Saturday, 23 May 2015

ஹிட்ச்காக்- மரணம் எனும் மர்ம வில்லன்





 


ஆல்பிரட் ஹிட்ச்காக் 1899ம் ஆண்டி ஆகஸ்ட் 13ம் தேதி பிறந்தார்.பொதுவாக 13 என்பது மேற்கத்திய உலகினருக்கு அதிர்ஷ்டமில்லாத எண்.

ஆனால் இவருக்கு இதுவே ராசியான எண்ணாக அமைந்துவிட்டது.

பிரிட்டனில் சில மௌனப்படங்களை இயக்கிய பிறகு அவர் ஹாலிவுட்டுக்கு 
வந்தார்.1956ல் அமெரிக்க குடியுரிமை பெற்ற அவர் சினிமா கலையின் புதிய 
சகாப்தத்தை உருவாக்கினார். 

ரசிகர்களை திகிலடைய வைக்கும், 
முதுகுத் தண்டைச் சில்லிட வைக்கும் திடுக்கிடும் திருப்பங்கள் கொண்ட 
திரைக்கதைகளையே அவர் படமாக்கினார். 

ஆனாலும் காட்சி வழியே கதை 
சொல்லும் பாணியால் உலகையே வியக்க வைத்தார். தஸ்தவஸ்க்கியின் கிரைம் அன்ட் 
பனிஷ்மென்ட் எப்படி ஒரு மர்ம நாவல் போல தெரிந்தாலும் அதைக் கடந்த 
தத்துவார்த்தப் பிரச்சினைகளைப் பேசுகிறதோ அதைப் போலவே, ஹிட்ச்காக்கின் 
திரைப்படங்களும் தத்துவ சாயை கொண்டிருந்தன. 

மரணபயம், அச்சம், துரோகம் போன்ற காரணங்களால் அந்தப் படங்கள் உளவியல் மற்றும் சமூகவியல் ஆவணங்களாகவும் கருதப்பட்டன.

ஹிட்ச்காக் ஹாலிவுட்டுக்கு வந்த போது ஸ்டூடியோ முறை பிரபலமாக 
இருந்தது.தயாரிப்பு, விநியோகம், திரையிடுதல் போன்ற சகல விஷயங்களிலும் 
ஈடுபட்டு பிரம்மாண்டமான நெட்வொர்க்கை கொண்டிருந்த 5 முன்னணி 
ஸ்டூடியோக்களில் நடிகர்கள் உட்பட அனைவரும் மாதச் சம்பளத்துக்கு வேலை 
பார்த்துக் கொண்டிருந்தனர். ஸ்டூடியோ முத்திரைக்காகவே படங்கள் பாராட்டும் 
புகழும் பெற்றன.

தவறான குற்றத்தின் வலைக்குள் வந்து சிக்கிக் 
கொள்ளும் ஹிட்ச்காக்கின் கதாபாத்திரங்கள் தாஸ்தயவஸ்கியின் நாவல் 
பாத்திரங்களுக்கு நிகரான மதிப்பைப் பெற்றன.

ஆசை, பொறாமை, சந்தேகம் போன்ற குணங்களால் ஏற்படக் கூடிய வன்முறை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.உணர்ச்சியின் மிகுதியால் நிகழ்ந்துவிடும் கொலை போன்ற குற்றங்களின் மறுபக்கத்தை ஹிட்ச்காக்கின் படங்கள் ஒளியூட்டின.

இதனால்தான் தாஸ்தயவஸ்கி, காப்காவுக்கு இலக்கியத்தில் உள்ள இடம் சினிமாவில் ஹிட்ச்காக்குக்கு உண்டு என்றார் திரைப்பட மேதை ட்ரூபோ.

ஹிட்ச்காக்கை பேட்டி கண்ட அவர் அதை ஒரு புத்தகமாக்கியிருக்கிறார். 
திரைப்படத்தின் நுட்பங்களை அறிய விரும்பும் ரசிகர்களுக்கு அந்தப் படம் ஒரு 
பிரமாதமான ஆவணம். 

திரைப்படம் குறித்த ஹிட்ச்காக்கின் ஆழமான 
எண்ணங்கள் அதில் பதிவாகியுள்ளன.அவருடைய திரைக்கதை உத்திகள் ரசிகர்களுக்கு 
அதிகபட்ச திகிலையும் தவிப்பையும் ஏற்படுத்தும் நோக்கம் உடையவை. 

அழகான பெண்களை கொலை செய்வதற்கு ஏற்ற கதாபாத்திரங்கள் என்று தனது படப் பாத்திரங்களைப் பற்றி ஹிட்ச்காக் கூறுகிறார்.

ஓர் அழகான பெண் அநியாயமாக கொலை செய்யப்படும் போது ஏற்படும் அனுதாபம் 
மொத்தமும் அவளுக்கு கிடைத்துவிடும் என்ற அவரது கணிப்பு சரியானதுதான். 

சைக்கோ படத்தில் கதாநாயகி ஷவரில் குளி்க்கும்போது கொலை செய்யப்படும் அந்த 
பிரசித்திப் பெற்ற காட்சி சினிமா ரசிகர்களால் மிகவும் சிலாகிக்கப்படுகிறது.

