும் மினி மரணத்தில் இருந்ததுதான்.கடுமையான காய்ச்சலுடன் சுயநினைவே இன்றி படுத்த படுக்கையாகவே பேப்பரைக் கூட புரட்டாமல் கிடந்தேன். என் நலம் விசாரித்த நண்பர்களின் மிஸ்டு கால்களை தேடிப்பிடித்து ஒவ்வொருவராக போன் செய்து பேசும்போது தொலைக்காட்சியில் பணியாற்றும் ஒரு தோழி உங்க அபிமான எழுத்தாளர் வெ.சா இறந்துட்டாராமே என்று கேட்ட போது ஒரு கணம் உலகம் நின்று விட்டு இயங்கியது.நிஜம்தானா...நம்பவே முடியாமல் ஜெயமோகனின் வலைதளத்தைப் பார்த்த போது அஞ்சலி செய்திகள் இருந்தன.

வெங்கட்  சுவாமி நாதனை நான் முதன் முதலில் சந்தித்தது மயிலாப்பூர் அரங்கு ஒன்றில். அப்போது 80களின் தொடக்கம். நான் எழுதத் தொடங்கிய காலம். சிசு செல்லப்பா நிகழ்ச்சியில் பேச வாய்ப்பு தந்தார்.பேசிய பிறகு வெகுளியாக பாராட்டவும் செய்தார். அதன் பிறகு அதே கூட்டத்தில் வெ.சாவை சந்தித்து அறிமுகமானேன். எனது படைப்புகளை சிற்றிதழ்களில் படித்திருந்தார். கோவை ஞானி, திகசி , திலீப்குமார் ஆகியோருடன் நான் பழகி வந்த காலம் என்பதால் அவர்களும் என்னைப் பற்றி கூறியிருக்கலாம், ஓரிரு வார்த்தைப் பரிமாற்றத்துடன் நீண்ட நாள் நண்பர் போல் பேசத் தொடங்கிவிட்டார். நானும் அவரது நூல்களைப் படித்திருந்தேன். அதைப் பற்றி கூறியதும் அவர் முகம் மலர்ந்தது. விரிவாகவும் ஆழமாகவும் படிக்கிற ஒரு வாசகனை கண்டுபிடித்து விட்ட சந்தோஷம் அவர் முகத்தில்.அதே காலகட்டத்தில் கோவை சென்றிருந்த போது, மும்பையிலிருந்து கோவைக்கு மாற்றலாகி வந்திருந்த நாஞ்சில் நாடனை சந்தித்துப் பேசும் வாய்ப்பு விஜயா பதிப்பகத்தில் உருவானது. அவரது நாவல்களும் சிறுகதைகளும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. சதுரங்க குதிரை அப்போது வெளியாகியிருந்தது. கோவை வஉசி பூங்காவில் அந்த நூல் பற்றி ஞானி நடத்திய நிகழ் கூட்டத்தில் பேசியிருக்கிறேன். விஜயா பதிப்பத்தில் நாஞ்சில் நாடனுடன் பேசும்போது வெ.சா.நீண்டகாலமாக மௌனமாக இருந்தது தமிழ்இலக்கியத்துக்கு பேரிழப்பு என நாஞ்சில் நாடன் கூறினார். அப்போது வெ.சா மீது படைப்பாளிகளுக்கு உள்ள மரியாதை மிகப்பெரியது என்பதை உணர்ந்தேன்.
  • தொடர்ந்து வெ.சாவை தொலைபேசி வாயிலாகவும் நிகழ்ச்சிகளிலும் சிலமுறை சந்திக்க நேர்ந்த போது பிரியத்துடன் பேசினார். ஒருமுறை ரஷ்ய கலாச்சார மையத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் அவஸ்தையில் இருந்தார். செந்தூரம் இங்கே வாங்க....என்னை பஸ் ஸ்டாண்ட் வரை கொண்டு போய் விடுவீங்களா என உரிமையுடன் கேட்டார். அவருடன் கைப்பிடித்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியைக் கடந்து அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே இருந்த ஒரு சிறிய ஒற்றையடிப் பாதை வழியாக டிஎம்எஸ் பஸ் ஸடாண்ட் வரை அழைத்துப் போனார். அப்படியொரு பாதையை நான் அறிந்திருக்கவில்லை. நானாக இருந்தால் ஜெமினி பாலம் கீழ் சென்று காமராஜர் அரங்கு வழியாகவே போயிருப்பேன். இப்போது அந்தப் பாதை செம்மொழிப் பூங்காவுடன் சங்கமமாகி விட்டது போல் தோன்றுகிறது.