அழகான கழுத்து வெட்டுவதற்கு ஆசையைத் தூண்டுவது என்ற விதமாக படுகொலை 
படங்களின் தந்தையான ஹிட்ச்காக் கூறுவார் என்றாலும் அவர் உண்மையில் 
போலீஸ்காரர்களைப் பார்த்தால் பயந்த சுபாவம் உடையவராகவே இருந்தார்.

ஒரு படத்தின் வில்லன் எவ்வளவு வெற்றிகரமாக செயல்படுகிறானோ அந்த அளவுக்கு படம் வெற்றி பெரும் என்பது அவர் கணிப்பு. 

மிகச் சாதாரணமான பின்புலங்களில் மிக அதீதமான நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக காட்டுவது அவருக்குப் பிடித்தமானது. 

இருள் கொண்ட திகிலான ஒரு பாழடைந்த கட்டிடத்தில் ஒரு கொலை நடப்பதைக் 
காட்டுவதை விட மக்கள் புழுங்கும் இடத்தில், கூட்டத்தின் இடையே வில்லன் 
புகுந்து கொலை செய்து தப்பிச் செல்வது பரபரப்பை ஏற்படுத்தும் என்பதை நன்கு 
அறிந்த ஹிட்ச்காக் இந்த உத்தியையே பின்பற்றினார். 

தி மேன் ஹூ நியு டூமச் படத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் கொலை நடக்கும் போது ஏற்பட்ட பரபரப்பை நினைத்துப் பாருங்கள். 

ரசிகர்களை அது அந்தளவுக்கு திடுக்கிட வைத்தது.

தனக்கு வலுவான விஷூவல் மைன்ட் இருப்பதாக ஹிட்ச்காக் ஒருமுறை கூறினார். 

படத்தின் திரைக்கதை தயாரானதும் அதை முழுவதுமாக காட்சி வடிவில் கற்பனை செய்துக் கொள்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு அந்த திரைக்கதையை புரட்டிக் கூடப் பார்க்க மாட்டாராம். அதை தன்
உள்ளத்தால் அணு அணுவாக அறிந்து வைத்திருப்பதாக அவர் கூறுவார்.

ஹிட்ச்காக் படங்களில் பெண்களுடனான மனித உறவுகளுக்கு கூடுதல் அழுத்தம் தரப்பட்டிருந்தது.

குறிப்பாக தாயுடன் மனிதன் கொள்ளும் உறவு அவருடைய படங்களில் கூடுதல் முக்கியத்துவம் பெற்றது.

நடிகர்களை மந்தையைப் போல் நடத்தியவர் என்று ஹிட்ச்காக் மீது புகார் உண்டு.

ஆனால் நடிப்புக்கு என வந்துவிட்ட பிறகு அவர்கள் திரைக்கதைக்கு நியாயம் 
செய்ய வேண்டும் என்றும் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் 
வலியுறுத்தியவர் ஹிட்ச்காக்.

60 ஆண்டு திரையுலக வாழ்வில் 53 படங்களை இயக்கியவர் ஹிட்ச்காக்.

Rear Window, A Man who knew too much, 39 Steps, Psycho, Vertigo, Rebecca போன்ற படங்கள் அவருடைய சாதனைகளாக கருதப்படுகின்றன.

அகடமி விருதுகள் அவருக்கு பலமுறை நிராகரிக்கப்பட்ட போதும் ஸ்பெல் பவுண்ட் என்ற படத்தின் இசைக்கு அகடமி விருது கிடைத்தது.

கலிபோர்னியாவில் தமது இறுதிக்காலத்தைக் கழித்த அவர் 80 வது வயதில் 1960ம் ஆண்டில் காலமானார். 

எந்த வித திடுக்கிட வைக்கும் மர்மம் இல்லாமல் இயற்கையாகவே அவர் உயிர் பிரிந்தது. 

ஆனாலும் மரணமும் எப்போது வரும் என்று தெரியாத ஒரு மர்ம வில்லன்தானே.

Friday, 15 May 2015

அரிதினும் அரிது கேள் 2 - இளம் பனித்துளி விழும் நேரம்

சில பாடல்களுக்கு கேட்டவுடன் தீயைப் போல் பற்றிக் கொள்ளும் தன்மை உண்டு. இந்தப்பாட்டும் அப்படிப்பட்டது. ராஜ் வீடியோ விஷனின் மேடை நிகழ்ச்சி டிவிடி போட்டு பார்த்துக் கொண்டிருந்த போது மாற்றுத்திறனாளி் பெண் ஒருவர் மேடையில் இளம் பனித்துளி விழும் நேரம் பாட்டை பாடிய போது எனது நினைவுகள் பின்னோக்கிப் பாய்ந்துசென்றன. எனது இளம் பருவத்தில் கனவுகளுடன் திரிந்த காலங்கள் கண் முன்னே வந்தன.( இப்போதும் கனவுகளுடன்தான் திரிகிறேன். ஆனால் வேறுவிதமான கனவுகள்)
சுமலதா சுமன் நடித்த ஆராதனை என்ற படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலை தேட ஆரம்பித்தேன். அப்போதே என்னை அலைக்கழித்திருந்த அந்தப்பாடலை நினைவுபடுத்திய அந்த பெண்ணுக்கு மானசீகமாக நன்றி தெரிவித்துக் கொண்டு அந்தப்பாடலை தேட ஆரம்பித்தேன். எங்கும் இல்லை. இளையராஜா ஹிட்ஸ் தொகுப்புகளில் மீண்டும் மீண்டும் 50 படங்களுக்குட்பட்ட பாடல்களே இடம் பெறுகின்றன. சின்னதம்பி, மௌனராகம், பொன்னுமணி, எஜமான்,குணா என எனக்குப் பிடித்த பாடல்களும் படங்களும் இருப்பினும் இதுபோன்ற அரிய பாடல்களை கேட்கவே முடிவதில்லை. வானொலியும் தொலைக்காட்சி சேனல்களும் போட்ட பாடல்களையே மறுமறுபடியும் போட்டு இவ்வளவு தான் தமிழ்ச்சினிமா பாடல்கள் என்ற மாயையை ஏற்படுத்துகின்றன. சொந்தமாக ஒருகலெக்சன் வைத்திருக்காவிட்டால் ஏமாறப் போவது திண்ணம் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே நான் தெரிந்துக் கொண்டு பாடல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். ஆராதனை படத்தையும் பாட்டையும் தேடிக் கொண்டிருந்த போது எனக்காகவே அப்படத்தின் டிவிடி வெளியாகியது. அந்தப் பாடல் மெருகு குலையாமல் அப்படியே படத்தில் இருக்கிறது.
இளையராஜா இசையில் வைரமுத்து எழுதிய இளம் பனித்துளி விழும் நேரம் அத்தகைய அருமையான பாடல், ராதிகா என்பவர் பாடியது. அந்த ராதிகாவைப் பற்றிய விவரங்களை தேடுகிறேன்.கிடைத்ததும் இங்கு பதிவு செய்கிறேன்.







.
காதலனிடம் எண்ணத்தை சொல்லத்துடிக்கும் காதலி அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் தனது ஆசையை பாட்டாக வடிக்கிறாள். படத்தில் சுமனும் சுமலதாவும்தான் அந்த காதலர்கள்.

இளம் பனித்துளி விழும் நேரம்
லலலல லலலல லாலா
இலைகளில் மகரந்தக் கோலம்
துணைக்கிளி ஒன்று தவித்தபடி
தனிக்கிளி ஒன்று துடித்தபடி
சுடச்சுட நனைகின்றதே….
லலலலலலாலா….
ஆ….ஆசை நதி மடை திறந்து
ஆ…வாசல் வந்து கதவடைக்கும்
காயாது மன ஈரங்கள்
தாளாது சுடுபாரங்கள்
காவிய காதலின் தேசங்களே
ஊமையின் காதலைப் பாடுங்களேன்
மலர்களும் நனைகின்றதே…
லலலா இளம் பனித்துளி விழும் நேரம்…..

ஆ…பாவை விழித்துளி விழுந்து
ஆ…பூவின் பனித்துளி நனையும்
தீயாகும் ஒரு தேன் சோலை
போராடும் ஒரு பூமாலை
சூரியகாந்திகள் ஆடியதோ
சூரியனை அவை மூடியதோ
முகில் வந்து முகம் தொட்டதோ….
லலலா லா…..

புதுக்கவிதையின் ஈரமும் வாசமும் கொண்டு எழுதப்பட்ட பாடல் இது…வழக்கமான மரபுக்கவிதைகளை மீறி இசைஞானியின் வயலின்களுடன் இழைந்து எழுதப்பட்ட சொற்கள்…
மனதுக்குள் ஒரு பனித்துளியைப் போல் இப்பாடல் மென்மையாக விழுகிறது.

பின்குறிப்பு

மலையாளப் பின்னணி பாடகியான ராதிகா திலக் என்பவர்தான் இந்தப்பாடலை பாடியவர். அவர் புற்றுநோயால் கடந்த 20-9-2015 அன்று கொச்சியில் காலமானார். ராதிகாவின் குரல் என் நினைவில் என்றும் பதிந்து கிடக்கும்