    டிஎம்.எஸ் பஸ் ஸ்டாண்ட் வரை ஒரு கையில் என்னைப் பிடித்துக் கொண்டும் ஒரு கையால் தடியை ஊன்றியபடியும் முதுமையிலும் துடிப்போடு தனது வீடு நோக்கி செல்லும் வெ.சாவைப் பார்த்து எனக்கொரு காரை கடவுள் தரவில்லையே என மனசுக்குள் அழுதேன். ஆட்டோவுக்காவது அவர் செலவழிக்க வசதி இருந்திருக்கலாம். அவருக்கும்இல்லை எனக்கும் இல்லை.
    ஆனால் பல தலைமுறைகளாக தமிழ் எழுத்துக்களுக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் அப்படித்தான் இருந்தார்கள், இருக்கிறார்கள்
    2008ம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சிக்கு வெ.சா.வை பேட்டி காண அவருடன் தொடர்பு கொண்ட போது, ஆயிரம் ரூபாய் பணம் தருவீயா என்றார். அய்யா எங்க தொலைக்காட்சியில் பணம் தரமாட்டாங்கய்யா என்றேன். அப்ப பேட்டி கிடையாது போ.....சி.எம் ( கலைஞர்) கோவிச்சுக்குவாரா பரவாயில்லை என்று சிரி்த்தபடி கூறினார்.
    என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பான இன்னும் மிச்சமிருப்பவைக்கு அவர் புதிய பார்வை இதழில் விமர்சனம் எழுதியிருந்தார். எவ்வளவு பெரிய ஜாம்பவான் எனக்கு விமர்சனம் எழுதியிருக்கிறார் என்று மகிழ்ச்சியில் தள்ளாடினேன்.
    ஜெயமோகன் போன்ற சில நண்பர்கள் வெ.சாவை சந்தித்த போதும் என்னைப் பற்றி பிரியத்துடன் விசாரித்ததாக கூறுவார்கள் .அவனை நான் அவன்இவன்னுதான் கூப்பிடுவேன், கோவிச்சுக்குவானா என்ன என்று அவர் கூறினாராம். என் பெயரை வெசா போன்றவர்கள் உச்சரிப்பதே எனக்கு பாக்கியம்தானே.
    வெ.சாவின்இலக்கியப் பணியைப் பற்றி பேசாமல் இப்படி கடவுள் துதி மாதிரி பாடுவதாக யாரும் கருத வேண்டாம். அறிந்தேதான் பேசுகிறேன். என்னை யாரும் மன்னிக்கத் தேவையில்லை. தமிழ் இலக்கிய விமர்சனத்தில் சிசுசெல்லப்பா, கநாசு, பிரமிள், வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி போன்ற இலக்கிய மேதைகள் தங்கள் படைப்பாளுமையை பின்னுக்குத் தள்ளியும் செயல்பட்டு வந்திருக்கிறார்கள். தற்போது சிலர் செய்யும் இலக்கிய விமர்சனங்கள் போன்று அவை குதிரை லாடம் கட்டியது போன்ற தடாலடி விமர்சனங்கள் அல்ல..ஆழப்படித்து தீர விவாதித்து எழுப்பிய இலக்கிய அஸ்திவாரங்கள், விமர்சனம் மூலம் நல்ல இலக்கியத்தைக் கட்டிக் காத்த தூண்கள் இவர்கள்.
    எம்.வி.வெங்கட்ராம் மறைந்த போது தினமணியில் மறுநாளே ஜெயமோகன் இரங்கல் கட்டுரை எழுதி விட்டார். அச்சும் ஆகி விட்டது. அப்போது ஜெயகாந்தனின் காரில் அவருடன் மைலாப்பூர் லஸ் கார்னர் அருகே நான் அமர்ந்திருந்தேன். அப்போது ஜேகே சொன்னார் மனிதர் செத்து அவர் சாவுக்கு பால்கூட ஊத்தறதுக்கும் முன்னே இந்த ஆளுக்கு ( ஜே கே பயன்படுத்திய சொல்லை பயன்படுத்தவில்லை) என்ன அவசரம் ? அதுவும் அவர் இரண்டு கதைகள்தான் நல்லா எழுதியிருக்காருன்னு....அதைச் சொல்ல நீ யாரு...உனக்கென்ன தகுதி?
  • இப்போதைய இலக்கிய விமர்சனம் இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது. நான் சிரித்துக் கொண்டே ஜேகேவிடம் சொன்னேன் . அய்யா நாளை உங்களுக்கும் இப்படித்தான் நடக்கும். 
  • ஜேகேவும் ரசித்தார். அதே போல் சமர்த்தாக நம்ம ஜெயமோவும் ஜே,கே,இறந்ததும் சுடச்சுட இரங்கல் கட்டுரை எழுதி பிரசுரம் செய்துவிட்டார். ஜே,கே, சொர்க்கத்தில் கூட வாய்விட்டு  சிரித்திருப்பார். அல்லது கெட்ட வார்த்தைகளால் ஜெமோவை திட்டித் தீர்த்திருப்பார்.