Wednesday, 13 May 2015

அரிதினும் அரிது கேள் 1- நீ வருவாய் என நானிருந்தேன்

சில பாடல்கள் மனத்தின் ஆழத்திற்குள் இழந்த<காதலைப் போல பதிவாகி விடுகின்றன அந்தப் பாடல்களுக்கும் நமது வாழ்ககைக்கும் சம்பந்தம் இருக்கலாம் ஆனால் சம்பந்தமே இல்லாத சில பாடல்களும் அவ்வாறு நிலைப்பதுண்டு. திரைவரலாற்றில் எனக்கு நினைவு தெரிந்து சுமார் 50 60 ஆண்டுகால பாடல்களை அறிவேன் பாகவதர் கிட்டப்பா சின்னப்பா >காலம் தொட்டு இன்றைய பாடல்கள் வரை அனேகமாக எந்தப் பாடல் எந்தப் படம் என்று துல்லியமாகக் கூறும் அறிவை கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பயிற்சியினால் பெற்றுள்ளேன். இதில் ஏராளமான பாடல்கள் மறைந்துவிட்டன. அவை கிடைப்பதே அரிதாக உள்ளன. தேடித் தேடி அலைந்ததில் ஆடியோ வீடியோ என்று பல அரிய பாடல்களைத் தேடி வைத்திருக்கிறேன். இப்போது யூ டியூப்பில் இவை கிடைப்பதும் நிம்மதி .ஆனால் யூடியூப்பில் பாடல் படம் பார்க்கிற ஆள் அல்ல நான். எனக்குப் பாட்டு என்றால் சத்தமாக இசை அதிர அதன் ஒவ்வொரு வயலினும் ஒவ்வொரு மூச்சும் உச்சரிப்பும் கேட்க வேண்டும்.சுஜாதா படத்தில் இடம் பெற்ற பாடல் நீ வருவாய் என ...கல்யாணி மேனன் பாடி எம்.எஸ்.வி இசையமைத்த கண்ணதாசனின் பாடல் இது. நீ வருவாய் என நான் இருந்தேன் ஏன் மறந்தாய் என நான் அறியேன் அடி தேவி உந்தன் தோழி ஒரு தூதானாள் இன்று இரவெங்கே நிலவெங்கே உன்னை காண்பேனோ என்றும் சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்துக் கொண்டு விரிந்த புருவங்களில் அழகை சுமந்துக் கொண்ட தனிமை மயக்கம்தனை தணிப்பதற்கு வாராயோ ஒருமேடை ஒரு தோகை அது ஆடாதோ கண்ணே குழல் மேகம் தரும் ராகம் அது நாடாதோ என்னை இந்தப்படம் வெளியான போது தேவி திரையரங்கில் போய் பார்த்தேன். முதல் பாட்டே நீவருவாய்...... படம் தொடங்கி சிறிது நேரத்தில் இந்தப் பாடல் ஏற்படுத்திய மயக்கம் இன்று வரை கலையவில்லை. மெல்லிசை மன்னரின் புத்தம் புதிய இசை வடிவில் இப்பாடல் மனதை வாட்டியது. கல்யாணி மேனனின் குரலும்இக்காட்சியில் நடித்த ராஜலட்சுமியின் மாசு மருவற்ற பேரழகும், சரிதாவின் உதட்டுச் சுழிப்புடன் கூடிய எள்ளல் புன்னகையும் பாடலுடன் காட்சியையும் மறக்க முடியாததாக்கி விட்டன. இப்பாடலை படத்தில் எழுதியவரான கவிஞர் வேடம் கொண்ட நடிகர் சங்கர்( ஒருதலைராகம்) குளித்துவிட்டு பாத்ரூமிலிருந்து டவலும் பனியனுமாக வந்து இப்பாடலை மூடிய அறையிலிருந்து வெளியே நின்று கேட்பதாக காட்சி. தமது காதலிக்காக தாம் எழுதிய பாடலை தமது காதலியே தமது சகோதரியிடம் பாடிக் காட்டுவதை மெய்மறந்து ரசிப்பார் கவித்துவம் பாடலில் இருந்து காட்சி வரை பாய்ந்தது

Tuesday, 21 April 2015

ரஜினி -கமல் சேரும் படம்

ரஜினியும் கமலும் மீண்டும் இணைந்து நடிக்கப் போவதாக குமுதம் இதழில் வந்த தகவலையடுத்து தமிழ் இதழ்களி்ல் ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ரஜினிக்கு வில்லனாக கமல் நடிக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன. இது உண்மைதானா என்பதை உறுதி செய்ய இயலாத நிலையில் ஒரு யோசனை அப்படியே கமலும் ரஜினியும் இணைய வேண்டுமானால் ஷோலே படத்தை இப்பவும் ரீமேக் செய்யலாம். அற்புதமான திரைக்கதை உடைய ஆக்சன் படம். கமலுக்கு அமிதாப் வேடம் கச்சிதமாக அமையும்.அதிகம் பேசாமல் அழுத்தமாக காதலிக்கும் பாத்திரம், ரஜினிக்கு தர்மேந்திராவின் காமெடி பிளஸ் ஆக்சன். செம்மையாயிருக்கும். சஞ்சீவ் குமார் வேடத்திற்கு சிவாஜி கணேசன் இருந்திருககலாம். காலம் தவறி விட்டது. என்ன செய்வது இருப்பினும் ராஜேஷ், ராஜ்கிரண், சரத்குமார் , பிரபு. சத்யராஜ் போன்ற நடிகர்கள் அதை ஓரளவு செய்ய முடியும். அம்ஜத்கான் கப்பர்சிங்தான் சவாலான பாத்திரம். இதனை ஏற்று நடிக்க நானா பட்டேகர் அல்லது பிரகாஷ்ராஜ் பொருந்துவார்களா என பரிசீலிக்கலாம். கணடிப்பாக இளையராஜா குரலில் பலானது ஓடத்தின் மேலே பாணியில் மெகபூபா பாடல் இடம் பெற வேண்டும்.அந்த குத்துப்பாட்டுக்கு ஐஸ்வர்யா ராய் அல்லது தீபிகா படுகோன் ஆடலாம். ஷங்கருக்கு ஐயை விட நல்ல படமாக இது அமையும். வசனம் ஜெயமோகனை எழுத வைக்கலாம். சலீம் ஜாவேத்துக்கு மறக்காமல் நன்றி என ஒரு கார்டு போட வேண்டும். இதை சீரியஸாக ஏற்றாலும் சரி ஜோக்காக சிரித்தாலும் சரி அப்படியொன்றும் மோசமான யோசனை அல்லதான்.

Thursday, 9 April 2015

அஞ்சலி - ஜெயகாந்தன் மறைவு

காலையில் 6 மணி்க்கெல்லாம் எழுந்துவிடும் வழக்கம் உடையவன் நான். இன்று-(09-04-2015) காலையும் வழக்கம் போல் எழுந்து எலிசபெத் டெய்லர் நடித்த ஒரு பழைய ஆங்கிலப் பட டிவிடியைப் போட்டு பார்த்துக் கொண்டிருந்தேன். விக்கி டியூசன் போக அழைத்தான். படத்தை நிறுத்தி அவனை அனுப்பி விட்டு வரும் போது இந்து ஆங்கில பேப்பரை வாசலில் இருந்து எடுத்து வந்து தலைப்பைப் பார்த்து கீழே பார்வையை ஓடவிட்டதும் அந்த அதிர்ச்சிகரமான செய்தி காத்திருந்தது. எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமாகிவிட்டார். நம்ப முடியவில்லை, கண்களை கசக்கி மீண்டும் மீண்டும் பார்த்தேன். உண்மைதான். இனி ஜே.கே என்ற அந்த கம்பீரமான மனிதரை பார்க்க முடியாது என்ற யதார்த்தம் உறைந்தது. நீண்ட நேரம் குளிக்காமல் இருந்தேன். சாவு வீட்டுக்குப் போகும் மனம் இல்லை.போகலாமா என நண்பர் சூர்யாவைக் கேட்ட போது, வரவில்லை. வழக்கம் போல நானும் ஜெயகாந்தன் சாகவில்லை என்று சமாதானம் செய்துக் கொண்டு அவரது இறுதிச்சடங்கைப் பார்க்க போகவில்லை
ஜெயகாந்தனுடன் பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். ரயிலில் அவரும் தோழர் நல்லகண்ணும் இருக்கும் போது அவர்களுடன் கோவை வரை பயணித்திருக்கிறேன். சொல் புதிது இதழுக்காக நண்பர் ஜெயமோகனுடன் சேர்ந்து நீண்டதொரு பேட்டி எடுக்க உதவியிருக்கிறேன்.அவரைப் பற்றிய பகிர்தல்கள் ஏராளமாக இருக்கின்றன.மனம் அடைத்துக் கொண்டிருக்கிறது. அடைப்பு நீங்கி அழுவேனா எனத் தெரியவில்லை

Friday, 3 April 2015

ஜே.கே எனும் நண்பனின் வாழக்கை







இயக்குனர் சேரன் நேரடியாக டிவிடியில் வெளியிட்ட ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை படத்தின் ஒரிஜினல் டிவிடியை 50 ரூபாய் கொடுத்து ஒரு கடையிலிருந்து வாங்கி வந்தேன்.படம் பார்க்கும் ஆர்வமே இல்லாமல் சில நாட்கள் தூங்கிக் கொண்டிருந்த டிவிடியை தேடி எடுத்து முழுப்படத்தையும் பொறுமையாகப் பார்த்தேன்.
இந்தப்படத்தில் எனக்கு என்னென்ன பிடித்தது என்று முதலிலேயே சொல்லி விட்டால் அப்புறம் சேரனைப் பற்றி கடுமையான எனது விமர்சனத்தை கூறலாம்.
எனக்குப் பிடித்த நடிகை நித்யா மேனன் சும்மா ஜம்முன்னு இருக்காங்க.முகம் மட்டும் லேசாக முத்திப் போன மாதிரி இருந்தாலும் அழகுதான்
கதாநாயகன் சர்வா மிகச்சிறப்பான நடிகராக வரும் அறிகுறி தெரிகிறது. பல இடங்களி்ல் நடிகர் சேரனின் நகலாகவே இருந்தாலும் ஒரு புதுமுக நடிகர் என்ற அளவில் மனதை கவர்கிறார்.
மனோபாலா கலகலப்பாக பேசி கைத்தட்டல் பெறும் நடிகர். ஆனால் இந்தப் படத்தில் ஒரு வார்த்தை கூட பேசாத ஊமையாக மனம் கவர்கிறார். ஒரு சிறிய கண்சிமிட்டலில் கண்கலங்கவும வைக்கிறார்.
டிவிடியை போட்டதும் பலமுறை சேரன் பேசுவதும் ,எஸ்.ராமகிருஷ்ணன் பேசுவதும் ரிபீட் ஆகிக்கொண்டே இருக்கிறது. பத்து நிமிடம் போராடிய பின்னர் தான் படத்திற்கு செல்லும் தொழில்நுட்ப அறிவு எனக்கு கிட்டியது.