  • வெ.சா.வை மறுவாசிப்பு செய்து விரிவாக எழுதுவது என் கடமை. செய்வேன்.

Monday, 12 October 2015

புலி விஜய் -விக்கியுடன்







விக்கியுடன் புலி படம் பார்க்க சாந்தி தியேட்டருக்குப் போயிருந்தேன், விக்கி விஜய் ரசிகன் என்று ஏற்கனவே இந்தப் பகுதியில் பதிவு செய்திருக்கிறேன். ( காண்க இளைய தளபதி விஜய் ரசிகன் )
விக்கிக்கு இது இரண்டாவது தடவை. எனக்கு முதல் முறை. அவன் விஜய் படத்தை குறைந்தது மூன்று முறை பார்ப்பான். அவனுக்காக நான் ஒருமுறை பார்ப்பேன்.
புலி படம்  ஆடியோ ரிலீசுக்கு அழைத்துப் போக விக்கி என்னை நச்சரித்தான். எனக்கு சினிமாக்காரங்க யாரையும் தெரியாது. யார் பாஸ் தருவாங்கன்னு புரிய வைக்க முடியலே. அதுவும் விழா நடப்பது மகாபலிபுரத்தில். ஆட்டோ பஸ்சுக்கும் சாப்பாட்டுக்கும் சேர்த்து 500 ரூபாயாவது செலவு செய்ய வேண்டும். நான் மறுத்து விட்டேன். அவன் முகத்தை தூக்கிக் கொண்டு சரியாகப் பேசவில்லை. விஜயுடன் ஒரு செல்பி எடுப்பது அவன் ஆசை. ஜெயமோகனின் புத்தக வெளியீட்டு விழாவில் கமல்ஹாசனும்இளையராஜாவும் பேசியதை அருகில் இருந்து கவனித்துக் கொண்டே இருந்தான் விக்கி. விழா முடிந்ததும் நான் ஜெயமோகனிடம் அழைத்துச் சென்று கமலுடன் ஒரு செல்பி எடுக்க வைப்பேன் என்ற ஆதங்கம் அவனுக்கு .அதுவும் நிறைவேறவில்லை. கூட்டத்தில் பின்தள்ளப்பட்டோம். கமல் எப்படியோ இறங்கி போய் விட்டார். இளையராஜாவும் இல்லை. கடைசியில் ஜெயமோகனுடன் செல்பி எடுத்து வந்தான். வீட்டுக்கு வந்ததும் அதை டிலெட் செய்யவும் சொல்லி விட்டான்.
சரி விழாவுக்குத் தான் அழைத்துப் போக முடியவி்ல்லை. படத்திற்காவது அழைத்துப் போகலாம் என அவனை இரண்டாம் முறையாக புலி படம் பார்க்க அழைத்துப் போனேன். சாந்தி தியேட்டருக்குப் போனதில் ஒரு காரணம் இருந்தது. விரைவில் அந்த திரையரங்கை இடிக்கப் போகிறார்கள் என்று ஒரு செய்தி. மேலும் எனது பால்ய காலத்துடன் அந்தப் படம் பின்னிப் பிணைந்திருக்கிறது. தங்கப்பதக்கம், மன்னவன் வந்தானடி, ரிஷிமூலம் போன்ற படங்கள் எல்லாம் அப்போது சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி ஆகிய திரையரங்குகளில் வெளியாகி புவனேசுவரியில் மூன்று நான்கு வாரமும் கிரௌனில் 50 நாட்களும் சாந்தியில் வெள்ளிவிழாவும் கொண்டாடுவது வழக்கம். மன்னவன் வந்தானடி புவனேசுவரியில் 100 நாள் கொண்டாடியது. தங்கப்பதக்கம் வெள்ளி விழா.
இப்போதைய படங்கள் 3 நாள் வசூலை நம்பி ஏராளமான திரையரங்குகளில் வெளியாகின்றன. எந்த தியேட்டரில் எந்தப் படம் எந்தக் காட்சி என்று யாருக்கும் தெரியாது. பேப்பர் பார்த்தால் தெரியும். போஸ்டர்கள் இல்லை.
ஆனால் ஆச்சரியமாக புலி பத்தாவது நாளிலும் ஹவுஸ்புல்லாக இருந்தது. சாந்தி திரையரங்கு மோசமாக இருந்தது. 80 ரூபாய் டிக்கட்டே அந்தக் காலத்தில் நான் பார்த்த 2 ரூபாய் டிக்கட் பெஞ்சு போலத்தான் இருந்தது. உள்ளே ஒருவர் போக வேண்டுமானால் கால்களை முட்டி மிதித்துதான் போகவேண்டும். அழகான பெண்கள் தொடைகள் உரசப் போனாலும் சிலிர்ப்பு உண்டாகும். பாடாவதி தடியன்கள் குடிபோதையில் மிதித்துவிட்டுப் போனார்கள்