படம், கதை கார்ப்பரேட் நிறுவனங்களின் வானுயர்ந்த கற்பனைகளில் மிதக்கும் உயர் நடுத்தர ரக இளைஞர்களைப் பற்றியது. பேஸ் புக்கிலிருந்து மீண்டு வரும் கதாநாயகன், சாட்டிங்கிலிருந்துவிடுபட்டு புதிய தொழிலறிவை வளர்த்து முன்னேறி லட்சங்களை சம்பாதிக்கும் கதை இது. ஒரு தலைமுறையின் தவறான லட்சியத்துக்கு தீனி போடும் படம் என்பதால் எனக்குப் பிடிக்கவில்லை

நமது மூதாதையர்கள் விவசாயிகளாக, கூலித் தொழிலாளர்களாக, அங்காடித் தெருக்களில் சேல்ஸ்மேன்களாக, ஆட்டோ ஓட்டுபவர்களாக கட்டுமானத் தொழிலாளர்களாக வாழ்ந்தார்களே அவர்கள் பெரும்பாலோர் வாழ்க்கையில் ஒரு லட்சத்தை கூட பார்த்ததே இல்லை. இன்னும் சொல்லப்போனால் கார் கதவை திறக்க கூடத் தெரியாத ஒரு தலைமுறை அது. எனக்கும் இன்றும் எப்போதாவது காரில் அமர்ந்தால் கதவு பிடி எங்கேயிருக்கு எதை திருகினால் திறக்கும் என்பதில் சிறிய குழப்பம் உள்ளது.
எளிய மனிதர்களுக்கு எந்த இலட்சியமும் இருந்ததில்லை. தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்து நன்றாக வாழ வைக்கவேண்டும் என்பதைத் தவிர. அந்த பிள்ளைகள் வளர்ந்து லட்சங்களாக சம்பாதித்து தங்களுக்கான இலக்காக அதையே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்

படத்தின் இரண்டு முக்கியக் கதாபாத்திரங்களில் ஒன்று, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் போடாமல் போனதால் விபத்தில் சி்க்கி மண்டை உடைந்து பலியாகிறது. மற்றொரு முக்கிய பாத்திரமாக இருக்கு்ம் படத்தின் நாயகனும் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு மரணத்தை உணர்ந்த பறவையைப் போல தனது உறவுகளைவிட்டு தனிமையைத்தேடி போவதுடன் படம் முடிகிறது.

இதற்குத்தானா ஆசைப்பட்டாய் சேரா?







Thursday, 26 March 2015

பக்தி குறையும் காலம்

வயதாக வயதாக பக்தி அதிகமாகும் என்பார்கள். பெரியாருக்கு முதிர்ந்த வயது வரை பக்தி பழுக்கவே இல்லை.பல கம்யூனிஸ்ட் தோழர்கள் இளமையில் நாத்திகம் பேசி முதுமையில் கோவிலுக்குப் போவதைப் பார்த்திருக்கிறேன். கமல்ஹாசன் கூட நாத்திகர்தான். ஆனால் அவர் கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது. முகுந்தா முகுந்தா என தசாவதாரத்தில் பக்தி மழை பொழிந்தார். படத்தின் பெயரே தசாவதாரம்தான். கவிஞர் வைரமுத்துவும் நாத்திகம் பேசும் அடியவர்க்கெல்லாம் அன்பே சிவமாகும் என்று எழுதினார். அண்ணாதுரை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என பகுத்தறிவுக் கொள்கைக்கு புதிய விளக்கம் அளித்தார்.இதெல்லாம் போகட்டும் என்னுடைய அனுபவம் வேற மாதிரி.
35 வயது வரை நாத்திகமும் மார்க்சியமும் தான் எனது பாதை. எந்தக் கோவிலுக்கும் போனதி்ல்லை, கடவுளிடம் ஏதும் கேட்டதில்லை.எனக்குக் கிடைத்த நண்பர்கள் கூட நாத்திகர்கள்தாம். கோவையில் ஒரு தோழி, ராம்நகரில் உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக கடவுளை கும்பிட வைத்து நெற்றியில் விபூதி வைத்துவிட்டாள். என்குடும்பத்தினர் அனைவருக்கும் பக்தி அதிகம். ஆனால் குடும்பத்துடன் தாமரை இலை நீர்போலவே வாழ்ந்ததால் கடவுளும் ஒட்டவே இல்லை. 35 வயதுக்குப் பின் ஓஷோ மூலம் மார்க்சியம் வெளிறத் தொடங்கிய போதுதான் கோவிலுக்குப் போகலானேன். தனியாகவும் .குடும்பத்துடனும்.
தனியாக கோவிலுக்குப் போன அனுபவங்களை வைத்து திருவேங்கடம் என்ற நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
திடீரென 50 வயதை கடந்த பின் ஒரு பின்-ஞானோதயமாக சமீபத்தில் கோவிலும் கடவுளும் எனக்கு அந்நியமாகிக் கொண்டிருக்கின்றன. எனக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கையை கடவுள் தந்தார் என்றால் அவருக்கு மிகக் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்.ஆனால் இ்ப்படி நினைக்கும் போது விக்கி என் முன்னால் வந்து நிற்கிறான். இந்த அழகான குழந்தையை எனக்கு பரிசளித்த கடவுளுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் குறைவுதான் என்று எண்ணத் தோன்றுகிறது.
என் விக்கியை நல்லா வாழ வை என்று கேட்கவாவது கடவுளை வணங்கிக் கொண்டிருக்கிறேன்.