படம் காமிக்ஸ் கதைதான் பேசும் பறவை, 180 வயது ஆமை , யவனராணி கோட்டை என குழந்தைகளுக்குப் பிடித்தமாதிரி ஜாலியாகப் போகிறது. அவ்வப்போது ஸ்ருதி ஹாசனும் ஹன்சிகாவும் என்னைப் போன்ற காய்ந்துப் போன ஜென்மங்களுக்காக இடுப்பையும் தொடையையும் காட்டி அரேபியன் பெல்லி டான்ஸ் ஆடிவிட்டுப் போகிறார்கள்.


ஒருவகையில் எனது பால்ய பருவத்துடன் விக்கியின் பால்ய பருவத்தையும் இணைத்து விட்ட திருப்தி எனக்கு சாந்தி திரையரங்கின் பால்ய நினைவுகள் போல அவனுக்கும் இருக்கும் அல்லவா


புலி படம் பத்திய விமர்சனம்இல்லை. படம் போரடிக்கவில்லை. அவ்வளவுதான். ஆனால் எனது அபிமான நாயகியான ஸ்ரீதேவிதான் அநியாயத்திற்காக வீணடிக்கப்பட்டு விட்டார். பிரபுவும் டெல்லி கணேஷ் போல முக்கியத்துவம் இல்லாத பாத்திரத்தில் வந்து போகிறார். விஜய் விஜய் விஜய் தான் வேறு எதுவும் இல்லை படத்தில் . ஸ்ரீதர் பிரசாத் இசையில் ஜிங்கிலா ஜிங்கிலா என்று ஒரு பாட்டை விக்கி முணுமுணுத்தபடி என்னுடன் பைக்கில் வந்தான். எனக்கும் அந்தப் பாட்டு பிடித்தது. பாடினேன்.

அஞ்சலி -மனோரமா

 ஆச்சி என்று திரையுலகில் அனைவராலும் மதிக்கப்படுபவரான மனோரமா காலமானார் .ஆரம்பத்தில் நகைச்சுவையாகவும் பின்னர் பண்பட்ட குணச்சித்திர நடிகையாகவும் கதாநாயகியாக அல்லாமல் அவளின் சேடியாகவே தோன்றி பல நேரங்களில் முக்கியப் பாத்திரங்களையே விழுங்கி ஏப்பம் விட்டவர் மனோரமா.
சிறிய வயதில் என் பாட்டி திநகரில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டுக்கு அழைத்துப் போனார். இளம் பிராயத்தில் சிவாஜி எனக்கு பிரமிக்க வைத்த நடிகர். ஞான ஒளி, பாபு , பட்டிக்காடா பட்டணமா போன்ற படங்களில் சிவாஜியை மெய் மறந்து ரசித்திருக்கிறேன். சிவாஜி வீட்டுக்குப் போன போது அவர் படப்பிடிப்புக்காக புறப்பட்டு போய் விட்டார். என் பாட்டி அழைத்துச் சென்ற நோக்கமே என்னைக் காட்டி படிப்புக்கு பணம் கேட்பதுதான். அந்தப் பணத்தை அவர் சீட்டு கட்டவும் இதர பல செலவுகளுக்கும் பயன்படுத்துவார். அதில் எனக்கும் நாலைந்து ரூபாய்கள் கிடைக்கும். அது என் சினிமா பார்ப்பதற்கான காசு. சிவாஜி வீட்டுக்குப் பிறகு நாங்கள் மனோரமா வீட்டுக்குப் போனோம். மனோரமாவை அப்போது மட்டும் நேரில் பார்க்க முடிந்தது. நடுத்தர வயதில் இருந்தார். மங்களமாக சிரித்தார். பாட்டிக்கு அள்ளி தானம் தந்தார். அவர் மகன் பூபதியை அறிமுகம் செய்தார். அவர் என்ன பேசினார் என நினைவில் இல்லை.
தொடர்ச்சியாக  திரைப்படங்களில் மனோரமாவின் நடிப்பை பின்தொடர்ந்து வந்திருக்கிறேன்
மனோரமாவை நகைச்சுவை நடிகையாகவும் பார்க்கலாம் குணச்சித்திர நடிகையாகவும் பார்க்கலாம். எப்படி பார்த்தாலும் அவர் ஆல் ரவுண்டர்தான். ரவுண்டி கட்டி ஆடும்போதும் சரி அழுது வடியும் போதும் சரி ரசிகர்களை கட்டிப் போட்டவர்தான் ஆச்சி
அபூர்வ சகோதரர்களில் கமலுடன் போட்டி போட்டு ஆடிய ஆட்டத்தை மறக்க முடியுமா
ஆச்சியின் வெற்றிடம் நிரப்பமுடியாததுதான்.


Saturday, 10 October 2015

JAZBAA- ஜஸ்பா

நடிகை ஐஸ்வர்யா ராய் சுமார் 5 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் திரைப்படம் இது. அக்டோபர் 9ம் தேதி வெளியாகியுள்ளது. முதல் நாளிலேயே படத்தைப் பார்த்து விடுவது நல்ல அனுபவம். தேவி பாரடைசில் இந்தப் படத்தைப் பார்க்கப் போனேன். சிறுவயதில் தேவி பாரடைசில் 2 ரூபாய் 90 காசு டிக்கட்டில் படங்களைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. இப்போது டிக்கட் விலை 120 ரூபாய்.

படம் வழக்கமான கிரைம் திரில்லர். பழிக்குப் பழி வாங்கும் படம்.தான். ஆனால் ஐஸ்வர்யா என்ற அழகு தேவதை தனது முதிர்ந்த வயதுடனும் நடிப்புடனும் நம்மை கட்டிப்போடுகிறார். மகளை கடத்தியவர் பாலியல் பலாத்காரம் கொலை செய்த ஒரு கொடியவனை தப்பச் செய்ய வாதாடும்படி லாயரான அனுராதா வர்மாவை ( ஐஸ்வர்யா ராய் ) கட்டாயப்படுத்த அவரும் அவர் ஆண் நண்பரான சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி யவ்வானும்( இர்பான் பத்தான் ) ஐஸ்வர்யாவின் மகளான சனாய்னாவை( தேசிய விருது பெற்ற சிறுமி சாரா ) மீட்பதும் குற்றவாளியை கண்டுபிடிப்பதும்தான் கதை. ஷபனா ஆஸ்மி, ஜாக்கி ஷராப் போன்ற தெரிந்த முகங்கள் முக்கியப் பாத்திரங்களில் தோன்றுகிறார்கள். குரூரமாக கெடுக்கப்பட்டு உயிரிழந்த இளம் பெண்ணாக பிரியா பானர்ஜியும் ஒரு கலக்கல் நடனக்காட்சியில் மாடல் அழகி தீக்சா கவுலும் நடித்துள்ளனர்.

மும்பை நகரின் பேரழகையும் பாலத்தின் மீது வாகனங்கள் செல்வதையும் ஏரியல் ஷாட்டுகளில் காட்டி பிரமிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர். இசையின் தாக்கம் ஒரு தனிமைப் பாடலுடன் முடிந்துவிடுகிறது. வசனங்கள் ஆங்காங்கே ரசிக்க வைக்கின்றன. இயக்குனர் சஞ்சய் குப்தா முடிந்த மட்டும் படத்தை சீராக கொண்டு செல்கிறார்.

கடற்கரை ஓரமாக நீண்ட ஒற்றையடிப்பாதையில் ஐஸ்வர்யா ராய் ஜாகிங் செய்யும் முதல் காட்சியிலிருந்து தனது காதலை மென்மையாக வெளிப்படுத்தும் இர்பானிடம் உதவியாளன் உரையாடும் காட்சி வரை படம் பிடித்தது. ஆனால் கிளைமேக்ஸ் சஸ்பென்சுக்கு இத்தனை மெனக்கெட்டிருக்க வேண்டியதில்லை.
படத்தை ஐஸ்வர்யா ராய்க்காக மட்டுமே பார்க்கப் போயிருந்தேன். ஏமாற்றவில்லை. ஒரு அற்புதமான நடிகையாகவும் அவர் பரிணமித்துள்ளார். தாய்மையும் அழகும் அவரது புகழை மேலும் கூட்டத்தான் செய்துள்ளன.புருவங்களின் கீழ் கருவளையம் அதிகமாக பூசப்பட்ட லிப்ஸ்டிக் எல்லாம் இருந்தாலும் அவர் அழகானவர்தான். கண்கள் போதுமே.

Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...