Sunday, 15 March 2015

இளையராஜாவும் இசைத்திருட்டும்

இசைஞானி இளையராஜா தமது பாடல்கள் உரிமம் பற்றி கிட்டதட்ட ஓய்வு பெறும் வயதில் ஞானோதயம் வந்தவராக காவல்துறையின் உதவியை நாடியுள்ளார். சில நிறுவனங்களின் மீது உரிமம் இல்லாமல் விற்பனை செய்வதாக வழககும் போட்டிருக்கிறார்.
நிச்சயமாக தமது படைப்புக்கான உரிமை கோருவதில் படைப்பாளிக்கு முழு தகுதி உண்டு. இளையராஜா தமது பாடல்களுக்காக வாங்கிய ஊதியத்தை விட பல மடங்கு அதிகமாக பணம் சம்பாதிக்க முடியும். நான் ஏர்டெல் மொபைலில் ராஜா சாரின் நல்லதோர் வீணை காலர் டியூனை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன். மாதம் அதற்காக 30 ரூபாய் கட்டணம் செலுத்தி வருகிறேன். எதி்ல் எத்தனை சதவீதம் பணம் அவருக்குப் போய்ச் சேருகிறது?
இப்படி அவர் இசையமைத்த பல்லாயிரக்கணக்கான பாடல்களில் இசைத்தட்டு, ஆடியோ கேசட்,சிடி,விசிடி, டிவிடி வடிவில் உரிமம் பெறாமல் பதிவாகி பல லட்சம் லட்சமாக விற்பனையாகி அதி்ல் கொள்ளை லாபம் அடைந்தவர்கள் எத்தனை பேர்...அது மட்டுமின்றி இணையத்தில் யூடியூப்பில் ஏற்றி விட்ட புண்ணியவான்கள் எத்தனை.
ஒரு படைப்பாளிக்கு உரிய மரியாதையும் அவர் படைப்புக்கான லாபத்தில் பெரும் பங்கும் தரப்பட வேண்டும். இதில் நான் உடன்படுகிறேன். ஆனால் இளையராஜா மாதிரியான ஜாம்பவான்களுக்கு அப்படி கிடைக்காமல் போனது ஏன் என்று யோசி்ப்பது அவசியமாகும். எம்.எஸ்.விஸ்வநாதன், தேவா, விகுமார், கேவிமகாதேவன் போன்ற முந்தைய தலைமுறை இசையமைப்பாளர்களுக்கு நேர்ந்ததுதான் இது. ஏ.ஆர.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் உட்பட இனியும் பலருக்கு நேரக்கூடியதுதான்.
முதலில் இந்தப் பாடல்கள் வெளியிட்டு மக்களை சென்றடையும் முறையிலேயே கோளாறு உள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பல லட்சம் செலவு செய்து நடத்துகிறார்கள். கிட்டதட்ட நூறு ரூபாய் விலைக்கு ஆடியோ சிடிக்கள் வெளியிடப்படுகின்றன. யார் வாங்குவார்கள்.?
பாடல்கள் ஹிட்டாக இருந்தால் ஓரளவு லாபம் காணலாம். இல்லையென்றால் அது பத்து ரூபாய்க்கு கூட தேறாமல் பழைய குப்பைகளி்ல் போய் விடும்.

இரண்டு வருடங்களுக்கு மேல் இனி எந்த ஒரு திரைப்படப் பாடலும் உயிர் வாழுமா என்ற சந்தேகமான நிலையில் திரையிசை தேய்ந்துக் கொண்டிருக்கிறது. அன்றைக்கு அன்றை கொரித்து செரிக்கிற பாப்கார்ன் மாதிரி சினிமா பாடல்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. இதை நம்பி எந்த ரசிகனும் ஒருநாள் முழுதும் உழைத்துப் பெற்ற காசிலிருந்து நூறு ரூபாயை ஆடியோ சிடிக்காக செலவழிப்பானா? திருட்டு சிடியில் எம்பி 3 வடிவில் 200 இளையராஜா பாடல்களை அவன் சுலபமாக 20 ரூபாய்க்கு வாங்கி விட முடிகிறது அல்லவா? இது இளையராஜாவுக்குத் தெரியவே தெரியாதா?

ஒவ்வொரு திரைப்படத்துடன் திரைப்பட கட்டணத்திலேயே பத்து அல்லது இருபது ரூபாயை கூடுதலாக தந்தால் பாட்டு புத்தகமும் ஆடியோ சிடியும் படத்தின் டிக்கட்டுடன் வழங்கப்படும் என்றால் அது பலன் தருவதாக இருக்கும்.இதை செய்வதற்கு திரைப்படத்துறைக்கு எது தடையாக இருக்கும் என்று தெரியவில்லை.

திரைப்படம் பார்க்கும் செலவுகள் அதிகமாகி திருட்டி சிடி தொழில் ஓகோ என வளர்ந்ததற்கு காரணம் திரைப்படத்துறையும் திரையரங்கு உரிமையாளர்களும்தான். தப்பை தங்கள் மேல் வைத்துக் கொண்டு வியாபாரிகளையும் பொதுமக்களையும் குறை சொல்லக்கூடாது. விற்க கூடிய சரக்கை விற்கத்தான் செய்வார்கள் வியாபாரிகள்.
சேரன் ஒரு முயற்சி செய்தார்.ஜே.கே.என்ற நண்பனின் கதை திரைப்படத்தை நேரடியாக டிவிடியாக விற்பனைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் என்ன நேர்ந்தது? 50 ரூபாய் விலை குறிக்கப்பட்ட அது அடுத்த நாளே 20 ரூபாய்க்கு திருட்டி டிவிடி வடிவில் வந்துவிட்டது. யார் 50 ரூபாய் கொடுப்பார்கள்? அதை அவர் வெளியிடும்போதே 18 ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருக்க வேண்டும். படத்தயாரிப்பு செலவுகள், தனிநபர் வருமானம் போன்றவற்றால் அவருக்கு அது சாத்தியமாகி இருக்காது . போகட்டும் பத்து லட்சம் டிவிடிக்கள் விற்பனையானதாக விளம்பரப்படுத்துகிறார்களே அது உண்மைதானா. உண்மை என்றால் இந்த முயற்சி வளரட்டும்.



















Sunday, 1 March 2015

BADLAPUR movie பத்லாபூர் இந்தி படம்

அண்மையில் பார்த்த திரைப்படங்களில் பத்லாபுர் பார்த்த அனுபவம் மனதில் நிற்க கூடியது. அடர்த்தியான ஒரு கிரைம் கதையை மிகவும் நேர்த்தியாக கையாண்டுள்ளார் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன். இவர் ஏற்கனவே எடுத்த ஓரிரு படங்கள் அதிகமாக பேசப்படவில்லை என்றாலும் இந்தப் படம் பேசப்படும். காரணம் இதில் உள்ள பழிவாங்கும் கதையை சொன்ன விதம். THE AXE FORGETS BUT TREE REMEMBERS கோடாரி மறந்தாலும் மரம் மறக்காது என்ற ஆப்பிரிக்க பழமொழியே இதன் கரு சாக்லேட் பாயாக இருந்த வருண் தாவனுக்கு இதில் கனமான பாத்திரம். நேர்த்தியாக நடித்திருக்கிறார். கதாநாயகியர் 4 பேர் இருப்பினும் அவர்களில் மூவர் உடல் அழகை காட்டவே பயன்படுத்தப்படுகிறார்கள். ராதிகா ஆப்தே பிராவும் ஜட்டியுமாக காட்சியளிக்கிறார். திவ்யா தத்தா இடுப்பையும் முதுகையும் காட்டி ஒரு அழுத்தமான முத்தக்காட்சியில் நடித்திருக்கிறார். யாமி கவுதம் படத்தின் சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் அழகாக சிரிக்கிறார். இருப்பினும் ஹூமா குரேஷி விலைமாதுவாக வந்து மனம் கவர்கிறார்.
வில்லன்களில் ஒருவராக நடித்திருக்கும் நவாசுதீன் சித்திக் அற்புதமான நடிகர் ஜெயிலை விட்டு போகும் போது சக கைதிகளை நக்கலடிக்கும் காட்சியிலும் மீண்டும் சிறைக்கு வரும் போது துபாயில் எல்லாமே அற்புதமாக இருந்தது என்று பீலா விடும் காட்சியிலும் கைத்தட்டல்களை அள்ளுகிறார்.இந்தப் படத்தை தமிழில் எடுத்தால் கவுதம் கார்த்திக் நடிக்கலாம் என்று நண்பர் ஒருவர் கூறினார். நல்ல சாய்ஸ்< நவாசுதீன் கேரக்டருக்கு வடிவேலு அபாரமாக பொருந்துவார். திவ்யா தத்தா கேரக்டருக்கு சிநேகா யாமி கவுதம் கேரக்டருக்கு மீரா நந்தன் ஹூமா குரேஷி ரோலுக்கு நயனதாரா> நல்லாத்தான் இருக்கும்







Featured post

உலக சினிமா- சார்லி சாப்ளின் லைம் லைட்

குமுதம் தீராநதி ஜூலை 2016 இதழில் வெளியான எனது உலக சினிமா கட்டுரை உலக சினிமா LIMELIGHT- கால வெளியில் சிறகடிக்கும் கலைஞன் இயக்குன...